Saturday 20 October 2012

சொர்க்கமே ஆனாலும் அம்மா வீட்டு தீபாவளிபோல வருமா?

                   தீபாவளி என்றாலே எங்கள் வீடுதான் எல்லோருக்கும் பிடிக்கும் .இதற்கு காரணம், என் அப்பாவும், என் அம்மாவும் அவர்களின் குடும்பத்தில்மூத்தவர்கள்.என் அப்பா பத்து பேர்களில் மூத்தவர்,என் அம்மாவும் மூத்த பெண்(முதலாவது என் தாய்மாமன்)அம்மாவின் உடன்பிறப்புகளும் பத்துபேர்.இதுபோக ,என் அப்பா என்றால் ,உறவினர்களுக்கு ரொம்ப பிடிக்கும்!அவ்ர் ரொம்ப உதவி செய்பவர்,சாது,கொடுக்கும் மனப்பான்மை!இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.அப்பவை மணந்ததால் அம்மாவும் ,அந்த குணஙகளைப் பெற்றார்!
                                                                                                                                                      
     நாங்கள் வசித்து வந்தது டிப்பிக்க்கல் தமிழர்கள் வசிக்கும் (கம்போங்)கிராமம்!ஆகவே அங்கே தமிழர்கள் பெருநாட்கள் என்றாலே,ஒரே ஆர்ப்பாட்டம்!அதிலும் தீபாவளி என்றால் கேட்கவே வேண்டாம்!ஒருமாதத்துக்கு முன்பே,வீட்டைச் சுத்தம் செய்வது,அலங்காரம் செய்வது,புத்தாடைகள் வாங்குவது,பலகாரங்கள் செய்வது என பல வேலைகள் மும்முரமாக நடக்கும்.போட்டாபோட்டி போட்டுக்கொண்டுதான் பல வேலைகள் செய்வோம்.பக்கத்துவீட்டுத்தோழியின் வீட்டில்,5 விதமான பலகாரங்கள் என்றால்,உடனே நாங்கள் எக்ஸ்ட்ரா ஒன்னு செய்வோம்,அதையும் போய் உடனே, அவுங்க வீட்டில் பெருமையாய் சொல்லிட்டு வருவோம்.அவளும் அவள் தங்கையும் சளைத்தவர்கள் அல்ல,உடனே அடுத்தநாள் ,அவுங்க வீட்டில் இன்னொரு பலகாரம் இடம்பெறும்,அந்த விசயம் எங்களுக்கு தெரியவந்தால் உடனே,அம்மாவிடம் போய்,பலகாரம் செய்யனும்னு காசு கேட்போம்,ஆப்பைக்கரண்டியில் அடி விழும் ஆனால் வலிக்கவே வலிக்காது ,பக்கத்து வீட்டு எக்ஸ்ட்ரா பலகார தகவல்தான் அதிகமாக வலிக்கும்!

       என் அக்காள்கள் இருவரும் திருமணம் ஆகும்வரை,நானும் என் தங்கையும்  சின்னப்பிள்ளை,செல்லப்பிள்ளை.தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும்பொழுது,பலகார வேலைகள் அனைத்தையும் முடித்துவிடுவோம்.பிறகு அந்த வாரத்தில் வீடு கழுவுதல்,ஒட்டடை அடித்தல்,பக்கத்துவீட்டை எட்டிப்பார்த்து ஏதாவது ஐடியாவைத் திருடி,வீட்டை அலங்கரித்தல் இப்படியே ஓடும்!தீபாவளி முதல்நாள்,யாராவது உறவினர் கண்டிப்பாக குடும்ப சகிதம்(அப்பா வழி)நம் வீட்டுக்கு வருவாங்க.அப்படி வரும் உறவினர்களில் எங்கள் வயது உள்ள சித்தப்பா பிள்ளைகள் என்றால்,கேட்கவா வேண்டும் எங்க சந்தோசத்திற்கு!தீபாவள் ஈவ், காலையில் ,பொதுவாக சீக்கிரமே  எழனும்!அப்போத்தான் அப்பாகூட காரில் மார்க்கெட் போகமுடியும்.லேட் என்றால்,தண்டனை வீட்டில் வேலை செய்து சாகனும்??ஊர் சுத்த முடியாதே!அப்பா காரில்,பக்கத்து வீட்டுத்தோழி(அவளுக்கு அப்பாவும் இல்லை,அண்ணனும் இல்லை)ஆகவே ,நாம்தான் எங்கு போனாலும் அழைத்துச் செல்வோம்.அப்புறம் ,அப்பாவின் இரண்டாம் தங்கை(சின்ன அத்தை)அவருக்கு கணவர் இல்லை,ஆகவே அவரையும் போய் ,காரில் அழைத்துக்கொண்டுதான் மார்க்கெட் போவோம்!                                                                         
                                                                           
                மூன்று மணி நேரம் ,மார்க்கெட்டிங்,முடித்து வீடு திரும்புவோம்.அதற்குள், வீட்டில் அக்காள் மற்றும் எங்களோடு வளர்ந்த என் அப்பாவின் கடைசி அத்தையும் எல்லா வேலைகளையும் முடித்துவிடுவர்!நானோ வாங்கி வந்த பூக்களையெல்லாம்,ஜாடியில் அழகுபடுத்தி வைப்பேன்,அண்ணா இருவர் மற்றும் தம்பியும் சேர்ந்து வீட்டை ரொம்ப அழகாக அலங்கரிப்பார்கள்!!அப்படி இப்படின்னு ,இரவாகி விடும்!குளித்த உடன்,இறந்த பெருசுகளுக்கு படையல் போடுவோம்!கண்டிப்பாக அந்த நிகழ்வில் ,அழையா விருந்தாளியாகா யாராவது வந்து கலந்து சாப்பிட்டு செல்வார்கள்(அப்படி படையல் விருந்தில் அழையாமல்  வருபவர்கள்,இறந்தவர்கள்தான் அவர்கள் உருவில் வருவதாக பக்கத்து வீட்டுப் பாட்டி சொல்லும்?)ஆனால் இது வருடா வருடம் நடக்கும் என்பதுதான் ஆச்சரியமும் உண்மையும் கூட!

  என்னதான் செய்வோம்னு தெரியாது ,ஆனால் விடிய விடிய விழித்துக்கொண்டு வேலைகள் இருந்த வண்ணம் இருக்கும்.விடியற்காலை ஐந்து மணிக்கு ,அம்மா வெந்நீர் போட்டு ,ஒவொருவருக்கும் எண்ணெய் தேய்த்து விடுவார்.பிறகு புது உடை ,நகைகள் போட்டுக்கொள்வோம்.அன்று மட்டும் அம்மா கையில் ஸ்பெசல் தோசை இட்லி கிடைக்கும்(மற்ற நாட்கள் ,நாங்க்ள் (பெண்பிள்ளைகள்)சாப்பிடாவிட்டாலும் அம்மா வருத்தப்படமாட்டார்.).யாராவது உறவினர்கள் அல்லது நண்பர்கள் ,நம் வீட்டில் காலைப்பசியாறைக்கு வருவது வழக்கமான ஒன்று.

             அண்டைவீட்டாருக்கு பலகாரம் ,பசியாறைக்கொடுக்கும் சம்பிரதாயம் எங்கள் கம்போங்கில் முக்கிய கலாச்சாரம் என்றே சொல்லலாம்.அப்படி ஒரு சகோதரத்துவமாக பழகி வந்தோம்.மதிய உணவுக்கு தயார் செய்தல்,மாலை காப்பி டீ என்று இரவாகிவிடும்.சுமார் ஐந்து நாட்களாக தொடந்து ஒவ்வொரு சித்தப்பா குடும்பம்(அப்பா வழி)சித்தி குடும்பம்(அம்மா வழி)என்று விருந்தாளிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.வீடே குதூகலமாய் இருக்கும்.வேலையே ஓயாது ஆனால் களைப்பு தெரியாது காரணம் விரும்பியும் பகிர்ந்தும் வேலைகளைச் செய்வோம்!

 இப்படியெல்லாம் கொண்டாடிய தீபாவளி ஒரு வருசம் ,அம்மா வரவேற்பறையின் மூளையில் கண்ணீர் (அலங்)கோலமாக.அண்ணா மற்றும் தம்பி மூவரும் செய்வதறியாது டிவியில் லயித்துக்கிடக்க,நானும் தங்கையும் எதையும் பார்க்க விருப்பம் இல்லாமல் அறையில் வெறுமென படுத்துக்கொண்டும் அழுதுகொண்டும் .போன் மேல் போன் அலறியவாறு அப்பா உற்வினர்களும் ,அம்மா உறவினர்களும் !அண்டைவீட்டாரின் விதவிதமான பலகாரங்கள் எங்கள் டைனிங் மேஜையில் குவிந்து கிடக்க.எல்லாத்துக்கும் மேலாக எங்கள் அப்பா ,வெறும் நிழற்படமாக மட்டுமே வரவேற்பறையில் மேல், எங்களைப்பார்த்து கவலையாக இருப்பதை உணர்ந்தேன்.ஆம் 1992 அப்பா இறந்த வருட தீபாவளி கோலம் அது!
                                                                           
                                                                                       

Monday 1 October 2012

கண்ணை விட்டு போகலாம்,மனதில் இன்னும்!

எனது அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய என் முன்னால் தலைமையாசிரியர் திரு.ஜோன் போஸ்கோ அவர்கள் ,பதவி உயர்வு  காரணமாக ,தற்பொழுது வேலை செய்யும் (என் பிள்ளகள்படிக்கும் )பள்ளியிலிருந்து மாற்றலாகி வேறு பள்ளிக்குச் செல்கிறார்.இன்று நான் அனுபமிக்க ஆசிரியையாகவும் ,ஓரளவு கடமைகளை செவ்வென செய்யும் பள்ளியின் பொறுப்பாசிரியையாக இருக்கிறேன் என்றால் அதற்கு இவரும் ஒரு காரணமே.
                                                                     
ஆம் கடந்த 2005-இல் ,என் மகன் பிறந்து(2002) ,அவன் மூன்றரை வயதை தொட்டவுடன் நிதி பிரச்சனையால் மீண்டும் வேலைக்கு செல்ல நினைத்தேன்.ஆனால் அது அரை நாள் வேலையாக இருந்தால் சிறப்பு காரணம் பிள்ளைகளின் படிப்பும் ,அவர்களை நானே பராமறிக்கவும் எண்ணினேன்.அதுக்கு சிறந்தது ஆசிரியைத் தொழில் என்று ப்டவே,என் மகள் படித்தே அதே பள்ளியில் விண்ணப்பம் செய்தேன்.தலைமையாசிரியர் என்னை அழைத்து ,இண்டர்வியூ செய்து திருப்தியாக இருக்கிறது நாளையே வந்து சேர்ந்துகொள்ளுங்கள் என்றார்.
                                                                           

நான் பள்ளிக்கு போனவுடன் நிறைய மாற்றங்கள் செய்தேன் காரணம் அந்த சமயம் அங்கே வேலை செய்த ஆசிரியைகள் யாவும் திருமணமாகாத இளசுகள் ,மேலும் வேலை அனுவமே இல்லாமல் அங்கே காலைத்தை ஓட்டினர்.ஆகவே என் மாற்றங்கள் தலைமையாசிரியருக்கு ரொம்பவும் பிடித்திருந்தன.அடுத்த வருட ஆரம்பத்தில் பல ஆசிரியைகளை அவர் மாற்றம் செய்தார்.ஆனால் புதிதாக வேலையில் செய்த எனக்கு மீண்டும் அங்கேயே வேலை ,சம்பளமும் உயர்வு கண்டது.நாம் வகுப்பறையிலும் சரி ,கற்றல் கற்பித்தலிலும்  சரி ஏதேனும் புதிய ஐடியாக்கள் கொண்டு அவரிடம் காண்பித்தால் ,அவருக்கு பிடித்திருந்தால் உடனே செய்ய சொல்வார்.அதிருப்தியாக இருந்தால் ,நம் மனம் சிறிதும் கோணாமல் அதை மாற்றம் செய்ய சொல்லும் விதம் இருக்கே ,;செல்வி இதை இன்னும் கொஞ்சம் அப்படி செய்யுங்கள் ,அதை இப்படி செய்வதை விட ,இந்த முறை வேறு மாதிரி செய்யுங்களேன்’ என்று சொல்லும் விதம் ஒவ்வொரு பாஸ்களும் பின்பற்றவேண்டிய ஒன்று என்றே கூறலாம்!
                                                               
நண்பனின் கைக்குட்டை கீழே விழுந்தால் ,அதை எடுத்துக்கொடுப்பதும்,எழுந்து நின்று வரவேற்பதுவும்,வாயில் வரை சென்று வழி அனுப்புவதும் நல்ல பழக்கங்கள் ,இவை யாவும் அவரிடம் நான் கண்டு ரசிக்கும் பழக்கமும் கூட.என் மகள் சிலாங்கூர் பள்ளிகளுக்கிடையிலான சொற்போர் போட்டிக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டாள் .அந்த சமயம் போட்டிக்கி இரண்டே நாட்கள் ,அவள் மோசமான தொண்டை வலிக்கு ஆளானாள் .நான் மனம் தளர்ந்தேன் ,சரி நீ போக வேண்டாம் என்றேன்.ஆனால் அவரோ அவளை அழைத்து ‘உன்னால் முடியும் ,கனிமொழி உன் திறமை எனக்கு தெரியும் ,நீ பரிசை வென்று வருவாய் ,நீ போ ,நாங்கள் அருகில் இருப்போம்’என்று தைரியம் சொல்லி ,அந்த போட்டியில் அவள் மேடைக்கு போகும் வரை அமைதியாய் இருந்தவர் ,அவள் பேச ஆரம்பித்தவுடன் ,தூரத்திலிருந்து  ‘நீதான் அருமையாக பேசுகிறாய் ‘ என்று கையை அசைத்துக் காட்டிய விதம் ,இன்னும் எனக்கு பசுமையாய் இருக்கிறது.பிறகு அவள் ’இரண்டாம் நிலை’என்று அறிவித்தவுடன் ஓடி வந்து ‘அவளுக்கு முதல் பரிசு கிடைத்திருக்க வேண்டியது,என்ன காரணமோ ?நீதிபதிகள் எங்கே தவறு செய்து விட்டார்கள்’என்று எனக்கே புரியவில்லை’என அவளை அரவணைத்து ,ஊக்குவித்த விதம் ,’செல்வி ம்களை அருமையாக கொண்டு வந்திருக்கிங்க ,என்று என்னையும் பாராட்டிய விதம் இரட்டிப்பு மகிழ்ச்சியே.

                                                                             

2010 சில தவிர்க்க முடியாத காரணங்களால் ,அந்தப் பள்ளியிலிருந்து  வெளியேறினேன்.சில மனக்கசப்புகள் இருந்தாலும் ,நானும் சரி,அவரும் சரி ஒரே கொள்கை கொண்டவர்கள் ,அதாவது எதிரிகளை சம்பாதிக்க வேண்டாம்,இருக்கும் வரை எல்லோரும் நட்பைப் பாராட்டுமோம் என்ற எண்ணம்.இதனாலேயே என்னவோ கதிரவனைக்கண்ட பனிபோல அனைத்து மனஸ்தாபங்களையும் மறந்து என் புதிய பாலர்பள்ளிக்கு பொருள்வழியில் நிறைய செய்தார்.’நான் இங்கு இருக்கும் வரை ,உங்களுக்கு எல்லா உரிமைகளும்  இந்தப் பள்ளியில் உண்டு,எப்போதும் போல வந்து போகலாம்’என்று கூறினார். பிறப்பால் ஒரு கிறிஸ்துவர் என்றாலும் ,எந்த மத பேதமும் இல்லாமல் பள்ளியில் அனைத்து மத மாணவர்களும் பயன்பெறுமாறு செயல்படுவார்.இது அவருடைய ப்ளஸ் பாய்ண்ட்.
                                                                         

கடந்த யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் 7 ஏக்கள் பெறும் மாணவர்களைப் பள்ளி அறவாரியம் தமிழ்நாட்டுக்கு அனுப்புவதாக அறிவித்தது.என் மகள் உட்பட நான்கு மாணவர்கள் 6ஏக்கள் பெற்றிருந்தனர்.சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு பணமும் சர்டிஃபிகேட்டும் கொடுக்கும் விழாவில்,வாரிய தலைவர் ‘வருகின்ற மார்ச் மாதம் 7 ஏக்கள் பெற்ற மாணவர்களைத் தமிழ்நாட்டுக்கு அனுப்புகிறேன்’என்று அறிவித்த சமயம் ,6ஏக்கள் பெற்ற மாணவர்களின் நிலையை அறிந்த தலைமையாசிரியர்,வாரியத்தலைவரிடம் ‘ஏதோ கிசு கிசுவென்று பேசினார்.பிறகு சிறிதுநேரத்தில் ,எழுந்து வந்து ‘6ஏக்கள் பெற்ற மாணவர்களே,உங்களுக்கு ஒரு நற்செய்தி,உங்களையும் தலைவர் தமிழ்நாட்டுக்கு அனுப்பிவைக்க சம்மதித்தார்’என்றதும் ஒருகணம் அங்கே கூடியிருந்த மக்களின் கரகோசம் மண்டபமே அதிர்ந்தது.’நாங்களும் பெண்பிள்ளைகளோடு வர இருக்கிறோம்,ஆனால் வேறு வண்டியில் வருகிறோம் ,உங்களுக்கு தொந்தரவு கொடுக்கமாட்டோம்’ என்று நான் கேட்டதற்கு ‘அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் செல்வி ,தயக்கமில்லாமல் உங்கள் பிள்ளைகளோடு வந்து தங்கலாம்’என்று பச்சைக்கொடி காட்டினார்.

                                                                         
                             
 மார்ச் மாதமும் வந்தது என் மகள் உட்பட ஒன்பது மாணவர்கள் ,ஆசிரியைகள்  தலமையாசிரியர்  அவர் குடும்பம் மற்றும் நானும் தமிழ்நாட்டுக்கு சென்றோம்.அங்கே எங்களை பள்ளி மாணவர்களைப்போலவே அக்கறையுடன் கவனித்துக்கொண்டார்.தன் மாமியாரின் கிராமத்துக்குச் சென்று,அங்கிருந்து முறுக்கு,சீடை என்று நிறைய திண்பண்டங்களை கொண்டு வந்து எங்களுக்கு கொடுத்து மகிழ்ந்தார்.சின்ன குழந்தையைப் போல என்னை அழைத்து ‘செல்வி என் மாமியார் என்னவெல்லாம் கொடுத்து இருக்காங்க பாருங்க;என்று எல்லாவற்றையும் எடுத்துக்காட்டி பூரித்துப்போனார்.நாங்கள் தமிழ்நாட்டில் போன கோவில்களின் சிறப்புக்களையும் வரலாறுகளையும் (எனக்குத் தெரிந்தை)சொல்லிக்கொண்டே வந்தே போது’பரவாயில்லையே நமக்கு பணம் இல்லாமல் டுவர் கையிட் இருக்கே’ என்று அடிக்கடி சிரித்துக்கொள்வார்.அவரும்  அனைத்துக் கோவில்களுக்கும்ம் எங்களுடன் வந்து வழிபட்டுச் சென்றார்
                                                                                 
இறுதி நாளும் வந்தது ,நாங்கள் கிளம்பும் நேரம் ,எனக்கு உடல் நலமில்லாமல் போகவே ,அவரிடம் தெரிவித்தேன்.உடனே என்னை அருகில் உள்ள ஃபார்மாஸிக்கு அழைத்துச் சென்று ,இரத்த அழுத்தம் மற்றும் சக்கரை அளவை பரிசோதிக்க சொன்னார்.’ஒன்னும் டென்சன் வேண்டாம் செல்வி ,தூக்கமின்மைத்தான் காரணம் ,எதையும் நெகட்டிவாக நினைக்கவேண்டாம்’என்று ரத்த பரிசோதனை ரிசல்ட் வந்ததும் ‘என்னை விட அவர்தான் பெருமூச்சு விட்டபடி ,நாந்தான் சொன்னேனே ஒன்னும் இருக்காதுன்னு,சரி உங்கள் பேக் மற்றும் லக்கேஜ்-ஐ வையுங்கள் ,நாங்கள் கொண்டு வருகிறோம்’என்று இறுதிவரை என்னை ஓய்வெடுக்க சொல்லியும் ,நலம் விசாரித்துக்கொண்டும் வந்தார்.
                                                                             
கோலாலும்பூர் வந்தடைந்தோம்.எல்லோரிடமும் விடைபெற்ற என் தலைமையாசிரியர்,’செல்வி இருந்ததால் ரொம்ப கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகும் போனது . பெற்றோர்கள் அனைவரும்  ,அவுங்களுக்கும் நன்றி சொல்லுங்க’என்று சொல்லி விடைபெற்றார்.நான் பலமுறை குடும்பத்துடன் தமிழ்நாடு சென்றிருந்தாலும் இந்த சுற்றுலா என்னால் மறக்கவே முடியாத ஒன்று.அதற்கு தலைமையாசிரியரும் ஒரு காரணம்!குட் பை எச்.எம்(headmaster)