Friday 27 January 2017

நன்னெறி கதைகளில் திருத்தம் செய்யலாமே?

 
                                                         
பாட்டி சுட்ட வடை
இந்த கதையை நம் பள்ளிக்காலங்களில் கூறும்பொழுது ,
பாட்டி வடை சுடுவதை, மரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த காகம்
,ஒரு வடையைத் திருடிக்கொண்டு ,மரத்தில் போய் உட்க்கார்ந்து கொண்டது.......
என்று தொடங்கி இறுதியில் ஆசை வார்த்தையால் காகம் வடையை நரியிடம் இழந்துவிடும்!
ஆனால் ,தற்போது இந்த கதையை திருத்தம் செய்து ,
காகம் வடையைத் திருடி பெறாமல் ,அந்த பாட்டிக்கு சுள்ளி குச்சிகளைப் பொறுக்கி கொடுத்து ,தன் உழைப்புக்கு ஊதியமாக ஒரு வடையைப் பெற்றுக்கொள்ளும் என்றும் இறுதியில் நரியின் ஆசை வார்த்தையில் வடையை இழந்துவிட்டாலும் ,பிறகு தன் உழைப்பு வீண் போகக்கூடாது என்று போராடி, தன் காக்கை இனத்தின் ஒற்றுமையால், வேகமாய் கரைந்து கரைந்து, தன் காக்கை நட்புக்களை அழைத்து ,நரியைச் சுற்றி வளைத்து வடையை மீண்டும் பெற்றுக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.

இப்படி திருத்தப்பட்ட கதைகளில் பல நன்னெறி பண்புகளை புகுத்தியுள்ளனர்.அதாவது காகம் உழைத்து தன் வயிற்றுக்கு உணவு பெற்றுக்கொள்கிறது.உழைப்பால் பெரும் எதையும் வீணாக இழந்துவிடக்கூடாது ,பிறகு ஒற்றுமையால் இழந்த எதையும் பெற்றுவிடலாம் எனும் பண்புகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம்.


...................................................................................................................................................................

கொக்கும் நரியும்
(அதேப்போல என் தமிழ் விரிவுரையாளர் ஒருமுறை, என் ஆசிரியை கதை கூறும்பொழுது , அதை திருத்தி கூறி,'வீட்டிற்கு எதிரியே வந்தாலும் விருந்து கொடுப்பதுதான் நம் தமிழர் பயன்பாடு' என்றார்! )
அதாவது கொக்கு ஒன்று நரியைத் தன் வீட்டிற்கு அழைத்து, ஒரு சிலிண்டர் போன்ற குவளையில் உணவு கொடுக்கும்.நரியின் வாய் அமைப்பு அந்த உணவை அருந்த முடியாமல் சிரமப்படும்.ஆகவே கொக்கைப் பழி வாங்குவதற்காக நரி கொக்கைத் தன் வீட்டிற்கு வரசொல்லி , அகன்ற பாத்திரத்தில் உணவு கொடுக்கும்,இதுதான் கதை!
ஆனால் ஐயா அவர்கள் ‘அது தவறும்மா,அப்படி சொல்லிக்கொடுக்கக் கூடாது .அது பழிவாங்கும் உணர்ச்சியைத் தூண்டும்,மேலும் நம் தமிழர் பண்பாடு அதுவல்ல!எதிரியே வீட்டிற்கு வந்தாலும் வயிறார விருந்து கொடுப்பதுதான் நம் கலாச்சாரம் ,பண்பாடும் என்றார்!நம் பண்பாட்டுக்கு முரணான விசயங்களை முடிந்தவரையில் தவிர்ப்போமே என்றும் ஐயா கூறி,
கதையை இப்படி திருத்தினார்!
நரி கொக்கைத் தன் வீட்டிற்கு அழைத்து வயிறாற விருந்து கொடுத்தது.விருந்துண்ட கொக்கு ,தன் தவற்றை இப்படி நாகரீகமாக சுட்டிக்காட்டிய நரியிடம் , வெட்கி தலைகுனிந்து மன்னிப்பு கேட்டது.


இப்படி சில கதைகளை திருத்தி புதுப்பித்து கூறிவருகிறோம்.
அப்படி திருத்தப்பட்ட 'பாட்டி சொன்ன கதைகள் 'இருந்தால் பகிருங்கள் நட்புக்களே.

4 comments: