Wednesday 25 February 2015

நமக்கும் கீழே உள்ளவர் கோடி!

              மகளின் தேர்வு முடிவு வந்து ,அவள் நினைத்த துறையில் (அக்கெளண்ட்ஸ்)கிடைக்கவில்லை என ரொம்ப அப்செட் ஆகினாள்.படிப்பு ஒருபுறம் என்றாலும் ,தோழிகள் எல்லாம் அந்த வகுப்பில் இருக்காங்களே?என்ற கவலைதான் அவளுக்கு.சரி மறுபடியும் முறையீடு செய்யுங்கள் என பள்ளி தெரிவித்தது.ஆனால் அதில் சில  இன வாரியாக அரசியல் இருக்கத்தான் செய்யுது என் பல பெற்றோர்கள் அலட்டிக்கொண்டனர்.என் நெருங்கிய நண்பன் ஒருவனும் ,என் மாணவனின் தாயாரும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள் என்பதால் அவர்களிடம் விவரம் கேட்டேன்.

            இருவருமே சொன்ன விசயம்,’எல்லாத்துறையிலும் தற்போது வேலை வாய்ப்பு அதிகம்,அதிலும் வணிகத்துறைக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன,அதிலேயே இருக்கச் சொல்லுங்கள்’என்று.
சரி ஒரு முறை நானே போய் பள்ளியில் பேசலாம் என முடிவெடுத்துச் சென்றேன்.கொஞ்சம் கவலையும் இருந்தது ,நம் ஆசைகள்தான் பல நிறைவேறாமல் போனது .அவளுடைய ஆசைக்காக முயற்சியை முன் வைப்போமென பள்ளிக்கூடம் சென்றேன்.சுமார் ஒருமணி நேரம் கழித்து ,துணைத்தலமையாசிரியர் வந்தார்.அவர் ஒரு மலாய்க்கார ustadz . ரொம்ப மென்மையாக பேசினார். அதிலும் ரொம்ப மரியாதை கொடுத்துப் பேசினார்.

            பொதுவாக சில  பள்ளிக்கூடத்தில் அந்த மரியாதையை எதிர்ப்பார்ப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.ஆகவே நானும் அவர் பேச்சை அமைதியாக கேட்டேன்.நிறைய நல்ல விசயங்களையும் தெளிவு படுத்தினார்.’அவள் தற்போது இருக்கும் வகுப்பில் என்ன பிரச்சனை?அந்த வகுப்புக்கே பல மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் ,அவள் ஏன் நிராகரிக்கிறாள்? என்றும் கேட்டார்.நீங்களும்  ஓர் ஆசிரியைதானே? நீங்கள்  கடந்து வந்த விசயங்களைக் கூறி அவளுக்கு புரிய வைக்கலாம் எனவும் கூறினார். இறுதியில் அவர் சொன்னது ‘அந்த வகுப்பில் மாணவர்கள் அதிகம் ,ஆகவே யாரேனும் மாற்றலாகி போனால் ,வாய்ப்பு கிடைக்கும் ‘ஆனாலும் ,நம்பிக்கை வைக்காதீர்கள்’என்றார்.கிடைக்குமா என்பது கேள்விக்குறி என்றாலும் என் முயற்சியை முன் வைத்த திருப்தியில் காரை ஓட்டினேன்.

                  லேசாக மன பாரம் குறைந்தது போல இருந்தது.சாலையில் போய்க்கொண்டிருக்கும் போது ,என் காரைக் கடந்து மற்றுமொரு கார் சென்றது.நன்கு பழக்கமான காரைப்போல இருக்கவே எட்டிப்பார்த்தேன்.எனது அருமை நண்பரும் ,பள்ளியின் துணைச் செயலாளருமான திரு.சுப்பையா அவருடைய  கார் அது. அவர் என்னை கவனிக்கவில்லை. தனது மூத்த மகனை அவன்  ஆசைப்பட்டபடியே வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார்.சுமார் மூன்று லட்சம் செலவு செய்தார்.பையன் மிகச் சிறந்த முறையில் கல்வியை முடித்துக்கொண்டு நாடு திரும்பி,மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை,கே.எல்.ஐ. அருகே மோட்டார் விபத்தில் சிக்கி அங்கேயே அகால மரணமடைந்தான்.

                     மகளுக்கு நினைத்த வகுப்பு கிடைக்கவில்லையே என மனசு பாரமாய் இருந்தது,ஆனால் அவர் ,மகனின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிய நிலையில் அந்த மகனையே தற்போது  இழந்து இன்னும் மீளாத்துயரில் இருக்கிறாரே?அந்த கவலைக்கு ஈடாக இவ்வுலகில் ஏது துயரம்? அந்தக் காரை, அந்த நேரத்தில் எனக்கு காட்டி ஏதோ ஒரு மேசேஜ் காதில் சொல்வது போல ஓர் உணர்வு.... தலையில் யாரோ ‘படார்’என அடித்து ,உனக்கும் கீழே உள்ளவர்கள் பல கோடி ,உனக்கும் எனக்கும் வருவதுதான் துயரமா?என்ற கண்ணதாசனின் வரிகளை நினைவுபடுத்தியபோல இருந்தது!கணத்தில் மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச கவலைகளும் பாரமும் எங்கோ போயின!
                                                                   

Sunday 15 February 2015

இக்கரைக்கு அக்கரைப்பச்சை!


                என் மாணவி ஒருவளின் அம்மா ரொம்ப சின்னப்பொண்ணு.கணவனை இழந்து இன்னும் ஒருவருடம் கூட ஆகவில்லை.அந்த மாணவியின் மேல் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அன்பு காட்டுவோம்.பெற்றோரில் ஒருவர் இல்லாவிட்டாலும் அந்த மாணவர்கள் மேல் அதிகம் அன்பு காட்டுவது வழக்கம்.ஒருநாள் மாணவியின் பாட்டி வந்தார். ஒரு பாட்டிக்கான அடையாளம் எல்லாம் இருந்தது.ஆனால் நரை முடியெல்லாம் இல்லை. அழகான தோல்(முகம்).அவர் என்னிடம் பேசும் விதமும்,என் வயது ஒத்த பெண்களைப்போலவே இருந்தது.
              உடனே கேட்கவேண்டாம் என ,பாட்டியிடம் பேசிவிட்டு ,மகளுக்கு என்ன வயசு என்ன என்று தொடர்ந்தேன். பாட்டியும் சொல்லிவிட்டு, ’அவ வாழ்க்கைதான் இப்படி பாதியிலே போச்சு டீச்சர்,என்ன பாவம் செய்தோமோ? மாரடைப்பால் இறந்துட்டாரு மருமகன் ‘என்று கண்கலங்கினார்.’எல்லாம் ஏதோ காரணத்துக்காகத்தான் ,பேத்தி உங்களுடன் இருப்பது மகிழ்ச்சிதானே?பின்னே என்ன அழுகை?விடுங்க ,வந்த இடத்துக்குத்தானே போயிட்டார்.அவருக்கு சீக்கிரம் அழைப்பு வந்திருச்சி ,நாம் கொஞ்சம் லேட்டா போகப்போகிறோம்’என்று கொஞ்சம் ஆறுதல் சொல்ல, மறுபடியும் தமாசாக பேசினார்.சரி உங்க வயது என்ன இருக்கும்? என்றேன் (கொஞ்சம் பயத்துடன்).

              ’நீங்களே சொல்லுங்கள்’என்றார்.நான் கூட்டி சொன்னால் அப்புறம் வருத்தப்படக்கூடாது ‘என்று சிரித்தேன்.சரி நானே சொல்கிறேன் ‘என்று கைவிரலில் சைகையாய் காட்டினார்!ஆ!அதிர்ந்து போனேன்,என்ன என் வயசா?’ஐயோ! பேரப்பிள்ளை எடுத்திட்டிங்களா? சிவசிவா...நான் இன்னும் என் புள்ளையைப் பள்ளிக்கூடத்தில போய் விட்டுட்டு வரேன்,நீங்கள் கல்யாணம் பண்ணிக்கொடுத்து பேரப்பிள்ளையா?எனக்கு இன்னும் ஆச்சரியமும் வியப்பும்.இது ஒன்னும் பெரிய விசயம் இல்லை இருந்தாலும் ஏனோ எனக்கு கொஞ்சம் பொறாமை கலந்த வியப்பு!’போங்க டீச்சர் 18 வயசுல,என் அப்பா கல்யாணம் பண்ணிவச்சிட்டாரு,அப்புறம் என்ன , உடனே பிள்ளைகளைப்பெற்றுக்கொண்டேன்,நீங்கள் கண்டிப்பா லேட் கல்யாணம்தனே?என்று மிகச்சரியாக  சந்தேகத்துடன் கேட்டார்.

                    ஆமாம், நான் 28 வயசுல திருமணம் செய்தேன் !அதான் இன்னும் பிள்ளை பள்ளிக்கூடம் போகுது’என்று பெருமூச்சு விட்டேன்.’உங்களைப்பார்த்தால் எனக்கு பொறாமையா இருக்கு சிஸ்டர் ‘என்றேன்.’ஏன்லா?என்று என்னைப்போலவே அவரும் காமெடியா கேட்டார்.இல்லை,நீங்கள் பெரிய கடமையெல்லாம் முடிச்சிட்டிங்க ,நான் இன்னும் ,அவ பள்ளிக்கூடம் முடிச்சி , காலேஜ் அனுப்பி ,அப்புறம் கல்யாணம் பண்ணிக்கொடுக்கனும்,அதுக்கு இன்னும் 10 வருசம் ஆகுமே?என்று இன்னும்ம் வேகமாய் மனதில் கிடந்த பொறுப்பை நீளமாய் சொன்னேன்.அட போங்க டீச்சர், அதெல்லாம் இறைவன் சரியா செய்து கொடுப்பான் . 18 வயசில் திருமணம் செய்து என்னத்த நாங்க அனுபவிச்சோம்? குடும்பம் ,பிள்ளைகள் என செட்டல் ஆகிட்டோம்,நீங்கள் நிறைய அனுபவிச்சிருப்பிங்களே?என அவர் சோகமாய் கேட்டார்.

               அதென்னவோ உண்மைதான் ,22 வயசுல வெளிநாடு போக ஆரம்பிச்சேன். கார் ஓட்டிப்பழகினேன்.அப்பா அம்மாவுக்கு நிறைய உழைச்சிக்கொடுத்தேன்.திருமணத்துக்கு நாங்களே பணம் சேமிச்சி அம்மாவின் பாரத்தைக் குறைச்சோம். காதல் மட்டும் பண்ணல அந்த வயசில்,மத்தபடி  நினைச்சபடி ஊர் சுற்றினோம், ஆரோக்கியமான நண்பர்களை சேர்த்துக்கொண்டோம் அண்ணா தம்பிகள் மற்றும் நண்பர்களோடு கும்மியடிச்சோம் ’என கொஞ்ச நேரம் அந்த நாட்களுக்கு போய்விட்டேன்!இதையெல்லாம் கேட்ட அந்த இளமை பாட்டி ‘இப்போ எனக்கு உங்களைப்பார்த்தால் பொறாமையா இருக்கு டீச்சர்.இன்னும் சின்னப்பிள்ளைபோல(?????) முடியை கிராப் வெட்டிக்கிட்டு, கார் ஓட்டிக்கிட்டு,இப்படி தினமும் குழைந்தைகளோடு சிரிச்சிக்கிட்டு எந்த கவலையும் இல்லாமல் வாழ்க்கையை ஓட்றிங்களே?இதைவிட வேற என்ன வேண்டும்?’என்றார்.எங்களுடைய கடமைகளை நினைத்துப்பாருங்கள்!’

                  ’சத்தியமா சொல்கிறேன் ,பொறுப்புகள் உள்ள மனிதன் தான் நிஜமாகவே பாவம் ,எதையும் நிறைவேற்றாமல் போய்விடுவோமோ?என்ற பயம் இருக்குப்பா’இது என் கருத்து.’ச்சே! அப்படியெல்லாம் சொல்லாதிங்க டீச்சர்,உங்களைப்பத்தி என் பேத்தி ரொம்பவே சொல்லுவாள்,திருக்குறள் ,தேவாரம் , பாட்டு ,கதை என எவ்வளவோ சொல்லிக்கொடுத்து,அவ அப்பா நினைவுகளைக்கூட மறக்கும்படி செய்திட்டிங்க ,இதுவே பெரிய விசயமாச்சே?என்றார். என்னவோ இது கேட்க நல்லா இருந்தாலும் ,இன்னும் என் கடமைகளை முடிக்க குறைந்த பட்சம் 5 வருசமாவது ஆகுமே? அதுவரை நான் பிறவிப்பெருங்கடலில் நீந்த வேண்டுமே?’சரி டீச்சர் எங்களுக்கு சொந்த தோட்டம் இருக்கு ,அதில் கத்தரிக்காய்,வாழைக்காய் ,வெண்டைக்காய் எல்லாம் நிறைய கிடைக்கும் ,உங்களுக்கு கொடுத்தால் எடுத்துக்கொள்வீர்களா?என்று பாட்டி தயக்கத்துடன் கேட்டார்.

                   ’அட சமைச்சி கொடுத்திங்களா, இன்னும் சந்தோசமாய் எடுத்துக்கொள்வோம்’என்றேன்.அப்பாடா! எங்கேடா முகத்தில் அறைஞ்சதுபோல வேண்டாம் என சொல்லிடுவிங்களோ என பயமா இருந்துச்சி டீச்சர் ,ஏன்னா என் மகளிடம் கொடுத்து கொடுக்கச் சொன்னேன்,அதுக்கு அவ சொன்னாள்’அம்மா அவுங்களைப்பார்க்க ரொம்ப நல்லவங்களா இருந்தாலும் ,என்னம்மோ கேசுவலா பேச பயமா இருக்கும்மா’என்றாள். அதான் நானே வந்து கேட்கிறேன்,நாளை முதல் கொடுத்துவிடுகிறேன் ;என்று விடைபெற்றார்.

                  என்னையே வெறிச்சிப்பார்த்துக்கொண்டிருந்த என் சக ஆசிரியை சொன்னாள்,’இதுதான் இக்கரைக்கு அக்கரைப்பச்சை டீச்சர்.உங்களுக்கு கிடைச்ச வெளியூர் பயணம், நண்பர்கள் கூட்டம்  எல்லாம்  அவங்களுக்கு கிடைக்கவில்லை,அவுங்களுக்கு சீக்கிரமே கிடைச்சது உங்களுக்கு கொஞ்சம் லேட்டா கிடைக்கும்’அவ்வளவுதான் ,ஆனாலும் நீங்கள் இன்னும் மெட்சுவர்ட்டா இல்லை,அந்த பாட்டியோடு ஒப்பிடுகையில் என்பதுதான்  உண்மை டீச்சர்’என்றாள்.என்ன சொன்னாலும்  எனக்கு பாட்டிமேல் பொறாமைதான்!

Monday 9 February 2015

’ச்சீ மனிதா!’

ஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து
“சீ மிருகமே!”
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே
எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை
எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா ?
**
எந்த விலங்குக்கும்
சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?
**
இன்னொன்று :
பறவைக்கு வேர்ப்பதில்லை
**
எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை
**
எந்த விலங்கும்
தேவையற்ற நிலம்
திருடுவதில்லை
**
கவனி மனிதனே
கூட்டு வாழ்க்கை இன்னும்
குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்
**
அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை உடம்புக்குள் புதைக்கும்
தொழு நோய்
விலங்குகளுக்கில்லை
**
மனிதா
இதை
மனங்கொள்
கர்ப்பவாசனை
கண்டு கொண்டால்
காளை பசுவைச்
சேர்வதில்லை
**
ஒருவனுக்கொருத்தி
உனக்கு வார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை
எந்த புறாவும்
தன் ஜோடியன்றி
பிறஜோடி தொடுவதில்லை
**
பூகம்பம் வருகுது எனில்
அலைபாயும் விலங்குகள்
அடிவயிற்றில் சிறகடிக்கும்
பறவைகள்
இப்போது சொல்
அறிவில்
ஆறு பெரிதா ?
ஐந்து பெரிதா ?
**
மரணம் நிஜம்
மரணம் வாழ்வின் பரிசு
மாண்டால் -
மானின் தோல் ஆசனம்
மயிலின் தோஅகை விசிறி
யானையின் பல் அலங்காரம்
ஒட்டகத்தின் எலும்பு ஆபாரணம்
**
நீ மாண்டால் …
சிலரை
நெருப்பே நிராகரிக்கும்
என்பதால்தானே
புதைக்கவே பழகினோம்
**
“சீ மிருகமே !”
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே
**
கொஞ்சம் பொறு
காட்டுக்குள் என்ன சத்தம் …
ஏதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை
ஏசுகிறது
” சீ மனிதனே !”
*
-கவிஞர் வைரமுத்து

Saturday 7 February 2015

சரிதான்! ......பட்....ஆனால்?

             அண்மையில்  பல்கலைக்கழகத்தில் ஓர் இடுபணியைச் செய்ய அடியேன் பணிக்கப்பட்டேன். பிரபல மருத்துவரும் மழலைக்கல்வி ஆசிரியருமான அறிஞர் 'maria montessori' என்ற மருத்துவரைப்பற்றிய ஆய்வுதான் அது.                                                                              
                         
              மழலைக்கல்வி ஆசிரியர்களுக்கு, மரியா அவர்களைத் தெரியாமல் போக வாய்ப்பே இல்லை. ஆங்கிலத்தில் மிக அழகாக மழலைக்கல்வி என்பது ‘children not to taught but let them learn to learn’ என்று ஒரே வரியில் மிக ஆழமாக சொல்லிச் சென்றவர்.கற்றல் கற்பித்தலில்  பல புதிய யுக்திகளைக் கொண்டு வந்து சேர்ந்தவர். தெய்வக்குழைந்தகளான மாற்றுத்திறனாளிகளுக்கு முறையான கற்றல் கற்பித்தலை அறிமுகம் செய்தவர்.கற்றல் கற்பித்தலில் மாணவர்களுக்கு  சோர்வோ அல்லது சலிப்பு தட்டாமல் எவ்வாறு  கற்பிப்பது என பல நுணுக்கங்களை  அறிமுகப்படுத்தியவர். அவரைப்பற்றி ஆய்வுகள் செய்து ,நிறைய விசயங்களை இடுபணியில்  சேர்க்கவேண்டியதால், இணையத்தில் வலம் வந்தேன்.நிறைய பயனுள்ள தகவல்கள் கிடைத்தன.

         பல அறிஞர்களும் கல்விமான்களும் கூறிய கருத்துக்களை ,மரியா அவர்கள் கூறி இருந்தாலும் ,அவர் சொல்லிய இரண்டு விசயங்கள் என்னை பல கேள்விகளுக்கு ஆளாக்கின!ஒவ்வொரு மனிதனும் அவர்தம் பார்வையில் வெவ்வேறு மாற்றுக் கருத்தினைச் சொல்வது ஒன்றும் புதிதல்ல! பல்வகை   ஆசிரியர் பயிற்சிகளுக்குச் சென்றிருக்கேன்.அனைத்து பயிற்சிகளிலும் எங்களுக்கு வலியுறுத்தப்படும் விசயம் ,ஒரு மாணவனைப்பாராட்டுவதும் ,அவனுக்கு வெகுமதியாக குட்டி குட்டிப்பரிசுகளும் கொடுப்பது அவனை மென்மேலும் கல்விகேள்விகளில் ஈடுபடுத்திக்கொள்ள  ஓர் உந்துதலாக   இருக்கும்.ஆனால் இந்த கூற்றை ,மரியா அவர்கள் தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

                     சரி இது  ஒருபக்கம் இருக்க,மற்றொரு கூற்று நிஜமாக என்னை ஆச்சரியத்தில் வீழ்த்தியது.  அதாவது குழந்தைகளுக்கு 'fairy tales" கதை கூறுவதை தவிர்க்க வேண்டும் என்பதே ஆகும்! கதை என்பது கற்பனை உலகம் . கதை கூறுவதால் மாணவர்கள் குழப்பத்துக்கு ஆளாவார்கள்,அதுமட்டுமின்றி நிஜ உலகத்துக்கு தங்களைத் தயார் செய்ய சில தடைகளையும் எதிர்நோக்குவர் என்றும் அவர் கூறியுள்ளார்.பாலர்பள்ளியில் கடந்த பத்து வருட அனுபவத்தில் மாணவர்களுக்கு கதை கூறுவது அடியேனின் தலையாய கடமை.என் மகளுக்கு சுமார் 12 வயது வரை கதை சொல்லித்தான் தூங்க வைப்பேன்.அதை நான் மிகவும் விரும்பி செய்வேன்.
                                                                          
                  ஒவ்வொரு முறையும் கதையைக்கூறிவிட்டு ,அதை முடிக்காமல் ‘சரி மாணவர்களே நாளை வகுப்புக்கு அவசியம் வாங்க,அப்போதான் சிங்கம் நரியைக் கொன்றதா இல்லையா ?காகத்தின் வடையை நரி தின்றதா அல்லது கெட்டிக்கார காகம் எவ்வாறு வடையை கீழே விழாமல் காத்துக்கொண்டது?என்று சொல்வேன்’என பாதியில் நிறுத்தினால் ,நாளை அவன் ஆர்வமாய் பள்ளிக்கு வருவான் என்ற டிப்ஸ் எங்களுக்கு பயிற்சியில் அடிக்கடி  கொடுக்கப்படும்.அப்படி கதையைப் பாதியில் நிறுத்தினால் அந்த மாணவனின் முகத்தில் ஒரு மாற்றமும் ஆர்வமும் தென்படும்.குழந்தைகளுக்கு கதை கூறுவதால் ,அவர்களின் கற்பனா சக்தி வளரும்.அவனுள் ஓர் ஆற்றல் உருவாகும்.அதுதான் அவனை ஒரு படைப்பாளியாக உருவாக்க ஓர் ஊன்றுகோல் என்றே எங்களுக்கு பயிற்சிகளில் கற்பிக்கப்பட்டது.


                      ஆகவேதான் முன்பெல்லாம் பாட்டிதாத்தாவிடம் வளர்ந்த குழைந்தகள் கதை கதைகேட்டு படைப்பாளிகளாக உருவாகினர் என்றும் கூறுவர்.  தமிழிலும் சரி,ஆங்கிலத்தில்  bed time story,old fairy tales என்று புத்தகங்களே உண்டு. ஆனால் அது தவறு என்று மரியா அவர்களின் கூறியதை முதலில் நான் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும்,பிறகு கொஞ்சம் பின்னோக்கி பார்த்தபொழுது ,சிலகோணங்களில் சரியாகத்தான் படுகிறது என்பதை உணர்ந்தேன்.

                    ‘மூன்றாம் பிறை’என்ற படத்தைப் பார்த்த நான் பயங்கர மன உளைச்சலுக்கு ஆளானேன்.ஏன் பாலுமகேந்திரா கமலை மீண்டும் குணமாக்கி ஸ்ரீதேவிக்கு மணமுடிக்கவில்லை?அந்த படம் பாகம் 2 வருமா?அதிலாவது திருப்புமுனை வருமா?என்றெல்லாம் என்னுள் பல கேள்விகள்! ரஜினிகாந்த நடித்த ஆறிலிருந்து அறுபது வரை படம் பார்க்கும்போது படாபட் இறந்தவுடன் ,படம் பார்க்கும் ஆர்வம் போனது.சரி எப்படியும் ரஜினி மீண்டு வருவார் என்று பெரிய எதிர்ப்பார்ப்புடன் பார்த்தால் ரஜினியை இயக்குனர் கொன்றேவிடுகிறார்.

             அந்த வயதுகளில்தான் தாக்கம் ஏற்படும் என்று நினைத்தால் ,‘அஞ்சலி’படத்தில் அஞ்சலி பாப்பா இறந்துபோய்விடும்.நாயகன் படத்தில் மணிரத்தினம் சார் கமலை ஏன் சாகடிக்கணும்?ஐயோ கமல் இறந்துவிட்டாரே !என்று அழுதது மற்றுமொரு ரகசியம்.மூன்று முடிச்சி படத்தில் ஸ்ரீதேவியை ரஜினியின் அப்பா திருமணம் செய்துகொள்ளும்போது ரஜினியைவிட எனக்கு ,அந்த வயதில் அப்படி ஒரு கோபம்! சுஜாதா காதலித்த விஜயகுமாரை கே.பி ,அவர் தங்கைக்குத் திருமணம் செய்து வைத்து ,சுஜாதா மீண்டும் வேலைக்குச் செல்லும் ‘அவள் ஒரு தொடர்கதை’இன்று பார்த்தாலும் என் அழுகை ஒரு தொடர்கதையாக இருக்கும் என்பதுதான் உண்மை! 

                  இன்றுவரை வில்லன் கதாநாயகனிடம் அடிவாங்கும்போது என் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் என்பது மறுக்கமுடியாத கூற்று.’பாட்சா’திரைப்படத்தில் வில்லனை ரஜினி கம்பத்தில் கட்டி துவைச்சி எடுக்கும் காட்சியை நான் பலமுறை ரிவைன் பண்ணி பார்த்து மகிழ்ந்ததுண்டு.எனக்கு ஏதேனும் அந்த ‘ஃபியா’ இந்த ‘பியா’ நோய் என்று பட்டம் கட்டிவிடாதீர்கள் நட்புக்களே.ஐ அம் ஓகே!.அட ஏன் அவ்வளவு பின்னோக்கி போவானேன்? நேத்து பார்த்த ’ஐ’ படத்தில் ,ஷங்கர் சார் ,விக்ரமை ஒரு கூனனாக காட்டி படத்தை முடிச்சிடுவாரோ ?என நான் பயந்து பயந்து படம் முடியும்வேளையில் விக்ரம் ,பழைய தோற்றத்தில் உருமாறி வந்த பிறகுதான்  மனதிருப்தியோடு நான் தியேட்டரைவிட்டு வெளியேறினேன்.
                    
                      அப்படி ஒரு மன உளைச்சல்களுக்கு கதைகளும் சினிமாக்களும் நம்மை இட்டுச்செல்லும் என்பதில் (என் விசயத்தில்)ஐயமே இல்லை. இப்படி ஏழுகழுதை வயசான நமக்கே(ஒரு கழுதைக்கு எத்தனை வயசு என்று தெரியாது என்ற தகிரியத்தில்தான் அப்படி சொல்கிறேன்!!) ,மிகப்பெரிய பாதிப்பைக் கதைகள் கொடுத்துச் சென்றால்?பிஞ்சுகளின் மனதில் எப்படியெல்லாம் தாக்கம் ஏற்படும்?அறிஞர்கள் அறிந்துதான் சொல்வார்கள் அதனால்தான் அவர்கள் ‘அறிஞர்கள்’!
                                     மரியா அவர்களின் கூற்று சரியா? தப்பா ?