Wednesday 7 June 2017

நான் கொஞ்சம் (கர்வம்) பெருமை கொள்கிறேன் !



              1997 இல், நான் ஜப்பானிய நிறுவனத்தில் வேலை செய்த போது, தமிழ்நாடு சென்றேன்.அப்போ நாங்கள் டூர் சென்ற பேருந்து ஓட்டுநர் நட்பாக அறிமுகம் ஆனார் .நாடு திரும்பி ,அவர் குடும்பத்துக்கு  எதுவும் செய்யலாம் என நினைத்திருந்த  வேளையில் ,தமிழ்நாட்டில் இருந்து ஒரு இன்ஜினியர் எங்கள் அலுவலகத்துக்கு அலுவல் காரணமாக வந்தார்.
           பேசி அறிமுகம் ஆனவுடன் ,நானும் என் தோழியும் அந்த பேருந்து ஓட்டுனருக்கு பரிசு ஒன்றை இவர் மூலம் அனுப்பிவைத்தோம் . பரிசைப் பெற்றுக்கொள்ள , அந்த நண்பர் வீட்டுக்கு ,ஓட்டுநர் குடும்ப சகிதம் சென்றபோது,அவர் மகளுடன் காதல் வயப்பட்டார் என்  நண்பர்.
                 22 வயதில் திருமணம் நடந்தது அந்த இளைஞனுக்கு . இதில் அழகிய அங்கம் என்னவென்றால் அந்த பெண்தான் முதலில் தன காதலை வெளிக்கொணர்ந்தாள் என்பது முன்பே உங்களுக்குத் தெரியும்.அதை அந்தப் பெண் கடிதம் வழி எங்களுக்கு தெரியப்படுத்தினாள் .மற்றுமொரு முக்கிய விஷயம் நண்பர் கூறியது 'சகோ செல்வி ,எனக்கு அவளுடைய பெற்றோர்களை ரொம்ப பிடித்துப்போனது,பிறகுதான் அவளை  ரொம்பவே பிடித்துப்போனது 'என்றும் கூறினார்.

          18 வருடங்கள் கழித்து ,என் தோழியின்(அவளும் நானும் கொடுத்தனுப்பிய பரிசுதான் ) முகநூலில்,அவள் பிறந்த நாளுக்கு நான் வாழ்த்து கூறியிருந்ததை (31 /5/2017)அந்த நண்பர் பார்த்துவிட்டு என்னை கண்டுபிடித்து  பேசினார்.'உங்கள் நாட்டில் வேலைக்கு வந்த என்னை எங்கள் நாட்டு பெண்ணிடம் புடிச்சி கொடுத்த்த்தது மட்டுமல்லாமல் ,
22 வயசில் எனக்கு திருமணம் செய்ய வச்ச உங்களைத்தான் தேடினேன்,சிக்கிட்டிங்க ,இனி விடமாட்டேன் ,எவ்வளவு பெரிய தண்டனை தெரியுமா?' என்றார் ரொம்ப வெள்ளந்தியாய் அந்த நண்பர்.
          'மிக அருமையான   மாமனார் மாமியார் உங்களால் எனக்கு கிடைத்தனர் .அதற்காகவே உங்களுக்கும் உங்கள் தோழி புஷ்பாவுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் 'என்றார்
பிறகுதான் தெரிய வந்தது ,நாங்கள் நினைத்ததைவிட,(அந்த பெண் நினைத்துக்கூட பார்க்காத அளவுக்கு ) அவர் மனைவியை  மகிழ்ச்சி,பணம் பொருள் என எல்லாவற்றிலும்  சிறப்பாக வாழவைத்துக்கொண்டிருக்கிறார், கவனித்துக்கொள்கிறார்.
            அதுமட்டுமல்ல  அவர்  பெற்றோர் மற்றும் மாமனார் மாமியாரையும்  கூட ஒரே நிலையில் வைத்து பார்ப்பதாகவும் அறிந்தேன்.இன்னும் அந்த தம்பதியினர் வாழ்வில் சிறந்து விளங்க வாழ்த்துவோம்!
#எங்கள் செயல், ஒரு பெண்ணுக்கு மிகசிறந்த வாழ்வினைக் கொடுத்துச்  சென்றது என்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி.

Wednesday 8 March 2017

இதற்குத்தானே இன்றைய தினம்!

ஒரு நாள், ஒரு பொழுதாயின்னும்

            தினமும் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் கணவனிடம்,மனைவி அங்கலாய்த்துக் கொள்கிறாள் ‘ ஐயோ ,எனக்குத்தாங்க முடியல, பிள்ளைகள் ஒரு புறம்,வீட்டு வேலை மறுபுறம் ,எங்கேயாவது போய் விடலாம்னு தோனுது !’ என்று.
              இதைக் கேட்ட கணவன் ஒருநாள் , பொங்கி எழுந்து ‘ஏய் ,நான் மட்டும் என்ன காலை ஆட்டிட்டு வரேன்? நீ ஒரு நாளைக்கு வேலைக்குப் போ,நான் வீட்டு வேலையைச் செய்கிறேன்னு’ சந்திக்கப் போகும் பின்விளைவுகளை யோசிக்காமல் சவால் விடுகிறான்! மனைவியும் சவாலை ஏற்றுக்கொள்ள பொறுப்பு கைமாறுகிறது.இரவு பலமுறை,மனைவி கணவனைக் கேட்கிறாள்,வேண்டுமா இந்த சவால்?இறுமாப்பு கணவன் கேட்டபாடில்லை!
மனைவி வேண்டுமென்றே காலை 6.00மணிக்கெல்லாம் காரை எடுத்துக்கொண்டுப் புறப்படுகிறாள். 


            தொடங்குகிறது யுத்தகாண்டம் !!! காலையில் 6.00 மணிக்கு, கணவன் எழுந்து குழந்தைகளை எழுப்புகிறான்.பலமுறை எழுப்பிய பிறகுதான் ,குழந்தைகள் எழுகின்றனர்.’எத்தனை மணிக்கு பஸ் வரும் என பிள்ளைகளை வினவ,'ஐயோ!  அப்பா,6.30 வரும்,ஐயோ லேட் ஆச்சு ! என பதறிக்கொண்டு பிள்ளைகள் கிளம்ப’,நில்லுங்கள் ,அப்பா தோசை சுடுகிறேன்’என்று தோசைக் கல்லை அடுப்பில் வைப்பதற்குள் ‘பள்ளி பஸ் ஓலமிடுகிறது!’தோசையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்’என்று பிள்ளைகள் கோவித்துக்கொண்டு செல்கின்றனர். 'சரி !சரி இந்தாங்க காசு எதாவது வாங்கிக்கொள்ளுங்கள்' என்று பணம் கொடுத்தனுப்புகிறான் கணவன்.

                 தூங்கிக்கொண்டிருக்கும் இரண்டு வயது குழந்தை எழுவதற்குள் குளித்துவிடலாம் என எண்ணி குளியலறையில் நுழைகிறான்…'ட்ரிங் ட்ரிங்'  ..வீட்டுப் போன் அலற ,துண்டைக் கட்டிக்கொண்டு ஓடிப் போய் போனை எடுக்கிறான்…’ச்சீ காலையிலே ரோங் நம்பர்! தடாலன போனை வைத்துவிட்டு ,மீண்டும் குளியலறையில் நுழைகிறான், பொத்தென்று அறையில் ஒரு சத்தம் , ஐயோ என்ன ??என்று ஓடுவதற்குள் ‘ஓ வென்று தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் அழுகுரல்! பிள்ளை கீழே விழுந்து ,அழுதுகொண்டே தட்டு தடுமாறி வருவதைக் கண்ட அப்பா,'இதற்கு மேல் எங்கே குளிப்பது? என்று வந்து குழந்தையைத் தூக்குகிறான்.அவளை சமாளித்து பால் கொடுத்து குளிப்பாட்டுவதற்குள் மணி 10.00 ஆகிறது ! 


                     துணி துவைக்கும் இயந்திரத்திலுள்ள துணிகளை உலர வைத்து விட்டு, உள்ளே வருவதற்குள், மீதிப் பாலைக் கீழே ஊற்றி குழந்தை கோலம் போடுகிறாள்.ஐயோ ! என தலையில் அடித்துக்கொண்டு ,தரையைச் சுத்தம் செய்வதற்குள் அவனுக்கு இரத்தம் தலைக்கேறுகிறது!!பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் பிள்ளைகளுக்கு ஏதாவது சமைக்கலாம் என்று எண்ணி காய்கறிகளைச் சுத்தம் செய்து அடுப்பைத் தட்டுகிறான்,அந்தோ பரிதாபம்!, கேஸ் தீர்ந்துப் போய்விட்டது!பக்கத்துவீட்டுக்காரரிடம் கேஸ் பற்றி விசாரித்து ஒரு வழியாக வீடு வந்து சேர்கிறது கேஸ்! பின்னாலே பள்ளி பஸ் ‘பொங் பொங்’ என்று ஓலமிட்டு வீட்டு வாசல் முன் வந்து நிற்கிறது.
'அப்பா,என்ன சமைத்தீர்கள்? என்று உள்ளே வரும் முன்,கேள்விக் கேட்டுக் கொண்டு வந்த பிள்ளைகளை ,பாவத்தோடு பார்க்கிறான் அப்பா!
'ஹாய், இன்னைக்கு உங்களுக்கு கடைச்சாப்பாடு !கொஞ்சம் பொறுங்கள் ,அப்பா போய் வாங்கி வருகிறேன்' என்று சொல்லும் பொழுதுதான், உணர்கிறான் வீட்டில் கார் இல்லை என்று?செய்வதறியாது ,கையைப் பிசைந்துக் கொண்டு,'சரிமா,நான் நடந்து போய் வாங்கி வர்ரேன்னு கிளம்புகிறான்.திரும்பி அரக்க பறக்க வீடு வந்து சேர்கிறான்.


                      வீடே அலங்கோலமாய்க் கிடக்க ,உணைவைப் பிரித்து, உட்கார எத்தனிக்கிறான்’ஏதோ ஒரு வாடை?’அப்பா,பாப்பா ஆயிப்போச்சு’ என்று பிள்ளைகள் கத்துகின்றனர்.அவனுக்கோ ஆத்திரம் தலைக்கேறுகிறது!!மீண்டும் ,துப்புரவு,குளியல் என்று போராடி தூங்க வைக்கிறான்,அப்போ பக்கத்து வீட்டு சீனப்பாட்டி ‘ஓய் தம்பி ,மழை,மழை என்ன தூங்குறாயா ? துணிகளை எடுன்னு அறைகுறை தமிழில் ஓலமிட ,ஓடுகிறான் ,பாதி துணி நனைந்து விடுகின்றன!காலையிலிருந்து பச்சைத்தண்ணிகூட வாயில் வைக்கலையேன்னு காப்பி போட்டு குடிக்க சமையலறையில் நுழைகிறான்,வெளியே மனைவியின் கார் சத்தம் ,’அவளும் புன்னகையோடு வீடு நுழைய ‘ஐயோ !என்னை மன்னித்துவிடு டார்லிங் ,இப்போதான் தெரியுது நீ படும் அவஸ்தை’ என்று அசடு வழிய ஓடுகிறான்.அவளும் 'என்னை மன்னித்து விடுங்கள் ,சும்மா உங்களுக்கு உணர்த்தவே நான் என் அம்மா வீட்டில் மனமின்றி உட்க்கார்ந்து விட்டு வருகிறேன் 'என்று அவனை அன்போடு அணைத்துக்கொள்கிறாள் !

இது உனக்கு தேவையா மாதவா?

-------------------------------------------------------------------------------------------------------------------

இரவு 9.30 குடும்பத்தோடு படம் பார்க்கும் அம்மா,எழுந்து 'சரி நான் படுக்க போறேன்னு' மேல் மாடிக்குப் போய் துணிகளை iron பண்ணுகிறாள்,பிறகு எல்லா படுக்கை அறைகளையும் ஒழுங்கு செய்கிறாள்,சமையலறைக்குச் சென்று தண்ணீர் கொதிக்க வைத்து பிள்ளைகளின் பள்ளி bottles - களில் நிரப்புகிறாள்,துணிகளை washing machine-போடுகிறாள். அப்புறம் நாளை breakfast-க்கு தயார் செய்கிறாள்.சாப்பிட்டு வைத்த மங்கு பாத்திரங்களைக் கழுவி வைக்கிறாள்.படமும் முடிகிறது மணி சுமார் 11.00 ஆகிறது.பிள்ளைகள் மேல் மாடிக்குப் போய் .'அம்மா இன்னும் நீங்கள் தூங்கலையா,அப்பவே மேல் மாடிக்கு ஏறீனீங்க என்று கேட்கிறார்கள்?
                                       Image result for working women in home
                                                                       

Friday 27 January 2017

நன்னெறி கதைகளில் திருத்தம் செய்யலாமே?

 
                                                         
பாட்டி சுட்ட வடை
இந்த கதையை நம் பள்ளிக்காலங்களில் கூறும்பொழுது ,
பாட்டி வடை சுடுவதை, மரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த காகம்
,ஒரு வடையைத் திருடிக்கொண்டு ,மரத்தில் போய் உட்க்கார்ந்து கொண்டது.......
என்று தொடங்கி இறுதியில் ஆசை வார்த்தையால் காகம் வடையை நரியிடம் இழந்துவிடும்!
ஆனால் ,தற்போது இந்த கதையை திருத்தம் செய்து ,
காகம் வடையைத் திருடி பெறாமல் ,அந்த பாட்டிக்கு சுள்ளி குச்சிகளைப் பொறுக்கி கொடுத்து ,தன் உழைப்புக்கு ஊதியமாக ஒரு வடையைப் பெற்றுக்கொள்ளும் என்றும் இறுதியில் நரியின் ஆசை வார்த்தையில் வடையை இழந்துவிட்டாலும் ,பிறகு தன் உழைப்பு வீண் போகக்கூடாது என்று போராடி, தன் காக்கை இனத்தின் ஒற்றுமையால், வேகமாய் கரைந்து கரைந்து, தன் காக்கை நட்புக்களை அழைத்து ,நரியைச் சுற்றி வளைத்து வடையை மீண்டும் பெற்றுக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.

இப்படி திருத்தப்பட்ட கதைகளில் பல நன்னெறி பண்புகளை புகுத்தியுள்ளனர்.அதாவது காகம் உழைத்து தன் வயிற்றுக்கு உணவு பெற்றுக்கொள்கிறது.உழைப்பால் பெரும் எதையும் வீணாக இழந்துவிடக்கூடாது ,பிறகு ஒற்றுமையால் இழந்த எதையும் பெற்றுவிடலாம் எனும் பண்புகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம்.


...................................................................................................................................................................

கொக்கும் நரியும்
(அதேப்போல என் தமிழ் விரிவுரையாளர் ஒருமுறை, என் ஆசிரியை கதை கூறும்பொழுது , அதை திருத்தி கூறி,'வீட்டிற்கு எதிரியே வந்தாலும் விருந்து கொடுப்பதுதான் நம் தமிழர் பயன்பாடு' என்றார்! )
அதாவது கொக்கு ஒன்று நரியைத் தன் வீட்டிற்கு அழைத்து, ஒரு சிலிண்டர் போன்ற குவளையில் உணவு கொடுக்கும்.நரியின் வாய் அமைப்பு அந்த உணவை அருந்த முடியாமல் சிரமப்படும்.ஆகவே கொக்கைப் பழி வாங்குவதற்காக நரி கொக்கைத் தன் வீட்டிற்கு வரசொல்லி , அகன்ற பாத்திரத்தில் உணவு கொடுக்கும்,இதுதான் கதை!
ஆனால் ஐயா அவர்கள் ‘அது தவறும்மா,அப்படி சொல்லிக்கொடுக்கக் கூடாது .அது பழிவாங்கும் உணர்ச்சியைத் தூண்டும்,மேலும் நம் தமிழர் பண்பாடு அதுவல்ல!எதிரியே வீட்டிற்கு வந்தாலும் வயிறார விருந்து கொடுப்பதுதான் நம் கலாச்சாரம் ,பண்பாடும் என்றார்!நம் பண்பாட்டுக்கு முரணான விசயங்களை முடிந்தவரையில் தவிர்ப்போமே என்றும் ஐயா கூறி,
கதையை இப்படி திருத்தினார்!
நரி கொக்கைத் தன் வீட்டிற்கு அழைத்து வயிறாற விருந்து கொடுத்தது.விருந்துண்ட கொக்கு ,தன் தவற்றை இப்படி நாகரீகமாக சுட்டிக்காட்டிய நரியிடம் , வெட்கி தலைகுனிந்து மன்னிப்பு கேட்டது.


இப்படி சில கதைகளை திருத்தி புதுப்பித்து கூறிவருகிறோம்.
அப்படி திருத்தப்பட்ட 'பாட்டி சொன்ன கதைகள் 'இருந்தால் பகிருங்கள் நட்புக்களே.

Wednesday 25 January 2017

'சிவனருள்' சைவ சமய மாத இதழ் ஓர் அறிமுகம்!



                                                                         இதழ் 
(வாசகர்களின் கருத்து )

கடந்த ஒரு வருட காலமாக சிவனருள் இதழை வாசிக்க அடியேனுக்கு, அவன் அருளால் வாய்ப்பு கிட்டியது.சைவ சமயத்தை அத்துணை எளிதாக வேறெங்கும் காணமுடியாத அளவுக்கு இந்த இதழில் எளிமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சைவ சமயத்தில் எழும் அனைத்து ஐயங்களுக்கும் இங்கே பதில் கிடைக்கும்.அடியேனின் பல ஐயங்களுக்கு இங்கே விடை கிடைத்துள்ளன .

சைவ சமயத்தின் அடிப்படை தத்துவங்களை அறிந்துகொண்டு அனைத்து வயதினருக்கும் போதிக்க சிவனருள் அருமையான கையேடு.சிந்தாந்த வகுப்புகளுக்கு வர வாய்ப்பில்லாதவர்கள் இந்த இதழை தொடந்து வாசித்து வந்தால் ,கண்டிப்பாக அவர்கள் தங்களுக்குள் ஒரு மாற்றத்தைக் காணலாம்.அந்த உண்மையை என் குடும்ப உறுப்பினர்களிடம் அடியேன் கண்டபடியால் ,அதை இங்கே அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளேன்.

குருமாரர்கள் யார்?அவர்கள் எத்தகையவர்களா இருத்தல் வேண்டும் என்று பல நாட்கள் என்னுள் சில வினாக்கள் புதைந்து கிடந்தன.அதற்கான பதில்கள் மிகவும் தெளிவாக இங்கே கூறப்பட்டிருந்தது.

சைவ சமயமும் ,வழிபாடு மட்டுமே என்று கிடந்த நிலையில்,அதன் வரலாற்றைப் பைய பைய அறிந்துகொள்ளும் வாய்ப்பும் இந்த இதழின் வழி கிடைக்கப் பெற்றேன் .274 பாடல் பெற்ற தலங்களின் வரலாறும் அதில் கூத்தபிரான் நடத்திய அற்புதங்களை பல நூல்களில் படித்து தெரிந்துகொண்டேன் ஆனால் அதற்கு மாறாக அந்த சிறப்பு வாய்ந்த தலங்களில் தற்போது நடந்து வரும் அவலங்களையும் ஐயப்பாடின்றி இந்த இதழின் வழி தெரிந்துகொள்ளமுடிகிறது.

தமிழ் நாட்டுக்குச் சுற்றுலா போகிறோம் ,பாடல் பெற்ற தலங்களைப் பார்க்கப்போகிறோம் என்ற நிலை மாறி ,அத்தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கவேண்டிய சிவலிங்கத்தை புறம்தள்ளி ,அவர் அவர் வசதிக்கேற்ப வியாபார நோக்கத்தில் சில கடவுள்களை வைத்துப் பூஜிப்பதை ஆராய்ந்து தெரிந்துகொண்டு வருகிறோம் .இறைவனின் ஆணையால் ,நால்வர் போராடி மீட்டு வந்த சைவ சமயம் ஆன்மீக பூமியில் எப்படி சீரழிந்துகொண்டு வருகின்றது என்பதை தெரிந்துகொள்வதோடு அல்லாமல் ,ஒரு சைவனாக என்னால் சைவ சமயத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஓர் உந்துதல் எழுந்துள்ளது.

மாணிக்க வாசகர் பாடிய 'வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி 'என்பதுபோல ,எதையும் வாசித்து,கிரகித்து அதில் லயித்துப்போக முடியாத மனம் ,இந்த சிவனருள் இதழை வாசித்து உள்வாங்கி அதை செயலில் நிறுத்தி செம்மைப்படுத்துகிறது என்றால் அதுவும் அவன் திருவருளே!

போற்றியோ நமசிவாய !

.............................................................................................................................................................

திரு.நாகப்பன் ஐயாவிடம் சித்தாரந்த வகுப்பிற்குச் செல்லும் எனது தாயாரிடமிருந்து நான் சிவனருள் எனும் மாத இதழை வாங்கி படிக்கலானேன்.

அவ்விதழை படிக்க படிக்க என்னுள் பல மாற்றங்கள்.

முதலாக, சிவன் ஒருவனே பரம்பொருள். அவன்ன்றி வேறு ஒருவனும் அல்ல என தெளிவுற்றேன். தொடர்ந்து என் வழிபாடு் முறையை மாற்றியமைத்தேன்.
என் வழிபாட்டு அறையிலுள்ள சிவபெருமானை தவிர்த்து மற்ற தெய்வ படங்களை வெளியேற்றினேன்.

இரண்டாவதாக, சிவபெருமானுக்காக கொண்டாடப்படும் பண்டிகைகளையும் நான் உணர்ந்தேன். உதாரணத்திற்கு எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து தைப்பூசம் என்பது முருகனுக்கானது என நான் அறிந்திருந்தேன். ஆனால் தைப்பூசம் சிவபெருமானுக்காக கொண்டாடப்படுவது என சிவனருள் இதழ் மூலம் புரிந்து கொண்டேன்.

மூன்றாவதாக, மூடநம்பிக்கை என்பது சமயம் சார்ந்த விஷயம் இல்லை என்பதையும் அவ்விதழால் அறிந்தேன்.

அதனையடுத்து சைவம் அனைத்து உயிர்களையும் சமமாக கருதுகிறது. அன்பே சிவம் என்பதை அடியேன் உணர்ந்து அசைவத்தை விட்டொழித்துவிட்டேன்.

அதுமட்டுமின்றி, அடியேன்
சைவ சமயத்தினை பற்றிய எண்ணிலடங்காத அரிய கருத்துக்களை அறிந்தும் புரிந்தும் கொண்டேன். சிவனருளை படித்துவிட்டு நான் பலரிடம் என் கருத்துக்களை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளேன்

இறுதியாக, சிவனருளால் என் வழிபாட்டு முறை மாற்றம் கண்டது ; சைவத்தின்பால் எனக்கு ஈர்ப்பு அதிகரித்தது. மேலும் சிவனருளை சிவதொண்டாக கருதி அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோருக்கு மிக்க நன்றி.

~ சைவத்தின் மேல் வேறு சமயம் வேறில்லை ~


சிவசிவ