Sunday 13 April 2014

சொக்கா ..எனக்கில்லை...எனக்கில்லை!

                 1993-இல்  நான் நீதிமன்ற  மொழிபெயர்ப்பாளர் வேலைக்கு தகுதியைக் கொண்டிருந்ததால்  எனக்கு நேர்காணலுக்கு  அழைப்பு வந்தது. முதன்முதலாக அரசு வேலைக்கு நேர்காணல் செல்லவிருந்ததால் ஒரே பரபரப்பு.மேலும் அந்த சமயம்தான் நான் ஜப்பானியர் நிறுவனத்தில் வேலைக்குச்  சேர்ந்து நல்ல நட்புக்களை எல்லாம் சம்பாதித்து மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த நேரம் என்றும் சொல்லலாம். ஒரு புறம் அந்த வேலை கிடைத்தால் ,இவர்களை எல்லாம் இழந்து விடுவோமோ ?என்ற கவலை.மறுபுறம் அரசு வேலை. அப்பா நினைத்தது போல  வீட்டில் யாராவது ஒருவராவது  செய்யலாமே,என்கிற ஏக்கம்.
                 அரசு வேலைக்கு நேர்காணல் என்பதால் ,போலிசில் பணிபுரியும் என் தாய்மாமன் நிறைய விசயங்களை சொல்லிக்கொடுத்தார்.காபிநெட்ல உள்ள அமைச்சர்கள் பெயர் எல்லாம் நினைவில் வைத்துக்கொள் ,கேட்பானுங்க’என்றெல்லாம் என்னை ஓரளவு தைரியப்படுத்தி அவரே அவர் காரில் வந்து ஏற்றிக்கொண்டு போனார். அங்கே போய் நுழைந்தவுடன் நான் மட்டுமே சின்னப்பொண்ணு . எல்லோரும் ரிட்டையர்ட் ஆசிரியர்கள்,அரசு வேலையில் ரிட்டையர்ட் ஆன பல கிழங்களும் வந்து காத்துகிடந்தனர்.
               எனக்கு ஒரே படபடப்பு.மாமா ரொம்ப தைரியப்படுத்தினார்.’இந்த ரிட்டையர்ட் கிழங்களுக்கு இங்கு என்ன வேலை?’ என மாமாவும் முணக்கிகொண்டே அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருக்க ,என்னை அழைத்தனர்.உள்ளே நுழைந்தால் இரண்டு வயசான தமிழ் அதிகாரிகள்.’உட்காரச் சொன்னார்கள்.பிறகு ஆங்கிலத்தில் பொளந்து கட்டினார்கள் கேள்விகணைகளால். அந்த சமயம் நான் வேலை மற்றும் வெளியுலகத்துக்கு புதியவள்.நான் நல்லா உளறினேன் என்பது எனக்கு தெரியும் ,இருந்தாலும் அவர்கள் கேள்விகளுக்கு பதில் கொடுத்தேன்,எதையோ தமிழில் இருந்து ஆங்கிலத்தில் சுருக்கமாய எழுதச் சொன்னார்கள் ஆனால் ஸ்பாக்கன் இங்கிலிஷ்ல நான் தடுமாறியதை என்னால் உணரமுடிந்தது.
              சரி போய் வா ,என்று முடித்துக்கொண்டனர்.வெளியில் வந்தவுடன் மாமா ‘என்ன ஆச்சு?’என்று ஓடிவந்தார். ஐயோ பதற்றம் மாமா ‘என்றேன். ’அதான் சரியான போட்டிதான் போல,கொஞ்ச நேரம் வெளியில் இருந்து எல்லோரிடமும் பேசினேன்,உனக்கு வாய்ப்பு குறைவுதான் போல,சரி வா,நீ என்ன வேலை இல்லாமலா இருக்கிறாய்?என்று ஆறுதல் கூறி வீட்டில் விட்டுச் சென்றார்.மாதங்கள் ஓடின , ஒரு பதிலும் இல்லை.என் ஆசையும் நிராசை ஆனது.
            அதே வேலைக்கு சில வருடங்கள் கழித்து என் சக ஆசிரியை ஒருத்திக்கு அழைப்பு வந்தது. அவளும் என்னிடம் வந்து ‘எப்படி டீச்சர்?என்ன கேப்பானுங்க?என்னால் செய்ய முடியுமா?உங்களுக்கே  கிடைக்கவில்லையென்றால் நான் எம்மாத்திரம்?’ என்றாள்.அப்படி இல்லை அதிர்ஷ்டம் எல்லோருக்கும் வராது’என்றேன். அவள் கல்வி தகுதி என்னைவிட ஒரு படி அதிகம்.அதாவது நான் படிவம் 5 பாஸ் , அவள் படிவம் 6 பட் ஃபெயில்!
          எல்லோரும் வாழ்த்தி அவளை அனுப்பி விட்டோம் .என்னதான் ஆகியிருக்கும் என்று ஆர்வமாய் (நான் தான் அதிகமாக)காத்திருந்தோம்.மறுநாள் வந்தவள் ,என்னைக் கட்டிப்புடிச்சிக்கொண்டு ‘டீச்சர் என்ன டீச்சர் ஒன்னுமே கேட்கல, ஒரே ஒரு பாடல் மட்டும் பாட சொன்னங்க, சிறு வயசு பசங்கதான் இண்டர்வியூ பண்ணினாங்க,எதுவுமே கேட்டுக்கொள்ளவில்லை டீச்சர். ஐயோ நம்முடைய ப்ரிப்ரேசன் எல்லாம் வேஸ்ட்தான்,மலாய் மொழியில் பேச சொன்னார்கள்  ‘என்றாள்.
         ஒரே மாதத்தில் ,மீண்டும் கடிதம் வந்தது.அவளுக்கு வேலை கிடைத்து விட்டது என்றும் பதில்!அவளைவிட நான் அதிகம் மகிழ்ச்சி அடைந்தேன்.வேலைக்குச் சேர்ந்தாள்.பல மாதங்கள் கழித்து அவளைச் சந்தித்த போது ‘போங்க டீச்சர் நீங்க செய்ய வேண்டிய வேலையில் நான் ,நான் செய்ய வேண்டிய வேலையில் நீங்கள்,அது எனக்கு சரிப்பட்டு வரல,வேறு வழியில்லாமல் செய்கிறேன் ‘என்றாள்.
             அப்போ எனக்கு கோபம் எல்லாம் என்னை இண்டர்வியூ பண்ணிய அந்த ரெண்டு கிழடுகள் மேல்தான் .ஏன் அவுங்க அப்பா வீட்டுச் சொத்தா குடிமுழுகிப்போகும்,எனக்கு அந்த வேலையைக் கொடுத்திருந்தால்?
 என்ன செய்ய இதைத்தான் சொல்வார்களோ ‘கெட்ட நேரம் வந்தால் ஒட்டகத்தின் மேல் ஏறி நின்னாலும் ,நாய் கடிக்கும் என்று! 

           

12 comments:

  1. எல்லாருக்கும் இதுபோல்தான் நான் சொல்லிக் கொடுத்தவன் இன்னைக்கு பெங்களூர்ல ஆரக்கிள்ல அள்ளிக்கிட்டு இருக்கான். நான் பாலைவனத்து பூமியில வாடிக்கிட்டு இருக்கேன்...

    கெட்ட நேரம் என்பதைவிட நல்ல நேரம் வரும் என்று நம்புவோமாக...

    ReplyDelete

  2. வணக்கம்!

    என்மன வானில் எழில்வலைப் பூக்கண்டு
    பொன்மனம் கொண்டேன் பொலிந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  5. 'இதுவும் ஒரு நன்மைக்கே' என்று மனம் கொள்ளுங்கள். சரியாகிவிடும்!!!

    ReplyDelete
  6. வணக்கம்.

    தங்களின் வலைப்பூவை வலைச்சரத்தில்
    அறிந்தேன்....எனக்கு தங்களின் தளம் புதிது...இனி என் வருகை தொடரும்.....
    வலைச்சர ஆசிரியர் பணிக்கு எனது வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  7. நாளும் வளர்க! நலமுடன் வாழ்க!

    ReplyDelete
  8. தங்களின் வலைப்பூவை வலைச்சரத்தில்
    அறிந்தேன்...வலைச்சர ஆசிரியர் பணிக்கு எனது வாழ்த்துக்கள். இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வணக்கம் வலைச்சர டீச்சர்!நலமா?///எது கிடைக்கும் என்று எழுதியிருக்கிறதோ அது தான் கிடைக்கும்,முயற்சி திருவினையாக்கும்!

    ReplyDelete
  10. பழமொழி மிக அருமை.. நன்றி உங்கள் பதிவிற்கு

    ReplyDelete
  11. //‘கெட்ட நேரம் வந்தால் ஒட்டகத்தின் மேல் ஏறி நின்னாலும் ,நாய் கடிக்கும்//

    அட இது புதுசா இருக்கே! :)

    எல்லாம் நன்மைக்கே! என்று விடுங்கள்....

    ReplyDelete
  12. பல திறமையானவர்களை அடையாளம் கண்டுகொள்ள மறுப்பது துரதிர்ஷ்டமே.
    அனுபவத்தை சிறப்பாக எழுதி இருகிறீர்கள் .

    ReplyDelete