Monday 12 August 2013

அறியாத வயதில்..அறிந்தும் அறியாமலும்!

          ஒரு குறிப்பிட்ட வயது வரை ,நாம் பண்ணாத குறும்புகளே இல்லையென்று சொல்லும் அளவுக்கு நாம் பண்ணிய குறும்புகள் அநேகம் !அநேகம்!.வீட்டில் இதனால் வாங்காத அடிகள் இல்லை, ஆனாலும் நிறுத்தியபாடில்லை.
                                             
                                                             


               ஒரு காலகட்டத்தில் நாங்கள் கூட்டாக சேர்ந்து செய்த குறும்புகளை (இதுவரையில் ரகசியமாய் வைத்திருந்த)கொஞ்சம் திரும்பிபார்க்கிறேன்.

              பக்கத்துவீட்டுத் தோழியின் அத்தை ,அவர் மூக்குகண்ணாடி ரொம்ப பவர்ஃபுல் பார்வை. சின்ன வயதில்தான் ,யாரும் எதையாவது போட்டிருந்தால் ,உடனே அதைப்போட்டு பார்க்க ஆசை வருமே?புதிய செருப்பு ,கண்ணாடி ,புது சட்டை(சேராவிட்டாலும் இவைகளைப் போட்டுப்பார்க்க ஆசை).
                     
                                                         

             அந்த அத்தை , ஒருநாள் கண்ணாடியை மறந்து என் வீட்டில் வைத்துவிட்டு போய்விட, என் பலநாள் ஆசை அன்று அரங்கேறியது.ஆம் அம்மா ‘போய் கொடுத்துட்டு வா’என்று அனுப்ப ,நானும் தங்கையும் பின்னால் வழியாக கொள்ளைப் பக்கம் போனோம்.அம்மா தலை மறைந்தவுடன்  அதைப்போட்டுப்பார்த்தோம்.

              எல்லாமே கிட்ட கிட்ட பெரிசு பெரிசாய் தெரிந்தது.ஒரே ஆச்சரியம் ,என்னம்மோ ஆச்சரியம். ஐயோ இங்கே பார் ,அங்கே பார் என்று கூவிக்கொண்டே ,ஒரு சிறிய கால்வாய் கொள்ளைக்கு இடையில் ஓடும்,அதைக் கண்ணாடி அணிந்தவாறே நான் தாண்டுவேனா?

          ‘தடால் என கால்வாயில் விழுந்தேன்!ஆமாம் அது கிட்ட பார்வை கண்ணாடி ,தூரமாக இருந்த கால்வாய் ,கிட்டே தெரியுமா, தாண்டிகுதிக்க கால் எங்கேயோ போய் ஊன்றி, கால்வாயில் விழுந்து, அழுகை ஒரு புறம் ,பயம் மறுபுறம்.நல்லவேளை கண்ணாடிக்கு ஒரு பாதிப்பும் இல்லை. 

              என் அப்பா வழி பாட்டி ,தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்.இரவில் பீடி குடிக்கும் பழக்கம் உடையவர். வெற்றிலைப்பாக்கும் மெல்லுவார். அந்த பீடி வாசம் ,என்னமோ போல் இருக்கும்.

             பாட்டிக்கு வெற்றிலை இடித்துக்கொடுக்கும் போதெல்லாம் ,அந்த வாசம் பிடித்துபோகவே(உரலில் இடிப்பதால் ஒரு வித வாசம் )திருட்டுத்தனமாய் இடித்த வெற்றிலையை நாங்கள் போட்டு மெல்லுவோம். (இன்னும்கூட விசேச வீட்டுக்குப்போனால் ,வெற்றிலை சாப்பிடுவோம்!) அதேப்போல பீடி இழுக்க ஆசை வந்தது.

           ஒருநாள் வீட்டில் யாருமே இல்லாத சமயம் ,நானும் அக்காவும் கட்டிலுக்கு அடியில் புகுந்துகொண்டு பீடியைப் பற்ற வைத்து வாயில் வச்சி ஊத’ஐயோ தொண்டையில் விசவாயு தாக்கியது போல ஒரு உணர்வு. புகை தலைக்கேறியது.என்னால் தாங்க முடியவில்லை, கட்டில் அடியிலிருந்து வெளியே ஓடி வந்து ,இரும்பி இரும்பி நெஞ்சே உடைந்துபோவதுபோல கட்டிலில் விழுந்தேன்.அக்காவும் அதே போல !
                                                               
                                                                     

             நல்லவேளை பாட்டியின் பழக்கத்தில் வெற்றிலையை மெல்ல மட்டும்  பழகினோம்,பீடி கொடுத்த பாடம்,அன்றே அதுக்கு சுவாஹ!.

             கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல,பக்கத்து வீட்டு தோழி மற்றும் அவள் அண்ணனோடு  சேர்ந்துகொண்டு (அவுங்க வணங்கும் காளி சாமிக்கு) ,முட்டை அவித்து சாமி கும்பிட ,சீனர் வீட்டில் போய் முட்டைகளைத் திருடி,சீனத்திக்கு தெரிய வரவே, அப்பாவுக்கு தகவல் வந்தது

            வேலை முடிந்து வந்த அப்பா வீட்டில் நுழையும்போதே   என் பெயரையும் அண்ணா பெயரையும் சொல்லி வேகமாய் கத்தி அழைத்து , விசாரித்து முடிவில் அப்பாவிடம் பொய் சொல்லமுடியாமல் உண்மையை உளறி முதலும் கடைசியுமாய் ஓர் அறை அன்று அப்பாவிடம் வாங்கினேன்.அன்று முதல் அந்த தோழியின் நட்பும் முறிந்தது(சில காலங்களுக்கு) திருட்டு பழக்கமும் விடைபெற்றது.
                                                                 
           
             என்னை எப்போதும் வெறுப்பேத்தும் தோழி(முட்டைத் திருடி அடி வாங்கியதால் பழி வாங்க எண்ணி) அவள் பிறந்த நாள் அன்று ,அவளுக்கு அவள் மாமா பரிசு கொடுத்தை ரொம்ப பீத்திக்கொண்டாள்!

            அந்த மகிழ்ச்சியை பாழ்படுத்த எண்ணி , நானும் தங்கையும் ஒரு பெட்டியை எடுத்து ,அதில் கோழிக்கொட்டகை மற்றும் ஆட்டுக்கொட்டகையில் உள்ள காய்ந்துபோன கழிவுகளைப்பொறுக்கி பெட்டியில் வைத்து ,அவள் பெயரை எழுதி ,அவள் வீட்டில் முன்னால் வைத்து தலைமறைவாகினோம். 

                                                                   

          மாலையில் (எங்க கெட்ட நேரம்) அவள் அம்மா அந்த பெட்டியைத் திறந்து பார்த்து ,என் அம்மாவை அழைத்து ‘யார் வேலைன்னு தெரியல ,பாருங்க இப்படியா?’என்று முறையிட்டுச் சென்றார்.

             அந்த பெட்டியை நாங்கள் கையில் வைத்திருந்ததை அம்மா ஏற்கவனே பார்த்துவிட்டதால் ,அது நாங்கள் வைத்த சூன்யம் என்று  தெரிய வரவே , அடி பின்னி எடுத்தது மட்டுமல்லாமல் ,அவளிடம் மன்னிப்பும் கேட்க வைத்தார்.அடி ஒரு பக்கம் ,அவமானம் மற்றொரு பக்கம் புடுங்கி தின்றது.

           சிலபல காரணங்களால் பக்கத்துவீட்டுத் தோழி வீட்டிற்கு போகவோ ,பேசவோ கூடாது என்று வீட்டில் ரூல்ஸ் போட்ட பிறகும் ,பள்ளியில் பேசிக்கொள்வோம். வீடு வரை ஒன்றாக வருவோம் , வீட்டை அடைந்ததும் நல்ல பிள்ளையாய் மாறிவிடுவோம்.

           பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் கொய்யாக்காய் பறிப்பது வழக்கம். சீனர் வீட்டு மரத்தில் ஒரு ஆள் , காவல் நிற்க ,இன்னொரு ஆள் மரம் ஏறுவோம்.பிறகு அவர் இறங்கி வந்தது ,காவல் காத்தவர் டெர்ன்.

           நான் மரம் ஏறி கொய்யாக்காய் பறித்து விட்டு இறங்கியதும் ,தோழி ஏறினாள். பொதுவாக அவ படிப்பைத் தவிர மற்ற விசயங்களில் என்னை விட கெட்டி. அவள் மரம் ஏறியதை ஒரு பொருட்டாக மதிக்காமல் ,காவல் காப்பதை விட்டுவிட்டு நான் பறித்த கொய்யாக்காய்களை தின்றுக்கொண்டிருக்கும்போது ,மரத்தில் இருந்து அவள் பாய்ந்து விழுந்து ‘ஓடு ஓடு ,சீனன் வந்துட்டான் ‘என்று  அலற ,புத்தகப்பையை எடுத்துக்கொண்டு ,ஓடிய ஓட்டம் இருக்கே?

                                                                     
          ஒலிம்பிக்கில் ஓடி இருந்தால் தங்கப்பதக்கம் நிச்சயம்.அந்த சம்பவத்தைக்கூட நான் வேண்டும் என்றே அவளைச் சீனனிடம் மாட்டிவிட்டதாக  எண்ணிக்கொகொஞ்சகாலம் என்னோடு பேசாமல் இருந்தாள்.

          நான் ,அண்ணா ,என் தோழி(அண்ணாவின் மனவி) அவள் அண்ணா,இரண்டு அக்காள்கள் என எல்லோரும் நாய்க்குட்டியைக் கூட்டிக்கொண்டு ,குட்டைக்கு குளிக்கப்போய் ,நாய் குட்டையில் விழ அதைக்காப்பாற்ற அவள் அண்ணன் போய் விழுந்தார்,அவரைக் காப்பாற்ற அவள் அக்கா போய் விழ,இதைக்கண்ட நாங்கள் அலறி கத்தி ,ஊரையே கூட்டினோம். ஆனால் அந்த அண்ணாவும் அக்காவும் நாய்க்குட்டியும் இறந்து போயினர். 
                                                                     

             அன்று முதல் குறும்புகளைக் குறைத்தோம் .ஆந்த சம்பவத்தில் விழுந்த ஒவ்வொருஅடிதான் இன்றுவரை என் பிள்ளைகளையும் சரி யார் வீட்டுப்பிள்ளையானாலும் நீரில் விளையாடுவது என்றால் நான் அனுமதிக்கவேமாட்டேன்.
                                                       
                                       
          பிறகு காலங்கள் உருண்டோடின ,வளர்ந்தோம் . சிலபழக்கவழக்கங்களை விட்டோம். பிறகு கிராம வாழ்க்கையை மறந்தோம்.தற்பொழுது ந(ர)கர வாழ்க்கையில் ,நம் பிள்ளைகளை எதுவும் செய்யவிடாமல் நம் விருப்பப்படியே செயல்பட வைக்கிறோம்.என்ன பரிதாபம் ? பிள்ளைகள் பக்கத்து வீட்டிற்கு போக விடுவதில்லை, நம் கண் முன்னேதான் விளையாடனும்.படம் பார்த்து விளையாட்டாய் சிகரெட் பிடிப்பதுபோல , சைகையில் செய்தால் கூட அடி கொடுக்கிறோம் ,கெட்ட பழக்கம் வந்து விடும் என்ற பயத்தில்?நாம் அனுபவித்த எதையுமே அவர்கள் ஐம்பது விழுக்காடு கூட அனுபவிக்கவில்லை என்பதுதான் மிக பெரிய உண்மை!






Thursday 8 August 2013

அத்தனைக்கும் ஆசைப்படு நூலில் சுட்ட சில வரிகள்

என்னைக் கவர்ந்த சிலவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன்!

* வெற்றிக்கு உரிமை கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் பிறர் மீது பழி போடுகிறது!

* நன்றாக வாழத் தெரியாதவர்கள்தான்,நன்றாக ஆளத்தெரியாதவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

* அமைதியும் ஆனந்தமும் கடைத்தெருவில் கிடைக்காது,காட்டிலும் கிடைக்காது.அது உங்களுக்குள்ளேயே ஒளிந்திருக்கிறது.

* ஆசையத் துறக்கவேண்டும் என்று விரும்பினால்  அந்த விருப்பமும் ஓர் ஆசைதானே!

* சந்தோஷமில்லாமல் இருப்பது போன்ற மாபெரும் குற்றம் உலகில் வேறில்லை.

*அன்பாய் இருங்கள் ,அமைதி கிடைக்கும் ,அமைதியாய் இருங்கள் ஆனந்தம் கிடைக்கும்.

*எந்தச் சமூகத்தில் பெண்கள் மதிக்கப்படவில்லையோ , அந்தச் சமூகம் ஆரோக்கியமாக இருக்க வாய்ப்பே இல்லை.

*தோல்வியே கூடாது என்றால் ,நீங்கள் விளையாட்டில் ஈடுபடவே தகுதியற்றவர்

*வேதனைகளைச் சுமக்கு பேரரசனைவிட ,ஆனந்த்ததை அனுபவிக்கும் பிச்சைக்காரன் மேல்.

*பக்திக்கும் பாசாங்கிற்கும் இடையில் ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது.

*உங்கள் மனம் என்பது உங்களைத் தாண்டிப்போனவர்கள் வீசி நிரப்பிவிட்டுப்போன குப்பைத்தொட்டி.

*இன்னொருவரிடம் இல்லாத ஒன்று உங்களிடம் இருந்தால்தான் சந்தோசப்பட முடியும் என்பது ஒரு நோயல்லவா?

*அச்சத்தினாலும் ஆசையினாலும் வேண்டிக்கொள்வதன் பெயர் பிரார்த்தனை அல்ல!

*தோல்வி என்பது நடந்து முடிந்த விதத்தில் இல்லை, அதை நீங்கள் எப்படி ஏற்கிறீர்கள் என்பதில் இருக்கிறது

*எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் அதன் பின் விளைவுகளையும் வேதனையில்லாமல் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளத் தயாராயிருந்தால்.

*சந்தேகம் என்பது புத்திசாலித்தனமல்ல.புத்திசாலித்தனம் குறையக் குறையத்தான் மனிதனுக்குச் சந்தேகப்படும் குணம் அதிகமாகும்.

*கடவுள் எங்கோ எட்டாத மலை உச்சியில் இல்லை.உங்களுக்குள் இருக்கிறார்.கவனியுங்கள்

*மனிதனுக்கு அடுத்த கிரகத்தைப்பற்றி ஆயிரம் ஆராய்ச்சிகள் செய்யத் தெரியும்.இந்த பூமியில் சந்தோசமாக வாழ்வது எப்படி என்று மட்டும் தெரியாது.

*கோபத்தையும் காழ்ப்புணர்வையும் வெளிப்படுத்துவதில் மனிதன் முழுத் திறமையாளனாக இருக்கிறான், அன்பையும் பரிவையும் வெளிப்படுத்துவதில் மட்டுமே கற்றுக் குட்டியாகவே இருக்கிறான்.

*ஒரு தாய் குழந்தையிடம் காட்டும் பிரியத்தில் தீவிரம் இருக்கும் ,எதிர்பார்ப்பு இருக்காது.

*காயங்கள் இல்லாமல் கனவு  வேண்டுமானால் காணலாம்,வலிகள் இல்லாமல் வெற்றி காண முடியாது.

* உங்களை நிந்திப்பவரைப் பதிலுக்கு நிந்திக்க ,புத்திசால்லித்தனம் தேவையில்லை.அமைதியாக இருக்கத்தான் அதீத புத்திசாலித்தனம் தேவை.

* சந்தோசம் என்பது விரும்பியதைச் சொந்தமாக்கிக் கொள்வதிலா இருக்கிறது?கிடைத்த பின் அதை அனுபவிப்பதில்தான் இருக்கிறது.

*மூட்டைக்குள் பொன் இருந்தால் என்ன ?புழுதி இருந்தால் என்ன?
கையாளத் தெரியாவிட்டால் இரண்டும் பாரம்தான்.

(இன்னும் நிறைய அந்த நூலில் கொட்டிக்கிடந்தாலும் ,என்னைக்கவர்ந்ததும் ,அதைப்படித்து நான் அதுவாக பாவித்து வரும் சில வரிகளை இங்கே எழுதியுள்ளேன்)
                                                               

Sunday 4 August 2013

கடவுள் கொடுத்த பரிசு நட்பு ,அந்த நட்புகள் கொடுத்த பரிசுகள்!

                   எனக்கு அவனை/அவளை ரொம்ப பிடிக்கும் ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை’என்று கூறினால் அது ஆழமான நட்புக்கு வழிவிட்டுச்செல்லுமா ?என்றால் கேள்விக்குறிதான்!ஆனால் ஒருவரை பல காரணங்களுக்காக பிடித்துப்போய் விட்டால் அவர்களைத்தான் நா(ன்)ம் நட்பாக ஏற்றுக்கு கொள்வோம்!
                                                                      

                 அந்த வகையில் நான் நட்பாக ஏற்றுக்கொண்ட என் நட்புகள் எனக்கு கொடுத்த பரிசுகளை இன்றைய நட்பு தினத்தில் நினைவு கூர்கிறேன். பல்வேறு பரிசுகள் பலரிடம் இருந்து பெற்றிருந்தாலும் ,இன்னும் நான் பொக்கிசமாக பாதுகாத்துவரும் பரிசுகள் அவை.பள்ளிக்காலத்தில் என் தோழி அடிக்கடி பஜனை வகுப்புக்கு போவாள் .அவள்  பெயர் சிவனேஸ்வரி

                அவள் ஒரு முறை பஜன் வகுப்புக்குச்சென்று எனக்கு ஒரு சின்ன படம் (பர்ஸில் வைக்கும் அளவுக்கு) ஒரு சாய் பாபா படம் கொடுத்தாள் .நான் குரு வழிபாட்டில் தீவிரம் காட்டாதவள் இருப்பினும் என் 13 வயதில்  அவள் கொடுத்த அந்தப்படம் இன்னும் என் பர்ஸில் இருக்கிறது!

                    என் 21 வயது பிறந்தநாளுக்கு என் அருமை நண்பர்கள் ,சிவா,மணி ,இளன் அப்போ அவனுங்க எல்லோரும் படித்துக்கொண்டிந்த நேரம் ,ஆகவே ஒரு புடவை வாங்குவது அந்த காலகட்டத்தில் சிரமம்தான். இருப்பினும் என் பிறந்தநாளுக்கு அவர்கள் வாங்கிகொடுத்த புடவை இன்னும் என் வீட்டு அலமாரியில் பத்திரமாக இருக்கிறது.


                        திருமணமாகி,2000 பொங்கல் அன்று புதிய வீடு குடி புகுந்தேன்.அன்று எனக்கு என்ன இல்லை என்று கேட்டு ,ஒரு மின் கேத்தல் ஒன்றை என் தோழி புஷ்பா பரிசாக கொடுத்தாள்.இன்று வரை அந்த கேத்தலில் நான் வெந்நீர் கொதிக்கவைப்பேன்.

               அண்மையில் கனடாவில் இருந்து அவள் என் வீட்டிற்கு வந்த சமயம்,இதோ உன் கேத்தல் என்று சொல்லி அதில் நீர் கொதிக்க வைத்துக்காப்பி கலந்து கொடுத்தேன்.செல்வி u are great ,still u keep this ?என்று ஆச்சரியப்பட்டு போனாள்.

              அது மட்டுமல்ல புஷ்பாவுக்கு பரிசு கொடுப்பதென்றால் ரொம்பவே பிடிக்கும் .அதிலும் எனக்கு என்றால் எக்ஸ்ட்ராவா செய்வாள். சுமார் மூன்று வருடங்களுக்கு முன் ,இங்கே வந்தவளைக் காணச் சென்றேன். உடனே என்னை அறைக்குள் அழைத்து கையில் ஒரு சிறிய நகைப்பெட்டியைக் கொடுத்தாள் .என்ன்வென்று பார்த்தேன்.

              அவளுடைய தங்க மூக்குத்திகள் 4 மற்றும் ஒரு  s போட்ட தங்க லாக்கேட்.ஐயோ !எனக்கு வேண்டாம் புஷ்பா நான் என்ன மூக்குத்தியா அணிகிறேன் ,வேண்டாம்’என்றேன்.’நீ போடவேண்டாம் ,உன் மகள் இன்னும் கொஞ்ச காலத்தில் அணியும் வயது வரும் ,இதை எனக்கு பிறருக்கு கொடுக்க மனம் இல்லை’என்றாள்.
                                                                 
                அந்த தங்க லாக்கெட்டை எப்போதாவது ஆசை வந்தாள் சங்கிலியில் அணிந்துகொள்வேன்.அதைப்பார்க்கும்போதெல்லாம் ,பாசம் மட்டுமே என் கண்களுக்கு தென்படும்.மற்றுமொரு தோழி இளவரசி ,என் நெருங்கிய தோழி ,எனக்கு பல பரிசுகள் கொடுத்தாலும் , கவிஞர் வைரமுத்துவின் கவிதை தொகுப்பு புத்தகம் ஒன்றை கொடுத்தாள்.

              முதன்முறையாக  நான் படித்த வைரமுத்துவின் கவிதை என்றும் சொல்லலாம்.பலர் அதை இரவல் வாங்கிச் சென்றாலும் ,எப்படியோ திரும்பகேட்டு இன்னும் அலமாரியில் என்னைப்பார்த்துச் சிரிக்குது.
                 
                   கடந்த மூன்று வருட பழக்கத்தில் என் நட்பு எனக்கு சில பரிசுகளை கொரியரில் அனுப்பி வைத்திருந்தார்.அவர் அனுப்பிய உடைகள் ,அணிகலன்கள் ஒரு பக்கம் இருந்தாலும் ,நானாக கேட்டு, அவர் அனுப்பிய ’அத்தனைக்கும் ஆசைப்படு’ மற்றும் ’சாகாவரம்’ புத்தகங்கள் இரண்டையும் பத்திரமாய் பாதுகாத்துவருகிறேன்.சில நண்பர்கள்  வந்தால் இரவல் கேட்பதுவும் ஒன்று,ஒரே வார்த்தையில் ‘நோ’சொல்லிடுவேன்.காரணம் அது கடல் கடந்து வந்த பரிசு!