Tuesday 23 July 2013

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

                முதல் கணினி அனுபவம் பற்றி எழுத ,என்னை இங்கே பணித்த அன்பு நண்பரும் ,பதிவுலகில் என்னை அறிமுகப்படுத்தி, ‘என் மன வானில்’என்ற ஐடியாவும் கொடுத்து  உருப்படியாக எதையாவது எழுதுங்கள் செல்வி’என்று பதிவர் அங்கீகாரத்தை எங்கள் நட்பின் அடையாளமாக கொடுத்த எனதருமை முகநூல் நண்பர் திரு. கே.ஆர்.விஜயன் அவர்களுக்கு என் நன்றிகள் சமர்ப்பணம்!
                                                                 
                                                          (கொஞ்சம் சிரிங்க விஜி)

                        நண்பர் திரு நாஞ்சில் மனோ அவர்களின் முகநூலில் இந்த தலைப்பில் ஒரு பதிவைப்பார்த்தேன்(படிக்கவில்லை),என்னம்மோ பெரிய இடத்து சமாச்சாரம் என்று லைக் போட்டுவிட்டு நகர்ந்தேன்.நண்பர் விஜயன் தகவல் சொல்லி தொடரச் சொன்னார்.நம்மையும் மதித்து  சொல்றாங்களே(பாவம் பதிவுலகம்?,அதுக்கு வந்த கஷ்டகாலம்),உடனே ‘யெஸ்’ சொல்லி எழுதுகிறேன்.
                           
                           எனது முதல் கணினி அனுபவம் நான்  கடந்த 12 வருடங்கள் வேலை செய்து வந்த matsushita air-cond (macc) ஜப்பானிய நிறுவனத்தில் கிடைக்கப்பெற்றது.ஆம் முதன்முதலில் ஒரு சாதாரண மெசின் ஆப்ரேட்டராக பணிக்குச் சென்றேன்.பிறகு வெளியூர் வேலைக்கெல்லாம் அனுப்பி பதவி உயர்வு கிடைத்து ,அலுவலகத்தில் வேலைக்குச் சென்றேன்.முதன் முதலாக கணினிப் பெட்டியை இயக்க தோழி புஷ்பா(கனடா)கற்றுக்கொடுத்தாள்.
                                                             
     
                    பலவாறு டிரெய்னிங் கொடுத்தாள்.ஒருமுறை எனக்கு ஒரு வேலையைக் கொடுத்து ,என் பின்னால் சக அலுவலக நண்பர்களுடன் உட்கார்ந்துகொண்டு ‘நீ செய் ‘நான் சரிப்பார்க்கிறேன் ‘என்றார்.’ஐயோ !என்னை நிர்வாணமாக்கி நடுரோட்டில் நடக்க விட்டது போல ‘இருந்தது அந்த தருணம்?

               ஆம் நான் டைப் செய்யும் ஒவ்வொன்றும் தவறாக போனது,நான் பதற்றத்தில் தவறு தவறாக பட்டன்களை அழுத்தினேன்(அறவே அனுபவம் இல்லாத அறிவு அது).மிகவும் அன்பாக தைரியம் சொல்லி ,’ஒன்னும் பயப்படாதே செல்வி’யாரும் உன்னைத் திட்ட மாட்டார்கள் என்னை மீறி’என்று என்னை ஊக்குவித்து இன்று நான் நுனிவிரலில் சில கணினி வேலைகள் செய்கிறேன் என்றால்,அதற்கு தோழி புஷ்பாதான் காரணம்.

                பிறகு நன்கு கற்றுத்தேர்ந்தேன்.அந்த அலுவலகத்தில் மிகவும் முக்கிய பொறுப்பும் எனக்கு கொடுக்கப்பட்டது (எல்லாமே உபயம் தோழி புஷ்பா!).அது shipping dept ,ஆகவே அனைத்து வேலைகளும் கணினியில்தான்.சுமார் 8 வருடங்கள் அனுபவம் பெற்றேன்.

             உலகில் உள்ள 5 கண்டங்களுக்கும் குளிர்சாதப்பெட்டிகளை ஏற்றுமதி செய்யும் வேலை அது.கூடவே அட்மின் வேலைகள் அனைத்தையும் கற்றுக்கொண்டேன்.microsoft excel செய்வதில் எனக்கென  ஒரு தனித்திறமையை உருவாக்கிக்கொண்டேன்.

               இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகு  வேலையை ராஜினாமா செய்தேன்.வீட்டில் உட்கார்ந்தேன்.மூன்று வருடங்கள் ஓடின.வாசனுக்கு மூன்று வயது. அட்மின் வேலை அனுபவத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம் என்று நினைத்து வேலைத் தேடினேன்,அதுவும் அரைநாள் வேலை சிறப்பு என்று கிடைத்தது ஆசிரியை தொழில்!

                 பள்ளியில் சேர்ந்தவுடன் எல்லாமே எழுத்து வடிவில் இருந்தன.கணினியில் அங்கே (பாலர்பள்ளியில்)யாருக்கும் அனுபவமே இல்லை என்று சொல்லலாம்.என் அட்மின் + கணினி  அனுபவம் அங்கே குன்றின் மேல் இட்ட விளக்காய் பரவியது.

                தலைமையாசிரியர் என்னைத் தனிப்பட்ட முறையில் அழைத்து பள்ளி வேலைகள் மட்டுமின்றி அவர் சொந்த வேலைகளையும் செய்ய சொல்வார்.ஆனாலும் எனக்கு என்று கணினி வீட்டில் இல்லை.பிறகு பள்ளி வேலைகள் ஒருபுறம் ,நெட் உலகம் தலைத்தூக்கிய காலம்.எப்படியோ ஒரு கணினி ஓசியில் கிடைத்தது .

                அதை வைத்துதான் முதன்முதலாக முகநூலுக்கு வந்தேன்.ஆனால் பழைய கணினி என்பதால் ஆமைக்கு அண்ணன் போல ரொம்ப மெதுவாக செயல்படும் . நட்பு ஒரு மேசேஜ் போட்டு ரொம்ப நேரம் ஆன பிறகுதான் என் பதில் போகும்.நெட்டும் எனக்கு எதிராய் வேலை செய்யும் ?
                                                                         
                         
                    பிறகு ,என் அருமை பாஸ் என்ற திரு,பாலகிருஸ்ணன் ‘செல்வி என்னிடம் ஒரு லாப்டாப் உண்டு ஆனால் பாட்டரி பிரச்சனை ,எப்போதும் பவர் பூட்டியிருக்கனும்’ என்றார்.கரும்பு தின்னக்கூலியா?

                   உடனே ஓகே சொன்னேன்.அருமையான ‘dell' மடிகணினி.முகநூலில் கூடி சேர்ந்து கும்மி அடிச்சி கைக்குலுக்கி சண்டை,சச்சரவு என்று பெயர்போட்டேன்.ரொம்பவே பழசாகிப்போச்சு ,கடையில் கொடுத்தால் ,கயலாங் கடைக்கு முகவரி கொடுக்கிறானுங்க?இருந்தாலும் வச்சிருக்கிறேன்.

                 அப்படியே காலத்தை ஓட்டினேன்.சில மாதங்களுக்கு முன்  என் பாலர்பள்ளியைத் தேர்ந்தெடுத்து ஒரு புதிய மடிகணினியை கொடுப்பாங்களா?எங்கள் என்.ஜி.ஓ.இப்போ அதன் தயவில்தான் ஆல் இன் ஆல்!
                                                         
                      
                                     ஒரு வழியாக கொடுத்த வேலையைச் செய்த திருப்தியில் ,விடைபெறுகிறேன்.யாரையாவது கோர்த்து விட்டால்தானே தொடர் பதிவுக்கு மரபு?யாரையாவது மாட்டி விடலாம் என யோசித்த வேளையில்......

               இவர்கள் யாராவது கைகொடுப்பார்கள் என்று பெரிதும் நம்புகிறேன்!
மகேந்திரன் பன்னீர்செல்வம்
Venkatasubramanian Sankaranarayanan 
ஸ்கூல் பையன்

            

Sunday 21 July 2013

அது ஆவியா ?பேயா?

                     இந்த கேள்விக்கு எனக்கு சின்ன பிள்ளைமுதல் சரியான பதில் யாருமே சொல்லவில்லை.அப்பாவைப் பொருத்த வரை ,நாங்கள் பயப்படக்கூடாது என்று ரொம்ப கவனமெடுத்து இந்த கேள்விகளுக்கு பதில் ‘இல்லை’என்றே சொல்வார்.அம்மா அவர் அனுபவப்பட்டதைச் சொல்லுவார் ஆனால் நாங்கள் பயந்தால் அடி கொடுப்பார்.பயத்தை தெளிய வைக்க அறையில் என்னைப்போட்டு அடைத்ததும் உண்டு.அப்பா வழி தாத்தா நிறைய உண்மைப் பேய் கதைகளைச் சொல்லுவார் ஆனால் அவரிடம் பயம் என்று நான் பார்த்ததே இல்லை.ஜப்பானியர் காலத்தில் விடிய விடிய பிணத்துக்கு தோண்டி வைத்திருந்த குழியில் படுத்து உறங்கியதுண்டு என்று தைரியம் சொல்லுவார்.                                  
                         
                             ஆனால் நான் அனுபவப்பட்ட சில விசயங்களைத்தான் இங்கே கிறுக்கியுள்ளேன்.என் 7 வ்யதில் நான் என் தோழி(தற்போது என் அண்ணி) அவள் அண்ணாவும், இரண்டு அக்காள் எல்லோரும் குளிக்கச் சென்றோம்.அந்த அண்ணாவும் ,தோழியின் மூத்த அக்காளும் ,குட்டையில் மூழ்கி இறந்தனர்.எங்கள் கண் முன்னே!(என் வாழ்வில் மறக்க முடியாத துயரம்.அந்த பாதிப்பு இன்னும்கூட என் பிள்ளைகளை நான் மட்டுமே நீச்சல் குளம் மற்றும் கடலில் குளிக்க அழைத்துச் செல்வேன்.)என் தங்கையை அந்த அண்ணா ரொம்ப அன்பாக பார்த்துக்கொள்வார்.அவர்கள் சாவுக்குப்பிறகு பல பேருடைய உயிரைக்குடித்த அந்த குட்டையில் பேய் உலாவுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.நாங்கள் எல்லாம் உறைந்து போய் கிடந்தோம்!                            
                         
                         சிலமாதங்களுக்குப் பிறகு என் வலதுபக்க அண்டைவீட்டுத் தோழியின் அண்ணா  பள்ளி முடிந்து நான் ,என் அண்ணா ,என் தங்கை மற்றும் அந்த பக்கத்துவீட்டு தோழன் எல்லாம் ஒன்றாகத்தான் வீடு வந்து சேர்ந்தோம்.அவன் வந்ததும் மதியம் உறங்கும் பழக்கம் உள்ளவன் .நமக்கு சுட்டுப்போட்டாலும் அன்று முதல் இன்று வரை மதியம் உறக்கம் வராது!நானும் தங்கையும் ,என் வீட்டுப்பின்னால் ,ஒரு குட்டிக்காட்டு அருகே கொய்யா பழம் பறிக்கச் சென்றோம்.பழம் பறித்து விட்டு திரும்போது ஓரு உருவம் எங்களை உரசி ஓடோடிச் சென்றது!யார் என்று திரும்பி பார்த்தால் ,பக்கத்துவீட்டுத் தோழன்.

                      ஏன் அவ்வளவு அவசரமாக ஓடுகிறான்? என்று நாங்களும் அவன் பின்னே ஓடினோம்.அவன் மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தான்.முன்பெல்லாம் திறந்த வெளி டாய்லெட் என்பதால் ,அவன் அங்கேதான் போயிருக்க வேண்டும் என்று நானும் தங்கையும் வீட்டுக்கு வந்தோம்.ஆனாலும் மனசு ஏதோப்போல இருப்பதால் ,பக்கத்துவீட்டுக்குப் போய் ‘தேவியம்மா(தோழனின் அக்கா பெயர்) சுரேஷ் எங்கே?ஏன் எங்களை உரசிட்டு வேகமா ஓடினிச்சி?’என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான்.அங்கே எனக்கு அதிர்ச்சியூட்டும் பதிலும் காட்சியும் இருந்தன?ஆம், தேவியம்மா ‘அவன் பள்ளிக்கூடம் முடிஞ்சி வந்தது முதல் உறங்குறானே?’என்றார்.அடுத்து அவன் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததையும் என் கண்ணால் பார்த்தேன்.தேவியம்மா என் கதையை ஒரு பொருட்டாக கேட்கவே இல்லை.சின்னப்பிள்ளை என்னம்மோ உளறுதுன்னு அவுங்க வேலையைக் கவனிச்சாங்க. ஓடி வந்து வீட்டில் சொன்னேன் ,அம்மா ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.நானும் தங்கையும் ஆடிப்போனோம்.அப்போ அங்கே ஓடியது யார்?
                                                                     
                       
                        அம்மா முன்பு ரப்பர் வெட்டுத்தொழிலாளி.காலை ஆறு மணிக்கு வேலைக்கு போயிடுவாங்க.பிறகுதான் அப்பா வேலைக்கு போவார்.நான் தங்கை ,தம்பி உறங்கும் அறையில் அம்மா இல்லை.நான் கண் விழித்துப்பார்த்தபோது ,அப்போ மின்சாரம் இல்லை,மண்ணெணெய் விளக்கில் ஓர் உருவம் என்னைக் கடந்து சென்றது.ஐயோ! என்னால் கத்தவோ ,அசையவோ முடியவில்லை.ஒரு 2 நிமிடங்களில் அந்த வெள்ளைப் பெண் உருவம் ,பலகை அறையை ஊடுருவி காணாமற்போனது.நான் பிணம்போல கிடந்தேன்!வியர்த்து விருவிருக்க அந்த உருவத்தைப்பார்க்க முடிந்தது ஆனால் கத்த முடியவில்லை?யாரோ வாயை அழுத்திப்பொத்திக்கொண்டதுபோல!சில மணித்துளிகள் கழித்து ,’அப்பா’என அலறினேன்.அப்பா ஒடி வந்து கட்டி அணைத்தார்.’ஏம்மா ,என்னம்மா?என்று பதறினார்.’நான் பார்த்தேன் என்னம்மோ போச்சுப்பா ,நான் பார்த்தேன் ‘என்று கத்தினேன்.தங்கையும் தம்பியும் எழுந்து ,பயத்தில் என்னிடம் வரவே இல்லை.
                                                             
                           
                         அப்பாவும் என்னைத் தேற்றுவதற்கு என்னென்னவோ சொன்னார்.’பேய் இரவில்தான் வரும்மா,இப்போ காலையாகிவிட்டது,வீட்டில் சாமிப்படம் இருக்கு,எப்படி பேய் வரும்?நல்ல பிள்ளை இல்லை ,மறந்துட்டு தூங்குமா’என்று சர்வசாதாரணமாய் கூறிவிட்டு வேலைக்குப் புறப்பட்டார்.அன்று முதல் அந்த அறைக்குள் நான் தனியா போனதாக நினைவே இல்லை.அங்கேயும் என் பேச்சை யாருமே கேட்கவில்லை ,மதிக்கவும் இல்லை.அப்போ நான் பார்த்தது என்ன?
                                                                       
                   
                          திருமணமாகி என் கணவரின் அக்காள் வீட்டில் ஓராண்டு குடியிருந்தேன் .அது மலாய்க்காரர்கள் அதிகம் வாழும் இடம்.என் மாமனார் அந்த வீட்டில் இருந்துதான் நோய்வாய்ப்பட்டு வேறு இடத்தில் போய் இறந்தார்.மலாய்க்காரர்கள் வாழும் பகுதியில் ‘ஜின்’என்று சொல்லும் ஒருவகைப்பேயை வளர்ப்பார்கள் என்று இங்கே அதிகம் கேள்விப்பட்டதுண்டு.நான் இருந்த அந்த வீட்டிலும் மூன்று தலை மனிதன் முன்பு வந்துபோனதை என் நாத்தனாரின் மகள் பார்த்து பயந்து போனதாக தகவல்கள் கேள்விப்பட்டதுண்டு!

                     இந்த கன்றாவியை எல்லாம் ஏன் என்னிடம் சொல்லுவாங்களோ தெரியாது?நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சமயம் ,ஒருநாள் வேலைக்குப்போகாமல் மதியம் அறையில் படுத்திருந்தேன்.வீட்டில் யாருமே இல்லை ,மதியம் இரண்டு மணி இருக்கும் ,திடிரென சமையலறையில் ஓர் வேகமான சத்தம்.ஆப்படிக்கரண்டியை ஓங்கி சட்டியில் அடித்தால் கேட்குமே அந்த சத்தம் .என்னால் நன்கு உணரமுடிந்தது.எப்பேர்பட்ட பயத்தின் உச்சக்கட்டத்திலும் திடிரென ஒரு தைரியம் சில நொடிகளில் வந்து போகும்!அது எனக்கு வந்தது.கதைவைத் திறந்து ,சட்டியை ஆராய்ச்சி செய்தேன்,அந்த சட்டி மேல் இருந்த ஆப்படிக்கரண்டியில் இருந்து  சொட்டு சொட்டாக எண்ணெய் ரொம்ப நேரமாய் ஒழுகிக்கொண்டிருப்பது  ஒழுகியது?அப்போ அது யார் வேலை?
                                                                 
                     

                    நான் தற்போது குடியிருக்கும் வீட்டிற்கு வந்த புதிதில் ,என் அண்டைவீட்டில் ஓர் இறப்பு.நான் வந்த புதிது என்பதால் எனக்கு பழக்கம் இல்லாததாலும்  நான் போகவில்லை.ஓர் இந்திய குடும்பம் அது.யார் இறந்தார் என்று கூட நான் கேட்டுக்கொள்ளவில்லை காரணம் நான் புதிய வீடு குடி வந்த டென்சன் ,குழந்தைபெற்று இரண்டுமாதங்கள் ,அந்த டென்சன் மறுபுறம்.ஓய்வில்லாத வாழ்க்கை.சில மாதங்கள் கழித்து ,அந்த குடும்பம் அந்த வீட்டைக் காலி பண்ணி சென்றார்கள்.கொஞ்ச காலம் கழித்து ,ஒரு சீனப்பெண்மணி தன் குடும்பத்தோடு குடியேறினார்.எங்கள் ப்ளாக்கில் இருக்கும் அனைத்து வீடுகளின் தபால் பெட்டிகளும் அந்த வீட்டு கதவுக்கு எதிர்புறம்தான் இருக்கும்.ஆகவே போகும்போதும் வரும்போது ,அந்த சீனப்பெண்மணியைப்பார்த்து சிரிப்பேன்.
                                                               

                   ஒருமுறை அந்த சீனப்பெண் ஓடோடி வந்து என்னிடம் அரைகுறை மலாய்மொழியில் ‘தங்கச்சி என் வீட்டில் முன்பு யாரும் இறந்து போனார்களா ?என்று பதற்றமாய் கேட்டார்.’நானும் யோசித்து ‘ஆமாம் முன்பு யாரோ இறந்து போனாங்க ,பிறகுதான் அந்த குடும்பம் காலி பண்ணி போனதாக கூறினேன்.’ஏன் ஆண்ட்டி என்னாச்சு?என்றேன்.’அந்த ஆண்ட்டி சொன்ன விசயம் எனக்கு தலைச்சுற்றி ,ஒருகணம் மூர்ச்சையானேன்.’நேற்று இரவு என் மகள் டாய்லெட் போய் அறைக்குள் நுழையும்போது .அவள் அறையிலிருந்து ஓர் உருவம் ,கூன் விழுந்த கிழவன் உருவம் நடக்க முடியாமல் அவளைக் கடந்துபோனதாம்???’.ஐயோ எனக்கு இரத்தமே உறஞ்சிப்போனது.இதை உறுதிப்படுத்த என் அண்டைவீட்டுத் தோழி (எனக்கு முன்பே அங்கே வசிப்பவர்) ,அவளிடம் ஓடிப்போய் ,அந்த வீட்டில் முன்பு யார் இறந்து போனது?என்று கேட்டேன்.ஒரு வயதான கூன் விழுந்த தாத்தா ‘என்றதும் என் தைரியத்துல தீயை வைக்க?என்று ஆடிப்போனேன்.
                                                                         
             
                       அன்று முதல் நான் தபால் பெட்டிக்கு போகவே மாட்டேன்.என் கணவருக்கு அந்த வேலை ,இல்லாவிட்டால் யாரும் பசங்க அந்தப்பக்கம் போனால் உதவி கேட்பேன்.சிறிது காலம் கழித்து அந்த சீன ஆண்ட்டியும் அந்த வீட்டைவிட்டு போனார்கள்.எனக்கும் பைய பைய பயம் குறைந்தது.இருந்தாலும் இரவு 7 மணிக்கு மேல் அந்த பக்கம் போகவே மாட்டேன்.இன்னும் கூட சிலவேளைகளில் என் வீட்டில் இரவில் சில நேரங்களில் உறக்கம் இல்லாமல் தவிக்கும்ப்போது வெளியே வந்து டிவியில் பாடல்கள் கேட்பேன்.அந்த சமயம் யாரோ ஃப்ரிட்ஜைத் திறப்ப்துபோல தோணும்! திடிரென யாரோ ஓடுவதுபோல தோணும்? சில நொடிகள் மூச்சு நின்று போவதுபோல இருக்கும் ,இருப்பினும் என் அப்பா சொல்லி சென்றது ‘வீட்டில் சாமிப்படம் இருக்குதானே??உனக்கு சாமி பிடிக்கும்தானே?அபப்டின்னா உன்னை எதுவும்  நெருங்கமுடியுமா?  இந்த வரிகள்தான் இந்த மோசமான  பயந்தாகொள்ளிக்கு பூஸ்ட்!