Friday 19 September 2014

வரலாற்றில் முதன்முறையாக!

                                                                         
                மேல்படிப்புக்கு கொஞ்சம்  அல்ல நிறையவே பணத்தட்டுப்பாடு .நல்லவேளை தெய்வாதினமாக, முன்பு 12 வருடங்கள்  வேலை செய்ததால் . ஊழியர் சேமநிதி வாரியத்தில் எனக்கும் பணம் இருந்தது! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது இதுதானோ? அடடா !12 வருடங்களுக்கு இவ்வளவு பணம் இருக்கே!இன்றுவரை வேலை செய்திருந்தால் ,இன்னும் அதிகப்பணம் இருக்குமே?என்று தோழி கூறிய அடுத்த கணம் மனம் ஏங்க நினைத்தது.மறுகணம் என் மனசாட்சி ‘உனக்கு ஒதுக்கப்பட்டது இதுதான்,அதற்கு மேல் உள்ள பணத்தில் உன் பெயர் எழுதப்படவில்லை
.இருப்பதை வைத்து பரவசப்படு, ஒரு சிலருக்கு அது கூட இல்லை,வியர்வை சிந்தி உழைத்து ,முறையான கம்பெனி இல்லை ,ஏமாத்துக்கார முதலாளிகள் ,நமக்கு இதுதான் ,‘என்று நினைத்த அடுத்த கணம் செவிட்டில் அறைந்தது போல ஓர் உணர்வு!

                   சரி விசயம் அதுவல்ல. மலேசியாவில் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஊழியர் சேமநிதி வாரியத்தில் பணம் (இருந்தால்)எடுக்கவேண்டுமென்றால் ,ஒன்று வீடு வாங்கினால் கொடுப்பார்கள் அல்லது மேல்படிப்படிக்கு மட்டுமே கொடுக்கப்படும்.வேற எந்த காரணத்துக்கும் பணம் கொடுக்கப்படாது( சைக்கிள் கேப்ல எனக்கு இன்னும் ஐம்பது வயசு ஆகலையாம்!!!!!)அலுவலகத்தை தொடர்பு கொண்டு ‘கல்விக்கு பணம் எடுக்க என்ன விதிமுதிமுறைகள் ?’என கேட்டுக்கொண்டேன். அந்த சமயம் தொடர்பில் இருந்த மலாய்க்காரப்பையன் ‘அக்கா நீ எங்கே வசிக்கிறாய் ?என்றான் .’பூச்சோங் என்றேன்.அக்கா உன் வீட்டுக்கு அருகிலேயே ஒரு கிளை இருக்கு.உனக்கு தெரியாதா?என்றான்.நிஜமாகவே எனக்கு தெரியாது,மேலும் எனக்கு இது புதிய தகவல் அதைவிட முக்கியம் எனக்கு மகிழ்ச்சியான விசயம்.காரணம் இது போன்றை நிறைய  அரசு அலுவல்கள்  பெட்டாலிங் ஜெயா மற்றும் கோலாலும்பூரரில்தான் இருக்கும்.பையனிடம் தீர விசாரித்து ,என்னவெல்லாம் கொண்டு போகணும் என்று என்னை தயார் பண்ணிக்கொண்டேன்.ஆனாலும் அரசு சார்ந்த அலுவல்களில் கண்டிப்பாக இரண்டு மூன்றுமுறை நம்மை அலைய வைப்பார்கள்  என்று சொல்லமாட்டேன் அலைய வேண்டி இருக்கும் என்பது 101% நிச்சயம்.

                    காலையில் அனைத்து டாக்யூமெண்ட்களையும்  எடுத்துக்கொண்டு ஓடினேன்.வழக்கம்போல் அரசு அலுவல தாரகமந்திரமாக ‘இன்குயரி கவுண்டரில் இன்று ‘சிஸ்டம் டவுன் ,நீ வரும்முன் ஒரு போன் பண்ணிட்டு வா என்று ஒரு நம்பரை கொடுத்தாள்.’சனி கார் சக்கரத்தில் உட்கார்ந்து வந்திருப்பான் போல?’’சரி நான் கொண்டு வந்த டாக்குமெண்ட்ஸ்களை சரி பார்க்கணும் ,இல்லையென்றால் நான் சும்மா சும்மா வரமுடியாது’என்று வழக்கமான தொனியில் சொன்னேன்’சரி அப்படின்னா நம்பரை எடுத்துக்கொண்டு ,அந்த கவுண்டரில் போய் கேட்டுக்கொள் என்றாள்.திரும்பி பார்த்தேன் என்ன ஆச்சரியம்?அங்கே உள்ள இருக்கையில் ஒருவர் கூட இல்லை.சிஸ்டம் டவுன் என்று சொல்லி எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் போல?நம்பரை எடுத்தவுடன் என்னை அழைத்தார்கள்.அங்கே யாருமே இல்லை என்பதால்.

                 ’ரொம்ப அழகாக சிரித்த முகத்துடன் (கொஞ்சம் நேருக்கு மாறான செயலாக இருந்தது),சின்ன  பெண்  மலாயில் ’என்ன அக்கா ?’என்றாள்.’என் விபரங்களையும் நோக்கத்தையும் சொன்னேன்.’நான் சும்மா சும்மா வரமுடியாது, (நிறைய வேலைகளைத் தவிர்ர்த்து முகநூலில் பிசி என்பது அவளுக்கு தெரியாது),கொஞ்சம் பிசி,சோ என் தஸ்தாவேஜுக்களை சரி பார்த்து சொல் ‘என்றேன்.அவளும் ‘பரவாயில்லை ,நான் உனக்கு செய்து தருகிறேன் ,இப்போ சிஸ்டம் ஓகே ‘என்றாள்!என்னடா இது?இப்போதான் அவ சொன்னாள்,இன்றைக்கு ஒரு மலேசியா முழுவதும் சிஸ்டம் டவுன்???அதற்குள் அந்த குட்டி என் கையில் உள்ள உறையை எடுத்துக்கொண்டு  அனைத்து தாட்களையும் திருப்பி பார்த்தாள்.’ஓகே அக்கா, அனைத்தும் சரியா இருக்கிறது.இதோ இங்கே மட்டும் கையொப்பமிடு ‘என்றாள்.

                        பிறகு என்ன தொகை? உனக்கு எவ்வளவு  கொடுக்கணும்?பல்கலைக்கழகத்துக்கு எவ்வளவு ?என்று கணக்கு போட்டு, பெருவிரல் அச்சுகளை எடுத்துக்கொண்டாள். என்னால் நம்பவே முடியவில்லை.ஒரு பத்து நிமிடத்தில் அனைத்து வேலைகளையும் முடித்து ,ஒரு மகிழ்ச்ச்சியான செய்தியும் சொன்னாள்.’உன் சொந்த பணத்தை நீ செலுத்தியிருந்தால் அதன் ரசிதைக்கொடு ,அதையும் உன் வங்கியில் போட்டு விடுவோம்.ரசீதைக்கொடுத்தேன்,அந்த பணம் உனக்கு சொந்தம் ,ஆகவே உன் வங்கிக்கு அனுப்பிவிடுவோம்,சோ மீதப்பணம் உன் பல்கலைகழகத்துக்குப் போய்சேரும் ‘என்றாள்.

                      சிவசிவா..வந்த வேலை இத்தனை சுலபமாக முடிந்ததே?நான் காண்பது கனவா? அவளுக்கு ஆயிரம் முறை நன்றி சொன்னேன்.வெளியே வந்து காரில் ஏறிய பின்புதான் யோசித்தேன் ,அடடா அவளிடம் ஒரு வார்த்தை சொல்ல மறந்துவிட்டேன்’உன் வேலையும் சரி உன் செயலும் சரி ,மிகுந்த திருப்தியைக்கொடுக்கிறது.இப்படி எல்லோரும் இருப்பதில்லை அது தமிழர்களாக இருந்தாலும்’என! சரி மீண்டும் அடுத்த முறை போகும்போது அவசியம் சொல்லிவிட்டு அவளோடு ஒரு படமும் எடுத்துக்கொள்வேன்.

*இதைப்படிக்கும் மலேசிய,பூச்சோங் வட்டார  மக்களே ,இங்கே ஒரு கிளை இருப்பது உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்.நேரத்தை விரயம் செய்யாதீர்கள் ,எதற்கும் ஒரு முயற்சி இருத்தல் நலம்.காரியம் கைகூடும்.
                                                                       

Sunday 14 September 2014

மனிதனும் தெய்வமாகலாம்!

                                                             

             மலாயா,பர்மா,சயாம் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பு அதிகம்.அதிலும் மலாயாவில் ’சாலை ஓரங்களில் கொட்டிக்கிடக்கும் சக்கரையில் உட்காரும் காக்கைகளையும் குருவிகளையும் விரட்டும் வேலை கூட உண்டு.யாரெல்லாம் போகப்போறிங்கள், எங்களோடு வரவும்’என்ற சிலரின் ஆசைவார்த்தைகளை கேட்டுக்கொண்டு நிலப்பட்டாக்களை,நகைகளை  விற்றும் ,அடகு வைத்தும் தங்களின் தாய்நாடான இந்தியாவை விட்டு ,வெளியேறி வந்து ,இங்கே வந்து ரயில் தண்டவாளங்கள் போடவும் ,ரப்பர் தோட்டத்தில் பால் மரம் சீவுவதற்கும் கொத்தடிமைகளாக கொண்டுவரப்பட்ட கோடான கோடி தமிழர்கள்.

             தாய்நாட்டை விட்டு வந்த அவர்களை  ,சில தரப்பினர்  '3T'அடிப்படையில் tamil school,temple,toddyshop  என  மயக்கி ஏமாற்றி வேலை வாங்கியதாக என் தாத்தா கூறி கேட்டதுண்டு.அப்படியெல்லாம் ஆசை வார்த்தைகளை கேட்டு வந்த எத்தனைபேர் மறுபடியும் தாய்நாட்டுக்குச் சென்றனர்? அந்த காலங்களில் உண்மையாகவே பணக்காரகள் மட்டும்தான் தமிழ்நாட்டுக்கு வான் ஊர்தியில் செல்லமுடியும் என நினைக்கிறேன்.இந்தியா போவது என்பது யூகிக்கமுடியாத ஒரு நிலையாக ஒருகாலகட்டம் வரையில் இருந்துவந்தது..

               யார்  இந்த நாட்டுக்குச் சொந்தக்காரன்?யார் முதலில் வந்தனர்? இந்நாடு யாருக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டது? என்ற கேள்விகளுக்கு ஒரே பதில் யார் ?சாரி ’எந்த’ மதத்தினர் அதிகமாக இருக்கின்றனரோ அவர்களே நாட்டின்  உரிமையாளர்கள்!பெரிய எதிர்ப்பார்ப்பில் இங்கே புலம்பெயர்ந்த  பலருக்கு இன்னமும் ஏமாற்றமே மிஞ்சியது. திரும்பி போகமுடியாமல் எத்தனையோ பேர் இங்கேயே தஞ்சம் புகுந்தனர்.வசதியுள்ளவர்கள் வான் ஊர்தியிலும் ,மற்றவர்கள் வ.உ.சி கப்பலிலும் செல்வதுண்டு. குடும்பத்தையும் தங்களது வீடுகளையும்  விட்டு எத்தனைப்பேர்களால் மீண்டும் அங்கே போக முடியாமல் போனது?சொந்த நாட்டை விட்டு வந்து ஊரான் நாட்டில் பத்தோடு பதினொன்றாக வாழ்ந்து வரும் கொடுமை இருக்கே?ஆனால் அதை விட கொடுமை ,இறுதி மூச்சுவரை தங்கள் தாய்நாட்டுக்கு போகமுடியாமல் போனதுதான்!

                பெற்ற தாய்தந்தையருக்கு கொள்ளி வைக்ககூட முடியாத நிலை,காரணம் பணத்தட்டுப்பாடு.ஊரிலிருந்து கடிதம் வந்தால் ,ஏதோ அவர் குடும்பமே வந்ததுபோல என் தாத்தாவும் அப்பாவும் குதூகலித்த நாட்களைக் கண்டதுண்டு. எப்படியும் என் ப்ரோவிடெண்ட் பணத்தை எடுத்து நான் இந்தியா போவென் ,நான் பிறந்த வீட்டைப் போய் பார்ப்பேன்’என்று ஆசை ஆசையாய் இருந்த என் தந்தையினால் கூட அந்தகால கட்டத்தில் (90களில்) போகமுடியாமல் போனது.காரணம் அன்றைய காலகட்டத்தில் விமான டிக்கெட்டின் விலை.ஒரே ஒரு கப்பல் போய்க்கொண்டிருந்தது ஆனால் அதையும் வியாபார தந்திரத்தால் எரித்துவிட்டதாக கேள்விப்பட்டதுண்டு.

           ஆனால் இன்று நினைத்தவர்கள் எல்லாம் தமிழ்நாடு போகலாம்,குடும்பம் குடும்பமாக போகலாம்.ஒரு வருடத்தில் பலமுறை போகலாம்.அட ஏன் அவ்வளவு தூரம் பேசனும்?நானே இதுவரையில் ஒன்பது முறை தமிழ்நாட்டுக்குச் சென்றுவிட்டேன்.இத்தனைக்கும் சேமிப்பு என்ற ‘கெட்டப்பழக்கமே’என்னிடம் இல்லை.ஆனால் உடனடியாக ஒரு தொகையைச் செலுத்தில் என்னாலும் போக முடிகிறது.அதெற்கெல்லாம் காரணம் ஏர் ஆசியாவின்  திரு.டோனி பெர்னாண்டஸ் என்ற நல்ல மனிதன்!அதிலும் அவர் ஓர் இந்தியர் என்பதில்தான் எத்தனை எத்தனை பெருமை?எங்களைப்போன்ற நடுத்தர மக்களின் மனதில் கோட்டையாய் உட்கார்த்திருக்கும் தன்னலமற்ற மனிதர்!

             ஆமாம் தன் வியாபாரத்தில் ஆரம்பகாலத்தில் பல மில்லியன்களை இழைந்தவர் ஆனாலும் தன் அதீத திறமையாலும் நல்ல மனதினாலும் விட்ட இடத்தைப் பிடித்த மாமனிதர்.அண்மையில் செவிவழி கேட்ட ஒரு விசயம்.விமானத்தை விட்டு இறங்கி தமிழ்நாட்டு மண்ணை மிதித்ததும் ஒரு மூதாட்டி ‘அப்பா டோனி தம்பி,நீ எங்கேடா இருக்கே? நான் சாவதற்குள்  என் தாய்மண்ணை மிதிச்சிட்டேன் .இனி என் உயிர் இங்கே போனாலும் என் கட்டை நல்லபடி வேகும் உனக்கு என் கையால ஒரு மாலை போடணும் ‘என கண்ணீர் மல்க கதறியதாக ஒரு சம்பவம் !

             ’தமிழ்நாடா? அதுக்கெல்லாம் கொடுப்பினை இருக்கணுமே’என்று பெருமூச்சு விட்ட எத்தனை லட்சம் மக்கள் இன்று அவர் தயவால் போய்வந்தனர். அட நான் கூட ஒருமுறை வெறும் ஐம்பது வெள்ளி டிக்கெட் விலையில் போனதுண்டு.ஆனால் என்ன என் அப்பாவை எங்களால் இறுதி வரை அனுப்பமுடியாமல் போனதே என்ற கவலை மட்டும் இன்னும் மனதை உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது.திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு பல லட்சோப லட்ச மக்களின் மனதில் நடமாடும் தெய்வம் என போற்றப்படும் டோனி பெர்னாண்டஸ் அவர்களே,நீர் நீடுழி வாழ்க.மனிதனும் தெய்வமாகலாம் என நிரூபித்துக்காட்டியர் .