Friday 28 September 2012

மூன்றே நாளில் தாலியை இழந்த புதுமணப்பெண்

இப்படி ஒரு தலைப்பை சினிமாவில்தான் கண்டிருப்போம் ,கேட்டிருப்போம்.ஆனால் என் வீட்டில் எங்களை வளர்த்த ,எங்களோடு வளர்ந்த எங்க கடைக்குட்டி அத்தையின் வாழ்க்கையில் நடந்த அவலம்தான் அது.என் அத்தை  ஆறு அண்ணன்களுக்கு கடைசி தங்கையாக  பிறந்தவர்.என் அப்பாவுக்கு மூன்று தங்கைகள்.அதில் என் லட்சுமி அத்தை,பத்து பிள்ளைகளில் கடைசிக்கு இரண்டாவது .என் அம்மா திருமணம் செய்து போன பொழுது என் அத்தைக்கு ஏழு வயதுதானாம்.என் பாட்டி என் அம்மவிடம் என் அத்தை மற்றும் இன்னும் திருமணமாகாத மற்ற சித்தப்பாக்களையும் ஒப்படைத்து ,;இனி இவர்களுக்கு நீயும் ஒரு தாய் என்று சொன்னாராம்’.

அப்பா வேலை விசயமாக கோலாலும்பூர் வந்தவுடன் அத்தையையும் கடைசி சித்தப்பாவையும் கூடவே அழைத்து வந்தாராம்.அதனால் அந்த அத்தையோடு சேர்த்து என் அம்மாவுக்கு ஐந்து பெண் குழந்தைகள் என்றே சொல்லலாம்.என் மூத்த அக்காவுக்கும் அத்தைக்கும் ஏற்த்தாழ ஏழெட்டு வய்சுதான் வித்தியாசம்.அத்தைக்கு கல்யாண வயசு வந்தது.அப்பா உட்பட சித்தப்பாக்கள் எல்லோரும் மாப்பிள்ளைத் தேடினார்கள் .அத்தை ஒரு சீனர் கம்பெனியில் வேலைக்குச் சென்றார்.நல்ல வேலை ,நல்ல சம்பளம் .அத்தை ரொம்ப சுறுசுறுப்பானவர்.ஆகவே சீனர்களுக்கு அத்தை வேலையில் காட்டிய ஆர்வம் ரொம்ப பிடித்துப்போனது.

நிறைய மாப்பிளைகள் அத்தைக்கு வந்தார்கள் ,பொருத்தம் சரியில்லாமல் போனது ,நல்ல வேலை இராது,இன்னும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அத்தைக்கு மாப்பிள்ளை ராசியகவே இல்லை.சில சமயங்களில் அத்தையைப் பார்க்க வரும் மாப்பிள்ளைகள் ,என் அக்க்காள்களை விருப்பட்டு கேட்ட கதைகளும் உண்டு.இதெல்லாம் அத்தையை வேதனையின் உச்சத்துக்கு இட்டு சென்றது .பைய பைய அக்காள்கள் இருவருக்கும் மாப்பிள்ளை வந்தார்கள் ,அப்பாவுக்கு அதில் பெருத்த சோகமதான் ,இருந்தாலும் அப்பா ரொம்ப அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்.அத்தையும் ‘அண்ணா எனக்காக ,பிள்ளைகள் காலம் தாமதிக்க வேண்டாம் ,திருமணம் பண்ணி வையுங்கள் ‘என்றார்,கனத்த இதயத்துடன் என் அம்மாவும் அக்காள்களுக்கு திருமணம் பண்ணிக்கொடுத்தாங்க.

அத்தைக்காக, அப்பா உட்பட அனைவரும் சாங்கியம் ,பரிகாரம்னு என்னன்னவோ செய்தனர்.செலவழித்தனர்.போலி சாமியார்களும் ம்ந்திரவாதிகளும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி பணம் கறந்தனர்.அப்பாவுக்கு இதிலெல்லாம் உடன்பாடில்லை ஆனால் சித்தப்பா ஒருவரின் வற்புறுத்தலினால் ,வேண்டா வெறுப்புக்காக ஒத்துக்கொள்வார்.நாட்கள் உருண்டோடின.பாட்டி இறந்தார் ,பிறகு பத்து வருடங்கள் கழித்து என் அப்பா இறந்தார்.அடுத்த ஒரே ஆண்டில் என் தாத்தாவும் இறந்தார்.அதற்குள் நானும் கல்யாண வயதுக்கு தயாரானேன்.அத்தையும் தான் வேலை செய்த கம்பெனியில் சுமார் 18 வருடங்கள் வேலை செய்தார் .ராணிப்போல வாழ்க்கை வாழ்ந்தார்.எனக்கே சில வேளைகளில் பொறாமையாய் இருக்கும்.அத்தை மூன்றாம் வகுப்பு வரைக்கூட போகவில்லை ஆனால் நிறைய சம்பாதித்தார்.

எனக்கும் மாப்பிள்ளை வந்தார்.நானும் வெளியானேன் .அந்த சமயம் ,சித்தப்பா ஒருவர் வேலை விசயமாக வெளியூர் போனதால் ,சின்னம்மா பிள்ளைகளுடன் தனியாக இருந்ததால் ,அத்தை அவர்களோடு போய் தங்க வேண்டிய சூழல் .அத்தைக்கு வயது 45 .என் தங்கையும் திருமணமானாள்.
இந்த வயதில்தான் அத்தைக்கு அந்த மாப்பிள்ளை வந்தார்(அவர் கூடவே ஏழரையை கூட்டி வந்தவர்)இரண்டாம் தாரமாக அத்தையைப் பெண் கேட்டு வந்தார்.எம் அம்மாவுக்கு விருப்பமே இல்லை ,இருப்பினும் ‘என் தலையெழுத்து அப்படித்தான் போல ‘என்று அத்தை ஏற்றுக்கொண்டார்.அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகள் நடந்தன.மாப்பிள்ளை ரொம்ப வசதியானவர் ,என்ப்தால் அத்தையின்  வேலையை ராஜினாமா செய்ய சொன்னார்.அத்தையோ ;முடியாது ,முடியாது இன்னும் ஒரிரு மாதங்களில் இருபது வருட அவார்ட் கிடைக்க போகுது ,நான் நின்றால் நட்டம் ‘என்று போராடினார்.அந்த ஏழரையோ விட்டபாடில்லை .’இல்லை.என் மனைவி ஒரு சீன கம்பெனியில் வேலை செய்வ்தா ‘என்று பெரும்பேச்சு பேசினார்.இந்த வயதில் ,யார்தான் மாப்பிள்ளை பேச்சை பெரிசா நினைக்க மாட்டார்கள் .அத்தையின் வேலையை ராஜினாமா செய்தார்.பதுவு திருமணத்துக்கு அப்ளை பண்ணி இருந்தார்கள் .சில டாக்குமெண்ட் காரணங்களால் தாமதமாகியது(அங்கேயும் ஏழரைப்போல).அவசர அவசரமாக கோவிலில் தாலி கட்டினார்.என் சித்தாப்பாக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் .அம்மா பொண்ணை பிறந்த வீட்டிலிருந்து அனுப்பி வைத்தார்,மிகுந்த கவலையுடன்.

அந்த ஏழரை மாப்பிள்ளைக்கு வயது 52.இரண்டு பிள்ளைகள் .மனைவி இறந்துவிட்டாராம் .பெரிய பிள்ளைகள் ,வேலைக்குப் போகும் வயது.என் அத்தை திருமணம் செய்து போன அன்றிரவு நல்ல பொழுதாக கழிந்தது.இரண்டாம் நாள் ,அந்த திடுக்கிடும் செய்தி வந்தது.ஆம் ,அந்த ஏழரை மாப்பிள்ளைக்கு ஹார்ட் அட்டாக் என்றும் ,அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றும்.என் குடும்பமே மருத்துவமனையில் .அம்மா ஒருபுறம் அழுதுகொண்டு ,சித்திகள் அத்தைக்கு ஆறுதலாய் ,நாங்க ஒருபுறம் .எங்கலையெல்லாம் ஆறுதல் படுத்திக்கொண்டு சித்தப்பாக்கள்.மூன்றாம் நாள் ,மாலையில் நான் அலுவலகத்தில் இருந்த போது ,என் அண்ணா போன் பண்ணி ,’அந்த மனுசன் இறந்துட்டாரு ,வீட்டுக்கு வா’என்று.மூன்று நாட்களுக்கு முன்புதான் அத்தைக்கு திருமணம் என்று ஒரு வாரம் முன்பே (மகிழ்ச்சிதான்)விடுமுறை எடுத்தேன் ,அதே அத்தையின் கணவர் இறந்துவிட்டார்,என்று சொல்லமுடியாமல் சொல்லி வெளியேறினேன்.மருத்துவமனையில் அவர் இறந்த செய்தியைக் கேட்டவுடன் ,அத்தைக்கு அந்த மாப்பிள்ளையைப் பார்த்த என் சித்தப்பாவுக்கு (ஏறத்தாழ அம்மாவை வயதுதான் இருக்கும் )அம்மா கையில் ஓங்கி ஓர் அறை விழுந்தது.பிள்ளையை விசாரிக்காமல் நோய்க்காரன் கையில் புடிச்சிக்கொடுத்துட்டானே பாவி ‘என்ற அம்மாவின் வயித்தெரிச்சல் கலந்த ஆக்ரோசம்!

எங்களால் அத்தையின் நிலையைப் பார்த்து அழ மட்டுமே முடிந்தது.அந்த ஏழரை மாப்பிள்ளைக்காக நான் என் கண்ணீரை விரயம் பண்ணவே இல்லை.பதிவு திருமணம் செய்யாததால் அந்த மனுசனின் சல்லிக்காசு கூட அத்தையால் உரிமைக் கொண்டாட முடியல.செய்த வேலையும் போனது.கருமைக்கிரியை முடிந்து 16ம் நாள் அம்மாவின் ஆலோசனைப்படி ,சித்தப்பாக்கள் அத்தையை அந்த வீட்டுக்கு கும்பிடு போட்டு ,அழைத்து வந்துவிட்டனர்.அத்தை எதிர்பார்த்தது போல ,அங்கே சொத்தும் இல்லை ,சொந்தமும் இல்லை ,சொல்லப்போனால் ,எங்க கூட்டுக்குடும்பத்துக்கு ,கொஞ்சம் கூட தகுதி இல்லாத ஒரு குடும்பம் என் அந்த 16 நாட்களில் தெரிய வந்தது.

அத்தையின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சைக் கலந்து(அந்த ஏழரையை மறக்கத்தான்)வேறு வேலைக்குப்போக வைத்து ,தற்பொழுது அனைத்தையும் ஒரு கனவாக மறந்து பழைய நிலைக்கு வந்து வேறு வேலை செய்கிறார்.அந்த சம்பவம் நடந்து ஒரு பத்து வருடங்கள் ஆகிவிட்டன.இப்போ என் அத்தை மீண்டும் ராணிப்போல வாழ ஆரம்பித்துவிட்டார் ஆனால் என்ன லட்சுமி என்ற பெயருடன் விதவை என்ற அடைப்பெயரும் சேர்ந்துகொண்டது.
                                                                                 

Wednesday 26 September 2012

ஒரு தாயின் குற்ற உணர்வு


 தன் பத்து வயது  மகன் அண்டைவீட்டாருடன் பழகுவது ,அவன் அப்பாவுக்கு பிடிக்கவில்லை.ஒருவகை ஈகோ என்று சொல்லமாம் (காரணமில்லா வெறுப்பு) இவர் வெறுக்கும் அளவுக்கு  அந்த அண்டைவீட்டுக் குடும்பம் மோசமில்லை,இது,கணவன் அளவுக்கு படித்திருக்கும் அந்த பையனின் தாய்க்கும் நன்றாகவே தெரியும்.

 எல்லா தந்தையைப்போல ,இந்த அப்பாவும் வீட்டில் இருக்கமாட்டார் ,வேலைக்குப் போய் இரவில்தான் வீடு திரும்புவார்.அம்மா வீட்டில் இருப்பார்.ஆகவே ஒருநாள் முழுக்க பிள்ளைகளோடு நேரத்தை செலவிடும்  தாய்க்கு புரியும் மகனின் விருப்பு வெறுப்பு.பையனோ,வீட்டில் தன்னுடன் விளையாடும் அக்காவும் தங்கையும் பள்ளிக்குபோய் விடுவதால் ,தன்னுடன் விளையாட ஆள் இல்லாமல் ஏங்குவான் ,அதுவே அவனுக்கு ஒருவித சோர்வு போல ,இருப்பதை தாயும் உணர்கிறாள்.

பக்கத்து வீட்டில் இந்த பையனை அவுங்க சொந்த பிள்ளைப்போல பாசத்துடன் பார்த்துக்கொள்கின்றனர் ,அவர்கள் வீட்டில் இரண்டு ஆண்பிள்ளைகள் என்பதால் ,இந்த பையன் அங்கே போய் விளையாட ஆசைப்படுகிறான்.ஆனால் தந்தையோ சரியான காரணம் சொல்லாமல்  திட்டவட்டமாக அவனை அங்கே போகக்கூடாது என்று கூறுகிறார்.ஆனால் பையனோ ,அந்த வீட்டு ஆண்பிள்ளைகள் விளையாடுவதைப்பார்த்து ஏங்குகிறான்.இதைப்பார்த்த தாய் ,’சரி நீ போய் விளையாடு ,அப்பா வருவதற்குள் வீட்டிற்கு வந்துவிடு என்கிறாள்,பையனும் சந்தோசமாய் உற்சாகமாய் விளையாடுகிறான்.

அப்பா வருவதற்குமுன் வீட்டிற்கு வந்து வீட்டுப்பாடங்களை செய்கிறான்.தன் வீட்டிலிருந்து கல்லெறி தூரம்தான் அந்த அண்டை வீடு.ஆகவே தாய் அனுப்பிவிட்டு ,அவன் மேல் ஒரு கண் வைத்துக்கொண்டுதான் ,இவளுடைய வேலைகளை செய்கிறாள்.இது நாலைந்து நாட்களுக்கு தொடர்கிறது.அப்பா வீட்டிற்கு வந்து ,.............நீ அங்கே போனாயா?’என்று பையனிடம் கேட்கும்போது ,அம்மா ’இல்லை என்று சொல்’ என கண் ஜாடைக் காட்டுகிறாள்.பையனும் அது போலவே சொல்கிறான் .இப்பொழுது பையன் அடிக்கடி அங்கே போய் விளையாட போகிறான் .அம்மா ,அப்பா கேட்டால் ,நான் போகவில்லைன்னு சொல்லுங்கஎன்று தைரியமாக சொல்லிவிட்டு போகிறான்.

இந்த தாயும் படித்தவள்தான் ,நல்லது கெட்டது தெரியுது.ஆனால் இப்போ பிரச்சனை என்னவென்றால் ,தன் பையன் பொய் சொல்ல தானே ஒரு காரணமாக விடுவதுபோல உணர்கிறாள் !ஒரு தாயாக அவள் செய்வது சரியா? அல்லது ஒரு தந்தையாக காரணமில்லாமல்(சரியா காரணம் சொல்லாமல்)பிள்ளையின் சந்தோசத்தை தடைப்போடுவது முறையா?

(தயவு செய்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.ஒரு தாயின் குற்ற உணர்வுக்கு உதவுவோமே!)

                               

ஒரு தாய்க்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை!