Wednesday 30 December 2015

இதுவும் கடந்து போகும்!

நாம் ஒன்று நினைக்க...அவன் ஒன்றை நடத்துகிறான்!
    2016-இல் ஆறு வயதை முடித்துக்கொண்டு ,அடுத்த வருடம் 2017-இல், எங்கள் பள்ளியை விட்டுப்போகபோகிறான் அந்த மாணவன் என நான் வருந்தாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவன் மேல் அன்பு வைத்திருந்தேன்!ஏனோ தெரியவில்லை அப்படி ஒரு அன்பு அந்த பையன்மேல்.4 வயதில் அந்த இரட்டையர்கள் பள்ளிக்கு வரும்போது,ஒன்றுமே அறியாமல் வந்தனர்.ஆனாலும் பெற்றோர்களின் நல்ல பழக்கவழக்கம்,நன்னெறிபண்புகள், அந்த மாணவர்களின் செயல்களை அனைவரும் விரும்பும்படி செய்தன.
        சக மாணவனுக்கு உதவி செய்வது,பகிர்ந்து சாப்பிடுவது, அழும் நண்பனை ஆறுதல் படுத்துவது என அனைவரையும் மிஞ்சி இருந்தான் இரட்டையரில் இளையவன்!ஆறு வயது சக மாணவனுக்கு,இவன் ஓடிப்போய் யூனிபார்ம் அணிய உதவுவான்.சாப்பாடு ஊட்டி விடுவான்.மதியிறுக்க மாணவனை ,எந்நேரமும் இவன் கையிலே பிடித்துக்கொண்டுதான் நடமாடுவான்.ஒரு தலமைத்துவ மாணவன் கிடைத்து விட்டான் என நான் கர்வம் கொள்வேன்.
       நாளுக்கு நாள் அந்த இளையவனின் செயல் என்னை அவன்பால் ஈர்த்துக்கொண்டது.எந்த இடத்தில் இருந்தாலும் அந்த பையனை நினைக்காமல் இருந்ததில்லை. வீட்டில் என் பிள்ளைகளுக்கும் அந்த பையனை நன்கு தெரியும்.அவனோடு விளையாடவே ,விடுமுறையில் என் மகன் என் பள்ளிக்கு வருவான்.2015 நவம்பர் பள்ளி முடியும் தருவாயில்,'அடுத்த வருடம் இந்த பையன் நம்மை விட்டுப்போய் விடுவானே?எப்படி அந்த பிரிவை ஏற்றுக்கொள்வோம்?என என்னை நான் கேட்டுக்கொள்வேன்!சதா அவனைப் பற்றியே என் ஆசிரியைகளிடம் பேசிக்கொண்டிருப்பேன்.
       ஆனால் சென்ற வாரம் அவனுடைய பெற்றோர்கள் கடையில் என்னைச் சந்தித்து 'டீச்சர் அடுத்த வருஷம் எங்கள் வேலை இடத்துக்கு அருகில் உள்ள அரசு பாலர் பள்ளியில் சேர்த்துவிட்டோம்.நான் வேலையை முடித்துக்கொண்டு ,உங்க பள்ளிக்கு வந்து அவனுங்களை எடுப்பதற்குள் ,லேட் ஆகுது,பாவம் !எனக்காக நீங்கள் காத்திருக்கிங்கள் டீச்ச்சர் 'என்று என் தலையில் கல்லைப்போட்டதுபோல் அந்த செய்தியைச் சொன்னார்கள் !என் பள்ளிக்கு அருகில் நகரத்தின் மைய நெடுஞ்சாலையான KESAS HIGHWAY இருப்பதனால் ,அங்கே வாகன நெரிசலும் ஒரு பெரிய பிரச்சனை என்பதுவும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.
       பணம் ஒரு பிரச்சனை என்றால் என்னால் உதவ முடியும்,ஆனால் அவர்கள் சொன்ன சில காரணங்கள் ஏற்புடையதாய் இருக்கவே ,மனமின்றி நானும் ஏற்றுகொண்டேன்.அடுத்த வருடம் அழுதுகொண்டே அவனை பிரிவதை விட இந்த வருடம் ஒரு சின்ன அதிர்ச்சியுடன் ,சீக்கிரமே அந்த பிரிவை ஏற்றுக்கொள்ள இறைவன் பணித்து விட்டான் என தோணியது!
       நாளை பிரிவோம்,அடுத்த நாள் பிரிவோம்,அடுத்த கணம் பிரிவோம் என நாம் நினத்துக்கொண்டிருக்கும்வேளையில் ,எந்த நிமிடமும் நமக்கு சொந்தமானவை அல்ல என உணரச் செய்ய வைத்த இந்த 2015 இறுதிநாளுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் !
எப்படியெல்லாம் பற்றினை அறுக்கச்செய்கிறான்  பற்றற்றான் !
         #இருந்தாலும் மனம் எங்கோ ஒரு மூலையில் வலிக்கிறது!நாமும் சராசரி மனிதன் தானே?

Friday 25 December 2015

திருவாதிரையில் கிட்டிய இறை சிந்தனை!

          சின்னப்பிள்ளையாக இருந்த காலங்களில்,(திருமணமாகும்வரை), என் அம்மா பெயர் தெரியாத ஒரு அயிட்டத்தைச் செய்து பசியாறையாக கொடுப்பார். உப்புமாவும் இந்த பெயர் தெரியாத அயிட்டமும் செய்தால் ,அன்னிக்கு முழுதும் அம்மா மேல் கோபம் வரும்.என் பக்கத்து வீட்டுத் தோழிகளும் உறவுகளும் அதை விரும்பி உண்பர்.அதைப்பார்த்தால் இன்னும் கோபம் கோபமாய் வரும்.
                                                               
         காரணம் அம்மா, அவர்கள் சாப்பிடும்போது’இந்த வீட்டு கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை ‘எனவும் சொல்லுவாங்கள். வேறுவழியின்றி சாப்பிட்டு வந்த அந்த அயிட்டம்தான் ‘திருவாதிரை களி ‘என இன்று அதிகாலை ’ஆருத்ர தரிசனம்’ சென்ற போது தெரிந்து கொண்டதும் மெய் சிலிர்த்துப்போனேன்!திருவாதிரையன்று நடராஜருக்கு மிகவும் புனிதமான நிவேதனம் என்றும், மிக மிக சத்துள்ள உணவு என்றும் அங்கே உள்ளவர்கள் கூறியபோது ,எங்கள் மேல் அக்கறையுடன் செய்து,தெரிந்தோ தெரியாமலோ சிவபெருமானுக்கு உகந்த அமுதினை எங்களூக்கு சமைத்து கொடுத்த என் தாயார் (இன்றைய ஆருத்ர தரிசனம் காண ,தற்போது சிதம்பரம் சென்றுள்ள)அவர்களுக்கு ஒரு நன்றி சொல்ல தோணுச்சி!
                                                                         

       இப்படித்தான் பல செயல்களை(இறைசெயல்களை),சிறுபிள்ளைமுதல் தெரிந்தும் தெரியாமல் செய்தும்,பாமாலைகளை அர்த்தம் தெரியாமல் பாடியும் ,ஈசனின் கருணைக் கிடைக்கப்பெற்றிருக்கின்றோம்!தெரியாமல் செய்த செயலுக்கே இத்துனை அருள் கிடைக்கப்பெற்றிருந்தால், மணிவாசகர் வரிகளிள் பாடி இருப்பதுபோது போல ’சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து’ , எல்லாவற்றையும் உணர்ந்து,புரிந்து, செயல்பட்டால் கிடைக்கப்போகும் இறையருள் எத்தையக பேரின்பமாக இருக்குமோ? என மார்கழி திருவாதிரையான இன்று உணரச் செய்தான் ஆருத்ரன்.
                                                                   

Monday 26 October 2015

சினிமா கதைப்போல ஆன குடும்பக்கதை!



       சென்ற ஆண்டு பயின்ற மாணவன், எப்போதும் கட்டணத்தை தாமதமாகவே செலுத்துவான்.ஒருமுறை அவன் அம்மா பள்ளிக்கு வந்து 'சாரி டீச்சர்,அவன் அப்பா தற்போது இந்தோனேசிய சிறைச்சாலையில் செய்யாத குற்றத்திற்காக(???) தண்டனையை அனுபவித்து வருகிறார்.என்னுடைய வருமானம் மட்டுமே ஆகவேதான் கொஞ்சம் லேட்டாக கொடுக்கிறேன்'என்றார்.
        பிறகு தொடர்ந்தார் இவன் கருத்தரித்த நேரத்தில்தான் டிச்சர், அவர் சிறைக்குப்போனார்.இப்போ ஆறு வயசு ஆகிடுச்சி இன்னமும் போனில் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறான்,கூடியவிரைவில் அவர் வந்தால்தான் அவன் அப்பா முகத்தைப்பார்க்க போகிறான்'என்றார்.'பையனும் ஒவ்வொரு முறையும்அப்பாவோடு போனில் பேசிவிட்டு வந்து மகிழ்ச்சியாக பகிர்ந்துகொள்வான்.'அப்பா வரப்போகிறார் டீச்சர்'என்பான்.இந்த வருடம் ஆரம்பப்பள்ளிக்குப் போய்விட்டான்.

காலையில் தகவல் கிடைத்தது, அவன் அப்பா சிறையில் மாரடைப்பால் காலமானார் !
மரணம் இயற்கை ஆனால் பையனின் நிலையை நினைத்து மனம் அழுகிறது.

Sunday 27 September 2015

என்னை ,நான் வெறுத்த நொடிகள்!



      தமிழ்நாட்டில் இருந்து வீடு திரும்பியவுடன் கொஞ்சம் பிசியாக வேலைகள் செய்துகொண்டிருந்தேன்.எப்போதும் என் வீட்டுக்கு துணிகள் விற்க வரும் பாகிஸ்தானி ,கொஞ்ச காலமாக காணவில்லை.எப்போதும் வீட்டுக்கு வந்தால் ,கலகலப்பாக பேசுவான். என் கணவருடன் ரொம்ப குளோஸ் நட்பு.உரிமையோடு அக்கா ..அக்கா என அழைப்பான்.ரொம்ப மரியாதையாக பேசுவான்.திடிரென நேற்று என் வீட்டு முன் வந்து நின்றான்.’அக்கா ..அக்கா ‘என்றான்.நானும் வேலை பிசியால் உள்ளே இருந்துகொண்டு ’ஏன் என்ன விசயம் ?எனக்கு துணி எதுவும் வேண்டாம் ‘என்றேன்.அவனோ ’இல்லைக்கா உன்னைப்பார்க்கவேண்டும் ‘என்றான்.
       எட்டிப்பார்த்தேன்,கையில் துணி மூட்டைகள் எதுவுமில்லை.நான் ஏதும் காசு கொடுக்க வேண்டியிருக்கா?இருக்காதே..நான் துணிகள் வாங்கி ரொம்ப நாளாச்சே,ஏன் என்னைப் பார்க்கவேண்டும்? இப்படி யோசித்துக்கொண்டே ,’என்ன விசயம் நான் வேலையாக இருக்கேன்’ இன்னொரு நாளைக்கு வா ‘என கூறிகொண்டே வெளியே போனேன்.அவன் முகத்தில் மிகுந்த சோகம்.’அக்கா அன்னைக்கு வந்தேன்,உன் கணவர் நீ தமிழ்நாட்டுக்குப் போயிட்டேன்னு சொன்னார்.மீண்டும் இந்த தேதியில் வருவேன்னு சொன்னார் ,அதான் அக்கா வந்தேன்’என்றான்.
     ’எனக்கு துணி ஒன்னும் வேணாம்.நான் தமிழ்நாட்டில் எல்லா சாப்பிங்கும் செய்துட்டேன் ‘என்றேன்.’இல்லைக்கா நான் அதுக்கு வரவில்லை,அக்கா நானும் ஊருக்குப் போனேன்.என் அப்பா இறந்துபோயிட்டார் அக்கா.என்னால் இங்கே இருக்கமுடியவில்லை.நான் கிளம்பி போயிட்டேன்.நான் போவதுக்குள் காரியம் எல்லாம் முடிஞ்சது.ஒரு மாசம் இருந்துட்டேன்.இப்போதான் வந்தேன்.வந்து என்னால் இங்கே இருக்கவேமுடியவில்லைக்கா, ரொம்ப சோகமாக இருக்கு.என் கவலைகளை யாரிடமாவது சொல்லி அழனும் போல இருந்துச்சு.அதான் உன்னைத் தேடி வந்தேன்கா,நீயும் ஊருக்குப் போய் விட்டதாக உன் கணவர் சொன்னார்.அதான் மீண்டும் உன்னைப் பார்த்து சொல்லிவிட்டுப் போகலாம் என வந்தேன்’என்று கண்ணீர் மல்க கூறினார்.
      ஐயோ குடும்பத்தை விட்டு வந்து ,இப்படிப்பட்ட சோகம் எப்படி வாட்டும் என நமக்கும் தெரியுமே!’ச்சே ..ச்சே வருத்தப்படாதே, உள்ளே வா காப்பி ,டீ கலந்து கொடுக்கிறேன்..கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு போ ’என்றேன்.(அவன் அப்பா இறந்த செய்தியை விட மோசமான துன்பம் நான் போடும் காப்பி என நினைத்தானோ ???என்னவோ.) ரொம்ப பிடிவாதமாய் ‘எதுவும் வேண்டாம் அக்கா,நான் இன்னும் சில நாட்கள் கழிச்சி வாரேன்.உன்னிடம் சொல்ல வேண்டும் என மனசு சொன்னதால்தான் உன்னைத் தேடி வந்தேன் அக்கா. போயிட்டு வாரேன் ‘என விடைபெற்றான்.
       எந்த மனநிலையில் யார் வருகிறார்கள் என்று கூட புரிந்துகொள்ளாமல் கொஞ்சம் நேரம் அவனை உதாசினப்படுத்திவிட்டதை நினைத்து ரொம்ப வருந்தினேன்...வெட்கப்பட்டேன்.......இன்னமும்!

Saturday 18 July 2015

இதுதான் மனித மனம்!

      சுமார் 10 வருடங்களாக ஒரு அழகான ஹேன்பேக் வைத்திருக்கிறேன்.அதில் சில பொருட்களை வைத்து அலமாரியின் மேல் வைத்திருப்பேன் ,தேவை ஏற்பட்டால் மட்டும் எடுத்துவிட்டு மீண்டும் அங்கே வைத்துவிடுவேன்.நேற்று மீண்டும் எடுத்து சில முக்கிய தஸ்தாவேஜுக்களை எடுத்து கீழேயே வைத்து ,பேக்கைத் துவைக்க எண்ணி சுத்தம் செய்தேன்.ஒரு பண உறை கிடந்தது.மலேசியாவில் ஏதும் பண்டிகை எண்டால்(ang pow) ,பண உறையில் பணம் வைத்துக் கொடுக்கும் சீனரின் கலாச்சாரம் இருக்குது.அதை மூவின மக்களும் பழக்கிவிட்டோம்.அதேப்போலத்தான் தீபாவளிக்கு தயார் செய்து வைத்த பண உறைதான் அது.

                அந்த பண உறைதான் கிடந்தது.ஆனால் கொஞ்சம் பழசாய் போய் கிடந்தததால்,நான் கண்டுகொள்ளவில்லை.மீண்டும் அறையைப் பெருக்கி குப்பைகளை சுத்தம் செய்தேன்.அந்த பண உறை என் காலில் மிதி பட்டது.எப்போதும் எல்லாவற்றையும் நன்கு பரிசோதனை செய்யும் நல்ல பழக்கம் என்னிடம் எப்போதும் உண்டு.ஆகவேதான் இதுவரையில் என் உடமைகளை நான் மிஸ் பண்ணியதோ ,தொலைத்ததோ கிடையாது என்றே சொல்லலாம்.

                  அதேப்போல அந்த பண உறையை வீசும் முன் உள்ளே ஏதும் இருக்காவென பார்த்தேன் ,கையில் நூறு வெள்ளி நோட்டு பட்டது.எப்போதோ யாரோ எனக்கோ ,என் பிள்ளைக்கோ கொடுத்தது என்று நினைக்கிறேன்.அடடா !வீசியிருந்தால்?மிகுந்த மகிழ்ச்ச்சியுடன் எடுத்து பிள்ளைகளிடம் காட்டினேன்.ஒரே சந்தோசம் ஆனால் அந்த மகிழ்ச்சி சிலநொடிகளில்  இன்னுமொரு கவலையைச் சேர்த்துக்கொண்டது!.ஆம்! இதுபோல எத்தனைப் பண உறைகளை வீசியிருப்பேன்?அதில் எவ்வளவு பணம் போனதோ? இப்படி கவனமில்லாமல் வீசியிருந்தால்?என்ற அச்சம் இன்னும் என்னை வாட்டுகிறது.கிடச்சதை வச்சி சந்தோசப்படாமல் ,இல்லாததை நினைத்து ஏங்கும் இதுதான் சராசரி மனித மனம்! மனித மனம் திருப்தியடைவே மாட்டேங்குது!!!

Sunday 12 July 2015

சில வில்லங்கமும்...சில சிரிப்புகளும்!

              ஆபத்து அவரசமாக எதையாவது செய்யப்போய் ,அது வில்லங்கமாய்  முடியும் ஆனால் முடிவில் சிரிப்பாய் சிரிக்க வைக்கும்.அப்படி சின்ன சின்ன வில்லங்கத்தையும் ,வம்பை விலை கொடுத்து வாங்கியதையும்  கொஞ்சம் நினைத்துப்பார்த்துச் சிரித்தேன்!அந்த நிமிடத்தில் கோபம் வந்தாலும் ,நொடியில் சிரிப்பு எம்மை ஆட்கொண்ட அந்த தருணங்களை கொஞ்சம் பார்ப்போம்.

                ஒருமுறை நாங்கள் எல்லோரும் மாமாவுடன் காரில் வெளியே கிளம்பினோம். மாமா ,அவசர அவசரமாக  கிளம்பி வந்தவர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு காரில் வந்து உட்கார்ந்தார்.ஒருவேளை காரை அக்காவிடம் ஒப்படைத்துவிட்டு ,அவர் பைக்கில் போகிறார் என நினைத்தோம் ,ஆனாலும் மாமா காரை ஸ்டார்ட் செய்தார்.’எதுக்கு ஹெல்மெட் ?என்று அக்கா கேட்க ,தலையைச் சொறிந்தவர்’ச்சே என்னமோ ஞாபகத்தில் போடுக்கிட்டு வந்துட்டேன் என சொல்ல ,அன்றைய நாள் முழுவதும் சிரிப்பாய் சிரித்தோம்.
               
                    காலையில் எழுந்து பலவேலைகளைப் பம்பரம்போல செய்வது, எங்கள் பெண் குலத்துக்கே (வேலைக்குப்போகும்)கிடைத்த சாபம்......வரம்!’நூறு இளைஞர்களைக் கொடுங்கள் ,நூறு நல்ல தலைவர்களை உருவாக்கிக் காட்டுகிறேன்’ என விவேகானந்தர் சொன்னதுபோல,அந்தக் காலை வேளையில் ’ஒரு பத்து நிமிடம் கொடுத்துப்பாருங்களேன்’ ,அம்புட்டு வேலைகளையும் ,சமையல்,கிளினிங்,அயனிங் என செய்து முடித்திடும் ஒரு அபூர்வ  சக்தி இருக்கும்.அம்புட்டு சுறுசுறுப்பாய் ஓடுவோம். அந்தப் பரபரப்பில் பல முறை அரிசியை களைந்து குக்கரில் போட்டு விட்டு ,பக்கத்தில் இருந்த கேத்தல் சுவிட்சை ஆன் செய்துவிட்டு , அரைமணி நேரம் கழித்து  எல்லா வேலைகளையும் முடித்து ,’என்னடா இன்னும் அரிசி வேகும் மணம் இல்லையே ?என எட்டிப்பார்த்தால்,ஆன் செய்யப்பட்டது வேற சுவிட்ச்?அந்த நாட்களெல்லாம்  மதியம் வந்துதான் சோறு சமைக்க முடிந்தது.பசி உயிரு போகும்.ச்சே என் புத்தியை என் ...............!

               டூத் பேஸ்ட்டும்,முகம் கழுவும் கிளின்சிங் கிரிம்  டியுப்பையும் ஒரே கூடையில் வைத்து டாய்லெட்டில் வைத்திருப்பேன்.எப்போதும் போல பரபரப்பாய் காலையில் கடமைகள் செய்வது வழக்கம்.ஒருமுறை காலையில் அவசர அவசரமாக ஓடிப்போய் ,பல் விலக்கும் தூரிகையில் கிளின்சிங் ஃபாம்-ஐயும் ,முகத்தில் டூத் பேஸ்ட்டையும் தடவி விட்டு ,ஏன் முகத்தில் ஒருமாதிரி இருக்குன்னு ,முகர்ந்து பார்த்தால்,அது டூத் பேஸ்ட்,நல்ல வேளையில் பல் தூரிகையை வாயில் திணிக்காமல் போனேனே.....!

               மாலில் ஷாப்பிங் செய்துட்டு,வேக வேகமாய் வந்து கார் சாவியைப்போட்டு காரைத் திறந்தேன்,திறக்கவே இல்லை.ஆத்திரத்தில் கொஞ்சம் ரஃப்ஃபா திறக்கப்போய் ,பக்கத்தில் வந்த ஓர் இளைஞன் ‘அக்கா என்ன அக்கா பிரச்சனை ?என்றான்.அப்பாடா உதவி செய்யத்தான் தம்பி வந்திருக்கான்னு ‘ரொம்ப நேரமா திறக்கிறேன் ,காரைத் திறக்க முடியல தம்பி’என்றேன்.’எப்படி முடியும்கா? நீங்கள் திறப்பது என் கார் அக்கா!’ஐயோ அப்படியா? திரும்பி கார் எண் பட்டையைப் பார்த்தேன்.ஒரே கலர் ,அதே ப்ராண்ட் கார் ஆனால் நம்பர் மட்டும் வேற!!’சாரி தம்பி ,நானும் இங்கே பார்க் பண்ணினேன் போல...என முடிப்பதற்குள்,அந்த பையனாக கொஞ்சம் நகர்ந்து போய்பார்த்தான்.

                    என் கார் கொஞ்சம் தள்ளி இருந்தது. ‘அக்கா நான் தூரத்தில் இருந்து பார்த்துட்டேன்,நீங்கள் என் கார் கிட்ட போய் கதைவைத் திறப்பதை.’இப்போவெல்லாம் திருட்டு வேலைகளைப் பெண்களை வைத்துதானே செய்யறானுங்க,அதான் நானும் கொஞ்சம் உஷாராகிட்டு உங்களை கவனிச்சேன்,ஆனால் உங்கள் செயலைக்கண்டு ,நீங்கள் திருட வந்த ஆள் இல்லை என்பதை புரிஞ்சிக்கிட்டுதான் கிட்டே வந்தேன் அக்கா. அதோ உங்கள் கார்’ என்றான் சிரித்துக்கொண்டே!அடக்கடவுளே என்னைப்பார்த்தால் திருடிபோலவா இருக்கு??அதுவும் ஆள் வச்சி திருடச் சொன்ன மாதிரியா இருக்கு?

                     எங்கள் சித்தப்பா மகன் மணி அண்ணன்.ஜோகூரில் இருந்து வீட்டுக்கு எப்போதாவது வரும்.அண்ணா வந்தால் வீட்டில் ராஜ மரியாதை.மூத்தப்பேரன் .அப்பாவின் தம்பி மகன். ரொம்ப பாசமான அண்ணா என பல தகுதிகள் பெற்ற அண்ணா. ஒருமுறை  அம்மா வீட்டுக்கு  வந்து, ,குளித்து முடிந்து வெளியே வந்த அண்ணா,’பாப்பா ,அது என்ன சோப்?நல்ல வாசம் ,சிகப்பு கலர்ல? ஜோகூரில் இந்த மாதிரி சோப் எல்லாம் கிடைக்காதும்மா.அம்மா எங்கே வாங்கினாங்க?என கேட்கும்போதுதான் எங்களுக்கு தெரிய வந்தது.....!

                    அண்ணா குளிச்சது நாய் குளிப்பாட்டும் சோப்.வீட்டில் நாங்கள் இருப்பதால் எங்களுக்கு எது குளிக்கும் சோப் ,நாய் குளிப்பாட்டும் சோப் என தெரியும்!ஆனால் பாவம் மணி அண்ணா.அம்மாவிடம் விசயம் போய் எங்களுக்கு அடி கிடைக்கும் முன் நானும் தங்கையும் அண்ணா கிட்ட மன்னிப்பு கேட்டு மீண்டும் குளிக்கச் சொன்னோம்!அன்றிலிருந்து மணி அண்ணாவின் பெயர் ’நாய் சோப் மணி அண்ணா’ என்று மாற்றம் கண்டது.

                    மிக மிக அண்மையில் ,வாட்ஸ் ஆப்பில் என்னைக் கோர்த்துவிட்டான் என் தம்பி.ஃபேமிலி பேக் என்ற குழுவில் சேர்த்துவிட்டான்.அதில் இரண்டு பிரிவு ,ஒன்று அப்பாவின் உறவு ,மற்றொன்று அம்மாவின் உறவு.இங்கே சொல்வதை சொல்லக்கூடாது.அங்கே சொல்வதை இங்கே சொல்லக்கூடாது என்ற ஒரு விதிமுறை உண்டு.(எல்லாம் புறணி பேசறதுதான்).நான் கோபம் வந்தால் ,பதற்றத்தில் எதையாச்சும் உளறி வைப்பேன்னு எனக்கு நல்லா தெரியும்.அதனால் நானே அந்த குழுவில் இருந்து வெளியானேன்.

                         இருந்தாலும் நாம இல்லாமல் நல்லா இருக்காதுன்னு மீண்டும் கோர்த்து விட்டான் தம்பி(இதில் என் அக்காவும் உடந்தை).விளைவு ?நானோ என் திருவாயால் ,அப்பா உறவுகளைப் பற்றி அப்பா ஃபேமிலி பேக்ல சொல்லப்போய்.........?எனக்காக என் உடன்பிறப்புகள் 7 பேர் மட்டும் அவர்களின் பிள்ளைகள் என எல்லோரும் எதை எதையோ  போட்டு 350 மேசேஜ்களைப் போட்டு ,நான் பேசியதை பழைய மேசேஜ்-ஆக மாற்ற எடுத்துக்கொண்ட முயற்சி இருக்கே?அதன் பிறகு  என் உடன்பிறப்புகளிடன் எனக்கு கிடச்ச துப்பு இருக்கே?

                    இதேப்போலத்தான் முகநூலில் (2011-இல்)ஒரு சம்பவம். இன்பாக்சில் நான் பிறரிடம் பேசுவது ரொம்பவே குறைவு. முகநூலுக்கு வந்த   புதிதில் நிறைய தப்புகள் செய்துள்ளேன்.இன்பாக்சில் அனுப்ப வேண்டிய சிலவற்றை தவறாய் வாலில் போட்டதுண்டு.என் நட்புக்கு அனுப்ப வேண்டிய மேசேஜை தவறாக ஒரு நண்பருக்கு அனுப்பி ,அந்த நண்பர் மெத்த மகிழ்ச்சியில் ‘எனக்கா டீச்சர் இப்படி அழகான வரிகள் போட்டு மேசேஜ் போட்டிருக்கிங்கள்?நீங்கள் என் கூட பேசக்கூட மாட்டிங்கள்?என் வாலுக்கு கூட வந்ததில்லையே?என்று கேட்கும்போதுதான் தெரிந்தது நான் தவறான நபருக்கு இன்பாக்ஸ் செய்தது.மன்னிக்கவும் அது  என் நட்புக்கு அனுப்பிய குட் மார்னிங் மேசேஜ்,பிளிஸ் இக்நோர்  என்று பதில் போட்டு மன்னிப்பும் கேட்டேன்.விளைவு அந்த சகோதரன் என்னை அன்பிரண்ட் பண்ணிட்டுப்போய்ட்டார்.

                (இப்படி நீங்கள் பல்பு வாங்கிய சம்பவம் உண்டா?)
                                                                  




Thursday 4 June 2015

கலை என்பது யாதெனில்?

                                                                             
                பல்கலைக்கழகத்தில் இடுபணிக்காக ஓர் ஓவியத்தை ஏதாவது ஒரு டெக்டிக் பயன்படுத்தி(water colour) வர்ணம் தீட்டிக் கொண்டு வரச்சொன்னார் ப்ரொஃபெசர். நானும் சுமார் ஐந்து ஓவியத்தை பல விதமாக வர்ணங்களைக் கொட்டி செய்தேன்.ஆனால் எல்லா காகிதத்திலும் வாட்டர் கலர் தூரிகையிலிருந்து வழிந்து காகிதத்தில் சொட்டு சொட்டாக விழுந்தது.டென்சனில் எல்லாதையும் கசக்கி வீசினேன்.இறுதியாக செய்த ஒன்றிலும் அப்படியே விழுந்தது.ஆனால் நேரம் போதாமையால்  அதை எடுத்துக்கொண்டேன்.மனம் திருப்தியாகவே இல்லை.கலைக்கல்வி ,ஓவியம் எல்லாம் எனக்கு வராது என்பது மிகப்பெரிய உண்மை.(அண்மையில் அணில் வரையப்போய் அதை முயலா? குரங்கா?என என் மாணவர்கள் கேட்டதையும் மறைப்பதற்கில்லை!
              வகுப்பில் போய் அதை வெளியே எடுக்க (வெட்கப்பட்டு), எல்லோரும் கொடுத்தப்பிறகு கொடுத்தேன்.என் கலைக்கல்வி விரிவுரையாளர் ‘இது யார் செய்த வேலை?’என்றார்.'நான் தான் ப்ரோஃபெசர் ‘என்றேன் கொஞ்சம் தயக்கத்துடன் .உடனே அவர் ‘இங்கே என் கைகளில் இருக்கும் வேலையிலே இதுதான் மிகச்சிறந்த படைப்பு!’இதுவரை நீ செய்த கலைக்கல்வியில் நான் இதற்குதான்  அதிகமான புள்ளிகளைப்போடுவேன்’என்று கூறிக்கொண்டு என் வேலையை உயர்த்தி அனைவரிடமும் காட்டினார்.’i really had  affection on this work!’என்றார்.ஏதும் நம்மைக் கலாய்க்கிறாரோ என்று ‘இல்லை என்னால் முழுமையாக செய்ய...என்று நான் முடிப்பதற்குள் அவர்  ‘உன் இந்த கலையில் எத்தனை அர்த்தங்கள் உள்ளன தெரியுமா?
                         ’நீ வீசினாய் என்று சொன்ன அந்த காகிதங்களையும் ஏன் கொண்டு வரவில்லை ?முடிந்தால் அடுத்த வகுப்புக்கு அதைக்கொண்டு வர முடியுமா?எனக்கு அதில் எது சிறப்பாக படுகிறதோ அதை நான் பிற வகுப்புகளுக்கு உதாரண வேலையாக என் கோப்புகளில் வைத்துக்கொள்கிறேன்’என்றார்.        அதுமட்டுமல்ல அன்று நான்கு  மணி நேரமும் என் காகிதத்தைப் பல உதாரணங்களை காட்டி வகுப்பை நடத்தினர்.’உனக்கு அழகில்லை என்பது பிறருக்கு மிகச் சிறந்ததாய் தெரியும்,உனக்கு அழகு என்பது பிறருக்கு அசிங்கமாய் தெரியும்அதுதான் கலையின் ரகசியம்’என்றார்.
                       என் நினைவுக்கு வந்தது என்னவோ ‘காதலா காதலா ‘ திரைப்படத்தில் கமல் சொன்ன நகைசுவை மட்டுமே.’அது என்னங்க எங்க கண்ணுக்கு ஒன்னுமே தெரியலை,நீங்க என்னம்மோ ஆஹா ஓஹோன்னு சொல்றிங்களே!இன்னமும் எனக்கு நம்பமுடியவில்லை.கலைக்கல்வி நமக்கு வராது என்ற என் இத்தனை வருட எண்ணத்தை ,ஒரு நொடியில் தகர்த்தெறிந்த ஒவியமும்,அந்த விரிவுரையாளரைக் கவர்ந்த அந்த அழுக்கேறிய ஓவியமும் இதுதான்!

Thursday 23 April 2015

(அ)நாகரீகமா?

                நாங்கள் வளரும்போதும் சரி ,எங்களைச் சுற்றியுள்ள அண்டைவீட்டுத் தோழிகளும் சரி, அந்த காலத்தில் பெண்பிள்ளைகள் உள்ளே அணியும் ஆடைகளை ,துவைத்த பிறகும்,வெளியே உலரப்போடவிடாமல் ,வீட்டின் உள்ளேயே மறைத்து உலரச் செய்ய சொன்ன அம்மாக்கள் இருந்த இதே பூமியில்தான், உள்ளே அணிந்திருக்கும் ஆடைகளை ,வெளியே காட்டிக்கொள்ளும் பெண்பிள்ளைகளின் பழக்கத்தையும் பார்த்த்துக்கொண்டிருக்கும் அம்மாக்களை என்னச் சொல்ல?கிராம வாழ்க்கை போய்விட்டால் ,கற்றுக்கொடுக்கும் பழக்கமும்,கற்றுக்கொள்ளும் பாடமும் அப்படியே போய்விடுமா என்ன? ஆடைகுறைப்புதான் கற்பழிப்புக்கு காரணம் என சொல்லும் ரகம் அடியேன் இல்லை!இதையெல்லாம் பெற்றோர்கள் பார்த்தும் பார்க்காமல் இருக்கிறார்கள்?அல்லது கற்றுக்கொடுத்தும், கேக்காமல் திரியும் டீன் ஏஜ் பசங்களா?

               ஒரு கூட்டுக்குடும்பத்தில் கணவன் மனைவியாக ஒரு தம்பதி இருந்தால், அவர்கள் கணவன் மனைவி என்பது யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொண்டால்தான் உண்டு.அப்படி காட்டிக்கொள்ளாமல் பண்புடன் வாழ்ந்த காலம் போய்,இப்போ காதல் செய்ய தொடங்கியவுடன் ,அனைத்து செயல்களையும் செல்ஃபி அல்லது வீடியோவில் பதிவு செய்து உலகமே பார்க்கும் வண்ணம் செய்கின்றனர்!இறுதியில் எதிர்பார்க்காத விபரீதங்களை மட்டுமே கேட்கவும் காணவும் முடிகிறது!

               இதையெல்லாம் கேட்டால்,’பத்து வயசுல போட்ட சட்டையை ,இப்ப்போ போட முடியுமான்னு 'கேட்கறாங்கள். 'மாற்றம் வரும்போது மாறிக்கொள்ளுங்கள்' என்றும் விவாதம் பண்ணுகிறார்கள்.சரிதான் பத்து வயசு போட்ட சட்டையை இப்போ போடத்தான் முடியாது ஆனால் பத்து வயசுல 'அம்மான்னு' கூப்பிட்ட அன்னையை இப்போ 'அத்தைன்னா' அழைக்கிறோம்?
      ஏன் நமக்கு வம்பு?நம்ம வீட்டில் எல்லாத்தையும்  சரியாக நடத்துவோமே!

Saturday 4 April 2015

சிற்றின்பமா?பேரின்பமா?அதுக்கும் மேல..

                            கோயில் கோபுரங்களில் நாம் காணும் சிற்பங்கள் சில நம் மனதைச் சஞ்சலப்படுத்தும் வண்ணமும்,சிலரின் மனதை நிலைக்குலையச் செய்யும் வகையிலும்  வடிவமைக்கப்பட்டிருக்கும் (எல்லோருக்கும் அல்ல)!!!.அதை அடியேன் பல தமிழ்நாட்டு கோவில் கோபுரங்களில், கண்டதுண்டு.
             குழைந்தையைப் பிரசவிப்பது  போல, ஆண்பெண் உறவு  . தாவணியோ ரவிக்கையோ போடாத சாமி சிலை என பல்வகையான சிலைகளைக் கண்டதுண்டு. அவ்வளவு ஏன் கருவறைக்குச் செல்லும்முன் அங்கே உள்ள துவார பாலகன்  சிலைகூட சிலநேரங்களில் அப்படியே காட்சிகொடுக்கும்.வெளியில் இருக்கும் வெறும் சிற்பத்தைக் கண்டு மனதை சஞ்சலப்படுத்திக்கொண்டு அப்படியே திரும்பி போகப்போகிறாயா?அல்லது அதையெல்லாம் தாண்டி ,உள்ளே கருணையே வடிவமான அன்னை இருக்கிறாள்.கேட்பதைக் கொடுப்பவள்.
             வெளியில் கண்ட  பெண் சிற்பத்தைப்போல , அவளும் பெண் தான்.ஆனால் உள்ளே அவள் வீற்றிருக்கும் விதம் , அனைத்து மும்மலங்களையும் அழித்து,உன் திருவடி போதும்,இதைவிட வேற எதை நாங்கள் கண்டு இன்புற்றிருக்கப் போகிறோம் என்ற தத்துவத்தை  கற்பிப்பது போல அமைந்திருக்கும்  !அவளைப்போய் பார் . கோபுரத்தில்  உனக்கு கிடைத்தது வெறும் சிற்றின்பம் மட்டுமே ,உள்ளே உனக்கு கிடைக்கப்போவதோ பேரின்பம்! அதைப்பற்றுவதற்குத்தான் இதயெல்லாம் நீ கடந்து போக வேண்டிகிடக்கு என்று பொருள் படும்.ஆனால் இன்றுவரை கற்றுத்தேர்ந்த பலருக்குக்கூட இது எட்டவில்லையே?அவர்களும் அதைக் கேலிக்கூத்தாகத்தானே, பேசியும் வர்ணித்தும் வருகின்றனர்?
                         நம் முன்னோர்களின் செயல் ஒவ்வொன்றிலும் ஓர் அர்த்தம் மறைந்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை!திருவள்ளுவரின் குறளும் அதைத்தானே உணர்த்திச் செல்கிறது!

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

குறள் விளக்கம்
பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.             
                                                                                



Saturday 14 March 2015

தொலைத்த பொக்கிஷங்கள்!

            தொழில்நுட்ப வளர்ச்சியில் உழன்று கொண்டிருக்கும் மனிதர்கள் .நொடிக்கு ஒரு (நல்ல)விசயத்தை இழந்து வருவது உண்மையென்றால் ,நம்பாமல் இருக்கமுடியுமா?
              ந(ர)கரத்தில் தான் நவீனத்துவம் தலைவிரித்தாடுகிறது என்றால் கிராமங்களிலும் தற்போது பல விசயங்களைக் காணமுடியவில்லையே!
அரிசி குத்தும் அக்கா மகளே நீ கை விலக்கி கை உலுக்கு உலக்கையத்தான் கையமாத்தி குத்தும்போது ,வலிக்கவில்லையா?அரிசி குத்தும்போது வலிக்கவில்லையா?என்ற பாடலுக்கு ஏற்றாற்போல ,எத்தனை வீடுகளில் உலக்கையும் உரலையும் கொண்டு அரிசி குத்துகிறோம்?அட எத்தனைப்பேர் வீட்டில் உலக்கை உரல் பயன்பாட்டில் இருக்கின்றது?
                மலேசியாவில் இறப்பு வீடுகளில் பிரேதம் சுடுகாட்டுக்குக் கொண்டுச் சென்றவுடன் , வாசலுக்கு இடையே உலக்கையை போடுவது ஒரு சம்பிரதாயம். ஆனால் , அந்த வீட்டில் இறப்பு  செய்தி கூட சோகமாக இராது, வாசலுக்கு இடையே போட உலக்கை இருக்காது, என்பதுதான் ரொம்ப சோகமான செய்தியாக இருக்கும்!பக்கத்து வீட்டில் கேட்போம்,’இல்லை’..அடுத்த வீட்டில் ‘இல்லை’ மாமா வீட்டில் ,’இல்லை’ மச்சான் வீட்டில் ’இல்லை’.கடைசியாய் சுடுகாட்டுக்குப் போன, ஆண்களிடம் போன் போட்டு ’வரும்போது கடையில்(அப்படி இந்தியர் கடை இருந்தால்)ஒரு உலக்கை வாங்கிட்டு வாங்க’என்ற அவல நிலைக்கு வந்து விட்டோம்.
                   பொருள் செரிந்த பாடல்களை இழந்தோம்.பொருட்களை இழந்தோம். பைய பைய பலவற்றையும் இழந்துவிட்டோம்.அந்த வகையில் ,கிராமத்தில் நாம் விளையாடிய பல விளையாட்டுக்கள் இன்றைக்கு இல்லாமல் போய்விட்ட வேதனை இருக்கே?முன்னோர்கள் யாவரும் மூடர்கள் அல்லர். ஒவ்வொரு செயலிலும் ஓர் அர்த்தத்தைச் சொல்லிச் சென்றனர்.அவர்கள் நமக்கு கற்றுக்கொடுத்த ,விட்டுச் சென்ற அனைத்துமே பொக்கிஷங்கள்.பெயர் தெரியாமல்,நோக்கம் புரியாமல் விளையாடிய எத்தனை விளையாட்டுக்கள் ,நம் மூளைக்கு ஒரு பூஸ்ட் ஆக அமைந்தன.எப்போதும் நம் மூளை ஃப்ரெஸ்சா இருக்க அந்த விளையாட்டுக்களை நமக்கு இ(வி)ட்டுச் சென்றனர்.
                                                           
கல்லாங்காய்
இந்த விளையாட்டை எத்தனைப் பெண்பிள்ளைகள்  பைத்தியமாக விளையாடி இருப்போம்?கண் ,கை  நகர்  பயிற்சி(hand eye coordination).ஒரு கையால் மேலே பறக்கும் காயை பிடிக்கவேண்டும்,அதேவேளையில் தரையில் கிடக்கும் காய்களை எடுக்கவேண்டும்.இப்ப உள்ள பிள்ளைகளால் இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாட முடியுமா?சந்தேகம்தான். 

பல்லாங்குழி
மனக்கணக்குப் போட  மிகச் சிறந்த விளையாட்டு.கணிதம் (எண்கள்) பயில எளிய வழி. இன்னமும் என் அத்தைகள் விளையாடும்போது , நான் திரு திருவென முழித்துமுழித்துப் பார்ப்பேன். என்னடா இது?என்னம்மோ கணக்குப்பண்ணி போடுறாங்களே?ஆனால் அத்தைகள் மூவரும் ஒன்னாங்கிளாஸ் கூட படிக்கவில்லை!

பாம்பும் படியும்
ரொம்ப சிம்பளாக வாழ்க்கையில் நடக்கும் வெற்றி தோல்விகளைச் சொல்லும் விளையாட்டு.அதே நேரத்தில் எண்களை ஏறுவரிசையிலும் இறங்கு வரிசையிலும் பயில மிகச்சிறந்த கேம் இதுவென்றே சொல்வேன்.படியில் ஏறினால் வெற்றி ஆனால் ,அங்கே பாம்பு உருவத்தில் தோல்வி எந்நேரமும் உனக்காக காத்திருக்கும் ,ஆகவே வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் மாறி மாறி வரும் ,அது நிரந்தரமும் அல்ல என்ற அரிய ரகசியத்தை அடக்கிய விளையாட்டல்லவா?

ஹை ஜம்ப்(high jump)
முன்பு நாங்கள் விளையாடிய இந்த விளையாட்டைத்தானே இப்போ ஒலிம்பிக்கில் hurdle தாண்டும் விளையாட்டாக காப்பி பண்ணி ஓடுறாங்கள்.கையில் பிடித்திருக்கும் கயிற்றை கொஞ்சம் கொஞ்சமாய் உயர்த்தி உயர்த்தி ,இறுதியில் தோழிகள் அவர்கள் தலைக்கு மேல் வரை கொண்டுபோக ,அதையும் தாண்டி பலமுறை வெற்றிவாகை சூடியுள்ளேன் அடியேன்.இந்த விளையாட்டை விளையாடினால் உயரமாக வளர்வோம் என்ற உண்மை என் விசயத்தில் மட்டும் பொய்யாகிப்போனது.ஆம்! நான் உயரமாக வளரவில்லை ,மாறாக பக்காவாட்டில்தான் வளர்ந்தேன் என்ற சோகம் இன்னும் என்னுள் தாண்டவமாடிக்கொண்டிருக்கிறது?

இந்த விளையாட்டுக்கு நாங்கள் வைத்த பெயரைச் சொல்ல மனமில்லை.ஆகவே ஆங்கிலத்தில் hop with one foot என்றழைக்கப்படும் இந்த விளையாட்டில் உடலைச் சரி சமமாக வைத்து ஒரு காலில் தாவிச் செல்லும் நுணுக்கம் எல்லோருக்கும் வருமா என்ன?என் மாணவர்களுக்கு இந்த விளையாட்டைக் கற்றுக்கொடுக்க நாங்கள் பட்ட பாடு இருக்கே. fine motor skill and gross motor skill என்றழைக்கப்படும் தசை சமபந்தப்பட்ட விளையாட்டுக்களை தற்போது மேலை நாடுகளில் தங்களின் பள்ளி பாடத்திட்டத்தில் ஓர் அம்சமாகவே அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூப்பூக்க....
எண்களையும் கற்றுக்கொள்வோம்,ஒருவன் பின் ஒருவராக ,தன் முறை வரும்வரை காத்திருத்தல் என்ற நன்னெறி (take turn)பண்புகளைக் கற்றுக்கொடுக்கும் விளையாட்டு.
ஆடுபுலி ஆட்டம்
இன்றுவரை இந்த விளையாட்டை நான் தூர நின்று பார்த்ததுண்டு ஆனால் விளையாடியதில்லை.அதிலும் ஏதோ கணக்கு உண்டு என்பது மட்டும் புரியும்.
பள்ளிக்கூடம் போகாத நம் முன்னோர்கள் பலரும் மனக்கணக்கு போடுவதில் மிகச்சிறந்த வல்லுனர்கள் என்பதில் ஐயமில்லை.அதுக்குக் காரணம் ?
         எங்கள் ஊரில் இந்த விளையாட்டை ‘காண்டா கவுண்டி’ என்றே அழைப்போம். ஒருவகையில் கிரிக்கெட்டும் ,கோல்ஃப் விளையாட்டையும் சேர்த்த கலவை விளையாட்டு போல இருக்கும்.குறி பார்த்து அடிக்கவேண்டும்.எதிரணி கையில் அந்த குச்சி அகப்படுவதற்குள் தொடங்கிய இடத்தில் போய் நிற்கவேண்டும்.
கிளிப்பறி விளையாட்டு
தொடக்கத்தில் இருந்தே நம்மை இறுதியில் நிற்கும் கிளியிடம் நெருங்கவிடாமல் ஒவ்வொரு வரிசையிலும் இருவர் நின்று இடையூறு செய்வர்.வாழ்க்கையின் தத்துவமும் அதுதானே?
கண்ணாமூச்சி ஏனடா?
       ம்ம்ம்!இந்த விளையாட்டை விளையாடத எவருமே இல்லை என்று சத்தியம் பண்ணிச் சொல்லலாம்.கண்ணை மூடிக்கொள், அருகில் நிற்பவன் கூட கண்ணில் பட மாட்டான். அவன் கண்ணில் சிக்கினால்,ஏதோ புதையலைக் கண்டு பிடித்த மகிழ்ச்சி!
          

                இப்படி எத்தனை எத்தனை அரிய பொக்கிசங்களை நம் வாரிசுகள் இழந்துவிட்டனர்? இப்போது அவர்கள் விளையாடுவதெல்லாம் போன் கேம்ஸ்,மற்றும் கணினி கேம்ஸ்.கண்ணுக்கு கெடுதல். மூளை  வளர்ச்சியின்மை.மதியிறுக்கம் , உணர்ச்சிகளைத் தூண்டும் தீயவிசயங்களை மட்டுமே தற்போதைய தொழில்நுட்பம் கொடுத்துச் செல்கிறது.இதிலிருந்து மீள்வது எப்படி ?யாருடைய பங்கு பெரும்பங்கு?பெற்றோர்களா?ஆசிரியர்களா?பாட்டித்தாத்தாக்களா?அல்லது வீட்டில் குழைந்தகளைப் பார்த்துக்கொ(ல்)ள்ளும் பணிப்பெண்களா?யார் மீது பழியைச் சுமத்தி நாம் குளிர்காயலாம்?ஆமாம்,பிள்ளைகளிடம் குறைகளைக் கண்டால் அதைத்தானேச் செய்வோம்?
                                                                   
     




Wednesday 25 February 2015

நமக்கும் கீழே உள்ளவர் கோடி!

              மகளின் தேர்வு முடிவு வந்து ,அவள் நினைத்த துறையில் (அக்கெளண்ட்ஸ்)கிடைக்கவில்லை என ரொம்ப அப்செட் ஆகினாள்.படிப்பு ஒருபுறம் என்றாலும் ,தோழிகள் எல்லாம் அந்த வகுப்பில் இருக்காங்களே?என்ற கவலைதான் அவளுக்கு.சரி மறுபடியும் முறையீடு செய்யுங்கள் என பள்ளி தெரிவித்தது.ஆனால் அதில் சில  இன வாரியாக அரசியல் இருக்கத்தான் செய்யுது என் பல பெற்றோர்கள் அலட்டிக்கொண்டனர்.என் நெருங்கிய நண்பன் ஒருவனும் ,என் மாணவனின் தாயாரும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள் என்பதால் அவர்களிடம் விவரம் கேட்டேன்.

            இருவருமே சொன்ன விசயம்,’எல்லாத்துறையிலும் தற்போது வேலை வாய்ப்பு அதிகம்,அதிலும் வணிகத்துறைக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன,அதிலேயே இருக்கச் சொல்லுங்கள்’என்று.
சரி ஒரு முறை நானே போய் பள்ளியில் பேசலாம் என முடிவெடுத்துச் சென்றேன்.கொஞ்சம் கவலையும் இருந்தது ,நம் ஆசைகள்தான் பல நிறைவேறாமல் போனது .அவளுடைய ஆசைக்காக முயற்சியை முன் வைப்போமென பள்ளிக்கூடம் சென்றேன்.சுமார் ஒருமணி நேரம் கழித்து ,துணைத்தலமையாசிரியர் வந்தார்.அவர் ஒரு மலாய்க்கார ustadz . ரொம்ப மென்மையாக பேசினார். அதிலும் ரொம்ப மரியாதை கொடுத்துப் பேசினார்.

            பொதுவாக சில  பள்ளிக்கூடத்தில் அந்த மரியாதையை எதிர்ப்பார்ப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.ஆகவே நானும் அவர் பேச்சை அமைதியாக கேட்டேன்.நிறைய நல்ல விசயங்களையும் தெளிவு படுத்தினார்.’அவள் தற்போது இருக்கும் வகுப்பில் என்ன பிரச்சனை?அந்த வகுப்புக்கே பல மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் ,அவள் ஏன் நிராகரிக்கிறாள்? என்றும் கேட்டார்.நீங்களும்  ஓர் ஆசிரியைதானே? நீங்கள்  கடந்து வந்த விசயங்களைக் கூறி அவளுக்கு புரிய வைக்கலாம் எனவும் கூறினார். இறுதியில் அவர் சொன்னது ‘அந்த வகுப்பில் மாணவர்கள் அதிகம் ,ஆகவே யாரேனும் மாற்றலாகி போனால் ,வாய்ப்பு கிடைக்கும் ‘ஆனாலும் ,நம்பிக்கை வைக்காதீர்கள்’என்றார்.கிடைக்குமா என்பது கேள்விக்குறி என்றாலும் என் முயற்சியை முன் வைத்த திருப்தியில் காரை ஓட்டினேன்.

                  லேசாக மன பாரம் குறைந்தது போல இருந்தது.சாலையில் போய்க்கொண்டிருக்கும் போது ,என் காரைக் கடந்து மற்றுமொரு கார் சென்றது.நன்கு பழக்கமான காரைப்போல இருக்கவே எட்டிப்பார்த்தேன்.எனது அருமை நண்பரும் ,பள்ளியின் துணைச் செயலாளருமான திரு.சுப்பையா அவருடைய  கார் அது. அவர் என்னை கவனிக்கவில்லை. தனது மூத்த மகனை அவன்  ஆசைப்பட்டபடியே வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார்.சுமார் மூன்று லட்சம் செலவு செய்தார்.பையன் மிகச் சிறந்த முறையில் கல்வியை முடித்துக்கொண்டு நாடு திரும்பி,மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை,கே.எல்.ஐ. அருகே மோட்டார் விபத்தில் சிக்கி அங்கேயே அகால மரணமடைந்தான்.

                     மகளுக்கு நினைத்த வகுப்பு கிடைக்கவில்லையே என மனசு பாரமாய் இருந்தது,ஆனால் அவர் ,மகனின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிய நிலையில் அந்த மகனையே தற்போது  இழந்து இன்னும் மீளாத்துயரில் இருக்கிறாரே?அந்த கவலைக்கு ஈடாக இவ்வுலகில் ஏது துயரம்? அந்தக் காரை, அந்த நேரத்தில் எனக்கு காட்டி ஏதோ ஒரு மேசேஜ் காதில் சொல்வது போல ஓர் உணர்வு.... தலையில் யாரோ ‘படார்’என அடித்து ,உனக்கும் கீழே உள்ளவர்கள் பல கோடி ,உனக்கும் எனக்கும் வருவதுதான் துயரமா?என்ற கண்ணதாசனின் வரிகளை நினைவுபடுத்தியபோல இருந்தது!கணத்தில் மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச கவலைகளும் பாரமும் எங்கோ போயின!
                                                                   

Sunday 15 February 2015

இக்கரைக்கு அக்கரைப்பச்சை!


                என் மாணவி ஒருவளின் அம்மா ரொம்ப சின்னப்பொண்ணு.கணவனை இழந்து இன்னும் ஒருவருடம் கூட ஆகவில்லை.அந்த மாணவியின் மேல் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அன்பு காட்டுவோம்.பெற்றோரில் ஒருவர் இல்லாவிட்டாலும் அந்த மாணவர்கள் மேல் அதிகம் அன்பு காட்டுவது வழக்கம்.ஒருநாள் மாணவியின் பாட்டி வந்தார். ஒரு பாட்டிக்கான அடையாளம் எல்லாம் இருந்தது.ஆனால் நரை முடியெல்லாம் இல்லை. அழகான தோல்(முகம்).அவர் என்னிடம் பேசும் விதமும்,என் வயது ஒத்த பெண்களைப்போலவே இருந்தது.
              உடனே கேட்கவேண்டாம் என ,பாட்டியிடம் பேசிவிட்டு ,மகளுக்கு என்ன வயசு என்ன என்று தொடர்ந்தேன். பாட்டியும் சொல்லிவிட்டு, ’அவ வாழ்க்கைதான் இப்படி பாதியிலே போச்சு டீச்சர்,என்ன பாவம் செய்தோமோ? மாரடைப்பால் இறந்துட்டாரு மருமகன் ‘என்று கண்கலங்கினார்.’எல்லாம் ஏதோ காரணத்துக்காகத்தான் ,பேத்தி உங்களுடன் இருப்பது மகிழ்ச்சிதானே?பின்னே என்ன அழுகை?விடுங்க ,வந்த இடத்துக்குத்தானே போயிட்டார்.அவருக்கு சீக்கிரம் அழைப்பு வந்திருச்சி ,நாம் கொஞ்சம் லேட்டா போகப்போகிறோம்’என்று கொஞ்சம் ஆறுதல் சொல்ல, மறுபடியும் தமாசாக பேசினார்.சரி உங்க வயது என்ன இருக்கும்? என்றேன் (கொஞ்சம் பயத்துடன்).

              ’நீங்களே சொல்லுங்கள்’என்றார்.நான் கூட்டி சொன்னால் அப்புறம் வருத்தப்படக்கூடாது ‘என்று சிரித்தேன்.சரி நானே சொல்கிறேன் ‘என்று கைவிரலில் சைகையாய் காட்டினார்!ஆ!அதிர்ந்து போனேன்,என்ன என் வயசா?’ஐயோ! பேரப்பிள்ளை எடுத்திட்டிங்களா? சிவசிவா...நான் இன்னும் என் புள்ளையைப் பள்ளிக்கூடத்தில போய் விட்டுட்டு வரேன்,நீங்கள் கல்யாணம் பண்ணிக்கொடுத்து பேரப்பிள்ளையா?எனக்கு இன்னும் ஆச்சரியமும் வியப்பும்.இது ஒன்னும் பெரிய விசயம் இல்லை இருந்தாலும் ஏனோ எனக்கு கொஞ்சம் பொறாமை கலந்த வியப்பு!’போங்க டீச்சர் 18 வயசுல,என் அப்பா கல்யாணம் பண்ணிவச்சிட்டாரு,அப்புறம் என்ன , உடனே பிள்ளைகளைப்பெற்றுக்கொண்டேன்,நீங்கள் கண்டிப்பா லேட் கல்யாணம்தனே?என்று மிகச்சரியாக  சந்தேகத்துடன் கேட்டார்.

                    ஆமாம், நான் 28 வயசுல திருமணம் செய்தேன் !அதான் இன்னும் பிள்ளை பள்ளிக்கூடம் போகுது’என்று பெருமூச்சு விட்டேன்.’உங்களைப்பார்த்தால் எனக்கு பொறாமையா இருக்கு சிஸ்டர் ‘என்றேன்.’ஏன்லா?என்று என்னைப்போலவே அவரும் காமெடியா கேட்டார்.இல்லை,நீங்கள் பெரிய கடமையெல்லாம் முடிச்சிட்டிங்க ,நான் இன்னும் ,அவ பள்ளிக்கூடம் முடிச்சி , காலேஜ் அனுப்பி ,அப்புறம் கல்யாணம் பண்ணிக்கொடுக்கனும்,அதுக்கு இன்னும் 10 வருசம் ஆகுமே?என்று இன்னும்ம் வேகமாய் மனதில் கிடந்த பொறுப்பை நீளமாய் சொன்னேன்.அட போங்க டீச்சர், அதெல்லாம் இறைவன் சரியா செய்து கொடுப்பான் . 18 வயசில் திருமணம் செய்து என்னத்த நாங்க அனுபவிச்சோம்? குடும்பம் ,பிள்ளைகள் என செட்டல் ஆகிட்டோம்,நீங்கள் நிறைய அனுபவிச்சிருப்பிங்களே?என அவர் சோகமாய் கேட்டார்.

               அதென்னவோ உண்மைதான் ,22 வயசுல வெளிநாடு போக ஆரம்பிச்சேன். கார் ஓட்டிப்பழகினேன்.அப்பா அம்மாவுக்கு நிறைய உழைச்சிக்கொடுத்தேன்.திருமணத்துக்கு நாங்களே பணம் சேமிச்சி அம்மாவின் பாரத்தைக் குறைச்சோம். காதல் மட்டும் பண்ணல அந்த வயசில்,மத்தபடி  நினைச்சபடி ஊர் சுற்றினோம், ஆரோக்கியமான நண்பர்களை சேர்த்துக்கொண்டோம் அண்ணா தம்பிகள் மற்றும் நண்பர்களோடு கும்மியடிச்சோம் ’என கொஞ்ச நேரம் அந்த நாட்களுக்கு போய்விட்டேன்!இதையெல்லாம் கேட்ட அந்த இளமை பாட்டி ‘இப்போ எனக்கு உங்களைப்பார்த்தால் பொறாமையா இருக்கு டீச்சர்.இன்னும் சின்னப்பிள்ளைபோல(?????) முடியை கிராப் வெட்டிக்கிட்டு, கார் ஓட்டிக்கிட்டு,இப்படி தினமும் குழைந்தைகளோடு சிரிச்சிக்கிட்டு எந்த கவலையும் இல்லாமல் வாழ்க்கையை ஓட்றிங்களே?இதைவிட வேற என்ன வேண்டும்?’என்றார்.எங்களுடைய கடமைகளை நினைத்துப்பாருங்கள்!’

                  ’சத்தியமா சொல்கிறேன் ,பொறுப்புகள் உள்ள மனிதன் தான் நிஜமாகவே பாவம் ,எதையும் நிறைவேற்றாமல் போய்விடுவோமோ?என்ற பயம் இருக்குப்பா’இது என் கருத்து.’ச்சே! அப்படியெல்லாம் சொல்லாதிங்க டீச்சர்,உங்களைப்பத்தி என் பேத்தி ரொம்பவே சொல்லுவாள்,திருக்குறள் ,தேவாரம் , பாட்டு ,கதை என எவ்வளவோ சொல்லிக்கொடுத்து,அவ அப்பா நினைவுகளைக்கூட மறக்கும்படி செய்திட்டிங்க ,இதுவே பெரிய விசயமாச்சே?என்றார். என்னவோ இது கேட்க நல்லா இருந்தாலும் ,இன்னும் என் கடமைகளை முடிக்க குறைந்த பட்சம் 5 வருசமாவது ஆகுமே? அதுவரை நான் பிறவிப்பெருங்கடலில் நீந்த வேண்டுமே?’சரி டீச்சர் எங்களுக்கு சொந்த தோட்டம் இருக்கு ,அதில் கத்தரிக்காய்,வாழைக்காய் ,வெண்டைக்காய் எல்லாம் நிறைய கிடைக்கும் ,உங்களுக்கு கொடுத்தால் எடுத்துக்கொள்வீர்களா?என்று பாட்டி தயக்கத்துடன் கேட்டார்.

                   ’அட சமைச்சி கொடுத்திங்களா, இன்னும் சந்தோசமாய் எடுத்துக்கொள்வோம்’என்றேன்.அப்பாடா! எங்கேடா முகத்தில் அறைஞ்சதுபோல வேண்டாம் என சொல்லிடுவிங்களோ என பயமா இருந்துச்சி டீச்சர் ,ஏன்னா என் மகளிடம் கொடுத்து கொடுக்கச் சொன்னேன்,அதுக்கு அவ சொன்னாள்’அம்மா அவுங்களைப்பார்க்க ரொம்ப நல்லவங்களா இருந்தாலும் ,என்னம்மோ கேசுவலா பேச பயமா இருக்கும்மா’என்றாள். அதான் நானே வந்து கேட்கிறேன்,நாளை முதல் கொடுத்துவிடுகிறேன் ;என்று விடைபெற்றார்.

                  என்னையே வெறிச்சிப்பார்த்துக்கொண்டிருந்த என் சக ஆசிரியை சொன்னாள்,’இதுதான் இக்கரைக்கு அக்கரைப்பச்சை டீச்சர்.உங்களுக்கு கிடைச்ச வெளியூர் பயணம், நண்பர்கள் கூட்டம்  எல்லாம்  அவங்களுக்கு கிடைக்கவில்லை,அவுங்களுக்கு சீக்கிரமே கிடைச்சது உங்களுக்கு கொஞ்சம் லேட்டா கிடைக்கும்’அவ்வளவுதான் ,ஆனாலும் நீங்கள் இன்னும் மெட்சுவர்ட்டா இல்லை,அந்த பாட்டியோடு ஒப்பிடுகையில் என்பதுதான்  உண்மை டீச்சர்’என்றாள்.என்ன சொன்னாலும்  எனக்கு பாட்டிமேல் பொறாமைதான்!

Monday 9 February 2015

’ச்சீ மனிதா!’

ஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து
“சீ மிருகமே!”
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே
எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை
எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா ?
**
எந்த விலங்குக்கும்
சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?
**
இன்னொன்று :
பறவைக்கு வேர்ப்பதில்லை
**
எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை
**
எந்த விலங்கும்
தேவையற்ற நிலம்
திருடுவதில்லை
**
கவனி மனிதனே
கூட்டு வாழ்க்கை இன்னும்
குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்
**
அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை உடம்புக்குள் புதைக்கும்
தொழு நோய்
விலங்குகளுக்கில்லை
**
மனிதா
இதை
மனங்கொள்
கர்ப்பவாசனை
கண்டு கொண்டால்
காளை பசுவைச்
சேர்வதில்லை
**
ஒருவனுக்கொருத்தி
உனக்கு வார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை
எந்த புறாவும்
தன் ஜோடியன்றி
பிறஜோடி தொடுவதில்லை
**
பூகம்பம் வருகுது எனில்
அலைபாயும் விலங்குகள்
அடிவயிற்றில் சிறகடிக்கும்
பறவைகள்
இப்போது சொல்
அறிவில்
ஆறு பெரிதா ?
ஐந்து பெரிதா ?
**
மரணம் நிஜம்
மரணம் வாழ்வின் பரிசு
மாண்டால் -
மானின் தோல் ஆசனம்
மயிலின் தோஅகை விசிறி
யானையின் பல் அலங்காரம்
ஒட்டகத்தின் எலும்பு ஆபாரணம்
**
நீ மாண்டால் …
சிலரை
நெருப்பே நிராகரிக்கும்
என்பதால்தானே
புதைக்கவே பழகினோம்
**
“சீ மிருகமே !”
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே
**
கொஞ்சம் பொறு
காட்டுக்குள் என்ன சத்தம் …
ஏதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை
ஏசுகிறது
” சீ மனிதனே !”
*
-கவிஞர் வைரமுத்து

Saturday 7 February 2015

சரிதான்! ......பட்....ஆனால்?

             அண்மையில்  பல்கலைக்கழகத்தில் ஓர் இடுபணியைச் செய்ய அடியேன் பணிக்கப்பட்டேன். பிரபல மருத்துவரும் மழலைக்கல்வி ஆசிரியருமான அறிஞர் 'maria montessori' என்ற மருத்துவரைப்பற்றிய ஆய்வுதான் அது.                                                                              
                         
              மழலைக்கல்வி ஆசிரியர்களுக்கு, மரியா அவர்களைத் தெரியாமல் போக வாய்ப்பே இல்லை. ஆங்கிலத்தில் மிக அழகாக மழலைக்கல்வி என்பது ‘children not to taught but let them learn to learn’ என்று ஒரே வரியில் மிக ஆழமாக சொல்லிச் சென்றவர்.கற்றல் கற்பித்தலில்  பல புதிய யுக்திகளைக் கொண்டு வந்து சேர்ந்தவர். தெய்வக்குழைந்தகளான மாற்றுத்திறனாளிகளுக்கு முறையான கற்றல் கற்பித்தலை அறிமுகம் செய்தவர்.கற்றல் கற்பித்தலில் மாணவர்களுக்கு  சோர்வோ அல்லது சலிப்பு தட்டாமல் எவ்வாறு  கற்பிப்பது என பல நுணுக்கங்களை  அறிமுகப்படுத்தியவர். அவரைப்பற்றி ஆய்வுகள் செய்து ,நிறைய விசயங்களை இடுபணியில்  சேர்க்கவேண்டியதால், இணையத்தில் வலம் வந்தேன்.நிறைய பயனுள்ள தகவல்கள் கிடைத்தன.

         பல அறிஞர்களும் கல்விமான்களும் கூறிய கருத்துக்களை ,மரியா அவர்கள் கூறி இருந்தாலும் ,அவர் சொல்லிய இரண்டு விசயங்கள் என்னை பல கேள்விகளுக்கு ஆளாக்கின!ஒவ்வொரு மனிதனும் அவர்தம் பார்வையில் வெவ்வேறு மாற்றுக் கருத்தினைச் சொல்வது ஒன்றும் புதிதல்ல! பல்வகை   ஆசிரியர் பயிற்சிகளுக்குச் சென்றிருக்கேன்.அனைத்து பயிற்சிகளிலும் எங்களுக்கு வலியுறுத்தப்படும் விசயம் ,ஒரு மாணவனைப்பாராட்டுவதும் ,அவனுக்கு வெகுமதியாக குட்டி குட்டிப்பரிசுகளும் கொடுப்பது அவனை மென்மேலும் கல்விகேள்விகளில் ஈடுபடுத்திக்கொள்ள  ஓர் உந்துதலாக   இருக்கும்.ஆனால் இந்த கூற்றை ,மரியா அவர்கள் தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

                     சரி இது  ஒருபக்கம் இருக்க,மற்றொரு கூற்று நிஜமாக என்னை ஆச்சரியத்தில் வீழ்த்தியது.  அதாவது குழந்தைகளுக்கு 'fairy tales" கதை கூறுவதை தவிர்க்க வேண்டும் என்பதே ஆகும்! கதை என்பது கற்பனை உலகம் . கதை கூறுவதால் மாணவர்கள் குழப்பத்துக்கு ஆளாவார்கள்,அதுமட்டுமின்றி நிஜ உலகத்துக்கு தங்களைத் தயார் செய்ய சில தடைகளையும் எதிர்நோக்குவர் என்றும் அவர் கூறியுள்ளார்.பாலர்பள்ளியில் கடந்த பத்து வருட அனுபவத்தில் மாணவர்களுக்கு கதை கூறுவது அடியேனின் தலையாய கடமை.என் மகளுக்கு சுமார் 12 வயது வரை கதை சொல்லித்தான் தூங்க வைப்பேன்.அதை நான் மிகவும் விரும்பி செய்வேன்.
                                                                          
                  ஒவ்வொரு முறையும் கதையைக்கூறிவிட்டு ,அதை முடிக்காமல் ‘சரி மாணவர்களே நாளை வகுப்புக்கு அவசியம் வாங்க,அப்போதான் சிங்கம் நரியைக் கொன்றதா இல்லையா ?காகத்தின் வடையை நரி தின்றதா அல்லது கெட்டிக்கார காகம் எவ்வாறு வடையை கீழே விழாமல் காத்துக்கொண்டது?என்று சொல்வேன்’என பாதியில் நிறுத்தினால் ,நாளை அவன் ஆர்வமாய் பள்ளிக்கு வருவான் என்ற டிப்ஸ் எங்களுக்கு பயிற்சியில் அடிக்கடி  கொடுக்கப்படும்.அப்படி கதையைப் பாதியில் நிறுத்தினால் அந்த மாணவனின் முகத்தில் ஒரு மாற்றமும் ஆர்வமும் தென்படும்.குழந்தைகளுக்கு கதை கூறுவதால் ,அவர்களின் கற்பனா சக்தி வளரும்.அவனுள் ஓர் ஆற்றல் உருவாகும்.அதுதான் அவனை ஒரு படைப்பாளியாக உருவாக்க ஓர் ஊன்றுகோல் என்றே எங்களுக்கு பயிற்சிகளில் கற்பிக்கப்பட்டது.


                      ஆகவேதான் முன்பெல்லாம் பாட்டிதாத்தாவிடம் வளர்ந்த குழைந்தகள் கதை கதைகேட்டு படைப்பாளிகளாக உருவாகினர் என்றும் கூறுவர்.  தமிழிலும் சரி,ஆங்கிலத்தில்  bed time story,old fairy tales என்று புத்தகங்களே உண்டு. ஆனால் அது தவறு என்று மரியா அவர்களின் கூறியதை முதலில் நான் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும்,பிறகு கொஞ்சம் பின்னோக்கி பார்த்தபொழுது ,சிலகோணங்களில் சரியாகத்தான் படுகிறது என்பதை உணர்ந்தேன்.

                    ‘மூன்றாம் பிறை’என்ற படத்தைப் பார்த்த நான் பயங்கர மன உளைச்சலுக்கு ஆளானேன்.ஏன் பாலுமகேந்திரா கமலை மீண்டும் குணமாக்கி ஸ்ரீதேவிக்கு மணமுடிக்கவில்லை?அந்த படம் பாகம் 2 வருமா?அதிலாவது திருப்புமுனை வருமா?என்றெல்லாம் என்னுள் பல கேள்விகள்! ரஜினிகாந்த நடித்த ஆறிலிருந்து அறுபது வரை படம் பார்க்கும்போது படாபட் இறந்தவுடன் ,படம் பார்க்கும் ஆர்வம் போனது.சரி எப்படியும் ரஜினி மீண்டு வருவார் என்று பெரிய எதிர்ப்பார்ப்புடன் பார்த்தால் ரஜினியை இயக்குனர் கொன்றேவிடுகிறார்.

             அந்த வயதுகளில்தான் தாக்கம் ஏற்படும் என்று நினைத்தால் ,‘அஞ்சலி’படத்தில் அஞ்சலி பாப்பா இறந்துபோய்விடும்.நாயகன் படத்தில் மணிரத்தினம் சார் கமலை ஏன் சாகடிக்கணும்?ஐயோ கமல் இறந்துவிட்டாரே !என்று அழுதது மற்றுமொரு ரகசியம்.மூன்று முடிச்சி படத்தில் ஸ்ரீதேவியை ரஜினியின் அப்பா திருமணம் செய்துகொள்ளும்போது ரஜினியைவிட எனக்கு ,அந்த வயதில் அப்படி ஒரு கோபம்! சுஜாதா காதலித்த விஜயகுமாரை கே.பி ,அவர் தங்கைக்குத் திருமணம் செய்து வைத்து ,சுஜாதா மீண்டும் வேலைக்குச் செல்லும் ‘அவள் ஒரு தொடர்கதை’இன்று பார்த்தாலும் என் அழுகை ஒரு தொடர்கதையாக இருக்கும் என்பதுதான் உண்மை! 

                  இன்றுவரை வில்லன் கதாநாயகனிடம் அடிவாங்கும்போது என் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் என்பது மறுக்கமுடியாத கூற்று.’பாட்சா’திரைப்படத்தில் வில்லனை ரஜினி கம்பத்தில் கட்டி துவைச்சி எடுக்கும் காட்சியை நான் பலமுறை ரிவைன் பண்ணி பார்த்து மகிழ்ந்ததுண்டு.எனக்கு ஏதேனும் அந்த ‘ஃபியா’ இந்த ‘பியா’ நோய் என்று பட்டம் கட்டிவிடாதீர்கள் நட்புக்களே.ஐ அம் ஓகே!.அட ஏன் அவ்வளவு பின்னோக்கி போவானேன்? நேத்து பார்த்த ’ஐ’ படத்தில் ,ஷங்கர் சார் ,விக்ரமை ஒரு கூனனாக காட்டி படத்தை முடிச்சிடுவாரோ ?என நான் பயந்து பயந்து படம் முடியும்வேளையில் விக்ரம் ,பழைய தோற்றத்தில் உருமாறி வந்த பிறகுதான்  மனதிருப்தியோடு நான் தியேட்டரைவிட்டு வெளியேறினேன்.
                    
                      அப்படி ஒரு மன உளைச்சல்களுக்கு கதைகளும் சினிமாக்களும் நம்மை இட்டுச்செல்லும் என்பதில் (என் விசயத்தில்)ஐயமே இல்லை. இப்படி ஏழுகழுதை வயசான நமக்கே(ஒரு கழுதைக்கு எத்தனை வயசு என்று தெரியாது என்ற தகிரியத்தில்தான் அப்படி சொல்கிறேன்!!) ,மிகப்பெரிய பாதிப்பைக் கதைகள் கொடுத்துச் சென்றால்?பிஞ்சுகளின் மனதில் எப்படியெல்லாம் தாக்கம் ஏற்படும்?அறிஞர்கள் அறிந்துதான் சொல்வார்கள் அதனால்தான் அவர்கள் ‘அறிஞர்கள்’!
                                     மரியா அவர்களின் கூற்று சரியா? தப்பா ?