Sunday 29 December 2013

’தீட்டு’ என்று சொல்லி திட்டு கிடைத்தது!

          பெண்கள் ருதுவாகும் விசயம் மற்றும் இறப்பு வீடு என்றாலே அது ’தீட்டு’ என்றுதான் வழக்கத்தில் கூறப்படுகிறது.அண்மையில் அடியேன் கலந்துகொண்ட ‘வாழ்வியல் அருளியல்’பயிற்சியில் ‘தீட்டு’என்றும் தீண்டதகாத விசயம் என்று எதுவும் இல்லை.வீட்டு விலக்கு என்பது அந்த காலங்களில் வசதியற்ற நிலையில் நாம் சிக்கிக்கொண்டிருந்த சமயங்களில் பெரியோர்கள் அப்படி சொல்லி பெண்களை ஓய்வெடுக்க வைத்தனர்.
       அதுவே நாளடைவில் வீட்டுக்குத் தூரமாக இருக்கவேண்டும் ஆகிற்று.
அதுபோலவேதான் இறப்பு வீட்டில் இருந்து யாரும் கோவிலுக்கு செல்லக்கூடாது என்றும் அந்த வீட்டில் சுவாமிக்கு விளக்கு போடக்கூடாது என்பதுவும் தவறான விசயம் என்று விளக்கம் இல்லாமல் கடைப்பிடிக்கப்பட்டு வந்த விசயம்.இவை யாவும் முன்பே புத்தகங்களில் படித்தும் செவி வழி கேட்ட ஒன்றுதான் ஆனால் அண்மையில் அடியேனுக்கு கிடைத்த விளக்கங்களும் மற்றும் கேள்வி பதில் அங்கத்தில் பேரூர் ஆதினத்தைச் சார்ந்த இளையபட்டம் மருதாசல அடிகளாரும் ,பேராசிரியர் டாக்டர் ஜெயப்ரகாசமும் கொடுத்த விளக்கத்தினால் ,இங்கே சிலவற்றை பகிர்ந்து கொள்ள முன் வந்துள்ளேன்.
      உடலில் ஏற்படும் பருவ மாற்றத்தை தீட்டு என்று சொல்வது தவறான சொல்லாகும். பழங்காலங்களில் கோவில்கள் சற்று தூரமாகவும் மேலும் பாறைகளாளும் உயரமான மேட்டுப்பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருக்கும்.பெண்கள் மாதவிடாய் காலங்களில் உளரீதியாகவும் உள்ளரீதியாகவும் சோர்வடைத்து போயிருப்பர்.அப்படிட்ப்பட்ட காலங்களில் நெடுந்தூரம் நடந்தோ ,பயணம் செய்தோ கோவில்களுக்கு செல்ல இயலாததால் ,கோவிலுக்கு போகவேண்டாம் ,வீட்டில் ஓர் ஓரமாக இருந்து ஓய்வெடுக்க பணிக்கப்பட்டனார். மேலும் நீர் வசதியும் தற்போதைய நவீன (உள்ளாடைகள்) வசதிகளும் அந்த காலங்களில் இல்லை ஆகவேதான் விசேசங்களிலும் கூட்ட நெரிசல்களிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
       தற்போதைய நவீன வசதிகள் இருக்கும்போது ஏன் இன்னும் அதேப்போன்ற காரணங்களில் சிக்குண்டு கிடக்க வேண்டும் ? இறைவனுக்கு முன்னால் யாரும் விலக்கிவைக்க வேண்டியவர்கள் அல்லர் . அதேப்போலத்தான் இறப்பு வீடுகளில்  சம்பந்தப்பட்டவர்கள் எவரும் ஒருவருடம் கோவிலுக்கு செல்லக்கூடாது என்றும் வீட்டில் பூஜையறையில் விளக்கு ஏற்றக்கூடாது என்றும் தடை செய்யப்படுவதும் தவறான ஒன்றாகும்.பயிற்சியின் போது கேள்வி பதில் அங்கத்தில் மருதாச அடிகளார் அவர்களிடம் ஒரு கேள்வியை முன் வைத்தோம்.
        அதாவது இறப்பு வீட்டில் இருந்து யாரும் ஒரு வருடத்துக்கு கோவிலுக்கு போகக்கூடாது என்றும் விசேச நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளகூடாதாமே? அடிகளார் எங்களிடம் கேட்ட கேள்வி ‘ஒரு வருடம் டிவி பார்க்கவேண்டாம் ,வானொலி கேட்க வேண்டாம் ,உணவில் உப்பு மிளகு சேர்க்க வேண்டாம் ,வேலைக்கு போகவேண்டாம் ,உங்களுக்கு அதிகம் பிடித்த நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம்;என்றெல்லாம் தடை செய்தால் ,அதன்படி நடந்துகொள்வீர்களா? கோவிலுக்கு போகவேண்டாம் ,பூஜையறையில் விளக்கு போடவேண்டாம் என்றால் மட்டும் ரொம்ப மகிழ்ச்சியாய் அதனைப் பின்பற்றும் நாம் மேற்கூறிய விசயங்களைப் பின்பற்றுவோமா? ஆகவே அப்படியெல்லாம் எதுவும் இல்லை.
            சவம் எடுத்துச் செல்லப்பட்டவுடன் வீட்டினைச் சுத்தம் செய்து பூஜையறையில் விளக்கு ஏற்றி திருமுறைப்பாடல்களைப் பாடி வழிபாடு செய்ய .அந்த வீட்டில் இருக்கும் சம்பந்தப்பட்டவர்களின் மனம் நிம்மதியடையும். ஒருவேளை இறப்பு நடந்தவுடன் கோவிலுக்குச் சென்றால் ,நமக்கு அறிமுகம் ஆனவர்களை அங்கே  சந்திக்க நேரிடும் ,மீண்டும் இறப்பு பற்றி விசாரிக்க நேரும்.அது நாம் மறந்திருந்த விசயத்தை மேலும் நமக்கு நினைவூட்டும் என்பதால் வெளியே போகவேண்டாம் என்று சொல்லப்பட்டிருக்கலாம்.
           அதேப்போலத்தான் கர்ப்பமாக இருக்கும் மகளோ மருமகளோ அல்லது நெருங்கிய உறவுப் பெண்களோ ஈமக்காரியங்களில் சாங்கியம் செய்யக்கூடாது என்பதுவும் தவறான விசயமே. கர்ப்பமான பெண்ணின் உடல் நிலை கூட்ட நெரிசலில் நெடுநேரம் நின்றுகொண்டிருக்க முடியாததால் அவர்களை  சாங்கியங்கள் செய்யவேண்டாமென்று தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம். அந்த பெண்ணின் உடல் நிலையை பொருத்து அவளால் முடியும் என்ற பட்சத்தில் அவள் எல்லா சாங்கியங்களையும் தாரளமாக செய்யலாம்,தன் நெருங்கிய உறவுக்கும் அவள் செலுத்தும் இறுதி மரியாதை அதுவே. அதையும் தடைச் செய்யலாமா?
          இப்படி பல்வேறு விசயங்கள் பழக்கத்தில் இருந்து வழக்கத்திற்கு வந்து ,அவைகளுக்கு விளக்கம் அளிக்கப்படாமல் கிடக்கின்றன.ஆகவே  தடை ,ஆகாது ,கூடாது என்று சொல்லும் ஒவ்வொரு செயல்களுக்கும் தகுந்த விளக்கங்களை கொடுத்தால்  நாமும் நாலு விசயம் தெரிந்துகொள்ளலாம்.பிறருக்கு தெரியப்படுத்தலாம்!விளக்கம் கொடுக்காத கேள்விகள்தான் வீண் சர்ச்சைகளுக்கும் சந்தேகங்களுக்கும் நம்மில் பலரை இட்டுச் செல்கிறது!
                                           போற்றியோ நமசிவாய!!!
 

Tuesday 10 December 2013

பெருத்த அவமானம்!


                                                                   

            பிட்சா சாப்பிட ஆசை என பசங்க சொல்ல அழைத்துச் சென்றேன்.பர்சில் நிறைய பணம் வைத்திருந்தேன்(இந்த சம்பவத்துக்கு இந்த விசயம் ரொம்ப முக்கியம்)பொதுவாக kfc சென்றால் பணம் கட்டியவுடன் சாப்பிடுவோம் ஆனால் pizza hut -இல் அப்படி இல்லை.சாப்பிட்டவுடந்தான் பணம் கட்டுவோம். பில்லை மேஜையில் வைத்துவிடுவர் ,பிறகு கட்டவேண்டும்.
          இடையில் ஏதாவது ஆர்டர் செய்தால் பில் கொஞ்சம் தாமதமாக வரும்.வழக்கம்போல சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் பசங்க எக்ஸ்ட்ரா ஆர்டர் செய்ததால் பில் வர தாமதமாகி விட்டது.பசங்களோ நான் சாப்பிடுவதற்குள் அவர்கள் ஐயிட்டத்தை காலி பண்ணிட்டு எதிரே உள்ள கைத்தொலைப்பேசி கடைக்கு ஓடினர்.
         நானும் சாப்பிட்டுவிட்டு வெளியேறினேன்!(பில்லைக் கட்டாமல்????).நான் நடந்து போய் பிள்ளைகளிடம் ,அம்மா போஸ்ட் ஆபிஸ் போகிறேன்’அங்கே வாங்க ‘என்று சொல்லி நகர்ந்தேன்.சில நிமிடங்களில் என் மகள் தலைத்தெறிக்க என் பின்னால் ஓடி வந்து ,’அம்மா பிட்சா பில்லை இன்னும் கட்டவில்லையா?அவள் என்னைத் தேடி வந்து கேட்கிறாள்?என்று பதற்றமாய் மூச்சு வாங்க ஓடி வந்து கேட்க,(மகள் ஏற்கனவே கொஞ்சம் ரிசர்வ் டைப்,இதுபோன்ற விசயங்கள்,அவளுக்கு ரொம்ப கோபத்தை உண்டாக்கும்) ஒரு கணம் சிலையானேன்.
       ’ஐயோ என் வாழ்க்கையில் அப்படி இதுவரையில் நடந்ததே இல்லையே?ஓடினேன்,ஓடினேன் , தலைத்தெறிக்க ஓடினேன்.என்னைப்பார்த்தது அந்த பெண்’ஏன் என்ன அவசரம்? நீ மறந்திருப்பாய் என்பது எனக்கு தெரியும், காரணம் உன் பிள்ளைகளை தைர்யமாக இங்கே விட்டுச் சென்றிருக்கிறாயே,அதனால் நாங்கள் பெரிசு பண்ணிக்கொள்ளவில்லை’என்று சிரித்தவாறு சொன்னாள்.
        ‘ஐயோ பிளிஸ் ,இதோ என் பர்ஸ் ,என்னிடம் பணம் போதுமான அளவு இருக்கிறது’என்று கைகால்கள் உதற பர்சைத் திறந்து காட்டினேன்.உள்ளே இருந்த மானேஜர் சிரித்துக்கொண்டே ’அக்கா ஒன்னும் பயப்படாதே , தப்பு செய்பவர்கள் முகம் எங்களுக்கு நல்லாவே தெரியும்.
        உன் முகம் அப்படி இல்லை,சோ டோண்ட் வெரி ‘என்று கைகுலுக்கினார்.(இப்படி ஒரு தேஜஸ் பொருந்திய முகம் !!!கொடுத்த என் பெற்றோர்களுக்கு பெரிய நன்றி)ஆயிரம் சாரிகளுக்கு பிறகு ,பில்லைக் கட்டினேன்.என் நல்ல நேரம் யாரும் தமிழர்கள் இல்லை,அதிலும் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது.

#மானம் கண்டெய்னர் கணக்கில் கப்பல் ஏறும் கதைதான்,இருந்தாலும் ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் ,இப்படி ஒரு அவசிங்கமான அனுபவம் யாருக்கும் வரவே கூடாது!!!செல்வி நீ ரொம்ப நல்லவ.

Sunday 24 November 2013

பிறப்பு ,இருப்பு ,இறப்பு!

படித்தேன்...வியந்தேன்..... பகிர்கிறேன்!

பிறப்பு ,இருப்பு, இறப்புகளுக்கு உரிய ,பிறப்பில் ஓர் எள் அளவு கூட இன்பம் இல்லை!
பிறப்பில் வரும் 5 துன்பங்கள்:
1)குழந்தை கருவில் இருக்கும்போது,இரண்டு மலை நெருக்குவது போலநெருக்குண்டல்.
2)கடலில் மிதப்பது போல கருப்பப்பை நீரில் மிதத்தல்,
3)இரும்புக்குடத்தில் சூடேற்றுவது போல இரத்தச் சூட்டால் வேதல்,
4)மலையின் மீதிலிருந்து கீழே தள்ளுவது போல பிரசூத வாயுவால் தள்ளப்படுதல்,
5)ஆலையில் இட்ட கரும்பு போல யோனித் துவாரத்தில் நெருக்குண்டு வெளியே வருதல்.

இறப்பில் வரும் துன்பம்;
இறப்பில் வரும் துன்பத்தை இறைவன் மட்டுமே அறிவான்.எனவே அது பிறப்பால் வரும் துன்பம் போல எட்டு மடங்கு என ஓர் அளவையால் சொல்லப்பட்டது.

இருப்பில் வரும் துன்பங்கள் :
குழந்தைப்பருவம்,குமரப்பருவம்,வயோதிகப்பருவம் என மூன்று பருவங்களிலும் அறியாமை ,வியாதிகள்,,பசிநோய்,காமநோய்,செல்வத்தை தேடுதல்,நரை, திரை,மூப்பு என எப்பொழுதும் துன்பமே தவிர இன்பம் இல்லை

பசிநோயும் காமநோயும் குன்மம் எனப்படும் ஒருவகை வயிற்றுவலி போன்றது.அவ்வலிக்கு உவர்மண் நீர் குடித்தால் அப்போதைக்கு அடங்கிப்பின்னர் தோன்றும்.அதுபோல பசியும் காமமும் அருந்துதல் பொருந்துதலால் அப்போதைக்கு அடங்கிப்பின்னர் தோன்றும்.எனவே இவ்விரண்டும் விட்டு ஒழிக்க அரியது என்று அறிக!!



Wednesday 13 November 2013

கவையாகி கொம்பாகி....

            ‘கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவன் நல்மரம்’.   இப்படி 18 வயதில் எங்கள் ஊரில் சபைநடுவே(வகுப்பறையில்)முழுமையாக ஒரு வாக்கியத்தை மும்மொழிகளான தமிழ்மொழி ,மலாய்மொழி மற்றும் ஆங்கிலமொழிகளில் வாசிக்க முடியாமல் முழிப்பதாக திடுக்கிடும்  செய்தி வருடாவருடம் கண்டறியப்படுகிறது. இதில் நம் இன மாணர்வகளும் அடங்குவர் என்ற செய்திதான் நெஞ்சை பிழியவைக்கிறது.
        இடைநிலைப்பள்ளிக்கல்வியை பெரும்பாலும் ஐந்து வருடங்கள் முறையே  பயில்கிறோம். ஐந்தாம் படிவம்(form 5) என்று கூறப்படும்  18 வயதில்  பயிலும் மாணவனுக்கு சரியாக ஒரு வாக்கியத்தை முழுமையாக மும்மொழிகளிலும் நிறுத்தாமல்  வாசிக்க தெரிவதில்லை என்கிற விசயம் மிகுந்த வேதனைக்குரிய விசயம். இதைவிட வருத்தத்துக்குரிய விசயம் அவன் பெற்றோர்களுக்கு வேற எதுவாகவும் இருக்கவே முடியாது!அத்துடன் அவன் பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.இனி முதியோர் கல்வியில்தான் அவன் எழுத  வாசிக்க பழகவேண்டும் என்று சொன்னாலும் அது பொய்யாகி விடாது.
               அதேப்போல சாதாரண கூட்டல், பெருக்கல் கணிதம் கூட செய்யத்தெரிவதில்லை.இந்த தேர்வுதான் மலேசியாவில் ஒவ்வொருவருடைய தலையெழுத்தையும் மாற்றியமைக்கும்.நேர்க்காணலுக்கு சென்றால் குறைந்த பட்சம் இந்த தேர்வில் என்ன கிரேட் ?எடுத்துள்ளோம் என்பதைத்தான் கேட்பார்கள்.அதேப்போல மேற்படிப்புக்குச் செல்ல  இந்த கல்வித்தகுதி மிக மிக அவசியம்.இங்கே எழுதப்படிக்கத் தெரியாவதவனுக்கு, இனி வாழ்க்கை எங்கே தொடங்கும்?

            சரி இந்த பிரச்சனையின் முதல் காரணம் என்னவென்று ,நான்காம் படிவ ஆசிரியரைச் சென்றுக்கேட்டால் ,’நாங்கள் என்ன செய்ய ,மூன்றாம் படிவத்தில் அவனைக் கண்டுகொள்ளாமல் அப்படியே எங்களிடம் அனுப்பினர் என்று பதில் வரும்.சரி மூன்றாம் படிவம் வரை அவன் என்ன செய்தான் என்று கேட்டால் , முதல் படிவத்தில் அவன் சேரும்போதே இப்படித்தானே வந்தான்? பிறகு எப்படி நாங்கள் தட்டி நிமிர்த்துவது?

        அப்படியென்றால் அவன் ஆரம்பள்ளியில் என்னத்த படிச்சித் தொலைச்சான் என்று கோபப்பட மட்டுமே தோணும்.அங்கே போய் கேட்டால், ஒன்றாம் வகுப்பில் சேரும்போது அவனுக்கு ஓர் எழுத்து எண்கள் கூட தெரியாமல்தான் வந்தான்’.அப்படியென்றால் , மழலைக்கல்வி ஆசிரியரிடம் இறங்கி போய் கேட்டால், ’நீங்கள் வேற அவனை எங்களிடம் பேபி சிட்டருக்கு ஆள் இல்லையேன்னுதான் அனுப்பி விட்டாங்க, அவன் எங்களிடம் வரும்போது பென்சில் பிடிக்க தெரியாது, ஏடுகளைத் திருப்பக்கூட அவன் பெற்றோர்கள் பழக்கி கொடுக்கவில்லை?இப்போ புரியுதா ஆப்பு யாருக்கு ரெடியாகிறது?என்று.இறுதியில் பழி பெற்றோர்களின் தலையில் போய் விழுகிறது அல்லது உட்புகுத்தப்படுகிறது!

        ஆமாம் பெற்றோர்களே ,அதிலும் வீட்டில் இருக்கும் தாய்மார்களே, 4 வயது ஆகும் குழந்தைகளை பென்சில் பிடிக்க,எழுத்துக்களை அறிமுகம் செய்ய ஆவன படுத்துங்கள்.”அதான் பணம் கட்டி பள்ளிக்கூடம் அனுப்புகிறோமே ,அங்கே ஆசிரியர்கள் பாடு அவன் பாடு ‘என்று அலட்சியம் செய்யாமல் முடிந்த வரை உங்கள் பங்கினைக் கொஞ்சமாவது அப்ளைப் பண்ணுங்கள்.கருத்தரித்த மூன்றாவது மாதத்தில்(நான் கேட்டவரையில்) குழந்தை கற்க தொடங்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

        ஒரு சாதாரண பாரம் பூர்த்தி செய்யக்கூட  தெரியாமல் நாம் பெற்ற பிள்ளையின் நிலைமை உருவாக நாமும் ஒரு காரணகர்த்தாவாக இருந்திட கூடாது.பல்கலைக்கழகம் வரை பயின்றுதான் முன்னேற வேண்டும் என்று இல்லை,அடிப்படைக்கல்வி அறிந்த ஒரு மனிதனாக சமுதாயத்தில் அவனும் நடமாட நாமும் துணை நிற்போமே!

Thursday 7 November 2013

இல்லை இருபது!



உடையது விளம்பேல்!

(எல்லோரும் தங்களிடம் இருப்பது பற்றி பெருமையாய் பேசுவாங்க!,நாம ஒரு மாறுதலுக்கு இல்லாததைப்பற்றி பேசுவோமே!)


1.முத்து பதித்த நகை எதுவுமே என்னிடம் இல்லை.(அதுக்காக வைரம் பதித்தது இருக்கான்னு கேட்கப்படாது)

2.எனக்கு அறிமுகம் இல்லாதவர்களின்(பெண்களின்)கிசு கிசு கேட்க ஆசையே இல்லை.

3.பிறர் வைத்திருக்கும் பொருள்மேல் மோகம் எப்போதுமே இல்லை.(வாங்க வக்கில்லை)

4.காலேஜ் வாழ்க்கை ரொம்ப ஆசை ஆனால் போனதே இல்லை?(ஒழுங்கா படிச்சிருக்கனும் ?)

5.ஒருபக்கம் விடாமல் ஆங்கில புத்தகம் எதையும் படித்ததே இல்லை( புரிந்தால்தானே படிக்க?)

6.கணவருக்கு தெரியாமல் அவர் பணத்தை செலவு செய்ய மனம் வந்ததே இல்லை(வாய்ப்பு கிடைத்தும்)

7.நட்புக்காக , போன் பில் கணக்கு பார்க்கும் பழக்கம் இல்லவே இல்லை(உள்ளூர் நட்புகளுக்கு மட்டும்)

8.என்னதான் ருசியாகவும் மணமாக இருந்தாலும் பிடிக்காத உணவை டேஸ்ட் பண்ணும் ஆசை வந்ததே இல்லை.

9.காதல் பண்ணிய அனுபவம் இல்லை,நேராக திருமணம்தான்(ராசி இல்லையோ)

10.நகைசுவை உணர்வு இல்லாத நட்புகளோடு கொஞ்ச நேரம் கூட பேசுவது இல்லை.(நான் ரொம்ப ஸ்டிரிக்டு)

11.ஆடம்பர வாழ்க்கைக்கு மனம் ஆசைப்பட்டதே இல்லை(சட்டியில் இருந்தால்தானே?)

12.ஒருநாளைக்கு கூட போனில் பேசாத நாட்களே இல்லை(1990 வீட்டில் போன் வந்தநாள் முதல் இன்று வரை)

13.நான் இல்லாத பட ஆல்பங்களைப்பார்க்கும் பழக்கம் அறவே இல்லை(கட்டாயப்படுத்தினால் மட்டுமே உண்டு)

14.பல வர்ணங்களில் உதட்டுச்சாயம் என்னிடம் இல்லை(ஒரே வர்ணம்தான்)

15.புத்தகம் படிக்க மட்டுமே எப்போதுமே நேரம்‘இல்லை’(முகநூலில் மொக்கைபோட நேரம் சரியா இருக்கு)

16.அன்பு சம்பந்தப்பட்ட விசயங்களில் மட்டும் பொறாமை இல்லாமல் இல்லை.

17.சாப்பிடாமல் உறங்கிய நாட்கள் உண்டு,ஆனால் பேசாமல்(மெளனவிரதம்)இருந்த நாட்களே இல்லை.(இந்தியன் செத்துப்போயிடுவானே?)

18.இதுவரையில் சொத்தைப்பல் இல்லை,பல்வலியும் ஏற்பட்டது இல்லை.(32 பற்களும் வரிசையாக )

19.ஒருக்காலக்கட்டம் வந்தவுடன் அண்ணந்தம்பிகளோடு பேசுவது இல்லை(எல்லோரிடமும் சண்டைன்னா?)

20.பாடல்கள் கேட்காமல் ஒருநாள் கூட கழிந்ததே இல்லை

Sunday 3 November 2013

அத்தை வருவாளா?

அத்தை வருவாளா?

(என் முதல் சிறுகதையை தீபாவளி அன்பளிப்பாக அனைவருக்கும் சமர்பிக்கின்றேன். குறையை என்னிடம் கூறுங்கள்,நிறைகளை உங்கள் நட்புகளிடம் பகிருங்கள்)

              காளியப்பன் அமராவதி குடும்பத்தில்,சிவகாமி  அனைத்து உறவுகளையும் பெற்று பிறந்தவள். ஆம் ,அவளுக்கு முன்பு அக்காள்கள்,அண்ணன்கள் ,அவளுக்கு பிறகு தங்கை தம்பி என்று எல்லா உறவுகளும் அவளுக்கு மட்டும் அந்த குடும்பத்தில் கிடைக்கப்பெற்று பிறந்தவள்.கொஞ்சம் சுட்டி ,வாய் துணுக்கு ,நியாயம் என்று வந்தாள் எப்பேர்பட்ட பெரிய இடமானாலும் சண்டைப்போடுபவள் .சிவகாமியின் தந்தை வெகு சீக்கிரமே இவ்வுலகை விட்டுப்பிரிந்தார்.

                தன் பெற்றோர்களையும் உடன் பிறப்புகளையும் யாராவது ஏதும் சொல்லிவிட்டாள் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு போகும் சுபாவம் கொண்டவள் சிவகாமி.அவள் உடன்பிறப்புகளோடு எப்படியும் சண்டை செய்து கொள்வாள் ஆனால் பிறர் பேச விட்டுக்கொடுக்கமாட்டாள்.ஆயிரம் உறவுகள் இருந்தாலும் தன் உடன்பிறப்புகள் ஒருவர் இல்லாவிட்டாலும் ,அது எத்தனைப் பெரிய நிகழ்ச்சியானாலும் போகமாட்டாள்.’என் பெற்றோர்களையும் உடன்பிறப்புகளையும் மதிக்காத வீட்டுக்கு நான் ஏன் போகவேண்டும்?’என்று கோவித்துக்கொள்வாள்.அதனால் பல உறவுகளைப் பகைத்துக்கொண்டவள்.

              சிவகாமிக்கு திருமண வயது வந்தது. அவ்வளவு சீக்கிரம் எந்த வரனும் அமைந்த பாடில்லை.சிவகாமியும் அவ அம்மாவிடம் ‘முதலில் அண்ணாவுக்கு முடித்துவையுங்கள்,எனக்கு பிறகு பார்க்கலாம்’என்றாள்.காரணம் அவ அன்ணனுக்கு பார்த்த பெண்ணுக்கும் சிவகாமிக்கும் ஒத்த வயது ,அந்த பெண்ணுக்கும் வயது ஓடிக்கொண்டிருக்கே?அவளின் மூத்த அண்ணன் கரிகாலன்.

             கரிகாலனுக்கு திருமணம் ஆனது.கூட்டுக்குடும்பமாய்  வாழ்ந்துவந்த இடத்தில் பிரச்சனையைக் கொண்டு வந்து சேர்த்தாள் கரிகாலனின் மனைவி புவனா. மாமியாரை எதிர்க்க முடிந்தவளால் ,நாத்தனாரை எதிர்க்க முடியவில்லை.சிவகாமி அண்ணிக்கு கொடுத்த மரியாதையை மீண்டும் பிடுங்கிக்கொண்டாள் .ஹ்ம்ம்ம் அண்ணியோடு சண்டைப்போட்டாள். கரிகாலன் அவன் மனைவி பக்கம் பேசுவது, வழக்கமான ஒன்றுதானே!
அவன் எப்போதும் படிச்ச முட்டாள் போலவே பேசுபவன்.சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசுவான் ,பிறகு வருந்துவான்.

            ஆனாலும் சிவகாமியின் மேல் அவனுக்கு அடக்கமுடியாத கோபம் காரணம் சிவகாமி நியாயமாக பேசுபவள் , சிலவிசயங்களில் கரிகாலன் செய்யும் தவறுகளையும் சுட்டிக்காட்டினாள் சிவகாமி. சில சமயங்களில் புவனா ,’என் வயதுதான் உனக்கும் ஆனால் இன்னும் திருமணம் ஆகாமல் கிடைக்கிறாய்,இதுதான் உனக்கு சாபம் ‘என்று கூட கஷ்டப்படுத்துவாள்,ஆனால்  சிவகாமி எதற்கும் செவி சாய்க்காமல் நாட்களை ஓட்டினாள்.எது எப்படியோ தன் அண்ணன் மற்றும் அக்காள்கள் வீட்டுப்பிள்ளைகளை தன் பிள்ளைகளைப்போல பாசம் வைத்து பாவிப்பாள்.

                 அவளுக்கும் வரன் வந்து திருமணம் செய்து கொண்டு புகுந்த வீடு போனாள். அண்ணன் அண்ணியிடம் உள்ள கோபம் எல்லாம் மறந்து அடிக்கடி அம்மா வீட்டுக்கு வந்து போவாள்.காலங்கள் ஓடின .சிவகாமியும் தாயானாள்.வருடா வருடம் தீபாவளி தன் பிறந்த வீட்டில்தான் கொண்டாடுவாள். அவள் கணவனுக்கு பெற்றோர்கள் இல்லை,ஆகவே அவனும் சிவகாமியின் தாய் வீட்டிற்கே செல்ல ஆசைப்படுவான்.கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்த அவளுக்கு தனிமை என்பது ஒத்துவராத விசயம் .

                     அதுவும் பண்டிகை பெருநாட்கள் என்றால் ,சாமான் சட்டிகளைக்கட்டிக்கொண்டு அவள் தாய் வீடு அல்லது கணவனின் உடன்பிறப்பு வீடு என்று போய்விடுவாள் .வருடா வருடம் தீபாவளி மட்டும் அவள் அம்மா வீட்டில்தான் இருப்பாள்.இரண்டு நாட்கள் கழித்துதான் கணவன் அவன் உறவினர் வீட்டுக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.அரேஞ்ச் மேரேஜ் என்பதால் சிவகாமிக்கும் அவள் கணவனுக்கும் அடிக்கடி ஒத்துப்போகமுடியாமல் போகும் ஆனால் சிவகாமி ரொம்பவே விட்டுக்கொடுத்து போவாள்.அது அவள் வளர்க்கப்பட்ட முறை,கூட்டுக்குடும்பத்தில் கற்றுக்கொண்ட பாடம்.

                   சமாளிக்க வேண்டியதை சமாளித்து வந்தாள். ஒருமுறை ஏதோ பிரச்சனையால் அவ கணவனோடு ஏதோ பெரிய சண்டை போட்டாள். அவள் அம்மா வீட்டில் போய் முறையிட்டாள். வழக்கம்போல அவ அம்மா ‘சின்ன சின்ன பிரச்சனைகளையெல்லாம் இங்கே கொண்டு வந்து பிரச்சாரம் பண்ணாதே, நாங்கள் எதுவும் கேட்கப்போவது இல்லை’வாழ்க்கையில் எல்லாம் சகஜம்’என்று அதை சீரியசாகவே எடுத்துக்கொள்ளவில்லை.

                     விசயம் அவ அண்ணன் கரிகாலனின் காதுக்கு போனது. பழைய காட்டத்தையெல்லாம் மனசில் வைத்துக்கொண்டிருந்த கரிகாலன் இதுதான் சமயம் என்று வசை பாட ஆரம்பித்தான்.எதையோ பேசப்போய் வாய் தவறி ‘ஆமாம் கல்யாணம் ஆகும் முன்னே என்னையும் என் மனைவியையும் என்னமாதிரி பேசினா? இப்போ அனுபவிக்கிறாள், நல்லா அனுபவிக்கட்டும். இது அவளுக்கு நல்ல பாடம் ,இன்னும் அழுவட்டும் ,என்று அதோடு  நிறுத்தாமல் சிவகாமியின் கணவனிடமே ‘அவளுக்கும் வாய் கொஞ்சம் அதிகம்தான்,அது எங்களுக்கு தெரியும் , நீங்கதான் கொஞ்சம் தட்டி வைக்கணும் ‘என்றும் பழையை பகையை வைத்து போட்டுக்கொடுத்தான்.ஆனால் பின் விளைவுகளை யோசிக்காமல் பேசினான் .என்னம்மோ என் மனைவி கூட வம்புக்கு வந்தாள்,இப்போ தெரியுதா? குடும்பம் என்றால் என்னவெல்லாம் பிரச்சனை வரும் ‘என்று.

                    சிவகாமியின் கணவனுக்கு இது ஒன்னு போதுமே? உன் அண்ணனே உன் வாய் அதிகம் என்று சொல்கிறார்.முடிந்தால் உன்னை ரெண்டு போட்டு அடக்கி வைக்க சொன்னார்’என்றான் .சிவகாமிக்கு ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவள் நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்தது. ஏமாற்றமும் கோபமும் அவ கண்ணை மறைத்தது ,போனை எடுத்தால் ,கண்முடித்தனமாய் குறுந்தகவலை டைப் பண்ணினாள்.அதில் ‘இனி உன் வீட்டு வாசலை நான் மிதிக்கபோவதில்லை, இதுவரை என்னை வரவேற்று உபசரித்து உனக்கும் உன் மனைவிக்கும் நன்றி. அம்மாவின் மரணத்திற்கு மட்டுமே உன் வீட்டு வாசலை மிதிப்பேன்’என்று அனுப்பினாள். ஏமாற்றம்தான் அவளை அப்படி செயல்பட வைத்தது.

                    மறு கணம் கரிகாலன் ஆடிப்போனான். வருந்தினான். உடன்பிறப்புகள் அனைவரிடமும் காட்டி ‘நான் எதுக்கு சொன்னேன்,அவ இப்படி எடுத்துக்கொண்டாளே? என்ன சின்னைப்பிள்ளைத்தனம் ? இது அவள் பிறந்த வீடு, அவளை நான் வரவேண்டாம்’என்று சொன்னேனா ?என்றெல்லாம் உளறினான்.இதுவெல்லாம் அவனுக்கு வாடிக்கையான விசயம் .பேசுவதும் பிறகு வருந்துவதும் ஆகவே கரிகாலனின் மற்ற உடன்பிறப்புகளுக்கு இது பெரிய விசயமாய் படவில்லை.

                     இந்த வருடம் தீபாவளியும் நெருங்கியது , சிவகாமியின் தாய் வீட்டில் களைக் கட்டியது. ஆரவாரமாய் ஆர்ப்பாட்டமாய் எல்லாம் தயாரானது. சாயம் அடித்தல் பலகாரம் சுடுதல்.புத்தாடைகள் என்று ஆர்ப்பாட்டம். இன்னும் இரண்டே நாட்கள் , தடபுடலாய் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. விடிந்தால் தீபாவளி. குதூகலமாய் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த வேளையில் கரிகாலனின் மகள் ஆதிரை ‘அப்பா வருசா வருசம் அத்தை வருவாங்க.நம் வீடே களை கட்டும். இந்த வருசம் அத்தை வருவாங்களா அப்பா?

          ’ஆயிரம் பேர் இருந்தாலும் ,உங்களை மதிக்காத ஒரு விருந்து என்றால் அத்தை அந்த வீட்டு வாசலைக்கூட மிதிக்க மாட்டாங்க அப்பா. எது எப்படியோ உங்களை விட்டுக்கொடுக்காமல் மத்தவங்க கிட்டே பேசுவாங்க ஆனால் அவுங்கள வீட்டுக்கு அழைக்கனும் என்று தோணலையா அப்பா? அப்படி என்ன அத்தை தப்பா பேசினாங்க? நீங்கள் சொன்ன சொல்லுக்கு பதில் கொடுத்தாங்க,எனக்கு என்னம்மோ நீங்கள் செய்வது சரியாக படவில்லை அப்பா.அத்தை இல்லாத தீபாவளியா?நினைச்சிக்கூட பார்க்க முடியவில்லையே என்றாள். (அவள் அப்படி பேசியதில் சுயநலமும் உண்டு.ஆம் சிவகாமியின் மகளும் கரிகாலனின் மகளும் நெருங்கிய தோழிகள் போல. தோழி வராமல் தீபாவளியா?என்றுதான் அவ வருத்தம் ).

                      அதை அப்படியே அத்தை மேல் பாசம் போல கொட்டினாள்.
மனசில் வரட்டுக்கெளரவம் இருந்தாலும் மகளின் சொற்கள் அம்பாய் அவன் மனதைக் குத்தின. கரிகாலன் ‘ச்சே தப்பு பண்ணிட்டோமே’போனை எடுத்தான் , ஏதோ எண்களை டயல் செய்தான் . ஸ்கிரினில் ‘சிவகாமி’என்று காட்டியதை அவன் மகள் ஓரக்கண்ணில் பார்த்து மகிழ்ந்தாள்......அத்தை வருவாளா?

முற்றும்...                                

Wednesday 30 October 2013

அசுரர்களும் வதங்களும்!

                           பொதுவாக நம் இந்துக்களின் பண்டிகை மற்றும் பெருநாட்கள் அனைத்திலும் ஏதாவது ஓர் அசுரனைக் கொல்லும் விழா இருக்கும்!நவராத்திரியில் மஹிசாசுரன் வதம், கந்த சஷ்டியில் சூரனை சம்ஹாரம் செய்யும் படலம் ,தீபாவளியில் நரகாசுரன் வதம், விநாயக சதுர்த்தியில் கஜாமுக அசுரன் வதம் என்று இன்னும் பல உண்டு!
                                                             
      அசுரன் என்பவன் மனிதன் தான் ,அவனைக்கொன்று அது ஒரு விழாவா?என்று ஒரு சாரார் கேட்கும் கேள்விகளுக்கு என்ன சொல்லலாம் ? தீய குணங்களான அசுர குணத்தை, நம் உள்ளத்தில் இருந்து அழித்தால், நீக்கினால் ,அந்த தினம் யாவுமே நமக்கு திருநாள் ,பெருநாள் ,பண்டிகை நாள் என்பதுதான் அவைகளின் நீதி!

            தீபாவளிக்கு பட்பல கதைகள் உண்டு.தாமோதரனை அன்னை யசோதா கயிற்றில் கட்டிய நாள், இராமன் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய நாள், கண்ணன் நரகாசுரனை கொன்ற நாள் என்று இன்னும் எத்தனையோ புராணங்கள் சொல்வதுண்டு.எது எப்படியோ இருள் நீங்கி,தீமைகள் விலகி, அசுர குணம் கொண்ட உள்ளத்தை தெளிய வைக்கும் திருநாள்தான் தீப ஒளி திருநாள். பட்டாசு கொளுத்தும் பழக்கம் சீனர்களிடம் இருந்து நாங்கள்(மலேசியாவில்)’காப்பி பேஸ்ட்’ பண்ணிக்கொண்டோம்!அதுதான் உண்மை,அதுக்கும் விளக்கம் கேட்டால்,பின்னே எங்கே போவது?      


            ஒன்பது நாட்கள், ஊசி முனையில் அம்பாள் தவம் இருந்து பலம் பெற்று மகிசாசுரனை வதம் செய்ய புறப்படுகிறாள் என்று கதையாக சொன்னால், அந்த காலத்தில் பயபக்தியாக அம்பாளை விரதமிருந்து வழிபடுவார்கள்.அந்த ஒன்பது நாட்கள் பெண்கள், பெண் தெய்வமான அம்பாளை வழிபட ஒரு ஐடியா. பெண்குலத்தை மதிக்கவும் மரியாதை செய்யவும் அந்த கதை சொல்லப்பட்டிருக்கலாம்.சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல பெண் பொங்கி எழுந்தால் அவளுக்கும் கோபம் வரும் ,அசுரனையே வெல்லும் பலமும் வரும்,வரலாம் என்பதுக்காக ஓர் உதாரணம்!அதுக்காக பெண்களெல்லாம் ஊசி மேல் உட்கார்ந்து தவம் செய்ய முடியுமா? லாஜிக் இருக்கா?
                                                                 

        ராமாயணத்தில் பத்து தலை இராவணன் வருவான். அவனை இராமன் வதம் செய்வதாக புராணம்!பத்து தலை உள்ள மனிதனுக்கு சளிப்பிடித்தால் ,அவன் முகத்தில் உள்ள பத்து மூக்குகளையும் ஒரே நேரத்தில் எப்படி ‘கர்சீப்’கொண்டு துடைப்பான் ?’என்று  யாரோ ஓர் அறிஞர் கிண்டலாய் கேட்டதாக எங்கோ படித்த ஞாபகம்! பத்து தலை என்பதை பத்து தீய குணங்களாக வர்ணிக்கின்றனர் . அதை வென்று வெற்றியடைகிறான் இராமன்.அதுமட்டுமின்றி (சில)தவிர்க்க முடியாதபிரச்சனைக் களைய உற்றார் உறவுகள் ,உடன்பிறப்புகள் நட்புகள் அனைவரும் அவசியம் என்பதை உணர்த்தவே  இலட்சுமணன்,சுக்ரீவன் ,ஜடாயு,வாலி, மற்றும் குகன் போன்ற பாத்திரங்கள்.அனைத்தையும் நம்ப வேண்டாம் ,வேண்டிய விசயங்களை எடுத்துக்கொள்வோமே!
                                                                 
             கந்த சஷ்டி ஆறு நாட்கள் விரதம்.ஆறாவது நாள் சூரனை வதம் செய்ய முருகன் புறப்படுகிறார் என்பது புராணம். ’சட்டியில் இருந்தால் ஆப்பையில் வரும்’ என்பது சஷ்டி எனும் நாளில் விரதம் இருப்பது,இடைவிடாது இறைவனை தியானிப்பது போன்றவை  அகம் என்னும் உள்ளத்தில்(பையில்) நன்மைகளைக் கொண்டு வரும் என்பதனை  விளக்குவதை நாம் அறிவோம்! எப்படி இந்த பழமொழி மாறிவிட்டதோ,அதுபோலத்தான் புராணங்கள் சொல்லும் உட்கருத்து அல்லது நீதியும் தற்போது மாறி வருகின்றன!
                                                     

                    கஜாமுக அசுரனை அழிக்க ‘ஓம்’என்ற பிரணவ மந்திரத்தில் இருந்து உருவான விநாகயபெருமான், அதே முகம் கொண்டு உருவெடுக்கிறார். அசுரனை அழிக்க தன் தந்தத்தை உடைக்கிறார்(மஹாபாரதம் வியாசர் கூற ,விநாயகர் எழுத தன் தந்தத்தை உடைத்த கதையும் சொல்லக்கேட்டுள்ளேன்). அசுரன் சினிமாவில் வரும் வில்லனைப்போல உடனடியாக மாறி ,உன் காலடியில் ‘எலியாக’கிடக்கிறேன்’என்று சொல்வதாக விநாயக சதூர்த்திக்கு ஒரு புராணம் உண்டு. என்னை அழிக்க கூடியவன் மனிதனாக இருக்ககூடாது ,மிருகமாக இருக்ககூடாது,என்னைப்போல அசுரனாக இருக்ககூடாது’என்று சிவபெருமானிடம் அசுரன் தவம் கேட்கிறான்.கொடுத்த சிவபெருமான் , முழிக்கிறாராம்??(பரம்பொருளுக்கே சோதனையா/) உடனே விநாயகர் இப்படி உருவெடுக்கிறார்,அதாவது முகம் மிருகமாக, உடல் அசுரனைப்போல, கால்கள் மனிதனைப்போல (மனிதன் பாதி ,மிருகம் பாதி கலந்து செய்த கலவைப்போல)!                                                 

                 பண்டிகைகள் என்பது நாம் இறைவனை வழிபடவும் ,உறவுகளோடு கூடி இருக்கவே என்பதைத்தான் உணர்த்திச் செல்கிறதே ஒழிய, அசுரன் இறந்ததை ஒரு பெருநாளாக ,மகிழ்ச்சியாக கொண்டாடுகிறீர்களா?என்ற கேள்விகளெல்லாம் வீண் விதண்டாவாதம்?
                                                            

              வேற்று மதத்தைச் சார்ந்த என் தோழி ஒருமுறை என்னிடம்’உங்கள் (சைவ சமயத்தில்) 365 நாட்களும் பண்டிகையா?அந்த ராத்தி ,இந்த ராத்திரி,அந்த பூசம் ,இந்த நட்சத்திரம் ‘என்று கிண்டலாய்ச் சொன்னாள்.(பாவம் விசயம் புரியாதவள்? )விளக்குவது நம் கடமை!நாம் கற்றைதைச் சொல்வோமே,என்று சொன்னேன். ‘கண்டதையும் தின்பதுவும் ,வெந்ததையெல்லாம் தின்பதுவும் என்றில்லாமல் ‘ஒரு சில விதிமுறைகளை வரையறுத்து ,குறிப்பிட்ட காலத்தில் இப்படி செய்ய வேண்டும் .மேலும்  ஒவ்வொரு நாளும் இறைவனை நினைக்கவும் பிரார்த்திக்கவும்தான் இத்தனை விழாக்கள்,பண்டிகைகள்’என்றேன்.மன்னிப்புக் கேட்டாள். மன்னித்தேன்.மறந்தேன்! 

**உண்மையில் இப்படி ஒரு பதிவை எழுதவேண்டும் என்று நினைக்கவே இல்லை.நண்பரின் முகநூலில் ‘நரகாசுரன் தமிழன்,ஆகவே அவனை அழித்த தினமாக தீபாவளியை வடநாட்டினர் கொண்டாடுவதாக படித்தேன்.உடனே எழுதினேன்.இதனால் பல இலக்கியவாதிகளும் புரட்சியாளர்களும் ‘உங்களுக்கு புராணம் ,இதிகாசமெல்லாம்’என்ன தெரியும் ,ஏது தெரியும்?என்று சண்டைக்கு வரப்போகிறார்கள்.     

          என் அறிவுக்கு எட்டிய ஒரு சில விசயங்களைப் பகிர்ந்துள்ளேன். என் மாணவ செல்வங்களுக்கும் இதைத்தான் ஓவ்வொரு விழா கொண்டாடும்வேளையில் கதையாக கூறி இறுதியில் உட்கருத்தை புகுத்துவோம்.ஆகவே விசயம் தெரிந்தவர்கள் அமைதி காக்கலாம்,தெரியாதவர்கள் உட்கருத்துக்களையும் ,விசயங்களையும் பிறரோடு பகிரலாமே? எதோ ரொம்ப 'அறிவாளித்தனமாய்' எழுதியதாக கருதவேண்டாம் நட்புக்களே!

Tuesday 29 October 2013

ஏழையின் தீபாவளி !


அந்த ஒருநாள் மட்டுமே...

வீட்டின் சமையலறையில்,
கோழிக்கறி,
ஆட்டுக்கறி,
அவித்த முட்டை,

(அ.ஒ.நா)
சீடை ,முறுக்கு,அதிரசம்,
என்றுமே இல்லாத இனிப்புகள்,

(அ.ஒ.நா)
சண்டைப்போடும் அப்பா உறவினர்
வீட்டுக்கு வந்து போவது,

(அ.ஒ.நா)
பக்கத்துவீட்டு பங்களா வீட்டில்
கொடுக்கும் ‘கொஞ்சம்’நல்ல உடைகள்,

(அ.ஒ.நா)
முன் வீட்டு எஜமானியம்மா
கொடுக்கும் இட்லியும் இடியாப்பமும்,

(அ.ஒ.நா)
காலை உணவாக
அம்மா சுடும் தோசை,
மட்டன் குழம்பு,

(அ.ஒ.நா)
பணக்கார்கள் கொடுக்க முன்வருவது,
ஏழைகள் பலர் கண்ணில் படுவதுவும்

(அ.ஒ.நா)
எங்களுக்கு காசு கிடைப்பதுவும்,
திண்பண்டங்கள் திகட்டிப்போவதும்,


(அ.ஒ.நா)
பணக்காரன் வீட்டில்,
பாத்திரம் கழுவும் தொழிலுக்கு
அம்மா விடுமுறைப்போட்டு
வீட்டில் இருப்பது,

(அ.ஒ.நா)
முரட்டு மாமா வீட்டில்
டிவி பார்க்க அனுமதி கொடுப்பது,

(அ.ஒ.நா)
அம்மாவுக்கு கோபம் தராத,
அப்பாவின் குடிபோதை

(அ.ஒ.நா)
ஷோ கேசில் இருக்கும்,
கண்ணாடி பாத்திரத்தில்
சாப்பாடு கிடைக்கும்,

(அ.ஒ.நா)
வீட்டில் எவ்வளவு  வேலைக்கொடுத்தாலும்
எங்களுக்கு சலிப்பே வராது,

(அ.ஒ.நா)
யாரும் சொல்லாமல்
நாங்கள் வேலையைச் செய்வோம்!
...................................................................................................................................................................
                                       அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..
                                                                                                                                                                 















Sunday 20 October 2013

திருச்சியை நோக்கி எங்கள் பயணம்!

             கடந்த மாதம் திடிரென ஓர் அழைப்பு.மறுமுனையில் என் அக்கா ‘ஹலோ அடுத்த மாதம் திருச்சிக்கு ஃப்ரி டிக்கெட் இருக்கு,மாமாவுக்கு ஆஃப்பர் கிடச்சிருக்கு, மிக குறைந்த சீட்கள் மட்டுமே உண்டு ,சீக்கிரம் சொல் வருகிறாயா? சீக்கிரம் ,சீக்கிரம் , தாமதம் ஆனால் வேற ஆள் போட்டிருவாங்க ‘என்று அவசரப்படுத்தினார்கள் கணவன் மனைவி சகிதம்.’சரி இரு தேதி பார்க்கனும் ‘என்று முடிப்பதற்குள் ‘ஐயோ ஹாஜ் பெருநாள் லீவுலதான்.வெள்ளிக்கிழமைப்போய் அடுத்த பொதுவிடுமுறையில் வரவேண்டியதுதான்’என்று டிடெய்லுடன் என் சம்மதத்துக்கு ஆளாய்ப்பறந்தனர்.’சரி அப்படின்னா போடு’என்றேன்.மறுபடியும் போன் ‘பத்து பேருக்கு கிடைச்ச வாய்ப்பில் ஐந்து பேர் மட்டுமே நுழைய முடிந்தது,நல்லவேளை நீ உடனே ஓகே சொன்னாய்’ என்றார் அக்கா.                                                                                    



              கையில் பணம் இருக்கா?என்று கூட யோசிக்கவில்லை,ஆனால் ஓகே சொல்லியாச்சே?என்று கொஞ்சம் தயங்கினேன்.ஆனாலும் மனதில் ஒரு ஆறுதல் இருந்தது அதாவது தமிழ்நாடு போகனும் என்றால் நேரமும் பணமும் எப்படியும் கிடைக்கும். கிடைத்தது !.எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே கணவர்  பணம் கொடுத்தார்.நான் திட்டமிட்ட பணத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு மற்றவற்றை வங்கியில் போட்டுவிட்டு கிளம்பினேன்.11/10/13 வெள்ளிக்கிழமை மாலை மணி 4 க்கு விமானத்தில் இருக்கனும். காலையில் ஆரவாரமாய் பள்ளியில் சரஸ்வதி பூஜை செய்துவிட்டு ,ஆர்ப்பாட்டமாய் மதியம் 12 மணிக்கெல்லாம் அம்மா, அக்காள்கள் ,அண்ணி ,மாமா என்று ஆறு பேர் வி.நிலையம் சென்றடைந்தோம்.
                                                                                       
              எல்லோர் லக்கேஜ்களிலும் ஏதோ ஓர் அடையாளமாக ரிப்பன் எல்லாம் கட்டியிருந்தார்கள் ,என் லக்கேஜ்ஜில் மட்டும் இல்லை.மாமா ‘எப்படி உன் லக்கேஜ்ஜை கண்டு பிடிப்பாய் ?என்றார்.பின்னால் திருப்பி லக்கேஜ்ஜின் கீழே லேசாய் கிழிந்தும் ,மேலும் நான்கு டயர்களில் இரண்டு காணாமற்போயிருக்கு’அதுதான் அடையாளம் என்றேன். நாயகன் பட டியூனில் எல்லோரும் பரிதாபப்படுவார்கள் என்று நினைத்தது என் தவறுதான்/எல்லோரும் கோரசாக ‘ஆனை வாங்க காசு இருக்காம் ,சவுக்கு வாங்க காசு இல்லை,வருசா வருசம் ஊர் சுத்த கிளம்புகிறாய் ,ஆனால் ஒரு லக்கேஜ் வாங்க முடியாது’இப்படியெல்லாம் சொல்லி சிம்பதி கிரியேட் பண்ணாதே?என்று கிண்டலாய் அண்ணி சொல்ல,எனக்கு கோபமே வரலையாம்!அதானே உண்மை!                                                                          
                                                                                           


              சுமார் ஏழெட்டு முறை தமிழ்நாடு போய்விட்டதால் அப்படி ஒரு பதற்றமும் இல்லை.எல்லா பரிசோதனைக்கூடங்களிலும் முன்னேறி போய் ‘duty free' கடையில் வழக்கம் போல் நல்ல மணம் உள்ள பெர்ஃபியூம்களை ஓசியில் டெஸ்டிங் என்ற பெயரில் தடவிக்கொண்டோம் ஆனால் வாங்கவில்லை!அம்புட்டு விலைப்போட்டால்? “நான்சென்ஸ் ஃபெல்லாவ்ஸ்”.அப்படி இப்படி என்று  மாலை மணி மூன்று முப்பதுக்கு விமானத்தின் உள்ளே நுழைந்தோம்.மணி 4.30 ஆகியது ,விமானம் கிளம்பவில்லை.வழக்கம் போல்,எப்போதும்போல், as usual விமானம் தாமதம்!ஹ்ம்ம் தமிழர்கள் கூடி இருக்கும் இடம் என்றால் தாமதமும் ஒட்டிக்கொள்ளுமோ?விமானியும் தன் திறமையால் ‘பயணிகளே என்ன கோளாறோ தெரியவில்லை ,ஐந்து நிமிடம் ஆகலாம் ,அரை மணி நேரம் ஆகலாம் ‘என்று கூறி கூறி வெற்றிகரமாய் ஒருமணி நேரம் ஆனது.(ஆனால் ஓர் உண்மை, நான் சென்ற ஏர் ஆசியா  இதுவே  முதன்முறையாக தாமதமாக கிளம்பியது )
                                                                                                 


                அன்னை திரேசா ஒருமுறை விமானம் தாமதமாக கிளம்பும் ‘என்று கேள்விப்பட்டதும் ‘சரி காலையில் நான் ஜெபம் செய்யவில்லை,இந்த நேரத்தைப் பயன்படுத்தி தியானம் செய்கிறேன் ,நான் அந்த தாமதமான காரணத்துக்கு நன்றி  சொல்லனும்’என்று சொன்னதுபோல நாமும்  பெருந்தன்மையாய்  நடந்துகொள்ள முடியுமா?அதுக்கெல்லாம் ஒரு தகுதி இருக்கனுமே?சரி வழக்கம் போல என் ஹாபியாக ,  மொபைலில் பாடல்கள் கேட்க தொடங்கினேன்.பயணத்தில் நான் அதிகம் வெறுக்கும் பயணம் விமானப் பயணமே!ஆமாம் கார் ,பேருந்து என்றால் கொஞ்சம் வெளியே போய் இளைப்பாறி வரலாம்,இங்கே முடியுமா?அவசரத்தில் போனதால் புத்தகங்களும் எடுத்துப்போகவில்லை.    
                                                                             


                      ’சரி நம் பக்கத்தில் ஓர் இந்தியர் இருக்கிறார்,ஆள் பார்த்தால் நல்லா டிப்டாப்பாக இருந்தார்,ஏதும் புத்தகம் இருந்தால் வெட்கத்தை  விட்டு கேட்கலாம்’ என்ற முடிவில் இருந்தேன். ஆனால் அதிர்ச்சியை மட்டுமே கொடுத்தார்.வேற என்ன? ஓர் ஆங்கில புத்தகம் ,அதுவும் என்ன தலைப்புன்னு கூட புரியாத புத்தகத்தை திறந்து ரொம்ப ஆர்வமாய் படிக்க தொடங்கினார். நமக்கு ஒத்து வராத டிபார்ட்மெண்ட் என்று முகத்தை அந்தப்பக்கம் திருப்பிக்கொண்டேன்.பின்னால் அக்காள் ,அண்ணி ,அம்மா எல்லோரும் உறங்கினார்கள் ,ஐயோ எனக்கு அதிகம் கோபம் வரும் விசயம் என்னோடு பயணிப்பவர்கள் உறங்குவது?காரணம் என்னால் எந்த வண்டியில் பயணம் செய்தாலும் பத்து நிமிடத்துக்கு மேல் உறங்கவே முடியாது?என்ன சாபமோ? 
                                                                                           


          சரி மீண்டும் பக்கத்து ஆங்கில புத்தக ஓனர் ,ஏதோ பை பிரிக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன். ஆஹா ,ஏதோ பிஸ்கட் பொட்டலம் ,’அப்பாடா கண்டிப்பாக நம்மிடம் ’வேண்டுமா?என்று கேட்பார் போல என்று நானே கற்பனைப் பண்ணிக்கொண்டு கண்டும் காணாதது போல திரும்பி கொண்டேன்!அட தெய்வமே!மனுசன் பொட்டலத்தைப் பிரிச்சி சில நிமிடங்களில் சாப்பிட்டு விட்டு குப்பையையும் வீசினார்.’இன்றைக்கு நான் எது மூஞ்சியில முழிச்சேனோ? அவசர அவசரமாய் வந்ததால் எதுவும் வாங்கவில்லை, எதுவும் எடுத்தும் போகவில்லை சோ என் வேகம் எனக்கு  சோகம்!                                                                                            


            பணம் எல்லாம் மாமாவிடம் கொடுத்து வைத்திருந்ததால் ,அவரை தொந்தரவு பண்ண வேண்டாம்’என்று அமைதியாய் இருந்தேன்.கொஞ்ச நேரம் கழித்து பின்னால் திரும்பி அக்காளையும் அண்ணியையும் எழுப்பிவிட்டேன்.இன்னும் அரைமணி நேரம் எழுந்திருங்கள் ‘என்று . சில நிமிடங்களில் விமானியின் குரல் ‘பயணிகளே இன்னும் பத்து நிமிடங்களில் நாம் தரையிறங்க உள்ளோம்....திருச்சி உள்ளூர் நேரம் , விமானம் எத்தனை கிலோமீட்டர் தொலைவில்’என்ற தகவல்களுடன்.’அப்பாடா! ,எல்லோர் முகத்திலும் ஒரு புத்துணர்ச்சி. அருகில் இருந்த ஆங்கில ஓனர் மெதுவாய் சிரித்தார்.
‘பயணிகளே வெற்றிகரமாய் தரையிறங்கினோம்,மீண்டும் ஒருமணி நேரம் தாமதத்துக்கு...’என்று இழுத்தார்.’அடடா ஏதும் கொடுப்பாங்களோ?என்று எதிர்பார்த்தால் ‘மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
                                                                                          

            எது எப்படியோ நல்லபடியா கொண்டு வந்த சேர்ந்த புண்ணியவானுக்கும் இறைவனுக்கும்  நன்றி சொல்லி இறங்கினோம். விமான நிலையத்தில் நம்மை வரவேற்க டிரைவர் காத்திருப்பார் என்று எதிர்பார்த்து போன இடத்திலும் ஏமாற்றம் .தம்பி கொஞ்சம் தாமதமாய் வந்தார்.அந்த இடைவேளையில் அங்கே நடந்துகொண்டிருந்து சில கூத்துகளையும் கொடுமைகளையும் கொடூர பசியிலும்  ரசிக்க முடிந்தது.டெம்போ வந்தது. ’வண்டியை முதலில் சங்கீதா ஹோட்டலுக்கு விடுங்க,சாப்பிடனும்’மாமாவின் கட்டளை!
               இவ்வேளையில் எங்கள் ஊர் ஏர் ஆசியாவுக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கோம்.ஒருக்காலம் தமிழ்நாடு போவதென்றால் மிகவும் அரிது.உண்மையிலே வசதி படைத்தவர்கள் மட்டுமே போக முடியும் அல்லது அவசர தேவை என்று வந்தால் கடன் பட்டுதான் போக முடியும் ஆனால் தற்பொழுது என்னைப்போன்ற நடுத்தர வருமானம் பெறும் அனைவராலும் பயணிக்க முடிகிறதே.நன்றி திரு.டோனி ஃபெர்னாண்டாஸ் அவர்களே!.
                                                                                                     

 

Friday 18 October 2013

’ஒரு பால்’

          (திருச்சியில் ஷாப்பிங் செய்த போது நான் கண்ட ஒவ்வொரு ஜீவன்களைப் பற்றிய பாடல்தான் இது)

       பிறர் மெய்ச்சிக்கொள்ள உடுத்திக்கொண்டு  ஷாப்பிங் செய்யும் மனைவிகள் ஒருபால்....!

       பணமே இல்லாமல் கடன் வாங்கி மகிழ்ச்சியாய் ஷாப்பிங் செய்யும் மனைவிகள் ஒரு பால்..!
.
       ஆபிசில் வாங்கிய கடனை எப்படி கொடுப்பேன்?என்று யோசித்தவாறு மனமின்றி ஷாப்பிங் வந்த கணவர்கள் ஒருபால்...!

      ’என் அம்மாவுக்கும் ,அவ அம்மாவுக்கு எடுப்பதுபோலவே எடுப்பாளா?என்ற கனவில் கணவர்கள் ஒருபால்.....!

       கணவரின் பணம் இல்லாமல் நிம்மதியாய் அவ பணத்துல ஷாப்பிங் செய்யும் வேலைக்குப்போகும் மனைவிகள் ஒருப்பால்....!

        கொடுத்த பணத்தில் எவ்வளவு சேமிக்கலாம் என்று திட்டம் போட்டு வாங்கும் பெண்கள் ஒருபால்..!

       ‘இம்முறையாவது எனக்கு தரமாக எடுப்பாளா ?மருமகள் என்ற எதிர்பார்ப்பில் மாமியார்கள் ஒருபால்...!

        கூட்டத்தில் அல்ப்ப சுகத்துக்கு  முட்டி மோதி களிகொள்ளும் இளைஞர்கள் ஒருபால்..!

         எப்படியும் அவன் இங்கே வருவான் என்று  கூட்டத்தில் அலைபாயும் கண்களுடன் யுவதிகள் ஒருபால்...!

          அக்காள்  அணிந்து நொந்து போன செருப்பை தங்கை அணிந்து சிரத்தையுடன் நடந்துபோன சிறுமிகள் ஒருபால்..!

          நொந்துபோன செருப்பும் ,அளவில் பெரிய அக்காவின் செருப்பு கொடுக்கும் வலியை தாங்கிகொண்டு நடந்துபோன சிறுமிகள் ஒருபால்...!

          வலியை வெளியே சொன்னாள் ஷாப்பிங் வாய்ப்பு கிடைக்காமல் போயிடும் என்ற பயத்தில் நொந்துபோன பாப்பாக்கள் ஒருபால்...!

          பெத்தவங்க சிரமம் தெரியாமல் பிச்சிபுடுங்கி பிடிவாதமாய் உடைகள் வாங்கும் வாண்டுகள் ஒருபால்...!

          வீட்டின் சிரமம் புரிந்து ‘வேண்டாம் அம்மா ,வேண்டாம் அக்கா’என்று அடக்கமாய் நடந்துகொள்ளும் பசங்க ஒருபால்....!

         அந்த நெருக்கடியிலும் கைக்குழந்தைகளை ஏந்திக்கொண்டு அயராமல் அலைமோதும் தாய்மார்கள் ஒருபால்..!

         ’அவள் எப்படியும் சமாளித்து வாங்கிடுவா ,நமக்கென்ன என்று டாஸ்மாக்கை நோக்கி ஓடும் ஆண்கள் ஒருபால்....!

          நமக்கு நெனச்சமாதிரி வாங்கி வருவாங்களா?என்ற எதிர்பார்ப்பில்  தங்கை தம்பிகளைப் பொறுப்பாக  கடை வாசலில் காவல் காக்கும் உடன்பிறப்புகள் ஒருபால்....!

          கூட்டத்தையும் பண்டிகையையும்  தன் வசம் கொண்டு சம்பாதிக்க நினைக்கும் சில அதிகாரிகள் ஒருபால்..!

           எது நடந்தாலும் வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் வியாபாரிகள் ஒரு பால்....

          ஏழை வியாபாரிகளிடம் கூட அதிகாரத்தை பாவித்து பணம் பிடுங்கும் சில கல்நெஞ்சுக்கார .....ஒரு பால்....!

           எங்களுக்கே இடம் இல்லை ,இதுங்க வேற ?என்று எங்களை திட்டியும் முறைக்கும் மக்கள் ஒரு பால்...!

            அங்கே உள்ள மக்கள் கூட்டம் போதவில்லை என்று வெளியூரில் இருந்து அங்கே போய் ஷாப்பிங் செய்யும் எங்களைப் போன்ற பிசிபாடிகள் ஒருபால்....!

**என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமானே ,அடுத்த வருசமும் தமிழ்நாட்டுக்கு ஷாப்பிங் போக எமக்கு அருள் கிட்டுவாயாக!

(மனதில் தோன்றியதை கிறுக்கியுள்ளேன் ,யாரையும் புண் படுத்தும் நோக்கில் அல்ல நட்புக்களே)





Sunday 6 October 2013

ச.கி.உ

                நீங்கள் நினைக்கும் அளவுக்கு இது  ஏதோ கட்சியின் பெயர் அல்ல! நமக்கு, சமயத்தில் கிடைத்த உதவியைத்தான் இப்படி சுருக்கி எழுதியுள்ளேன்.பல இக்கட்டான சூழலில் நாம் உழன்று அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்போது ,அந்த நேரத்தில் நமக்கு கிடைத்த உதவிகளைத்தான் இங்கே திரும்பி பார்க்கப்போகிறேன்!

                ஒருமுறை நான் ,இடுப்பு வலியால் அவதிப்பட்டபோது ,மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க சொல்லி அனுப்பினர்.எனக்கு புது அனுபவம் .உடன் யாரும் வரவும் இல்லை, நான் எக்ஸ்ரே எடுக்கச் சென்றபோது ,ரிம60 வெள்ளி கட்டணம் செலுத்திய பிறகு ரசீதைக்கொண்டு வந்தால்தான் எக்ஸ்ரே எடுப்போம் என்று அங்கே தெரிவித்தனர்.என் கையில் ஐந்தே வெள்ளிதான் இருந்தது.

         ‘சரி நான் போயிட்டு இன்னொரு நாளைக்கு’வருகிறேன் என்றேன்.’உன் விருப்பம் ஆனால் அப்பாய்ண்மெண்ட் கிடைக்க தாமதம் ஆகும்’என்றனர்.’இல்லை என்னிடம் பணம் இல்லை’என்றேன்.’ஓ !இதுதான் உன் பிரச்சனையா? கீழே ஓர் அறையில் போய் உன் பிரச்சனையைச் சொல் ,பிறகு அவர்கள் என்ன சொல்கிறார்கள்’என்று வந்து சொல்’என்று அனுப்பினர்.

                   நானும் தயங்கி தயங்கிப் போய் நின்றேன்.உள்ளே வரிசையில் நிறைய பேர்.பேசிக்கொண்டிருக்கும் அதிகாரி ஒரு தமிழர்.’ஐயோ !தமிழர் கிட்ட பணம் இல்லை’என எப்படி சொல்வது?’ என்று யோசித்துக்கொண்டிருந்த வேளை என் பெயரை அழைத்தனர்.’என்னம்மா உன் பிரச்சனை?என்றார்.’சார் நான் எக்ஸ்ரே எடுக்க வந்தேன் ,பணம் போதவில்லை,அடுத்தமுறை வருகிறேன்’என்றேன்.

             அவர் ஏற இறங்கப்பார்த்தார்.பிறகு நான் கொண்டுபோன கடிதத்தில் ஏதோ எழுதி கையெழுத்திட்டார்.எனக்கு ஒன்னுமே புரியவில்லை.ஆனால் ஏதோ ஒரு சொல்யூசன் செய்துவிட்டார் என்றே தோணியது. அவசர அவசரமாக (எக்ஸ்ரே அறையை அடைக்கும்முன்)ஓடிப்போய் அங்கே உள்ள ஸ்டாஃப் கையில் கொடுத்தேன்.அங்கே இருந்த இருவருமே என்னிடம் ‘அவர் உன் உறவினரா?’என்று கேட்டனர்.எனக்கு புரியவில்லை,’ஏன் இல்லையே ?என்றேன்.’இல்லை உன் முழுப்பணத்தையும் அவரே செலுத்தி கையொப்பம் இட்டு விட்டார்.இனி நீ பணம் செலுத்த தேவையில்லை!என்றனர். 

         ஆ!எனக்கு ஒன்னுமே புரியவில்லை ஆனாலும் அந்த ஸ்டாஃப் இருவரும் தமிழச்சி என்பதால் கிடைத்த முழு உதவி என்று கிசுகிசுத்தது என் காதில் விழுந்தது. யார் என்றே தெரியாமல் அவர் செய்த அந்த உதவி என்னால் இன்று வரை மறக்கவே முடியாது.அது ஒன்றும் பெரிய தொகை இல்லைதான் ஆனால் என்னைப்போல நாலைந்து பேருக்கு செய்தாலே அவர் சம்பளம் போய்விடுமே!

              ***சரி நட்புகளே ,என்னைப்போலவே உங்களுக்கும் ச.கி.உ அனுபவத்தைத்  தொடரலாமே. உதவ மனமில்லாமல் இருப்பவர்கள் உதவி செய்ய ஒரு வழிகாட்டியாக இருக்கட்டும் அல்லது அவர்கள் என்றோ செய்த உதவியை இன்று நீங்கள் பகிர்வதால் அது அவர்கள் கண்ணில் படலாம் அல்லது காதில் போய்ச் சேரட்டுமே!
                     என் பதிவுலகில் உள்ள அனைவருக்கும் ஏதாவது ஓர் வகையில் இப்படி ஏதாவது அனுபவம் இருக்கும்.பகிருங்கள் பதிவுல நட்புக்களே!!!
               

Tuesday 1 October 2013

என் தோல்விக்குப் பின்னால்...

                  ஒவ்வொரு  ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாளாம்.ஆனால் என் ’தோல்விக்குப்’ பின்னால் சில ஆண்கள் இருந்தார்கள்.ஹ்ம்ம்ம் இப்போது நினைச்சாலும் கொலையே பண்ணலாம் போல தோணும்!
                  முதன்முதலில் பள்ளிப்பருவம் முடிந்தவுடன் எங்கள் ஊர் பத்திரிக்கை ஒன்றில்(பெயர் சொல்ல விரும்பவில்லை) நிருபர் வேலைக்கு  வாய்ப்பு கிடைத்தது!இங்கே தமிழ்மொழியில் சிறப்புத் தேர்ச்சியும் கூடவே சிபாரிசும் (அந்தகாலத்தில்)இருந்தால் போதும்.எனக்கு முதலாவது தகுதி இருந்தது,இரண்டாவது இருப்பதுபோல ஒரு அறிகுறி.

              ஆம் என் அண்ணியின் தம்பி,அவனுடைய அப்பாதான் அந்த வேலைக்கு நேர்க்காணலை நடத்துபவராக அன்று பொறுப்பேற்றிருந்தார். நான் நேர்க்காணல் போகவேண்டிய தினம் ,என் வீட்டில் என் அண்ணன்மார்கள்,அக்காவின் கணவர் என எல்லோரும் கோரசாக சேர்ந்து ’உனக்கு ஒத்து வராத வேலை அது, ரிப்போட்டர் என்றால் அவர்கள் அழைக்கும் நேரத்தில் நீ ஓடிப்போய் நிற்கனும், ஏதும் விபத்து கொலை என்றால் பயப்படாமல் அங்கே போய் செய்தி சேகரிக்கனும்,உனக்கு அந்த தைரியம் இல்லை ,நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாய் ‘என்று அப்படியே என்னை தடுத்து நிறுத்தினார்கள்!                                                                  
                                              

                 அதன் பிறகு ,விமானப்பணிப்பெண் வேலைக்கான நேர்க்காணல். அந்த வேலைக்கான பாரங்கள் கிடைக்கும் இடம் என் நண்பனின் வீட்டின் அருகே. 
       அவனுக்கு போன் செய்து ‘கொஞ்சம் அந்த பாரங்களை எடுத்து வா’என்றேன்.  அவனும் மற்றொரு நண்பனும் கொண்டு வந்து கொடுத்து விட்டு ‘செல்வி இந்த வேலைக்கு நல்ல உயரமாக இருக்கனும் , அதை விட முக்கியம் ,சிகப்பாக இருக்கனும்?எப்படி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்’என்று சிரியோத்தனமாய் சிரித்து என்னையும் சிரிக்க வைத்து விட்டு ,ஆர்வத்தையே சீர்குலைத்துச் சென்றானுங்க படுபாவிகள்!

               சிறுவயது முதல் எனக்கு தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் வானொலி அறிவிப்பாளர்  ஆக வேண்டும் என்று ரொம்ப விருப்பம். அதற்காக நான் பல பயிற்சிகள் செய்துவந்தேன். சொந்த முயற்சியில் வீட்டில் சிலவேளைகளில் பேசுவேன். அதை ரெக்கார்டிங் செய்து செய்து கேட்பேன்.

               என் கனவு நிறைவேறும் நாள் வந்தது. ஆம் ,பத்திரிக்கையில் அறிவிப்பு வெளியானது.மலேசிய அரசு தொலைக்காட்சியில் ’தமிழ் பிரிவுக்கு செய்தி வாசிக்க ஆள் தேவை’.ஆ!என் பல நாள் கனவு ,வேகவேகமாய் பாரங்களைப்பூர்த்தி செய்து , படங்களை எல்லாம் வைத்து எல்லாம் ரெடி பண்ணிக்கொண்டிருந்தேன். என் அண்ணா என் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு ,அதெல்லாம் அரசு வேலை எளிதில் நமக்கு கிடைக்காது’என்று கூறியது.

                         ‘ஏன் அப்படி சொல்ற?என்னிடம் அவர்கள் கேட்ட 10  தகுதியும்  இருக்கு’என்றேன்.அண்ணா சொன்னது ,நீ நல்லா படித்தாயா ,அவர்கள் கேட்டிருக்கும் தகுதி எல்லாம் உனக்கு இருக்கா? அந்த பத்தாவது தகுதியை சரியா படிச்சியா?அவுங்கதான் அங்கே நல்லா தெளிவா ‘ஆள் பார்க்க அழகா கவர்ச்சியா இருக்கணும்’என்று போட்டிருக்காங்களே?அப்புறமும் ஏன் உனக்கு இந்த ஆசை?’என்று அப்படியே என் ஆசைகளை நிராசையாக்கியது.நானும் பயந்துகொண்டு போகவே இல்லை!

         அதன் பிறகு ஜப்பானிய நிறுவனத்தில் வேலைக்கு போக நானே முடிவெடுத்து நானே அப்பாவிடம் கேட்டு என் முயற்சியில் போய் வேலையும் கிடைத்தது.அதேப்போலத்தான் தற்பொழுது செய்யும் ஆசிரியர் தொழிலும்!                                                                       
                                        

             ஆனாலும் இப்பொழுது நினைத்துப்பார்த்தால் அந்த வேலைக்கெல்லாம் போயிருந்தால் இதுவரையில் நான் கற்றுக்கொண்டது ,எனக்கு கிடைத்த நட்புக்கள் ,பல வாய்ப்புக்கள் அதெல்லாம் அங்கே கிடைக்கப்பெற்றிருக்குமா?அல்லது அங்கே இதைவிட பெட்டராக எதுவும் கிடைத்திருக்குமோ?
நடப்பவை யாவுமே நன்மைக்கே!


Saturday 28 September 2013

சில சூழ்நிலைகளில் என்னை மாட்டி விட்ட தமிழ்மொழி!

         
               நமது மொழிதானே ,எங்கே சீனனுக்கும் மலாய்க்காரனுக்கும்   தெரியப்போகுது என்று அலட்சியமாய் நினைத்து நல்லாவே ‘பல்பு’வாங்கிய சில சூழ்நிலைகளைத்தான் இங்கே பகிரப்போகிறேன்.இதை அனைவரும் படிப்பினையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.மலேசியாவுக்கு வரும் அந்நிய நாட்டு தமிழர்கள் கவனத்தில் வையுங்கள்!
சூழ்நிலை 1 :
                       நானும் என் தோழியும் தினமும் பள்ளிக்கு நடந்துபோகும் அதே நேரத்தில் ,ஒத்தையடிப்பாதையில் ,ஒருவ(ள்)ன் சைக்கிளில் செல்வது வழக்கம்.அவர் ஒரு சீனர். பார்க்க ஆணைப்போலவே இருப்பார் ஆனால் பெண்ணைப்போல தலை வாரியிருப்பார், சிலவிசயங்கள் அவரிடம் பெண் தோரணையைக் காட்டும் .

ஒருநாள் நானும்தோழியும் பேசிக்கொண்டு போகும்போது அவர் எங்களைக் கடந்துபோகும்போது , என் தோழி ‘அவர் அவனா அல்லது அவளா என்றே தெரியலையே , நீ பார்த்து சொல்லு ‘என்றாள்(சனி என் நாக்கில் வந்து உட்காருவானா?) நானும் ரொம்ப கெட்டிக்காரிப்போல ‘பார்த்தாலே தெரியலையா அது அவள்தான் ,இதுல கேள்வியா?’என்று சொல்லி முடிப்பதற்குள் ,சைக்கிள் கீழே விழும் சத்தம் கேட்டு திரும்பிபார்த்தால் ,அந்த நபர் எங்களை நோக்கி ஓடோடி வந்து (கையில் பால் மரம் சீவும் உளியோடு) உங்களுக்கு என்ன திமிரு ,இனிமேல் இப்படி பேசினால் ,இந்த உளியாலே நான் குத்திக்கொன்னுபுடுவேன்’என்று மலாய் மொழியில் மிக கோபமாய் கத்தினார்.

ஐயோ!நாங்கள் இருவரும் செய்வதறியாது வியர்த்து விறுவிறுத்துப்போனோம். மனதுக்குள்ளே நான் அவரை ’சாரி அங்கிள் அல்லது ஆண்ட்டி’ என்று சொல்லி மன்னிப்பு கேட்பதா ?என்று கூட தடுமாறினேன். அனைத்து கடவுள்களும் கண் முன்னே வலம் வந்தனர்.வேகமாய் சீறிப்பாய்ந்து வந்த சீனர் ,உளியைக்காட்டி மிரட்டிவிட்டு ,மீண்டும் சைக்கிளில்  ஏறி நகர்ந்தார்.அவர் சென்று விட்டாரா என்று 101% உறுதிப்படுத்திக்கொண்டு நாங்கள் இருவரும் சிரித்தே சிரிப்பு இருக்கே?கொஞ்ச நாட்கள் ,பள்ளியிலிருந்து லேட்டாகவே(சீனர் சென்றவுடன்) வெளியேறுவோம்!

சூழ்நிலை 2 :
                       நானும் என் அக்காவும் ஓர் விருந்துக்கு செல்ல ,வாடகை காரில் ஏறினோம்.அந்த காலத்தில் வாடைகைக்காரில் போவது மிகவும் ஆபத்து ,காரணம் பெண்கள்(அதிலும் எங்களைப்போல அழகான பெண்கள் என்று சொல்ல மாட்டேன்!!!) தனியே வாடகை காரில் சென்றால், அவர்களை கடத்தி செல்ல வாய்ப்புகள் அதிகள் ,காரணம் செல்போன் இல்லை , கார்கள்  சாலையில்  மிக குறைவாகவே செல்லும் .போய்த்தான் ஆகவேண்டும் என்ற முடிவில் காரில்  ஏறினோம்.

முகவரியை ஓட்டுனரிடம் கொடுத்தோம் .அந்த் மலாய்க்காரரும் ‘ஓ இந்த இடமா?சரி போகலாமே ‘என்று தொடர்ந்தார். அப்பா சொன்ன பாதையை விட அவர் போன பாதை தூரமாக போய்க்கொண்டே இருந்தது. எனக்கும் அக்காவுக்கும் உள்ளூர பயம் வர தொடங்கியது. நான் மெதுவாக அக்காவிடம் ‘இவன் எங்கேதான் போறானோ தெரியலையே’என்றேன்.அக்காவும் ‘அதான் எனக்கு பயமா இருக்கிறது ,அங்கேயும் இங்கேயும் சுத்தி சுத்தி இறுதியில் காசு அதிகம் கேட்கபோகிறான் ,நாம செத்தோம்’என்று முணுமுணுத்தார்.

ஓட்டுனரோ எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் காரை செலுத்தினார். போய்க்கொண்டே இருந்தோம் , பொறுமையை இழந்து அவரிடம் ‘அங்கிள் இன்னும் எவ்வளவு தூரம் போகனும்?என்றோம். அவரும் ‘இன்னும் ஐந்து ,பத்து நிமிடங்கள் ‘என்றார்.
உயிரைக் கையில் புடித்துக்கொண்டு வேண்டாத தெய்வமே இல்லை. இடமும் வந்தது.ஓட்டுனர் காரை நிறுத்தினார் ,நாங்கள் பணம் கொடுத்தோம் ,ஓட்டுனர் எங்களிடம் ‘உங்களைப்பார்க்க என் பெண்பிள்ளைகள் போலவே இருக்கு, எனக்கு பணம் வாங்க மனமில்லை ,ஆனாலும் என்னைத் தவறாக நினைத்துப்பேசிட்டிங்களே?அதான் எனக்கு மனம் சரியில்லை , நான் நல்லவந்தான் , விருந்து முடிந்து வரும்வரை நான் வெயிட் பண்ணி ,கொண்டு போய் நீங்கள் ஏறிய இடத்திலே விடட்டுமா?என்றாரே.

கன்னத்தில் அறைந்தது போல ஒரு சொல். ’பாக் சேக்(மலாய் மொழியில் மாமா) மன்னிச்சிருங்கள் , உங்களுக்கு தமிழ் தெரியுமா?என்று நாக்கு தடுமாற கேட்டோம்!சிரித்துகொண்டே ‘நல்லாவே தெரியும் ‘என்றார் .நாங்கள் பெண்கள் ,அதான் பயந்துவிட்டோம்’என்று சமாளித்தோம். சிரித்துக்கொண்டே ‘சரி சரி நியாயமான பயம்தான் , போகும்போது உதவி வேண்டுமானால் நான் அந்த கடையில்தான் உட்கார்ந்திருப்பேன் , வந்து தாரளமாக அழையுங்கள்’என்றார். ’அதுக்கு அவசியம் இல்லை ,நண்பர்கள் கொண்டு போய் விடுவார்கள்’என்று கூறி விடைபெற்றோம்!

சூழ்நிலை 3:
                       நான் வேலை செய்து விட்டு தோழிகளோடு ஒரு பொது பேருந்தில் வீட்டுக்குப்போவது வழக்கம் .ஒரே ஒரு குறிப்பிட்ட பேருந்துதான் பூச்சோங் செல்லும் ,ஆகவே அந்த பேருந்தின் ஓட்டுனர் மட்டும் காண்டக்டர் எல்லோரையும் நன்கு அறிந்திருந்தோம். ரொம்ப நல்ல நட்பாகவும் பேசுவார்கள்,அடிக்கடி பார்க்கும்  முகம்தானே !

அந்த வகையில் ஒரு மலாய்க்கார இளைஞர் காண்டக்டராக வருவார். எப்போதும் எங்களை கிண்டல் செய்து பேசுவார். அதிலும் என்னிடம் கொஞ்சம் அதிகமாக பேச முனைவார். ஆனால் நாங்கள் அப்போது ரொம்ப பயந்தாங்கொள்ளிகள், யாரிடமும் சரியாக பேசபயப்படுவோம் அதிலும் அந்நிய இனம் என்றால் சொல்லவே வேண்டாம்.

இப்படியே அந்த கண்டக்டர்  அடிக்கடி எங்களிடம் கொஞ்சி கொஞ்சி பேசுவார் . என் தோழிகளிடம் என் பெயரைக் கேட்பார். எனக்கு பிடிக்காத விசயம் அது. அவர் எங்களை கடந்துபோகும்போது நான் தமிழில் பலமுறை திட்டி இருக்கேன்.எல்லோருக்கும் பணம் கொடுத்து விட்டு என் பாக்கி பணத்தை மட்டும் நான் இறங்கும் வரை காத்திருந்து ,பிறகு கொடுத்துவிட்டு சிரிப்பார்.எனக்கு அதை ரசிக்கவே முடியாது.

ஆனால் அவர் ஏதோ என்னை வென்று விட்டதாய் நினைத்து சிரிப்பார்.எனக்கு கோபம் மட்டுமே வரும் . தீபாவளி சமயங்களில் பேருந்தில் போகும்போது இறங்கும் வேளை ,படியில் வந்து நின்று வாழ்த்து சொல்லுவார்.ஆனால் நான் அவன் என்னைக்கடந்து செல்லும் போதெல்லாம் என் தோழிகளிடம் , அவனும் அவன் பார்வையும் ,பெரிய கமல்னு நெனைப்பு , எப்படி பார்க்கிறான் பாரு , ஒருநாளைக்காவது பஸ்ஸிலிருந்து கீழே விழப்போறான்’என்றெல்லாம் திட்டியிருக்கேன்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்தது. ஒருநாள் நாங்கள் பேருந்தில் ஏறியபோது , வழக்கத்துக்கு மாறாக அந்த மலாய்க்காரர் அமைதியாக  காணப்பட்டார் ,ஆனாலும் நாங்கள் பேருந்தில் ஏறியதைக்கண்டவுடன் ஒரு குட்டி சந்தோசம் அவர் முகத்தில். நானும் போய் உட்கார்ந்தேன் , தோழி அவள் இடம் வந்ததும் இறங்கினாள்.நான் இறுதியாக இறங்குவேன் .

நான் பொதுவாக இறங்கும் வேளை,பேருந்தில் ஆள் குறைவாகவே இருப்பார்கள். காரணம் நான் இறங்கும் இடம் கடைசி ஸ்டாண்ட் ,அதன் பிறகு பேருந்து வேறு ரூட் போய்விடும். என்னிடம் பணம் வாங்கிகொண்டு ‘டிக்கெட்டையும் கொடுத்து விட்டு , முன்னும் பின்னும் நடந்தவர் ,என் சீட்டின் முன்னால் உள்ள இருக்கையில் வந்து அமர்ந்தார். நான் வெளியே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தேன் .’செல்வி ‘என்று மெதுவாக அழைத்தார்,எனக்கு தூக்கி வாரிப்போட்டது.திரும்பிபார்த்தேன் .மெதுவாக சிரித்துக்கொண்டே ‘செல்வி இன்றோடு என் வேலை முடிகிறது ,நான் என் கம்போங்(கிராமம்)போகிறேன்.அங்கே வேறு வேலை கிடத்து விட்டது, எனக்கு உன்னை கிண்டல் செய்ய ரொம்ப பிடிக்கும் ,என் பழைய காதலி உன்னைப்போலவே  நீளமான கூந்தல் , குள்ளமாக இருப்பாள் , உன்னைப்போலவே சிடுசிடுவென பேசுவாள் ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்துகொண்டு போய்விட்டாள், சோ நான் பாவம்’என்று அழகான தமிழில் சொல்லி முடித்தார் , எனக்கு பேச முடியவில்லை ‘ஒரே அதிர்ச்சி + சோகம் + மகிழ்ச்சி(நம்மைப்போல ஒருவள் ?).என் ஒரே கேள்வி ‘உனக்கு எப்படி தமிழ் தெரியும்? ’நான் எஸ்டேட்டில் வளர்ந்தவன் , உன்னைவிட அழகாக தமிழ் பேசுவேன்.நீ என்னை எப்படியெல்லாம் திட்டியிருக்கிறாய்?’என்று சொல்லி சிரித்தார்!

என் அதிர்ச்சி அதிகமானது. ஆனால் அவர் அதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்று மட்டும் தெரிந்தது.நான் இறங்கும் இடம் வந்தது. ‘போயிட்டு வா செல்வி, ‘இன்ஷல்லாஹ்’ வாய்ப்பிருந்தால் பார்க்கலாம் ‘என்று பை பை காட்டினார்.ஐயோ எப்படியெல்லாம் ஏசியிருக்கோம்,ச்சே தப்பு பண்ணிட்டோமே ,மன்னிப்பு கேட்க கூட வாய்ப்பில்லாமல் போய்விட்டதே?ஏதோ ஓரு சோகம்என்னுள் புகுந்து கொண்டது. ஆனால் இன்றுவரை அவரை நான் பார்க்கவே இல்லை .

                             இன்னும் பல சூழ்நிலைகள் இருந்தாலும் என்னால் மறக்க முடியாத சில சிட்டுவேசன்களையே இங்கே பகிர்ந்துகொண்டேன்.இங்கே வரும் நண்பர்களே கவனம் ,கவனம் ,கவனம்!சீனருக்கு தமிழ் தெரிவது , தமிழனுக்கு சீன மொழி தெரிவது மலேசியாவில் சர்வசாதாரணம்!