Thursday 6 December 2012

ஈகோ என்ற ஈரெழுத்து

                                           
     அந்த ஈரெழுத்து ,உடல் என்ற மூவெழுத்துக்குள் புகுந்து இந்த ஆன்மாவை  ஆட்டிப்படைக்கும் ஆதிக்கம் இருக்கே?ஆங்கிலத்தில் ஈகோவை edging god out என்று சொல்வதாக ஒரு புத்தகத்தில்  படித்த ஞாபகம்!படிக்காதவனுக்கு  பணம் இருந்தால் ஈகோ.படித்தவனுக்கு தான் வகிக்கும் பட்டம் பதவியில் ஈகோ.பணமும் இருந்து பதவியும் இருந்தால்...கேட்கவா வேண்டும் ஆனால் எல்லோரும் அப்படி அல்ல!மனைவி கணவனை விட கொஞ்சம் அதிகம் படித்திருந்தாலோ அல்லது சம்பாதித்தாலோ,கணவனுக்கு கண்டெய்னர் கணக்கில் ஈகோ வந்துவிடும்.அவள் ரெண்டும் ரெண்டும் நான்கு என்று சொன்னாள் கூட ,சில கணவர்மார்கள் இல்லை ’4’ என்று ஆங்கிலத்தில் சொல்வதும் சில இடங்களில் கண்டதுண்டு.நன்றாக ஆங்கில புலமை நம்மில் சிலருக்கு இருந்தால்,தாய்மொழி பேசும் தமிழனைக்கண்டால் ஈகோ!
                                   
         எத்தனை மனிதர்கள் தாங்கள் செய்தது தப்பு என்று தெரியவரும் வேளையில், மனசார மன்னிப்புக்கேட்கிறோம்?எப்படி கேட்பது,மன்னிப்பு கேட்பது நமெக்கெல்லாம் அம்புட்டு பெரிய கேவலமான செயலாச்சே?மன்னிப்பது வெட்கமல்ல,மன்னிக்காமல் இருப்பதுதான் கேவலமான செயல் என்று எங்கோ படித்த ஞாபகம்.நமக்கு எப்போது கோபம் வருகிறது?நாம் எங்கே தோற்றுப்போகிறோமோ,அங்கேதான் நமக்கு கோபமும்..அதனையடுத்து ஈகோவும் தலைத்தூக்கி நிற்கும்.ஒரு சிலகுருமார்களுக்கு தன் சிஷ்யன் தன்னைவிட கொஞ்சம் முதிர்ச்சியடைந்திருந்தாலும் ஏற்றுக்கொள்ள மனம் இடம் கொடுப்பதில்லை. ஒரு சிலரிடம் ஒரு பழக்கம் உண்டு.அவர்கள் படித்த ஒன்றை நம்மிடம் பகிரும்போது ,’ஓ இதுவா ,நான் ஏற்கனவே படிச்சிட்டேன்’என்று உண்மையைச் சொன்னால் கூட அவர்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது?அதெப்படி நான் இலக்கியவாதி ,படைப்பாளன் என்னை முந்திக்கொண்டு நீ படித்திருக்கமுடியும்?
                                       
      உன் மதம் பெரிசா என் மதம் பெரிசா?என்பதில் ஒரு ஈகோ,அதைவிட,உன் ஜாதி பெரிசா என் ஜாதி பெரிசா என்பதில் ஓர் அகங்காரம்.என் கடவுள்தான் முதலில் வந்தார்,பிறகுதான் உன் கடவுள் என்று கூவும் ஒரு ரகம்.இனங்களுக்குள் ஒரு பிரச்சனை.எந்த இனம்,எவன் பெரியவன்?ஆப்ரிக்க கறுப்பின மக்களுக்கு தங்களை ‘கறுப்பன்’என்று சொன்னால்தான் விரும்புவார்களாம்.ஆனால் எங்கள் ஊரில் சீனன் ,எங்களை கறுப்பன் என்றால் ,அடித்தே கொன்று விடலாம் போல  ஓர் உணர்வு வரும்!ஏன் அவ்வளவு தூரம் போவானேன்,நம் புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூட சாமிகளுக்கிடையே யார் பெரியவன் என்ற ஆணவம் உள்ள  கதைகள் கேட்டதுண்டு.அதெவெல்லாம் ஏதோ ஒன்றை நமக்கு உணர்த்தவே ஒழிய வேறொன்றுமில்லை.அவருக்கே அப்படி என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்?அப்படித்தானே கேட்க தோணுது?

                                  
      தெரிந்த தோழி ஒருவள் அரசு வேலை.நம்மில் சிலபெண்களுக்கு ,அரசுப்பணி என்றால் சொல்லவே தேவையில்லை.திருமணம் ஆகி பல பிரச்சனைகளோடு வாழ்க்கை.எல்லோருக்கும் அப்படித்தானே ஆனால் கண்வன் குடும்பத்தில் பிரச்சனை.கணவ்ர் குடும்ப உறுப்பினர்கள் படிக்காதவர்கள் தான் படித்தவள் என்கிற அகங்காரம் தலைத்தூக்கவே,ஆட்டமாய் ஆடுகிறாள்.விளைவு, விவாகம் ரத்து!தன் கண்வன் ரொம்ப நல்லவர்,’அவருக்கு என்னைத் தள்ளிவைக்க மனம் இருக்காது ,அவர்கள் குடும்பம்தான் இப்படி செய்ய தூண்டியது?ஆமாம் குடும்ப உறுப்பினர்கள் தம்பி மனைவியோடு சேரவே கூடாது என்ற ஈகோ?இந்த வரட்டுக்கெளரவம் ,கணவன் மனதில் ஆசை இருந்தாலும் ,எப்படி நாமாக போவது?குடும்பத்தை எதிர்த்துக்கொண்டு எப்படி செயல்படுவது என்று தன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்.

                              
      இன்னொருபுறம் ,கண்வனுக்கும் மனைவிக்கும் இடையே சுமூகமான உறவு.மாமியார் மருமகள் பிரச்சனைதான்.ஊதி ஊதி பெரிதாக வெடிக்க,மருமகள் வெளியேற்றம்.அம்மாவுக்கு கணவர் இல்லை,கருணையால் மகனைத் தன் வசம் இழுக்கிறார்.மருமகளிடம் தோற்றுப்போகக்கூடாது என்ற ஈகோ?விளைவு மகனின் வாழ்க்கை பகடைக்காய்!மகனும் அம்மா பிள்ளையாம்,எங்கம்மாவை மதிக்காதவள் என்று பிள்ளையை தாயிடம் இருந்து அபகரித்துக்கொண்டு ,மனைவியை தள்ளி வைக்கிறான்.தாயோடு அந்த கணவன் இருக்கிறான் ஆனால் அவன் பிள்ளை மட்டும் தன் தாயோடு இல்லாமல் பாட்டியோடு?என்ன நியாயம்?இப்படி எத்தனை வாழவேண்டிய தம்பதிகள் அகங்காரம் ஆணவச் செருக்கினால் ,மனதில் ஆசை இருந்தும் ஈகோ தடுக்கிறது.இன்னும் தனிமனிதனாய் ஆனால் ஆசைகளை சுமந்துகொண்டு.எத்தனைக் காதல்கள் ஈகோ என்ற கல்லறைக்குள் உயிருடன் புதைக்கப்பட்டு ,வாழத்துடித்துக்கொண்டிருக்கின்றன?

                                
          ஒரே குடும்பத்தில் ஒரே வயிற்றில் பிறந்த உடன்பிறப்புகள் எத்தனைக் குடும்பத்தில் உறவாடிக்கொண்டிருக்கின்றன?அவன் அதைச் சொன்னான்,இவள் இதைச் செய்தால் ,நான் சாகும்வரை முகத்திலே விழிக்கவேண்டாம்?நாம் யார் பிறரை அப்படி சொல்ல.நம்மில் இருக்கம் ஆன்மாதானே இந்த உடலுக்கு சொந்தல்.இடையில் வாடிக்கையாக  வந்து இவ்வுடலில் புகுந்துகொண்ட நமக்கு என்ன உரிமை இருக்கு?ஆனால் மாற்றான் தாயின் வயிற்றில் பிறந்தாலும் ,நட்பு என்கிற பெயரில் எத்தனை உயிர்கள் உடன்பிற்ப்புகளாகவே வாழ்ந்து வருகிறோம்?என்றாவது ஒருநாள் இதைப்பற்றி யோசித்திருப்போமா?நமக்குத்தான் அதுக்கெல்லாம் நேரம் இல்லையே?உயிருக்குயிராய் இருந்த நட்புகள் ,இன்று கண்ணுக்குத்தெரியாத தூரத்தில் முடங்கிக்கிடப்பதுவும் ஈகோவின் வருகைதானே?ஒருவர் அடிக்கடி இப்படி சொல்வாராம்,’என்னைக் கேட்காமல் என் வீட்டில் மூச்சுக்கூட விடமாட்டார்கள் ,அப்படி ஓர் ஆணவம்,அகங்காரம்!இறுதியில்,அவர் இறக்கவிருந்த சமயங்களில் அவர் மூச்சை அவரே விடமுடியாமல் செயற்கை மூச்சு(கேஸ்) வழி அவருக்கு போய்க்கொண்டிருந்ததாம்.சுகி.சிவம் ஐயாவின் புத்தகத்தில் படித்து நன்றாக சிரித்தேன். 
                                   

       ஒரு கதை.ஒரு காகம் ஒரு மாமிசத்துண்டைக் கவ்விக்கொண்டு பற்க்கிறது.அதனைத் துரத்திக்கொண்டு கழுகும் சில பறவைகளும் பறக்கின்றன.காகமும் உயரப் பறக்கிறது.பறவைகள் விட்டபாடில்லை.இறுதியில் காகம் உயரப் பறந்து சென்று மாமிசத் துண்டை ,கீழே போடுகிறது,மற்ற பறவைகள் ,அதனை நோக்கி கீழே பறக்கின்றன.காகத்துக்கு மற்ற பறவைகளிடமிருந்து விடுதலை கிடைக்கிறது.அப்ப்போதான் காகத்துக்குப் புரிந்ததாம் ‘நான் மாமிசத்துண்டி இழந்தது என்னவோ உண்மைதான் ஆனால் நான் இப்போது பெற்றிருப்பது எத்தனைப் பெரிய சுதந்திரம்’என்று?
நமக்குள் இருக்கும் அகங்காரம் கூட இந்த மாமிசத் துண்டைப்போலத்தான்.இதை நாம் கைவிட்டுவிட்டால் வாழ்க்கை லேசானதாக ஆகிவிடும்.


      விட்டுப்போன உறவுகள்,பந்தங்கள் ,நட்புகள் ,காதல்கள் ,திருமணங்கள் அனைத்தையும்  இனி எப்பொழுது மீட்டுக்கொண்டு வரப்போகிறோம் அல்லது அவைகளாக வரத்தான் போகுதா?நாம் வாடிக்கையாக வந்து குடியிருக்கும் இவ்வுடலுக்கு எப்பொழுது காலாவதி நோட்டிஸ் இறைவன் அனுப்பபோகிறானோ?பிறரை மகிழவைத்துப்பார்,உனக்கு மகிழ்ச்சி கிட்டும் என்பது போல்,நம்மால் முடிந்தவரை ஈகோவை தூரவைத்து இன்பத்தை அருகில் கொண்டு வருவோம்.இந்த உலகில் நாம் ஒரு சுற்றுப்பயணியாக வந்திருக்கிறோம்.மீண்டும் திரும்பிபோக,வண்டியைத் தயார் நிலையில் வைத்திருக்கிறான் இறைவன்.நாம் கடந்து போகும் காலம் வெகுதூரமில்லை.உண்மையாக நேசித்தவர்களைத்தான் நாம் உரிமையோடு கோபித்துக்கொள்வோம்.அதே உரிமையில் மீண்டும் உறவைப் புதுப்பித்துக்கொள்ளுவதில் என்ன தயக்கம்?

                                                       
      நமது வேதத்தில் அர்த்த சாஸ்த்திரம் ,தர்ம சாஸ்த்திரம்,காம சாஸ்த்திரம் ,மோஷ சாஸ்த்திரம் என்று நான்கு வகைகள்.இதில் கடைசியாக சொல்லும் மோஷ சாஸ்த்திரத்தில் ‘அகங்காரத்தை விட்டொழித்தால்தான் நமக்குள் இருக்கும் ஆனந்த சொரூபத்தை நம்மால் தரிசிக்க முடியும்’என்று கூறப்படுகிறது.(மனசே ரிலாக்ஸ் பிளிஸ்).இறைவன் என்கிற கடலில் நாம் ஒரு அலை என்பதை உணராத அகங்கார ஆட்டங்கள் அவஸ்தை..அசிங்கம்..அலங்கோலம்.நமது ஒவ்வொரு இயக்கமும் கடவுளின் இயக்கமே என்பதை உணரும் பூரண சரணாகதியே ஞானத்தின் பிறப்பு,நிம்மதி  நிலை!                     


                  

                                                               

No comments:

Post a Comment