Thursday 4 June 2015

கலை என்பது யாதெனில்?

                                                                             
                பல்கலைக்கழகத்தில் இடுபணிக்காக ஓர் ஓவியத்தை ஏதாவது ஒரு டெக்டிக் பயன்படுத்தி(water colour) வர்ணம் தீட்டிக் கொண்டு வரச்சொன்னார் ப்ரொஃபெசர். நானும் சுமார் ஐந்து ஓவியத்தை பல விதமாக வர்ணங்களைக் கொட்டி செய்தேன்.ஆனால் எல்லா காகிதத்திலும் வாட்டர் கலர் தூரிகையிலிருந்து வழிந்து காகிதத்தில் சொட்டு சொட்டாக விழுந்தது.டென்சனில் எல்லாதையும் கசக்கி வீசினேன்.இறுதியாக செய்த ஒன்றிலும் அப்படியே விழுந்தது.ஆனால் நேரம் போதாமையால்  அதை எடுத்துக்கொண்டேன்.மனம் திருப்தியாகவே இல்லை.கலைக்கல்வி ,ஓவியம் எல்லாம் எனக்கு வராது என்பது மிகப்பெரிய உண்மை.(அண்மையில் அணில் வரையப்போய் அதை முயலா? குரங்கா?என என் மாணவர்கள் கேட்டதையும் மறைப்பதற்கில்லை!
              வகுப்பில் போய் அதை வெளியே எடுக்க (வெட்கப்பட்டு), எல்லோரும் கொடுத்தப்பிறகு கொடுத்தேன்.என் கலைக்கல்வி விரிவுரையாளர் ‘இது யார் செய்த வேலை?’என்றார்.'நான் தான் ப்ரோஃபெசர் ‘என்றேன் கொஞ்சம் தயக்கத்துடன் .உடனே அவர் ‘இங்கே என் கைகளில் இருக்கும் வேலையிலே இதுதான் மிகச்சிறந்த படைப்பு!’இதுவரை நீ செய்த கலைக்கல்வியில் நான் இதற்குதான்  அதிகமான புள்ளிகளைப்போடுவேன்’என்று கூறிக்கொண்டு என் வேலையை உயர்த்தி அனைவரிடமும் காட்டினார்.’i really had  affection on this work!’என்றார்.ஏதும் நம்மைக் கலாய்க்கிறாரோ என்று ‘இல்லை என்னால் முழுமையாக செய்ய...என்று நான் முடிப்பதற்குள் அவர்  ‘உன் இந்த கலையில் எத்தனை அர்த்தங்கள் உள்ளன தெரியுமா?
                         ’நீ வீசினாய் என்று சொன்ன அந்த காகிதங்களையும் ஏன் கொண்டு வரவில்லை ?முடிந்தால் அடுத்த வகுப்புக்கு அதைக்கொண்டு வர முடியுமா?எனக்கு அதில் எது சிறப்பாக படுகிறதோ அதை நான் பிற வகுப்புகளுக்கு உதாரண வேலையாக என் கோப்புகளில் வைத்துக்கொள்கிறேன்’என்றார்.        அதுமட்டுமல்ல அன்று நான்கு  மணி நேரமும் என் காகிதத்தைப் பல உதாரணங்களை காட்டி வகுப்பை நடத்தினர்.’உனக்கு அழகில்லை என்பது பிறருக்கு மிகச் சிறந்ததாய் தெரியும்,உனக்கு அழகு என்பது பிறருக்கு அசிங்கமாய் தெரியும்அதுதான் கலையின் ரகசியம்’என்றார்.
                       என் நினைவுக்கு வந்தது என்னவோ ‘காதலா காதலா ‘ திரைப்படத்தில் கமல் சொன்ன நகைசுவை மட்டுமே.’அது என்னங்க எங்க கண்ணுக்கு ஒன்னுமே தெரியலை,நீங்க என்னம்மோ ஆஹா ஓஹோன்னு சொல்றிங்களே!இன்னமும் எனக்கு நம்பமுடியவில்லை.கலைக்கல்வி நமக்கு வராது என்ற என் இத்தனை வருட எண்ணத்தை ,ஒரு நொடியில் தகர்த்தெறிந்த ஒவியமும்,அந்த விரிவுரையாளரைக் கவர்ந்த அந்த அழுக்கேறிய ஓவியமும் இதுதான்!