Sunday 26 August 2012

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

மனித மனம் சில விசயங்களுக்கு ஆட்கொண்ட மனம்.அதில் இசை முதன்மை வகிக்குது ,அது என் மனம்.சில நேரங்களில் என்றோ,பல வருடங்களுக்கு முன் கேட்ட பாடல்கள் ,நம் மனதில் மிக பசுமையாக சில நினைவுகளை வருடி செல்லும்.அதில்  இனிமையான நினைவுகளும் உண்டு ,  கசப்பான நினைவுகளும் உண்டு. அந்த வகையில் ,ஒரு சில பாடல்களை நான் கேட்கும்பொதெல்லாம் ,என் கண் முன் நிழலாடும் சில சம்பவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

                                                                                 
அந்த வகையில் முதலாவதாக வரும் பாடல்:

http://www.youtube.com/watch?v=v7D7qcMX3x0
மருத மலை மாமணியே முருகையா’(தெய்வம்).

இந்த பாடலைக் கேட்டால்,எனக்கு என் அம்மா வழி தாத்தா (திரு.குஞ்சாம்பு)அவர்களின் இறப்புதான் நினைவுக்கு வரும்.அந்த சமயம் எனக்கு வயது ஐந்தோ?ஆறோ இருக்கும்.என் அம்மா சத்தம்  போட்டு அழுது நான் பார்த்தது அன்றுதான்.நாங்கள் இறப்பு வீட்டையடைந்த பொழுது ,என் அம்மாவைக் கட்டியணைத்து அழுத என் மாமாக்கள்,சின்னம்மாக்களின் அழுகைக்கு இடையே ,அங்கே ஒலியேறிய பாடல் .அன்றுமுதல் இந்தபாடலைக்கேட்டால் ஏதோ ஓர் இழப்பை நினைவுபடுத்தும்.(இறப்பு வீட்டில் முன்பெல்லாம் பாடல்கள் ஒலியேறுவது வழக்கத்தில் இருந்தது)


http://www.youtube.com/watch?v=h4IHiOAZ918(நீயா)
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா

எங்கள் குடும்பமும்  என் தோழியின் குடும்பமும் ,இந்த படம் பார்க்க தியேட்டருக்கு குடும்பமாக சென்றோம்.வறுமையில் இருந்த காலங்களில் கூட என் தந்தை எங்களை குடும்பமாக அழைத்துச் சென்று நாங்கள் தியேட்டரில் பார்த்த முதல் படம்.இரு குடும்பங்களாக சென்றோம்,இன்று ,என் அப்பா இல்லை,என் தோழி(அண்ணியின்)அப்பா அம்மா இல்லை,அவளுடைய அண்ணன் அக்காளும் கூட இறந்துவிட்டனர்.இன்றும் இந்த பாடலைக்கேட்டால் ,இறந்து போன அந்த ஆன்மாக்களும் அன்றைய பழைய தியேட்டர்,அன்று திண்ண தின்பண்டம்,குளிர்பானம் இவை யாவும் என் கண் முன்னே!

http://www.youtube.com/watch?v=pECeEaM_2tA&feature=related
எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே(சிவகாமியின் செல்வன்)

என் மாமாவின் உறவு வ(லி)ழி ஒருவர் எங்கள் வீட்டுக்கு பெண்ணைக்கூட்டிக்கிட்டு ஓடி வந்து ,ஒரு விபத்தில் மரணமடைந்தார்.(என் பதில் எழுதியுள்ளேன்)அந்த இறப்பு எங்கள் குடும்பத்தை மிகவும் வருத்திய ஒன்று.அவர் உடலை அவர் ஊருக்கு கொண்டு சென்றனர்.வீட்டில் எல்லோரும் சென்றனர்,நானும் என் தங்கையும் செல்ல தடை.வீடே வெறிச்சோடிக்கிடந்த சமயத்தில் ,எங்கள் வீட்டு வானொலியில் எங்களுக்காகவே ..இல்லை அந்த காதலிக்காகவே ஒலியேறியது போல இந்த பாடல்.

http://www.youtube.com/watch?v=kmyzafV8Vko
ஏய் கிளி இருக்கு ,ஏரிக்கரை இருக்கு(முதல் மரியாதை)

இந்த படம் ரிலீசான புதிதில் ,எங்கள் கிராமமே இந்த பாடல்களில் மூழ்கிகிடந்தது. பாடல்கள் பட்டி தொட்டிய்யெல்லாம் ஒலித்தது.வைரமுத்து அழகான வரிகளை வர்ணித்து கூறிய பின்பு கேசட்டில் பாடல்கள் ஒலியேறும்.பசுமையான,ஓரளவு என் கிராமத்தைப்போலவே ,இந்த படம் ஷூட்டிங் செய்த கிராமத்தின் சூழல்.இன்று கேட்டாலும் என் வீட்டு பின்னால் இருந்த குட்டை,கொய்யா மரம் ,கோழிகள் ,ஆடுகள் என்ற கிராமிய வீட்டுக்கு செல்லும் என் நினைவு.


http://www.youtube.com/watch?v=dGhkH958nHo
ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை(சிவந்த மண்)

நான் முதன்முதலாக வெளிநாடு (முதன்முறையாக குடும்பத்தை விட்டு மூன்று மாதங்கள்)செல்லும்போது ,என் உடன் பல பாடல்கள் கொண்ட கேசட்களைக் கொண்டு சென்றேன்.விமான நிலையம் சென்று விடைபெற்ற அந்த தருணம்,என் கண்ணில் மாலை மாலையாய் கொட்டிய கண்ணீர்.என் குடும்பமும் அப்படியே.விமானத்தில் ஏறி உட்கார்ந்தும் என் அழுகை நின்றபாடில்லை.என் அருகில் அமர்ந்த என் தோழி ,என்னை மகிழ வைக்க ஒரே வழி இதுதான் என்று என் கையில் இருந்த வாக்மென்(அப்போவெல்லாம் அதுதானே பயணத்தில் கைகொடுக்கும் வனொலி) என் காதுகளில் போட்டு ,ப்ளேய் பட்டனை அழுத்தினாள் ..நான் நடுவானில் ..என் காதில் ஒலித்த இந்த பாடல் ..ஐயோ என் கண்ணீருக்கு மருந்தாக...இன்றும் மனதில் சோகம் என்றால் ,மொபலை அழுத்துவேன்..என்னை நடு வானுக்கு பறக்க விடும் ..பாடல்!

http://www.youtube.com/watch?v=im8ounEVVwM
ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்

என் கண்வர் என்னைப் பெண் பார்த்து சென்ற புதிதில் ,சரியாக ஒரு மணிக்கு அவருக்கு மதிய உணவு நேரம்.எங்கள் அலுவலகத்தில் 12.30-க்கு லன்ச்.எல்லோரும் உணவருந்திவிட்டு ,கொஞ்ச நேரம் அவரவர் மேஜையில் ஒரு குட்டி தூக்கம் போடும் நேரமாக பார்த்து ,ஒரு மணிக்கு எனக்கு போன் வரும்..இது நாலைந்து நாளுக்கு தொடரவே ,அந்த ஒருமணிக்கு யாருக்கு போன் வந்தாலும் ,இந்த பாடலைப்பாடிக்கொண்டே போனை எடுப்பார்கள் என் சக தோழிகள்.நாளடைவில் என் சீன மற்றும் மலாய்க்கார நண்பர்களும் இந்த பாடலைப் பாடித்தான் ,போனை என்னிடம் கொடுப்பார்கள்.அது ஒரு கனாக்காலம்.

http://www.youtube.com/watch?v=4mMVY2zExis
இயற்கை எனும் இளையகன்னி ஏங்குகிறாள்(சாந்தி நிலையம்)

நானும் என் தோழி இளவரசியும்,ஜப்பானிய நிறுவனத்தில் வேலை செய்த சமயம் ,ஒருநாள்  ஏதோ ஒரு தப்பினால் ,என் லைன் லீடர் (line leader)என்னைத் திட்டிவிடவே எனக்கு கோபம்.முதல் நாள் நடந்த இந்த சம்பவம் ,என்னைப்பாதிக்கவே ,மறுநாள் வேலைக்கு விருப்பமின்றி சென்றேன்.என் நிலையை அறிந்த இளவரசி ,’அக்கா எனக்கும் மூட் இல்லை,வாங்க ,கிளினிக் போய் பொய் சொல்லி மருத்துவ விடுப்புக்கு முயற்சிப்போம் ,கிடைத்தால் வெளியே எங்கேயாவது போய் நிம்மதியாக உட்கார்ந்து பேசிவிட்டு ,வீட்டுக்கு போகலாம்;என்றாள்.எனக்கு தேனாய் இனித்தது அந்த ஐடியா.இருவரும் கிளினிக் புத்தகம் எடுத்துக்கொண்டு ,கிளினிக் போனோம்.என்ன ஆச்சரியம் ,காது வலி ,வயிற்றுப்ப்போக்கு என்று மருத்துவரை ஏமாற்றி லீவ் கிடைத்தது.எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..வெற்றி ..வெற்றி...இருவரும் பேருந்தில் ஏறி ,அங்கேயும் என் வாக்மென்,இருவரின் காதிலும் ,ஒன்று என் காதில்,மற்றொன்று அவள் காதில் ,ப்ளேய் பட்டன் அழுத்தியபோது ஒலித்த கானம் ,இயற்கை....!இன்றும் வானொலியில் பாடல் ஒலியேறினால் ,அவள் என்னை அழைத்து’அக்கா ,பொய் சொல்லி வாங்கிய எம்.சிக்கு கிடைத்த பாடல் ,கேளுங்க’என்று நினைவு படுத்துவாள்.


http://www.youtube.com/watch?v=NCtON6_mpzY
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்.(ஜீன்ஸ்)

என் கணவர் முதன்முறையாக என் அண்ணனின் அனுமதியோடு என்னை வெளியே அழைத்துச் சென்றது இந்த படம் பார்க்க.அழகான இருள் ,முதன் முதலாய் எங்களுக்கு கிடைத்த தனிமை.அருமையான் சூழல் ,ஆனால் இருவருமே ஒரு வார்த்தைக்கூட பேசாமல் ,இந்த பாடலில் லயித்துபோனோம் என்பதுதான் பகிரங்கமான உண்மை.அந்த அளவு சங்கர் படத்தை இயக்கிய விதம் .எதையும் ரசிக்க முடியாமல் முதன்முறையாய் சந்திக்கும் காதலர்களையே தன் வசம் இழுத்துக்கொண்ட பாடல்.இன்றும் அந்த பாடல் ஒலித்தால் ,திருமணமாகாத அந்த கணங்களுக்குள்  நான் மூழ்கிவிடுவேன்.


http://www.youtube.com/watch?v=th3LJyFDZzY
ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தத(இளைமை ஊஞ்சலாடுகிறது)

எங்கள் ஊர் வானொலியில்’ 80-களின் பாடல்கள்’ என்ற தலைப்பில்,ஒரு நிகழ்ச்சி ஒலியேறும்.நான் முதன்முறையாக எழுதி அனுப்பிய இந்த பாடலுக்கான கடிதம் மிக சிறந்த கடிதமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ,இந்த் பாடலை ,என் பெயரை அறிவிப்பாளர் வாசித்து ‘செல்விக்காகவே இந்த பாடல்’என்று ஒலியேற்றிய  விதம் ,ஐயோ எனக்கு அன்று முழுவதும் போன் அழைப்புகள்,பாராட்டுகள்!நான் தீவிரமாக வானொலிக்கு எழுத தூண்டிய பாடல்.


http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD0110'&lang=en
உன்னைக்கண்டு நான் ஆட(கல்யாண பரிசு)

தீபாவளி என்றாலே எங்கள் ஊர் வானொலியில் அன்று முதல் இன்று வரை இந்த பாடல்தான் முதல் வரிசையில்.எத்தனை தீபாவளி பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு இணையாக பாடலே இல்லை  என்றுதான் சொல்வேன்.அதிலும் அந்த காலத்தில் அப்பா இருக்கும்போது ,அவருடன் கொண்டாடியே தீபாவளியை நினைவுபடுத்தும் பாடல்.
(ஆனால் சந்தோசமாக ஒலிக்கும் பாடல் கிடைக்கவே இல்லை)

                                                                                                                                                           
                             
.
                                     










Thursday 2 August 2012

கனிமொழியின் தீர்ப்பு சரியா?

அழகிய கிராமம்,அங்கே ஒரு காதல் ஜோடி,இளனும் கயல்விழியும்.இருவரும் அந்த கிராமத்தில் உள்ள கோவிலில் சேவை செய்யப்போய் அங்கே அறிமுகம் ஆனார்கள்(கடந்த 15 வருடங்களுக்கு முன்)!இளன் கோவிலில் செயளாலர்,கயல்விழி தேவாரம் வகுப்பு செல்வாள் .காதல் முளைத்தது.திரும்ணமும் முடிந்தது.இருவரும் தம்பதி சகிதமாய் கோவிலில் சேவை செய்தனர்.அந்த சமயம் அந்த கிராமத்து கோவில் ,ஒரு தகர கோயிலாக இருந்தது.இளன் மற்றும் அவர்தம் கோவில் நிர்வாகத்துடன் சேர்ந்து தகரகோவிலைக் கோபுரம் கொண்ட கோவிலாக கட்ட அரும்பாடுபட்டனர்.மலேசியாவில் கோவில் கட்டுவது என்பது சாதாரண விசயம் அல்ல என்பதுவும் குறிப்பிடத்தக்கது.பல அரசியல்வாதிகளின் காலில் விழுந்து ,நாய்க்கடி, மனிதர்களின் அவசொல் என்று அல்லும்பகலுமாய் உழைப்பைப்போட்டு கோபுரத்தை எழுப்பினர்.
                                                                                 
கோபுரம் ஏறியது,கூடவே பிரச்சனையும் தலை விரித்தாட ஆரம்பித்ததது.ஆமாம் கோவில் தலை நிமிர்ந்து நின்றவுடன் ,கோவிலின் முக்கிய புள்ளி ,சொரண்டி தின்ன ஆரம்பித்தார்.நிர்வாகத்துக்கு தெரியாமல் விடியற்காலையெல்லாம் பூஜைகள் ஏற்பாடு செய்து ,அதில் வரும் பணத்தை கணக்கில் போகாமல் தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.லேசாக புகைய புகைய ,இளன் மற்றும் சகாக்களுக்கு விசயம் போனது.சும்மா விடுவார்களா?,அந்த முக்கிய தலையை உருட்டினர்.குடைய ஆரம்பித்தனர்.அங்கே பிளவு உண்டானது.கோவில் பணத்தை தின்னும் ’உன்னோடு நாங்கள் இருக்கப்போவதில்லை என இளனிம் டீம் அப்படியே விலகியது.ஆனால் ....ஆனால் ,இளன் விலகும்போது ஒரு பெரிய தப்பை தன்னோடு கொண்டு சென்றார்.கோவில் செயளாலர் என்பதால் ,கோவில் உண்டியலில் நேர்த்திக்காக பக்தர்கள் போடும் நகைகளை இளன் தன் பாதுகாப்பில் வைத்திருந்தார்.இளன் நேர்மையில் எல்லா புராண இதிகாச பாத்திரங்களையும் மிஞ்சியவர் என்றே கூறலாம்.கூடவே இருந்து பார்த்ததால்தான் ஆணித்தரமாக கூறுகிறேன்.
                                                                                 

இந்த பிரச்சனைக்களுக்கிடையில்தான் கயல்விழி கனிமொழிக்கு அறிமுகம் ஆனாள்.கனிமொழியின் தயவால் கயல்விழிக்கு ஆசிரியை வேலை கிடைத்தது.பிறகு சிலகாலம் கழித்து ,கனிமொழியின் பள்ளியிலே கயல்விழி வேலைக்கு சேர்ந்தாள்.கனிமொழி அந்த கோபுர கோயிலுக்கு போய் வருபவள் ஆனால் சேவைகள் செய்வது குறைவு ,அதற்கு காரணம் ஒன்று ,அது அவ பக்கத்துக்கிராமத்துக் கோவில்,மற்றொன்று பற்றின்றி கனிமொழி எந்த தெய்வ செயல்களிலும் ஈடுபாடு காட்டமாட்டாள்.

கயல்விழி வந்த பிறகு ,கனிமொழி தான் அரசல் புரசலாக கேள்விப்பட்ட உட்பூசல்களைப்பற்றி கயல்விழியிடம் கேட்டு தெரிந்துகொண்டாள்(.இவர்கள் இருவரும் ,சிறுவயது முதல் ஒரே பள்ளியில் பயின்றவர்கள் ஆனால் வெவ்வேறு கிராமத்தினர்.)கயல்விழியும் தயங்கி தயங்கி ,சில விசயங்களை கனிமொழியிடம் கூறுவாள்.அவ கணவன் கோவிலில் முக்கிய பொறுப்பில் இருந்ததால் பல களவுகளை கையும் களவுமாக பிடித்தது முதல் இளனுடைய டீம் விலகல் வரை ,அனைத்து விவரங்களை கனிமொழியிடம் கூறினாள்.ஆகவே கனிமொழிக்கு எல்லா விவரங்களும் தெரிய வந்தது.
இளனைக் கனிமொழி தன் உடன்பிறவா சகோதரனாக ஏற்றுப்பழகினாள்.அவர்களின் இனிய நட்பு இனிதே இன்று இந்த நொடி வரை  தொடர்கிறது.
                                                                               

இப்படிப்பட்டவேளையில்தான் கனிமொழிக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது ‘ஹலோ டீச்சர் ,உங்களோடு பணிபுரியும் சக ஆசிரியையின் கணவர் ,கோவில் நிர்வாகத்தை விட்டு விலகும் பொழுது ,அம்பாளின் நகைகளை சுருட்டிக்கொண்டு போய் விட்டாராமே???இப்படி ஒரு பழிச்சொல்லை கனிமோழி மூன்றாவது முறையாக கேட்கிறாள்.வேறு யார் கிளப்பிய புரளியாக இருக்கும்?அந்த முக்கிய புள்ளிதான்.ஏற்கனவே பள்ளியில் பெற்றோர்கள் பேசிக்கொள்ள ,கனிமொழியின் செவிக்கு எட்டியது.பிறகு கனிமொழியின் அண்ணி ,அதே கிராமத்தில் வசிப்பவள் ,ஆகவே அவர் மூலமும் ஒருமுறைக்கேட்டுவிட்டாள்.ஆனால் அப்போதெல்லாம் தக்க பதில் கொடுத்து இளனையும் அவர்தன் டீம் -ஐயும் காப்பாற்றி வந்தாள் கனிமொழி.ஆனால் கயல்விழியிடம் இது பற்றி சொல்லிக்கொண்டதில்லை.

இம்முறை பொருமையை இழந்தாள்.கயல்விழியை உடகாரவைத்து பேசி ஒரு முடிவெடுக்க எண்ணினாள்.’கயல் உன் கணவருக்கு ஏன் இந்த வீணான வேலை?கோவில் வேண்டாம் ,சாமி வேண்டாம் என்று சொல்லும் அவரும் அவரது சகாக்களும் ஏன் அந்த நகைகளை வங்கியில் பாதுகாத்து வருகின்றனர்?(இன்னுமொரு தகவல் :இளன் அந்த கோவிலை தனது தாய் வீடாக எண்ணி ,வேலை செய்து வந்தவர்.அப்படி உரிமைக்கொண்டாடிய மனிதர் கோவிலை விட்டு வந்து என் கண் பார்க்க ,பல கஷ்டங்களை அனுபவித்தார்.அவர் பலவருடங்கள் செய்த வேலைப்போனது ,நோய்வாய்ப்பட்டார்,கடன் தொல்லைகள் என் பல).

                                                                               
கனிமொழியின் கேள்விக்கு கயல் சொன்ன பதில்’இல்லை கனி,அங்கே உள்ளவன் எல்லாத்தையும் விற்று திங்கறான்,இதையும் கொடுத்தால் ,ரொம்ப மகிழ்ச்சியாக தின்னுவான்.அதை எங்களால் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது.மேலும் அந்த கோபுரம் எழ நாங்கள் பட்ட சிரமம் இருக்கே?எங்களின் உழைப்பை யார் அறிவார் ?என்று அவளும் இளனும் அந்த கோவிலுக்காக பட்ட துன்பங்களை பற்றி அடுக்கிக்கொண்டே போனாள்.’உனக்கெல்லாம் என்ன தெரியும்?நியாயம் பேச வந்துட்ட?’என்று பதில் கொடுத்தாள் .

அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த கனிமொழி ஒன்று கேட்டாள் ‘நீங்களோ அந்த கோவிலோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லைன்னு வந்துட்டிங்க,அதன்பிறகு நீயும் உன் கணவரும் அடைந்த துன்பங்கள் நான் அறிவேன்.ஒருவேளை இந்த நகைகளை நீங்கள் வச்சிருப்பதலோ என்னவோ அந்த சோதனைகளை நீ அனுபவிக்கிறாயோ?(கனிமொழி கொஞ்சம்  சமயம் புரிந்தவள் என்றும் சொல்லலாம்).உன்னை சோதிப்பது இறைவனின் தொழில் அல்ல,ஆனாலும் .....தேவையில்லாத ஒன்றை நீயும் உன் கணவரும் ஏன் கட்டிக்கிட்டு அழனும்?மேலும் உங்கள் உழைப்பு உழைப்புன்னு நீ சொல்வதைப்பார்த்தால் ,உழைப்புக்கு ஊதியமாக அந்த நகைகளை பூதம் காப்பதுபோல் காத்து வருகிறாயா?இதெல்லாம் வீணான பழிச்சொல்.உன் பிள்ளைகளை நாளைக்கு யாராவது ‘கோவில் நகையை திருடி வச்சிப்பவன் புள்ளங்கதானேன்னு’சொன்னால் எப்படி இருக்கும்?என்று அவளுக்கு பட்ட நியாயத்தை எடுத்துரைத்தாள்.

கயல்விழியோ தன் கணவன் டீம் தோற்றுப்போக கூடாதுன்னும் ,அந்த பெரும்புள்ளிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் மேலும் அந்த நகைகளையும் கொடுத்தால் ,அவன் பணமாக்கி விடுவான் என்ற அக்கறையில் அப்படி செய்வதாக கூறினாள்.
இறுதிக்கு கொண்டு வர நினைத்த கனிமொழி சொன்னாள் ‘ஒரு பொருள் உன்னுடன் இருக்கும் வரை உனக்கு சொந்தம் ,அதை நீ வேறொருவரிடம் ஒப்படைத்தால் ,அது அவருக்கு சொந்தம் .அதை அவன் திருடுகிறானோ ,அழிக்கிறானோ அது அவன் பாடு.கோவில் சொத்து குலநாசம் .அதைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம்,இறைவன் பார்த்துக்கொள்வான்’என்று தீர்ர்பு சொல்லி முடித்துக்கொண்டாள்.கனிமொழியின் கோபத்துக்கு காரணம் இளனின் நேர்மையை அவள் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பவள்.
                                                                             
                                             
(இந்த பதிவைப் படிக்கும் வாச்கர்களுடைய கருத்துக்களை வரவேற்கிறேன்,தயவு செய்து கனிமொழியின் தீர்ப்பு சரியா அல்லது கயல்விழியின் பிடிவாதம் நியாயமா என்று எடுத்துரைக்கவும் .உங்களின் இந்த கருத்துக்களைக்கொண்டுதான் இந்த இருவரின் நட்பும் தொடரும் வாய்ப்பு இருக்கிறது)

Wednesday 1 August 2012

என்னை விட்டு எங்கே போனாய்?

ஏன் என்னை விட்டுப் போனாய்??

வேலையில் கொஞ்சம் தாமதம் ஆனாலும் உடனே சமையலுக்கு விடுமுறை இப்போ!! 

எங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் , சோற்றுப்பானையில் சோறும் ,குழம்பு பானையில் குழம்பும், தழும்ப தழும்ப தயாராக இருக்கும் அப்போ??

ஏன் என்னை விட்டுப் போனாய்??


காற்று ,மழையைக் கண்டாலே கதவைப் பூட்டி வீட்டிலே இருப்போம் இப்போ...


காற்று ,மழை ,கடுமையான வெயில், அதுதானே  பஸ் ஏறினாலும் சரி,
பள்ளி முடிந்து வீட்டுப் போனாலும் கூடவே வரும் நண்பன் அப்போ....

ஏன் என்னை விட்டுப் போனாய்??

நள்ளிருளில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கார் ஓட்டும் காலம் இப்போ.......
நள்ளிருளில்நடனம் என்ன? விளையாட்டு என்ன ,விருந்து என்ன,வித விதமான கூத்துகள் அப்போ......

ஏன் என்னை விட்டுப் போனாய்??

தீபாவளி வந்திருச்சி ஆனால் கையில் பணம் இல்லை...
ஆகவே அடுத்த வருசம் தீபாவளி கொண்டாடலாம் இப்போ...
.காசு இல்லை அதைப் பற்றி என்ன கவலை ?
பட்சணம்,பலகாரம் ,புத்தாடை ,பட்டாசு ,மத்தாப்பு கோழிக்கறி ,ஆட்டுக்கறி ...
வருசா வருசம் கொண்டாடிய தீபாவளி அப்போ....

ஏன் என்னை விட்டுப் போனாய்??

இரவில் பன்னிரண்டு மணி வரையில் கூட விழிக்கமுடியாமல் சிரமப்படுவது இப்போ...
விடிய விடிய விழித்திருந்தும் விழிக்கு நோகாமால் எழும் காலம் அப்போ..

எல்லாவற்றிற்கும் மேலாக,சமைத்து வைத்த எல்லாத்தையும் ஒரு பிடி பிடித்து நிம்மதியாக தூங்கிய ஒரு காலம் அப்போ......
கையில் பணம் இருந்தும் சமைக்கத் தெரிந்தும் நோய்க்கு பயந்து வாய்க்குக்கு ருசியாக சாப்பிட முடியாமல் வாழும் வாழ்க்கை இப்போ.....

ஏன் என்னை விட்டுப் போனாய்??

விட்டுப்போன உன்னைத் தேடுகிறேன்... காணமுடியவில்லையே....
என் குழந்தைப் பருவமே.....
இனி உன்னை எங்கே பார்ப்பேன்???
என் குழந்தைப் பருவமே...