Thursday 7 June 2012

நேரில் நின்று பேசிய தெய்வம்

என் மற்றுமொரு தாயின்  பிறந்தநாள் இன்று(7/6/12)
                                                                           

என் அபார்ட்மெண்டில் குடியேறிய புதிதில்,ஒரு அம்மா எனக்கு அறிமுகம் ஆனார்.கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்த எனக்கு திருமணம் ஆனவுடன் தனிக்குடித்தனம் ரொம்ப கொடுமையான ஒன்றாகவே இருந்தது.என்னால் அந்த தனிக்குடித்தனம் ,தனிமை இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியாமல் சிரமப்பட்டேன்.இருப்பினும் அந்த வெறுப்பேற்றும் சூழலிலிருந்து தப்பிக்க ,என் வேலை எனக்கு கைவசம் இருந்தது.

 என் பையன் பிறந்தபொழுது ,எனக்கு என் வேலையை ராஜினாமா செய்தாகவேண்டிய சூழல்.VSS எடுத்துக்கொண்டு நிற்கலாம் என் அறிவித்தனர்.மகளும் நான்கு வயதை அடந்துவிட்டாள்.மகனைப் பராமறிக்க ஆள் பார்க்கனும் ,வருமானம் குறைந்த வாழ்க்கை ,இருப்பினும் வேலையை ராஜினாமா செய்தேன்.பிறகு முழுநேரம் வீட்டில் இருந்ததால் ,அந்த தனிமை என்னை சாகடிக்க தொடங்கியது.என் கண்வர் விருப்பப்படி நான் வேலையை விட்டுக்கொடுத்ததால் ,அந்த சமயங்களில் இன்னும் அதிகமாக அன்பு காட்டினார்(என் தனிமை என்னைக் கொன்றுகொண்டிருப்பதை .அவர் என் தாய் வீட்டிற்கு வரும்பொழ்தெல்லாம் உணர்வார்).’என்ன செய்ய எனக்கு மட்டும் ஆசையா ,கொஞ்சநாள் எல்லாம் சரியாகிவிடும்,பிள்ளைகள் வளர வளர தனிமையெல்லாம் தெரியாமல் போயிடும் என்று  என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஆறுதல் எல்லாம் சொல்லுவார்(ஆண்களுக்கே உரிய சுயநலம்,அவர் மட்டும் விதிவிலக்கா?)

அந்த நேரம்தான், அந்த தத்துதாய் என்னோடு மிகவும் நெருங்க தொடங்கினார்.நான் கீழே(தரை வீடு,அவர் இருந்ததோ 5-ம் மாடியில்).குப்பைகள் வீச போகும்போது ,படி ஏறி இறங்குவதால் ,ரொம்ப களைப்பாக இருக்கும்மா,உன் வீட்டில் கொஞ்சம் உட்கார்ந்து போகிறேன் என்று அடிக்கடி வரப்போக ஆரம்பித்தார்.அறுவை சிகிச்சையில் பிரசவித்து ,சுமார் இருபது நாட்கள் கழித்து,என் அம்மா வீட்டிலிருந்து என் வீட்டுக்கு வந்ததால் ,அந்த அம்மா என்னை ரொம்ப அக்கறையுடன் கவனித்துக்கொள்வார்.தண்ணீரில் ரொம்ப நேரம் நின்று வேலை செய்யாதேம்மா,ஜன்னி வரும்னு அறிவுறுத்துவார்.சில நேரங்களில் ,அவராகவே எனக்கு நிறைய உதவி செய்வார்.கணவர் வேலைக்கு போய் விடுவார்,பிள்ளைகள் வீட்டில் இருப்பதால் ,என்னால் மார்க்கெட் போக முடியாது,ஆகவே தினமும் போனில் ;மார்க்கெட் போனால் எனக்கும் ஏதாவது வாங்கி வாருங்கள்’ என்று சொல்வேன்..

எங்களுக்குள் தாய் மகள் எனும் உறவு பூத்துக்குலுங்க ஆரம்பித்தது.கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மிஸ் பண்ணி தனிக்குடித்தனம் எனும் துயரத்தில் சிக்குண்ட நிமிடங்கள் , என் வேலையையும் ராஜினாமா செய்து ,தவித்துக்கொண்டிருந்த தருணம் அது,அந்த கசப்பான தருணங்கள் ரணமாகிய வேளையில்தான்,அந்த ரணத்துக்கு மருந்தாக அமைந்தது அந்த தாயின் நெருக்கம்.என் கண்வர் திரு.ஞானசேகரன் ,அந்த அம்மாவோ திருமதி.ஞானாம்பாள்.என் பிள்ளைகளுக்கு அப்பா வழி பாட்டி இல்லாததாலும் ,இந்த அம்மா ,நான்கு பேர் கொண்ட என் குடும்பத்தில் ஒருவராக ஆனதால் என் பிள்ளைகளுக்கு அப்பா பாட்டியானார்.ஒருமுறை வீட்டில் கேஸ் தீர்ந்து போய்விட்டது,வேலையை விட்டு வீட்டில் இருந்தபொழுது (இது முதல் அனுபவம்)செய்வதறியாது ,உடனே அவருக்கு போன் பண்ணி ‘அம்மா கேஸ் விநியோகம் செய்பவன் நம்பர் கொடுங்கம்மா,(அதெல்லாம் அப் டு டேட்டாக வச்சிருப்பாங்க)இன்னும் சமைக்கவில்லை ,கேஸ் தீர்ந்துபோச்சு என்று சொன்னேன்.’என்னாடி பொண்ணு நீ,பிள்ளைபெத்த உடம்பு ,இன்னுமா சாப்பிடவில்லை’ என்று திட்டிவிட்டு நம்பரும் கொடுத்தார்.

பிறகு அரைமணி நேரத்தில் ,என் வீட்டு முன்னால் ,டிபன் கேரியருடன் வந்து நின்றார்.இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.கேஸ்காரன் காலையிலே வந்து போயிட்டான்.இனி மாலையில்தான் வருவான்.இந்தா சாப்பிடு என்று என்னை உட்காரசொல்லி ,எனக்கும் என் மகளுக்கும் உணவு பறிமாறினார்.அந்த கணம் எனக்கு சொல்லவார்த்தையே இல்லை,அன்பு ..நேரில் நின்று பேசும் தெய்வம் இதுதானா??நான் காப்பி விரும்பி என்பதால்,மாலை வேளைகளில் நான் கேட்காமலேயே பலமுறை எனக்கு காப்பி சுடசுட கலந்து கொண்டு வருவார்.

என்னைப்பெற்ற தாயிடம் கூட காணாத அன்பு அது.என் அம்மா என் மேல் பாசம் பொழிவது ஆச்சர்யம் அல்ல ,காரணம் நான் அவர் மகள் இருந்தாலும் என் அம்மா ரொம்ப கண்டீசன் தாய்,தனிப்பட்ட முறையில் அன்பெல்லாம் இல்லை.ஆண்பிள்ளைகளை ரொம்ப கவனிப்பாங்க,பெண் பிள்ளைகள் என்றால் அன்பை காட்டி காட்டி (once in blue moon)எடுப்பார்.அப்படிப்பட்ட எனக்கு இந்த தாயின் அன்பு ,ஐயோ சொல்ல வார்த்தையில்லாமல் போனது.எனக்கு கார் ஓட்ட லைசென்ஸ் இருந்தது.ஆனால் கார் ஓட்ட பயம் .என் பயத்தை தெளிய வைத்த வழிகாட்டி.’எடுடி காரை.பிள்ளைகளை நான் பிடித்துக்கொள்கிறேன்,நீ காரை ஓட்டு என்று தைரியம் ஊட்டியவர்.இளவயதிலே கணவனை இழந்து ,மூன்று பிள்ளைகளை தனிமரமாக நின்று வளர்த்துவிட்ட தாய்.அவர் பிள்ளைகள் யாருமே இன்னும் திருமணம் ஆகவில்லை,ஆகவே என் பிள்ளைகள் அவருக்கு பேரப்பிள்ளைகளானார்கள்.தன் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ,அவசர அவசரமாக வந்து ,என் பிள்ளைகளைப்பார்த்துக்கொள்வார்.நான் நிம்மதியாக என் வேலைகளை முடிப்பேன்.

அப்பேர்பட்ட அன்பு தாயிக்கு இன்று பிறந்தநாள்.இந்த பதிவு அவருக்கு ஒரு சமர்ப்பணம்.ஆம்,அந்த தாய் இன்று இவ்வுலகில் இல்லை.கருப்பை புற்று நோயினால் அவதியுற்று ,அவர் இறந்து மூன்று வருடம் ஆகிவிட்டன.இறக்க மூன்று நாட்களுக்கு முன் ,தன் மகளை அழைத்து செல்வியை மேலே வர சொல்,எனக்கு பார்க்கணும்போல இருக்குன்னு சொல்லியும் ,அந்த அக்கா ஏதோ டென்சனில் என்னிடம் சொல்லவே இல்லை.அம்மா இறந்தவுடந்தான் இந்த செய்தி என் காதுக்கு வந்தது.அவர் மகளை எப்படி திட்டுவது??இருந்தாலும் எனக்கு கொடுத்துவைத்தது அவ்வளவுதான் போல என்று மட்டுமே நினைக்க முடிந்தது.இன்று காலையில் எழுந்தவுடன் , யாருக்கோ இந்த தேதியில் பிறந்தநாள் என்று மண்டையைப்போட்டு உருட்டிக்கொண்டிருந்த வேளையில்..அந்த தாய் என்னைப்பார்த்து சிரிப்பதுபோல உணர்ந்தேன்.நினைவுக்கு வரவே இந்த பதிவும் ரெடியானது.அவர் படம் கைவசம் இல்லை.ஆனால் என் மனதிலும் என் பிள்ளைகள் மனதிலும் நிரம்பி இருக்கும் அன்பு தாயுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!

Wednesday 6 June 2012

இன்பமும் துன்பமும் கைகோர்த்து ?


இதான் இன்பத்திற்கு பிறகு துன்பம் வரும்னு சொல்வாங்களோ?

கடைத்தெருவுக்கு சென்றேன்.திடிரென ஓர் அம்மா,ஓடி வந்து அணைத்துக்கொண்டார்!என் மாணவியின் அம்மா.டீச்சர் ரொம்ப நன்றி டீச்சர்,என் மகள் சரியா பேசக்கூட தெரியாதவள் ,இன்று நல்லா பேசுகிறாள்,ஆத்திச்சூடி சொல்கிறாள்,ஆங்கில ரைம்ஸ் எல்லாம் நுனி நாக்கில்.பழமொழிகளும் திருக்குறளும் கூட சொல்கிறால்.அவுங்க அண்ணன் அக்காவையே மிஞ்சிட்டாள்.!இன்னும் நான்கு வயது கூட பூர்த்தியாகலஆனால் ஆறு வயது போல முன்னேற்றம்.உங்களிடம் அனுப்பியதில் ரொம்ப திருப்தியடைகிறேன் என்று ஒரே புகழாராம்!

செய்வதறியாது ஒரே  மிதப்பு எனக்கு!பிறகு கொஞ்சம் அட்ட் பண்ணினாரே?...... ‘டீச்சர் அவ உங்கள மாதிரியே கத்தி கத்தி பேச ஆரம்பிச்சிட்டா,நீங்கள் எப்படி மைக் இல்லாமல் ,மைக் வச்சி பேசுவதுபோல பேசுவிங்களோ அதேப்போல பேசுகிறாள். எந்த நேரமும் வெள்ளைக்காரிமாதிரி ஆங்கில பாடல்தான் முணுமுணுக்கிறாள்,வீட்டில் எந்த நேரமும் கையில் பிரம்போடுதான் அலைகிறாள்.அவ அப்பா சின்ன தப்பு செய்துவிட்டாலும் உடனே ;எடு அந்த long ruler-ஐ அடிக்கனும்னு’கோபமாக சொல்வாள்.என் முன்னே வந்து தோப்பு கரணம் போடுங்க அப்பான்னு ஆணை இடுகிறாள்? எங்களுக்கு ஒரே சிரிப்பு டீச்சர்.அவளைப்பார்க்கும்போதெல்லாம் உங்களை பார்ப்பதுபோல  ஓர் உணர்வு’என்றும் கூறி சென்றார்.இது புகழில் எந்த ரகம்????

இங்கே அவளும் இருக்கிறாள்!



Tuesday 5 June 2012

ஏங்குதே மனம்...!

நினைக்கும்போதெல்லாம் !!!!
ஒரு சில விசயங்களை நினைத்தாலே நம்மை அறியாமல் விழிகள் பனிக்கும்.இதயம் கனக்கும்.கோடிக்கோடியாய் பணம் கொடுத்தாலும்,இப்போ பெறமுடியாது!திரும்பி வராது எதுக்கும்  ஈடு கட்டமுடியாத மகிழ்ச்சி ,அப்படிப்பட்ட சில விசயங்களை கொஞ்சம் திரும்பிபார்க்கிறேன்..

என் அப்பா
அன்புக்கு,கருணைக்கு,கொடுப்பதில் கர்ணன்,எதிரியைக்கூட வாழ்த்தும் நல்லெண்ணம் கொண்டவர்!ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்.இனி எந்த பிறவியில் அவரைப்பார்ப்பேனோ?அவரை நினைக்கும்போதெல்லாம்.....ஏங்குதே மனம்!
                                                                             

என் பாட்டி வீடு,
வருசம் 16 திரைப்படத்தில் வரும் ,தாத்தா வீடுபோலவே எனக்கும் அம்மா வழி பாட்டி வீடு இருந்தது.எங்களுக்கு விபரம் தெரிந்து நாங்கள் போய் அதிகம் தங்கிய பாட்டி வீடு அதுதான்.வெளியூரில் வேலை செய்யும் மாமாமார்கள்,தொலைத்தூரத்தில் கல்யாணம் கட்டிபோன சின்னம்மாமார்கள்,எங்கள் வயது ஒத்த சின்னம்மா பசங்க என எல்லோரும் திருவிழாவிற்கும்,தீபாவளிக்கும் ,ஓணம் பண்டிகைக்கும் நீண்ட பள்ளிவிடுமுறைக்கும் ஒன்று கூடுவது அங்கேதான்.நாங்கள் எங்களிடம் இருந்த ,மறந்திருந்த திறமைகளை (யாராவது பாராட்டுவாங்களேன்னு?)இரட்டிப்பாக காட்டுவதற்காகவே அங்கே போவோம்.பாட்டி உடல் நலம் இல்லாமல் போய்விட்டதால் ,மேலும் பராமறிக்க ஆள் இல்லாததால் ,அந்த வீட்டை தாய்மாமன்கள் விற்க முடிவு செய்தனர்.வீடு விற்கப்பட்டது!எல்லோரும் கவலையாக இருக்கு என்று சொல்லிவிட்டு சென்றனர்..ஆனால் நான் மட்டும் மனதில் அழுதேன்!இனி அதுபோல ஒரு வீடு என்று ........நினைக்கும்போதெல்லாம்.....ஏங்குதே மனம்!

என் கிராமத்து வீடு(2)
 வீடு (2)என்று குறிப்பிட காரணம் ,9 வயதுவரை ஒரு வீட்டில் இருந்தோம்.ரொம்ப மோசமான வீடு.மின்சாரம் இல்லை,கழிவறை வசதி இல்லை,ஈய வயலுக்கு அருகில்!ஆகவே அந்த வீட்டில் நிறைய சொல்வதற்கு இல்லை.9 வயதில் ஈயவயல் அருகே இருந்த வீட்டின் மணலிடிந்து ,எங்கள் வீடெல்லாம் பாதிக்கப்ப்பட்டதால் ,வேறு ஒரு தொடர் பலகை வீடுகள் கொண்ட கிராமத்துக்கு மாற்றலாகி சென்றோம்.அங்கேதான் நாங்கள் டீன் ஏஜ் தாண்டி ,வேலை ,வெளியுலகம் ,திருமணம் என படிப்படிப்பாய் வளர்ந்தோம்,படித்தோம் ,முன்னேறினோம்.கோழிகூவி பொழுது விடியும் கிராமம்.அக்கம்பக்கத்தில் சண்டை போட்டாலும் ,உள்ளூர ஏதோ சகோதரத்துவம் கொண்ட நண்பர்கள்!அப்பா வாழ்ந்து இறந்த வீடு ,எங்களுக்கு நிறைய சோகங்களையும் ,சந்தோசங்களையும் கொடுத்த அந்த வீட்டை நினைக்கும் போதெல்லாம்....ஏங்குதே மனம்!

கலர் டிவி
எங்கL கிராமத்தில் முதன்முதலாக எங்கள் வீட்டில்தான் கலர் டிவி வாங்கினோம் என்பதில் எங்களுக்கு பெருமை.ஆம்,நாங்க அந்த சமயம், வறுமைக்கும் வசதிக்கும் இடையில் வாழ்ந்த காலம்!என் அம்மா ரொம்ப திறமைசாலி பெண் ,மேலும் அதிர்ஷ்டக்கார மனைவியும் கூட, தொட்டதெல்லாம் பொன்னாகும் அவர் செய்யும் காரியம்.குருவி சேர்ப்பதுபோல,கொஞ்சம் கொஞ்சமாய் பணம் சேர்த்து நிறைய பொருட்கள் வாங்கி சேர்த்தார்.அந்த வரிசையில் வந்ததுதான் கலர் டிவி.எனக்கு இன்னும் நினைவிருக்கு,அந்த டிவி எங்கள் வீட்டை வந்தடைந்த அன்றிரவு  நாங்கள் பார்த்த முதல் படம் ,ஆங்கில படம் 'தி ஹை சாப்ரல்’(ரெட் இண்டியன்)(தமிழ்ப்படம் அன்று ஒளியேறவில்லை என்பதுதான் காரணம் அன்றி வேறொன்றுமில்லை).அன்றிரவு குதூகலத்தால்,நாங்கள் யாருமே எங்களுடைய  அறையில் உறங்காமல் ,வரவேற்பறையிலேயே உறங்கினோம் என்பது குறிப்பிடத்தக்கது.எங்களுக்கு வறுமையிலும்,வர்ணத்தில் உலகை காட்டிய அந்த கலர்(பலர் கைமாறி இறுதியாக பேரிச்சம் பழக்கடைக்கு சென்ற) டிவியை நினைக்கும்போதெல்லாம் ....ஏங்குதே மனம்!

கிராமத்து விளையாட்டுக்கள்
என் நண்பர்களோடு சேர்ந்து (ஒலிம்பிக்)விளையாட்டுக்களையே மிஞ்சும் அளவுக்கு ,நாங்கள் களைப்பே இல்லாமல் விளையாடிய கல்லாங்காய்,கிளிபறி,ஹை ஜம்ப்,நொண்டி விளையாட்டு,போலிஸ் திருடன்,எங்கிட்டே இருக்கு.பிடிக்கிற விளையாட்டு,ரவுண்ட்ரெஸ்(கிரிக்கெட்) .இன்னும் பல.வெள்ளிக்கிழமை எப்படா பள்ளி முடியும் ,மறுநாள் விடுமுறையாச்சே?.காத்துக்கிடந்து ,வீடு வந்து சேர்ந்ததும் ,சாப்பிட்டு மட்டும்(அதைத்தான் இன்னும் கூட ஒழுங்காய் செய்கிறோம்)சீருடைக்கூட மாற்றாமல் ,மாலை ஏழு மணி வரை விளையாடுவோம்.சட்டைக்கூட மாற்றாமல் ,ஏழு மணி வரைக் குளிக்காமல் ஆட்டம் போட்டதற்காக  அடி வாங்கியது இன்னுமொரு ரகசியம்.அந்த விளையாட்டெல்லாம் தற்பொழுது அடியோடு இல்லை என்று நினைக்கும்போதெல்லாம் ......ஏங்குதே மனம்!

55 எண் பேருந்து(12 பி )
பூச்சோங்கில் இருந்து பிரத்தியேகமாக கோலாலும்பூர் செல்லும் ஒரே பேருந்து இந்த 12 பி (55 பஸ்).கூட்ட நெரிசலில் சென்றாலும் ,அந்த சமயத்துல வெறும் 20 காசு மட்டுமே(தற்போதைய விலை 1.50 காசு) கொடுத்து ,பள்ளிக்குச் செல்வோம்.பஸ் வருவது கண்களுக்கு தென்பட்டால் ,ஏதோ பிரசவம் ஆனதுபோல மகிழ்ச்சி!அந்த சமயம் ,அந்த பேருந்தில் ,வேலை செய்த ஊழியர்கள் 90 சதவிகிதம் நம்ம ஆட்கள்.எனவே அவர்களின் முயற்சியால்  நாளடைவில் பேருந்தில் தமிழ்ப்பாடல்கள் ஒலியேற ஏற்பாடு செய்தனர்.ஐயோ அந்த நிமிடங்களை நினைத்தால் ,மனதில் பட்டாம்பூச்சி பறப்பதுபோல ஓர் உணர்வு.நமக்கு பிடித்த பாடல் ஒலியேறிக்கொண்டிருக்கையில் நாம் இறங்கும் இடம் வந்துவிட்டால் ,ஒளிந்து கொண்டு(டிக்கெட் இன்னும் விலை அதிகம் கேட்பாங்கன்னு)அடுத்த இடத்தில் போய் இறங்கிய காலங்களை நினைக்கும்போதெல்லாம்....ஏங்குதே மனம்!

புதன்கிழமை சந்தை
எங்கள் ஊரின் (பாண்டி பஜார்)என்றே கூறலாம். கோலாலும்பூர் நகரம் நகர்ந்து வந்து அங்கே ஒருநாள் கொட்டகையிடும் என்றும்  வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் அங்கே கூடுவர்.நாங்கள் டவுனுக்கு போய் ஷாப்பிங் செய்ததைவிட ,அந்த சந்தையில்தான் ஷாப்பிங் செய்தது அதிகம்.ஒன்று விலை குறைவு ,மற்றொன்று வீட்டிலிருந்து நடந்தே போகலாம்(யார் உதவியும் இல்லாமல்).அப்படி ஒரு கூட்டம்,விலைக்குறைவு!இன்னுமொரு விசேசம் ,அன்றைய தினம் சமையல் அப்பாவுக்கு மட்டுமே.நாங்கள் கண்டிப்பாக சந்தையில் திண்பண்டம் வாங்கியே சாப்பிட்டாகனும்(இல்லாவிட்டால் சீனன் கோபித்துக்கொள்வான் ??)அந்த மாதிரி சந்தைகள்,தற்பொழுது  நாங்கள் வசிக்கும் அபார்ட்மெண்ட் அருகே இல்லை என்று நினைக்கும்போதெல்லாம் ......ஏங்குதே மனம்

அம்மா வீட்டு தீபாவளி
இதுப்பற்றி நான் அடிக்கடி கூறியதுண்டு.எங்கள் கிராமத்தில் நூறு சதவிகிதம் தமிழர்களே.மேலும் தரவாட்டுக்குடும்பமாக வாழ்ந்த எங்கள்  வீட்டில் நாங்கள் கொண்டாடிய அந்த தீபாவளிப்போல நான் திருமணமாகி இன்னும் கொண்டாடியதே இல்லை என்பது மிகப்பெரிய உண்மை!விடிய விடிய பலகாரம் செய்வது,வீட்டை அலங்கரிப்பது ,சமையல் செய்வது ,ஆளுக்கொரு வேலையாக பகிர்ந்து ஆடிப்பாடி களைப்பின்றி கொண்டாடிய தீபாவளியை இன்றும்  நினைக்கும்போதெல்லாம் ......ஏங்குதே மனம்!

இரவு ஆப்பம்
அம்மாவின் கைவண்ணத்தில் வெகுவிரைவாக செய்யப்படும் ஒரு பலகாரம்!தோசை ,இட்லி என்றால், மாவு புளித்தே ஆகனும்.ஆனால் இந்த ஆப்பம்(அரிசி மற்றும் உளுந்து அதனுடன் தேங்காய்ப்பூ ,கருப்பு சீனி) கலந்து மாவு அரைத்தவுடனேயே சுட்டு சாப்பிடலாம்.இந்த பலகாரம் என்றால் (கருப்பு காப்பி)கலக்கி சாப்பிட்டால்தான் காம்பிநெசன் சிறக்கும் என்பது நான் கண்ட அனுபவம்.திருமணம் முடிந்து  ,பலமுறை முயற்சி செய்து ஆப்பம் குப்பைக்கு போனது மற்றொரு ரகசியம்.அம்மாவிடம் கேட்டால் ‘தின்ன மட்டும் செய்யுங்க,செஞ்சி பழகாதிங்கன்னு கணவர் பிள்ளைகள் முன் திட்டு கிடைக்கும் என்பதை மனதில் வைத்து ஆப்பத்தை நினைக்கும்போதெல்லாம்...ஏங்குதே மனம்.

ஏங்குதே மனம் .....ஏங்குதே மனம்.........படிக்கும் அனைவருக்கும் !!!!!