Monday 12 August 2013

அறியாத வயதில்..அறிந்தும் அறியாமலும்!

          ஒரு குறிப்பிட்ட வயது வரை ,நாம் பண்ணாத குறும்புகளே இல்லையென்று சொல்லும் அளவுக்கு நாம் பண்ணிய குறும்புகள் அநேகம் !அநேகம்!.வீட்டில் இதனால் வாங்காத அடிகள் இல்லை, ஆனாலும் நிறுத்தியபாடில்லை.
                                             
                                                             


               ஒரு காலகட்டத்தில் நாங்கள் கூட்டாக சேர்ந்து செய்த குறும்புகளை (இதுவரையில் ரகசியமாய் வைத்திருந்த)கொஞ்சம் திரும்பிபார்க்கிறேன்.

              பக்கத்துவீட்டுத் தோழியின் அத்தை ,அவர் மூக்குகண்ணாடி ரொம்ப பவர்ஃபுல் பார்வை. சின்ன வயதில்தான் ,யாரும் எதையாவது போட்டிருந்தால் ,உடனே அதைப்போட்டு பார்க்க ஆசை வருமே?புதிய செருப்பு ,கண்ணாடி ,புது சட்டை(சேராவிட்டாலும் இவைகளைப் போட்டுப்பார்க்க ஆசை).
                     
                                                         

             அந்த அத்தை , ஒருநாள் கண்ணாடியை மறந்து என் வீட்டில் வைத்துவிட்டு போய்விட, என் பலநாள் ஆசை அன்று அரங்கேறியது.ஆம் அம்மா ‘போய் கொடுத்துட்டு வா’என்று அனுப்ப ,நானும் தங்கையும் பின்னால் வழியாக கொள்ளைப் பக்கம் போனோம்.அம்மா தலை மறைந்தவுடன்  அதைப்போட்டுப்பார்த்தோம்.

              எல்லாமே கிட்ட கிட்ட பெரிசு பெரிசாய் தெரிந்தது.ஒரே ஆச்சரியம் ,என்னம்மோ ஆச்சரியம். ஐயோ இங்கே பார் ,அங்கே பார் என்று கூவிக்கொண்டே ,ஒரு சிறிய கால்வாய் கொள்ளைக்கு இடையில் ஓடும்,அதைக் கண்ணாடி அணிந்தவாறே நான் தாண்டுவேனா?

          ‘தடால் என கால்வாயில் விழுந்தேன்!ஆமாம் அது கிட்ட பார்வை கண்ணாடி ,தூரமாக இருந்த கால்வாய் ,கிட்டே தெரியுமா, தாண்டிகுதிக்க கால் எங்கேயோ போய் ஊன்றி, கால்வாயில் விழுந்து, அழுகை ஒரு புறம் ,பயம் மறுபுறம்.நல்லவேளை கண்ணாடிக்கு ஒரு பாதிப்பும் இல்லை. 

              என் அப்பா வழி பாட்டி ,தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்.இரவில் பீடி குடிக்கும் பழக்கம் உடையவர். வெற்றிலைப்பாக்கும் மெல்லுவார். அந்த பீடி வாசம் ,என்னமோ போல் இருக்கும்.

             பாட்டிக்கு வெற்றிலை இடித்துக்கொடுக்கும் போதெல்லாம் ,அந்த வாசம் பிடித்துபோகவே(உரலில் இடிப்பதால் ஒரு வித வாசம் )திருட்டுத்தனமாய் இடித்த வெற்றிலையை நாங்கள் போட்டு மெல்லுவோம். (இன்னும்கூட விசேச வீட்டுக்குப்போனால் ,வெற்றிலை சாப்பிடுவோம்!) அதேப்போல பீடி இழுக்க ஆசை வந்தது.

           ஒருநாள் வீட்டில் யாருமே இல்லாத சமயம் ,நானும் அக்காவும் கட்டிலுக்கு அடியில் புகுந்துகொண்டு பீடியைப் பற்ற வைத்து வாயில் வச்சி ஊத’ஐயோ தொண்டையில் விசவாயு தாக்கியது போல ஒரு உணர்வு. புகை தலைக்கேறியது.என்னால் தாங்க முடியவில்லை, கட்டில் அடியிலிருந்து வெளியே ஓடி வந்து ,இரும்பி இரும்பி நெஞ்சே உடைந்துபோவதுபோல கட்டிலில் விழுந்தேன்.அக்காவும் அதே போல !
                                                               
                                                                     

             நல்லவேளை பாட்டியின் பழக்கத்தில் வெற்றிலையை மெல்ல மட்டும்  பழகினோம்,பீடி கொடுத்த பாடம்,அன்றே அதுக்கு சுவாஹ!.

             கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல,பக்கத்து வீட்டு தோழி மற்றும் அவள் அண்ணனோடு  சேர்ந்துகொண்டு (அவுங்க வணங்கும் காளி சாமிக்கு) ,முட்டை அவித்து சாமி கும்பிட ,சீனர் வீட்டில் போய் முட்டைகளைத் திருடி,சீனத்திக்கு தெரிய வரவே, அப்பாவுக்கு தகவல் வந்தது

            வேலை முடிந்து வந்த அப்பா வீட்டில் நுழையும்போதே   என் பெயரையும் அண்ணா பெயரையும் சொல்லி வேகமாய் கத்தி அழைத்து , விசாரித்து முடிவில் அப்பாவிடம் பொய் சொல்லமுடியாமல் உண்மையை உளறி முதலும் கடைசியுமாய் ஓர் அறை அன்று அப்பாவிடம் வாங்கினேன்.அன்று முதல் அந்த தோழியின் நட்பும் முறிந்தது(சில காலங்களுக்கு) திருட்டு பழக்கமும் விடைபெற்றது.
                                                                 
           
             என்னை எப்போதும் வெறுப்பேத்தும் தோழி(முட்டைத் திருடி அடி வாங்கியதால் பழி வாங்க எண்ணி) அவள் பிறந்த நாள் அன்று ,அவளுக்கு அவள் மாமா பரிசு கொடுத்தை ரொம்ப பீத்திக்கொண்டாள்!

            அந்த மகிழ்ச்சியை பாழ்படுத்த எண்ணி , நானும் தங்கையும் ஒரு பெட்டியை எடுத்து ,அதில் கோழிக்கொட்டகை மற்றும் ஆட்டுக்கொட்டகையில் உள்ள காய்ந்துபோன கழிவுகளைப்பொறுக்கி பெட்டியில் வைத்து ,அவள் பெயரை எழுதி ,அவள் வீட்டில் முன்னால் வைத்து தலைமறைவாகினோம். 

                                                                   

          மாலையில் (எங்க கெட்ட நேரம்) அவள் அம்மா அந்த பெட்டியைத் திறந்து பார்த்து ,என் அம்மாவை அழைத்து ‘யார் வேலைன்னு தெரியல ,பாருங்க இப்படியா?’என்று முறையிட்டுச் சென்றார்.

             அந்த பெட்டியை நாங்கள் கையில் வைத்திருந்ததை அம்மா ஏற்கவனே பார்த்துவிட்டதால் ,அது நாங்கள் வைத்த சூன்யம் என்று  தெரிய வரவே , அடி பின்னி எடுத்தது மட்டுமல்லாமல் ,அவளிடம் மன்னிப்பும் கேட்க வைத்தார்.அடி ஒரு பக்கம் ,அவமானம் மற்றொரு பக்கம் புடுங்கி தின்றது.

           சிலபல காரணங்களால் பக்கத்துவீட்டுத் தோழி வீட்டிற்கு போகவோ ,பேசவோ கூடாது என்று வீட்டில் ரூல்ஸ் போட்ட பிறகும் ,பள்ளியில் பேசிக்கொள்வோம். வீடு வரை ஒன்றாக வருவோம் , வீட்டை அடைந்ததும் நல்ல பிள்ளையாய் மாறிவிடுவோம்.

           பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் கொய்யாக்காய் பறிப்பது வழக்கம். சீனர் வீட்டு மரத்தில் ஒரு ஆள் , காவல் நிற்க ,இன்னொரு ஆள் மரம் ஏறுவோம்.பிறகு அவர் இறங்கி வந்தது ,காவல் காத்தவர் டெர்ன்.

           நான் மரம் ஏறி கொய்யாக்காய் பறித்து விட்டு இறங்கியதும் ,தோழி ஏறினாள். பொதுவாக அவ படிப்பைத் தவிர மற்ற விசயங்களில் என்னை விட கெட்டி. அவள் மரம் ஏறியதை ஒரு பொருட்டாக மதிக்காமல் ,காவல் காப்பதை விட்டுவிட்டு நான் பறித்த கொய்யாக்காய்களை தின்றுக்கொண்டிருக்கும்போது ,மரத்தில் இருந்து அவள் பாய்ந்து விழுந்து ‘ஓடு ஓடு ,சீனன் வந்துட்டான் ‘என்று  அலற ,புத்தகப்பையை எடுத்துக்கொண்டு ,ஓடிய ஓட்டம் இருக்கே?

                                                                     
          ஒலிம்பிக்கில் ஓடி இருந்தால் தங்கப்பதக்கம் நிச்சயம்.அந்த சம்பவத்தைக்கூட நான் வேண்டும் என்றே அவளைச் சீனனிடம் மாட்டிவிட்டதாக  எண்ணிக்கொகொஞ்சகாலம் என்னோடு பேசாமல் இருந்தாள்.

          நான் ,அண்ணா ,என் தோழி(அண்ணாவின் மனவி) அவள் அண்ணா,இரண்டு அக்காள்கள் என எல்லோரும் நாய்க்குட்டியைக் கூட்டிக்கொண்டு ,குட்டைக்கு குளிக்கப்போய் ,நாய் குட்டையில் விழ அதைக்காப்பாற்ற அவள் அண்ணன் போய் விழுந்தார்,அவரைக் காப்பாற்ற அவள் அக்கா போய் விழ,இதைக்கண்ட நாங்கள் அலறி கத்தி ,ஊரையே கூட்டினோம். ஆனால் அந்த அண்ணாவும் அக்காவும் நாய்க்குட்டியும் இறந்து போயினர். 
                                                                     

             அன்று முதல் குறும்புகளைக் குறைத்தோம் .ஆந்த சம்பவத்தில் விழுந்த ஒவ்வொருஅடிதான் இன்றுவரை என் பிள்ளைகளையும் சரி யார் வீட்டுப்பிள்ளையானாலும் நீரில் விளையாடுவது என்றால் நான் அனுமதிக்கவேமாட்டேன்.
                                                       
                                       
          பிறகு காலங்கள் உருண்டோடின ,வளர்ந்தோம் . சிலபழக்கவழக்கங்களை விட்டோம். பிறகு கிராம வாழ்க்கையை மறந்தோம்.தற்பொழுது ந(ர)கர வாழ்க்கையில் ,நம் பிள்ளைகளை எதுவும் செய்யவிடாமல் நம் விருப்பப்படியே செயல்பட வைக்கிறோம்.என்ன பரிதாபம் ? பிள்ளைகள் பக்கத்து வீட்டிற்கு போக விடுவதில்லை, நம் கண் முன்னேதான் விளையாடனும்.படம் பார்த்து விளையாட்டாய் சிகரெட் பிடிப்பதுபோல , சைகையில் செய்தால் கூட அடி கொடுக்கிறோம் ,கெட்ட பழக்கம் வந்து விடும் என்ற பயத்தில்?நாம் அனுபவித்த எதையுமே அவர்கள் ஐம்பது விழுக்காடு கூட அனுபவிக்கவில்லை என்பதுதான் மிக பெரிய உண்மை!






12 comments:

  1. எந்தவித ஒளிவு மறைவின்றி தங்களது அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள்... அருமை... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. Well, the days of our childhood and today is entirely different and hence we can't compare it. The circumstances (neighbors & relatives) are entirely different and hence we are more careful about the Kids...
    Last but not the Least, this Generation Kids didn't want to "Go Out & Play"..
    But your compilation is excellent and wonderful..

    Keep it up..

    ReplyDelete
  3. ஜாலியாக ஆரம்பித்து.....சோகத்தில் முடித்து விட்டீர்களே....தண்ணீரில் இறந்தவர்களுக்கு அஞ்சலிகள்...

    ReplyDelete
  4. எப்போதும் சிறு வயதுக் குறும்புகள் சுவாரசியம் தான்!இந்தக் காலப் பிள்ளைகளுக்கு எதுவுமே கொடுத்து வைக்கவில்ல.எம்மால் பகிர்ந்து கொள்ளவும் முடிவதில்லை,வீணாக அவர்கள் ஏங்க வேண்டுமா என்று.............///கடேசிப் பாரா.........................ஹூம்,விதி வலியது.ஆழ்ந்த அஞ்சலிகள்.

    ReplyDelete
  5. இனிய வணக்கம் சகோதரி..
    அருமையான ஆக்கம்...
    பசுமை இலை மிதக்கும் தெளிந்த நீரோடை
    போல காலக்கண்ணாடி போட்டுக்கொண்டு
    அப்பட்டமாக தெரிவிக்கிறது இளமைக்கால
    வாழ்க்கையை...
    அன்று நாம் செய்த சேட்டைகள் அப்படியே
    கண்முன் விரிகிறது...
    ===
    இன்று குழந்தைகள் வளரும் முறை நீங்கள் கூறியதைப்போல
    கொஞ்சம் வருத்தத்தை அளிக்கிறது என்பது நிதர்சனமான உண்மை...
    காலத்தின் கோலம்.. அப்படி ஆக்கிவிட்டது..
    இது நமக்கு மட்டுமல்ல பன்னாட்டு பிரச்சனை..
    ==
    உங்கள் எழுத்துக்களுக்கு
    இதோ பூங்கொத்து அன்புப் பரிசு..
    மனமார்ந்த கைதட்டல்கள்...

    ReplyDelete
  6. என்னுள்ளும் அந்த பால்ய கால நினைவுகளை
    நினைவுறுத்திப் போகுது தங்கள் பதிவு
    என்னுடைய காலத்திலும் இப்படி ஒரு சோகம்
    இருந்ததால் தங்கள் பதிவு என்னை
    அதிகம் பாதித்தது

    ReplyDelete
  7. என்னுள்ளும் அந்த பால்ய கால நினைவுகளை
    நினைவுறுத்திப் போகுது தங்கள் பதிவு
    என்னுடைய காலத்திலும் இப்படி ஒரு சோகம்
    இருந்ததால் தங்கள் பதிவு என்னை
    அதிகம் பாதித்தது

    ReplyDelete
  8. என்னுள்ளும் அந்த பால்ய கால நினைவுகளை
    நினைவுறுத்திப் போகுது தங்கள் பதிவு
    என்னுடைய காலத்திலும் இப்படி ஒரு சோகம்
    இருந்ததால் தங்கள் பதிவு என்னை
    அதிகம் பாதித்தது

    ReplyDelete
  9. நான் வேண்டும் என்றே அவளைச் சீனனிடம் மாட்டிவிட்டதாக எண்ணிக்கொகொஞ்சகாலம் என்னோடு பேசாமல் இருந்தாள்.// உண்மைதானே...

    ReplyDelete
  10. நாம் அனுபவித்த எதையுமே அவர்கள் ஐம்பது விழுக்காடு கூட அனுபவிக்கவில்லை என்பதுதான் மிக பெரிய உண்மை!// ஆம். ஒவ்வொரு தலைமுறையினரும் அனுபவித்த வாழ்க்கை அடுத்த தலைமுறைக்கு கிடைப்பதில்லை என்பது வருந்தக் கூடிய விஷயந்தான்.

    ReplyDelete
  11. உங்கள் சுட்டியான கதைகளை படித்தேன் சிரித்தேன்.........

    ReplyDelete
  12. மழலப் பருவத்தின் மட்டற்ற குறும்பும்,பள்ளிப் பருவத்தின் பயமற்ற பல் செயலும்,கல்லூரிப் பருவத்தின் காதலெனும் விளையாட்டும்.உலகியலில் நடைமுறையே! ஆனால் எல்லார்க்கும் கிடைப்பதில்லை.காலங்கள் கடந்தபின்னே கற்பனையில் நினைக்கின்றோம் இப்படியும் இருந்டோமா என்று. ஆனால் இன்று எல்லாமே கனவுதான் என்று வருந்துகிறோம்.

    ReplyDelete