Tuesday 18 March 2014

இது சாபமா?அல்லது இயற்கை சீற்றமா?

              சுவர்ண பூமி! மலேசிய திருநாடு !வந்தாரை வாழவைக்கும் பசுமை நாடு!அதுதான் எங்கள் மலேசிய திருநாடு!உலக கரைவரைப்படத்தில் பிறநாடுகளோடு , எங்களை ஒப்பிட்டால் நாங்கள் ஒரு புள்ளியே!’திரைக்கடல் ஓடியும்  திரவியம் தேடு ’என்று தமிழ் மொழியில் மட்டும்தான் சொல்லிவைத்தார்களா அல்லது வேற்றுமொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளனரா ?என்று கேட்கும் அளவுக்கு வெளிநாட்டினர் இங்கே பஞ்சம் பொழைக்க வந்துவிட்டனர். இந்தோனேசியர்,வங்காளதேசி,பாகிஸ்தானி, நேப்பாளி ,தாயிஸ் , தமிழ்நாட்டினர்,பர்மா,மியான்மார்,வியட்நாமி  என்று பல நாட்டினர் முகாம் போட்டிருக்கும் நாடுதான் எங்கள் மலாயா திருநாடு! வேற்று நாட்டினர்களின் வருகையாலோ என்னவோ?இன வாரியாக  மூன்றாம் நிலையில் இருந்த தமிழர்கள் தற்போது நான்காம் நிலைக்கு தள்ளப்பட்ட  அவலமும் எங்கள் சொந்த ஊரில்  !
                 அந்த சுவர்ணபூமிக்குத்தான் தற்பொழுது கட்டம் சரியில்லைப்போலும்.ஏழரைச் சனியா?அல்லது அஷ்டம சனியா? எவராலும் கணிக்க முடியவில்லை.கடந்த சில மாதங்களாக மலேசிய நாட்டைப் பிடித்து உலுக்கிக்கொண்டிருக்கும் சில நெருக்கடிகள் அல்லது (எமகண்டம் என்றும் போட்டுக்கொள்ளலாம்) டெங்கி காய்ச்சல், அளவுக்கு அதிகமான வெயில்,தண்ணீர் பற்றாக்குறை,மோசமான புகைமூட்டம் , தற்போதைய(ஆனால் இறுதியாக என்றும் சொல்லிவிட முடியாது) மாயமாய் மறைந்த மாஸ் விமானம்!
              அப்பப்பா! சுகாதார அமைச்சர் தொடங்கி சுற்றுச்சூழல் அமைச்சர் என்று இறுதியாக பிரதமர் மற்றும் இடைக்கால போக்குவரத்து அமைச்சர் வரை ,அனைவரின்  தூக்கத்தையும்  விலைக்கு வாங்கிச் சென்ற அந்த நெருக்கடிகள் எங்கள் நாட்டுக்கு சாபமா?அல்லது இயற்கைத் தாயின் சீற்றமா? கடந்த ஆண்டுகளை விட மூன்று மடங்கு அதிகரித்த டெங்கி காய்ச்சல்! இந்த முறை டெங்கி காய்ச்சலில் பாதிக்கப்பட்ட பலரை இறப்பு விழுங்கிச் சென்றதுதான் வருத்தமான செய்தி.அதிக வெப்பம் காரணமாக கொசுக்கள் அதிகரித்தன,அதுவே டெங்கி நோய்க்கு வாசலாக அமைந்தன!
              பள்ளி ,அண்டைவீட்டார், உறவுகள் ,அறிமுகமானவர்கள் என்று யாரைக்கேட்டாலும் ,’டெங்கி சஸ்பெக்ட்’ மருத்துவமனையில் இருந்தேன்’! இது என்னம்மோ சந்தைக்குப்போய் வருவது போல  சர்வசாதரணமான பேச்சாக ஆகிப்போனது. டெங்கி காய்ச்சலில்  இறந்துபோன ,என் மகளின் சக வகுப்புத் தோழியின் தாயின் மரணம்பற்றிக்கூட  முகநூலில் பகிர்ந்திருக்கிறேன். டெங்கி மரண ஓலங்கள் ஓய்வதற்குள் , நீர் பற்றாக்குறை!அதிக வெயில் காரணமாக நீர் வறட்சி கண்டதும் இந்த சுவர்ண பூமியில்தான். அங்கும் இங்குமாக நீர் பங்கீட்டு முறையில் ஆங்காங்கே நீர் தட்டுப்பாடு செய்து ,அனைவருக்கு நீர் கிடைக்குமாறு பிரச்சைனையைக் களைந்தனர்.சிலவேளைகளில் செயற்கை மழையைப் பெய்யச் செய்வர்.
                   ஒருவழியாக அந்த பிரச்சனைக்கு ‘பைபை’ சொல்லி விடைகொடுக்கும்போது மோசமான புகை மூட்டம் நாட்டையே உலுக்கி கொண்டிருக்கிறது.அதிக வெப்பம் காரணமாக காடுகள் தானாக தீப்பிடித்து எரிந்தன.ஓர் ஆன்மீகவாதியும் ,நண்பருமான ஒருவர் தன் அனுபவத்தைக் கூறினார்.’சென்ற வாரம் ஜோகூர் மாநிலம் போனபோது என் 50 வயதில் இதுவரை நான் பார்க்காத ஒரு சம்பவம்மா அது!ஆம்,நெடுஞ்சாலையில் என் வலது மற்றும் இடப்பக்கம் காட்டுத்தீ பற்றிக்கொண்டு எரிந்தது.என் வாழ்க்கையில் அப்படி நான் பார்த்ததே இல்லை.இது யாருடைய வயித்தெரிச்சலோ?காட்டுக்குள் அப்படி  ஒரு காட்டம் செல்விம்மா’என்றார்.மோசமான புகைமூட்டத்துக்கு இதுவும் ஒரு காரணம்!சென்ற ஆண்டு API (AIR POLLUTION INDEX) 200-ஐத் தாண்டிய போது, சில மாநிலங்களில் ,மக்கள் சுவாசக்கோளாறு நோயில் பாதிப்பதைத் தவிர்க்க ஊரடங்கு  சட்டம் அமலாக்கப்பட்டது!. எந்த கேள்விகளும் அல்லாமலே பள்ளிகள் மூடப்பட்டன. .ஆனால் இந்த வருடம் API (AIR POLLUTION INDEX) 300-ஐத் தாண்டியும் ஒரு நடவடிக்கையும் எடுக்கமுடியாமல்  , திணறிக்கொண்டிருக்கும் அமைச்சர்கள்.ஆமாம்  அதற்குள் மாஸ் விமானம் மாயமாய் மறைந்தது.
                  மற்ற நெருக்கடிகளில் நாம் மூக்கை நுழைத்து ஆருடங்கள் கூறினாலும் விமானம் மாயமான விசயத்தில் எதையும் கணிக்க இயலவில்லை. அது விபத்தா, பிணைநாடகமா? கடத்தலா?அல்லது அரசியல் நாடகமா? ஏனோ எம் நாட்டிற்கு இப்படி ஒரு சத்திய சோதனை?1993-இல்  வேலை நிமித்தம் ஜப்பான் நாடு சென்றபோது ‘ஒரு ஜப்பானியர் என்னிடம் கேட்ட கேள்வி ,தூக்குமாட்டிக்கொள்வது போல இருந்தது?’நீ எந்த நாடு ?’என்றார். நானும் பந்தாவாக ’மலேசியா’என்றேன்.அதற்கு அவர் அறைகுறை ஆங்கிலத்தில் ஒரு மரத்தைக்காட்டி மலேசியாவில் எல்லோரும் மரத்தில் வீடு கட்டிதானே வாழ்ந்தார்கள்?”என்றார்.எங்கள் நாட்டின் வளர்ச்சி அவருக்கு தெரியவில்லையா?அல்லது நாங்கள் புகழ் அடைந்து வருவது அவருக்கு பொறாமையா? எனக்குள் எழுந்த கேள்வி.இதை என் மேலாளரிடம் கூறி குறைப்பட்டுக்கொண்டபோது .அவர் கூறியதாவது ‘ஆம் செல்வி,நம் நாடு இன்னும் இவனுங்க நாட்டைப்போல வளர்ச்சியடையவில்லை, அதான் மரத்தில் தொங்கிகிடக்கிறீங்களான்னு கேட்கிறான்,விட்டுத் தொலைங்க,ஒருநாளைக்கு உலகமே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு மலேசியாவை எல்லோரும் திரும்பி பார்ப்பார்கள்’என்றார்.
                    தற்போதைய விமானம் காணாமற் போன விசயத்தில் உலகமே எங்களைத் திரும்பி மட்டும் பார்க்கவில்லை,திருப்பி திருப்பி பார்ப்பதுதான் மிகுந்த வேதனையாய் இருக்கிறது.ஆம்,சில சொந்த விசயங்களுக்காக சிலரை வெறுத்தாலும் ,உலக நெருக்கடியில் சிக்குண்டு கிடக்கும் ,எங்கள் ஊர் அமைச்சர்கள் மேல் இனம் புரியாத பரிதாபம்  இருக்கவே செய்கிறது என்பதுதான் உண்மையும் கூட.இன்னும் என்னவெல்லாம் நாங்கள் அனுபவிக்கப்போகிறோம்? என்ன சாபம் ? யாருடைய கோபம்?அல்லது உலக அழிவுக்கு முதல் அறிகுறிகள் யாவும் எமது சுவர்ணபூமியில் இருந்து வெளிப்படுகிறதா?
                   ”விடியலை நோக்கி   நாங்களும் எங்கள் சுவர்ணபூமியும்”

Friday 14 March 2014

மாசற்ற மலேசியாவும்,மாஸ் விமானமும் !

நாட்கள் எட்டைத் தொட்டுவிட்டன,
எங்கே சென்றாய் எம் நாட்டு விமானமே?

மாசற்ற மலேசியா மேல்,
தூசுக்கள் கொட்டிக்கிடக்கும் வேளையில்,

மா(பேச்)சுக்களையும் கொட்டிச் சென்றாய்,
மாஸ் விமானமே!

அண்டைநாடும் வந்தன,
அயல்நாடுகளும் கைகோர்த்துக்கொண்டன,

அல்லாஹ்வையும் கேட்டேன்,
யேசுவையும் கேட்டேன்,
என் அப்பன் ஈசனையும் கேட்டேன்,

இன்னும் கிடைக்கவில்லையே?
இனியும் இறையை நம்பும் செல்வியே,

கடவுள் இருக்கிறானா?
இருந்தால் காட்டியிருப்பானே?

எள்ளி நகைக்கிறான்,
என் நாத்திக நண்பன்!

ஆன்மீக நம்பிக்கையும்
அசைவற்றுப்போகிறது,
அவனது இந்த சொற்கள்!

அமைச்சரும் அறிவிலியாக தெரிகிறான்!
ஆண்டவனும் அவன் பட்டியலில்
போய்ச்சேருகிறான்,

ஆத்திரம் மட்டுமே மிஞ்சியது,
அவர்கள் இருவரின் மேலும்!

தொலைக்காட்சியே !
நல்லதொரு பதிலைச் சொல்லாமல்,
எனக்கு நீ ,

தொல்லைக்காட்சியாக தெரிவது,
என் கோபமா?என் அறியாமையா?

இன்று இறங்கி இரந்து..இறந்துகொண்டிருக்கும்
என் உலக மக்களுக்கு 
இனிய செய்தியைச் சொல்வாயா?
ஈசா?யேசு?ஈசனே?

காத்திருக்கிறோம் கையில் பூக்களுடன்,
மலர் வளையங்கள் அல்ல,

என்பதையும்  இயற்கைக்கு,
இறுதியாகவும் உறுதியாகவும்
எச்சரிக்கிறோம்!
                


(இன்னும் ஏமாற்றைத்தயே கொடுக்கும் மாஸ் விமானத்தின் மேல் கோபம் எழுந்த போது மனதில் உதித்த வரிகள்)

Tuesday 11 March 2014

உனது உரிமை இழக்காதே!

          எப்போதுமே நான் என் அப்பாவிடம் கற்றுக்கொண்ட விசயம்,’நம் தரப்பில் தவறு இல்லை என்றால் யாருக்கும் பயப்படாமல் குரல் கொடு,உன் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்’.அதேப்போல கொஞ்சம் வளர்ந்து பெரியவளானதும் ஆசிரியர்கள்  நட்புக்கள் என்று  எல்லோரும் உன் உரிமை இழக்காதே ‘என கற்றுக்கொடுத்தார்கள்.
            சிறுவயதில் பிறர் முன்னிலையில் பேச ரொம்ப பயப்படுவோம்.அதற்கு காரணம் நாங்கள் வளர்க்கப்பட்ட சூழ்நிலை.கூட்டுக்குடும்பம் ,தாத்தா பாட்டி,சித்தப்பா சித்தி ,அத்தை மாமா என்று  எல்லோர் பேச்சுக்கும் கட்டுப்பட்டு வளர்ந்து வந்தோம்.சிலவேளைகளில் நாங்கள் சொல்லும் விசயம் சரியாக இருந்தாலும் அதை ஒரு பொருட்டா யாருமே மதிப்பதில்லை.அதனாலே அவையில் பேச பயப்படுவோம்.ஆனால் என் வயது ஒத்த பள்ளித்தோழிகள் வீட்டில் சில டிசிசன் எடுப்பதுவும் ,பெரிய மனுசிகள் போல் பேசுவதும் ,எனக்கு ஆச்சரியமுமாகவும் ,ஒரு பக்கம் பொறாமையாகவும் இருக்கும்(நமக்கு அந்த் ஆட்டோரிட்டிகள் இல்லையே?)இன்னும் கூட (திருமணமாகி பருவம் அடைந்த பிள்ளை இருந்தும்)சில விசயங்களைப் பேச நாங்கள் தயங்குவது எங்களுக்கு மட்டுமே தெரியும்!
         சரி விசயத்திற்கு வருவோம். அப்படிப்பட்ட பயந்த சூழலில் வளர்ந்த நான் ,சில காலக்கட்டம் வந்ததும் ,மிகவும் தைரியமாக குரல் கொடுக்க தொடங்கினேன்.என் தரப்பில் நியாயம் இருந்தால் யாருக்கும் பயப்படாமல் பேச ஆரம்பித்தேன்.அது எந்த லெவலில் உள்ளவர்களாக இருந்தாலும்.பலருக்கு அதனால் நம்மைப் பிடித்து போனது ஆனால் சிலருக்கு (அவுங்க தவற்றைச் சுட்டிக்காட்டுவதால்) பிடிக்காமல் போகும்.பள்ளிக்கூடமோ ,அலுவலகமோ, அல்லது உறவுகள் கூடும் இடமோ ,என்னுடைய தவறு இல்லை என்றால் தட்டிக்கேட்பேன்.
           அப்படித்தான் ஒருமுறை அந்த சம்பவம் நடந்தது.ஆம் நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காலம் அது.ஜப்பானிய அலுவலகத்தில் மிகவும் பொறுப்பான ஒரு வேலையில்(ஷிப்பிங் டிபார்ட்மெண்ட்) பிசியாக இருந்த காலம்.சும்மா விடுமுறை எல்லாம் எடுக்க முடியாது. என் வங்கி ஏடிஎம் அட்டையைத் தவறுதலாக மணிபர்சோடு தொலைக்காட்சியின் மேல் வைத்து விட்டேன் போல. சிலநாட்கள் கழித்து பணம் எடுக்க, இயந்திரத்தில் விட்டேன்,your card is deactiv என்று  ஏதோ ஒரு மேசேஜ் காட்டியது.மூன்று தடவைக்கு மேல் விட்டால் ஏடிஎம் கார்ட் உள்ளே மாட்டிக்கொள்ளும்.ஆகவே நான் வங்கியைத் தொடர்பு கொண்டேன்.
           அங்கே கணினி மட்டுமே பேசியது.அது சொன்னபடி நான்  எண்களை அழுத்தவே அது சொன்ன பதில்  ‘உடனே உன் கார்ட்டை எடுத்துக்கொண்டு ஹெச் .கியூ போ’.அங்கே மீண்டும் அவர்கள் அதை ஆக்டிவேட் பண்ணுவார்கள் என்றார்கள். ஐயோ !வேலை ஒருபுறம் ,நிறைமாதம் வேறு.எனக்கு ஹெச்.கியூ போகவும் தெரியாது?இப்படி பல பிரச்சனைகள்.சரி நண்பர் வங்கி ஊழியர் (ஆனால் அவர் வேற வங்கி) அவரிடம் கேட்டபோது,’அது ஒன்னும் பெரிய விசயம் அல்ல, அதை ஆக்டிவேட் பண்ணுவானுங்க,நீ கார்ட்டின் பின்னால் உள்ள 24 மணி நேர சேவைக்கு போன் பண்ணிப்பார்’என்றார்.
              24 மணி நேர சேவை என்றால் போன் பண்ணியவுடன் போனுக்கு பதில் சொல்ல வேண்டும்?ஆனால் நான் போன் பண்ணினேன், ரொம்ப நேரம் கழித்து ஒருவர் போனை எடுத்தார், விசயத்தைச் சொன்னேன்,அவர் வேற ஒருவருக்கு  அழைப்பை அனுப்பினார்,அங்கே மீண்டும் என் பிரச்சனையைச் சொன்னேன்,மீண்டும் வேற நபருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.ஆனால் அழைப்பு துண்டிக்கப்பட்டது.மீண்டும் போன் பண்ணினேன்,அதேப்போல விசயத்தைக் கேட்டு ,மீண்டும் கால் டிரான்ஸ்ஃபர்.என்னால் இப்பொழுது பொறுமை காக்க முடியவில்லை.அஹிம்சயைத் துறந்து ,வன்(வாய்ச்சொல்)முறையில் இறங்கினேன்.ஆமால் நேரே கால் செண்டருக்கு போன் பண்ணி ,’ஏடிஎம் கார்ட் பிரச்சனைப்பற்றி பேசனும் ,உயர் அதிகாரியின் எண்களைக்கொடுங்கள்’ என்றேன்.
          உடனே நம்பர் கொடுக்கப்பட்டது.அழைத்தேன்,அங்கே சனி வேற ரூபத்தில் போய் நின்றான்! ஆமாம் போன் பண்ணி உயர் அதிகாரியைக் கூப்பிடுங்க ‘பிளிஸ்’என்றேன்.போனை எடுத்தவள்,போனை வைத்துவிட்டு(மறந்துபோய்) ,தன் சக தோழியோடு ‘..........என்ற பெயரைச் சொல்லி ‘இன்னிக்கு பீசாங் கோரேங்(வாழைக்காய் பஜ்ஜியும்) தே தாரிக்( டீ) குடிக்க எங்கே போகலாம்’என்று அளவளாவிக்கொண்டிருந்தாள்.
            நாட்டுக்கு தேவையான அந்த உரையாடலைக் கேட்டு என்னால் அமைதி காக்க முடியவில்லை,அவள்களின் உரையாடலில் இடம்பெற்ற பெயரை  மட்டும் மனதில் கொண்டு, மீண்டும் போனை அழுத்தினேன்.’மீண்டும் அவளேதான்,நானும் ‘ஹலோ நான் உங்க கஸ்டமர்.எனக்கு பிரச்சனை என்றால் உதவாமல் ,அங்கும் இங்கும் அலைக்கழிக்கிறிங்களா?என்றேன். நியூஸ் பேப்பரில் போடவா? (சும்மாதான் ஒரு பந்தாவுக்கு?நாம் எழுதுவதை நமக்கே வாசிக்க முடியாது,பிரெஸ்காரன் படிக்கவா போறான்?)ஹோட் லைனில் போடவா?என்றேன்’(நம்மை மதிச்சி எவன் போடப்போறான் ?என்ற ரகசியம் நமக்குதானே தெரியும்?)எனக்கு உடனடியாக உயர் அதிகாரியிடம் பேச வேண்டும்’ என்றேன் கொஞ்சம் உயர்த்திய குரலில் .உடனே அந்த குமாஸ்தா  போனை உயர் அதிகாரிக்கு அனுப்பினாள்.பிறகு ஏதோ கிசு கிசு என்பதை என்னால் ஒட்டுக்கேட்க முடிந்தது.மறுமுனையில்:

‘ஹலோ ஐ அம் மிஸ்...................... வாட் இஸ் யூவர் ப்ராப்ளம்?,
 ‘யெஸ் மேம் ,ஐ அம் செல்வி, யூ ஆர் ?,
’ஐ அம் கவிதா’,
‘ஓ கவிதா !ஆர் யூ தமிழ்?,
‘யெஸ் ,பேசுவேன்’,
‘உங்க ஏடிஎம் அட்டையில் 24 மணி நேரம் என்றால் என்ன அர்த்தம்?’,
’ஏன்?என்ன ஆச்சு’
’.மேடம் கூப்பிட்டு எவ்வளவோ நேரம் கழித்துதான் போனை எடுக்கறாங்க,அது மட்டுமா?நான் நிறைமாத கர்ப்பிணி, என்னை ஹெச்.கியூ போகச்சொல்லி வேற அலைய வைக்கறிங்கள்?போன் போட்டவுடன் ஒரு பதில் கொடுக்க நான் சுமார் ஒரு மணி நேரம் என் பில்லை கறைக்கவேண்டி இருக்கு?இந்த லட்சணத்தில் உங்கள் குமாஸ்தாக்கள் வேலை முடிஞ்சி எங்கே போய் டீ குடிப்பது?’என்பதில்தான் குறியா இருக்காங்களே ஒழிய ,ஒரு போனுக்கு பதில் சொல்ல தகுதி இல்லை?இதுதான்  மிக சிறந்த சேவையா?என்று மனசில் உள்ளதை அப்படியே கொட்டித்தீர்த்தேன்.
           சற்று நேரம் அமைதியா கேட்டவர் ‘அந்த குமாஸ்தா பெயர் என்ன? அதான் போனை வைத்துவிட்டு, டீ குடிக்க....என்று கேட்பதற்குள் ,நான் பெயரைச் சொன்னேன்(ஒருவேளை நான் பொய் சொல்லுகிறேனா?என்று சோதிக்கவோ என்னவோ தெரியவில்லை)!
பெயரைக் கேட்டுவிட்டு  ’ஒன் மினிட் மேடம் செல்வி’என்று சில நிமிடங்கள் ஏதோ கிசு கிசு சம்பாஷனை நடந்தது.
            பிறகு அந்த அதிகாரி ‘செல்வி வெரி சாரி, நீங்கள் ஹெச்.கியூ எல்லாம் போகவேண்டாம் , ப்ரோசிடியர் படி அங்கேதான் போய் உங்கள் கார்ட்டை ஆக்டிவேட் பண்ணனும் ஆனால் உங்களுக்கு சில அசெளகரியங்கள் ஏற்பட்டதால் ,அதை நானே களைகிறேன்,உங்கள் ஏடிஎம் கார்ட்டின் பின்னால் குறித்துள்ள எண்களை மட்டும் கூறுங்கள் ‘என்றார்.பிறகு அரைமணி நேரம் கழித்து போய் ஏடிஎம்மில் பணம் எடுத்துப்பாருங்கள் ‘என்றார்.செல்வி பணம் எடுத்துவிட்டால் ,இதுதான் என் பெர்சனல் நம்பர் ,உடனே எனக்கு கால் பண்ணுங்கள்’என்றார்.
          நானும் அரைமணி நேரம் கழித்து போய் பணம் எடுத்தேன்,கார்ட் இயங்கியது. (நல்லவேளை என்  பேங்க் பேலன்ஸ் என்னவென்று அந்த அதிகாரி கேட்கவில்லை?)நூறு இநூறுக்குத்தான்  இந்த பில்டப்பா?என நினைச்சிருப்பாங்கள்?
சரி பணம் கிடைத்த மகிழ்ச்சி ,ஹெச் ,கியூ போய் அலையவேண்டியதில்லை என்ற மகிழ்ச்சி மறுபுறம்,ஓட்டமும் நடையுமாய் வந்து அவர் கொடுத்த எண்ணுக்கு போன் செய்தேன்.
’ரொம்ப நன்றி கவிதா ,கார்ட் வேலை செய்யுதுலா’என்றேன்.
‘ஓகே செல்வி, மீண்டும் எங்கள் வங்கியோடு இணைந்திருக்க கேட்டுக்கொள்கிறேன்’என்றார்.
‘கண்டிப்பாக ‘என்றேன்.
‘செல்வி தயவு செய்து நியூஸ்,ஹோட்லைனில் என் வங்கி பெயரைப்போட்டு அசிங்கப்படுத்தவேண்டாம்’என்று கெஞ்சிக்கேட்டுகொள்கிறேன்.நடந்த தவற்றுக்கு நான் வருந்துகிறேன்’என்றார்.
‘ஐயோ உட்கார்ந்த இடத்தில் என் பிரச்சனையை முடிச்சிக்கொடுத்திட்டிங்களே,கண்டிப்பாக அப்படியெல்லாம் போக மாட்டேன்’என்று நன்றி கூறி விடைபெற்றேன்!

            பேசவேண்டிய நேரத்தில் பேசினால் நடக்காத சிலகாரியமும் நகரும்!