Thursday 24 April 2014

ஒரு பீர் போத்தல் !

                 ஒரு ‘பீர் ‘போத்தல் வாங்க நான் பட்ட பாடு இருக்கே?

            என் தோழியின் மகளை  தினமும் அவள் பாட்டி வீட்டில் இறக்கி விட்டு வருவேன்.சிலவேளைகளில் என் மகனுக்கு காத்திருக்கும்வேளையில் அங்கே உட்கார்ந்திருப்பேன்.பள்ளியின் அருகில் அவர் வீடு என்பதால் ,அங்கேயே சிறிது நேரம் இருப்பேன்.அது எஸ்டேட் (கிராம)வீடு.சோ வீட்டைச் சுற்றிலும் மரங்கள், குருவிகளின் ரீங்காரம் , பச்சைப்பசேல் என எனக்கு பிடித்த அமைப்பு.அதுமட்டுமின்றி நான் படிச்ச  தமிழ்ப்பள்ளியும் அங்கேதான் உண்டு.

          ஏதோ தொலைத்த ஒன்றை மீட்பது போல் இருக்கும் அங்கே இருப்பது.நான் போகும்போதெல்லாம் தோழியின் அம்மா எனக்காக முருங்கை கீரை எடுத்து வைத்திருப்பார். மரவள்ளிக்கிழங்கு சமைத்துக்கொடுப்பார்.கிராமிய சமையல்களை  சுவையாக சமைத்துவிட்டு எனக்காக காத்திருப்பார்.அந்த அன்பை நான் அதிகம் ரசிப்பேன். பிள்ளைகள் எல்லோரும் தொலைவில் இருப்பதால் ,தனிமையில் இருப்பவர் அந்த பாட்டி.  என் தோழி மட்டுமே தினமும் அவள் அம்மா  வீட்டுக்குப் போவாள்.பெற்ற தாயைப்போல  என்னிடம் அன்பு காட்டுவார்.

          நானும் பாட்டிக்கு வெத்தலைப்பாக்கு ,மற்றும் சில பூஜைப்பொருட்கள்  வாங்கி கொடுப்பேன். அன்றைக்கு வழக்கம் போல பாட்டி வீட்டுக்கு போய் உட்கார்ந்திருந்தேன். ’சாம்பார் ,கீரை ,அப்பளம் .வெள்ளிக்கிழமை ஸ்பெசல் ,இன்னிக்கு நீ சாப்பிட்டுத்தான் போகனும்’ என்றார் பாட்டி.சாப்பிட்டு முடிச்சி ,கொஞ்சம் பேசிவிட்டு கிளம்பும்போது ‘ஏதும் வேணுமா சொல்லுங்கம்மா நாளைக்கு வாங்கி வரேன்,’என்றேன்.எனக்கு என்னம்மா வேணும்? வெத்தலைப்பாக்கு வாங்கி கொடும்மா போதும்’என்றார்.சரிம்மா என்று விடைபெற்றேன்.காருக்கு ஓடி வந்த பாட்டி ‘அம்மா ஒரு போத்தல் பீர் வாங்கி வாம்மா,நாளைக்கு மதுரை வீரனுக்கு சாமி கும்பிடனும்.கருவாடு இருக்கு,சுருட்டு இருக்கு, பீர் மட்டும் ஒரு டின் வாங்கி வாம்மா’என்றார்.

          ஐயோ !இது என்னடா வம்பா போச்சு? காவல் தெய்வ வழிபாடு எல்லாம் நான் ஆதரிப்பவள் அல்ல’என கூற முடியுமா? நான் எங்கே போயி?சரி என்ன ஆகப்போகுது ?வாங்கிக்கொடுப்போம் ‘என்று முடிவெடுத்து ,மறுநாள் பள்ளி முடிந்து ,என் சக ஆசிரியையோடு காரில் கிளம்பினேன். ‘டீச்சர் , யாரும் பார்க்கறவங்க தப்பா நினைக்கப்போறாங்க,பள்ளிக்கூடம் முடிஞ்சி இந்த பொம்பள ,பீர் வாங்கிட்டு போகுது,குடிச்சிட்டு தூங்கும் போல?’சோ யாரும் தமிழர்கள் இல்லாத கடையா பாருங்க,போகலாம்’ என்றேன்.பொதுவாக பூச்சோங்கில் பலருக்கு நம்மைத் தெரியும் ,ஒன்று ஆசிரியைத் தொழிலில் சுமார் பத்து வருடம் அனுபவம்  என்பதால் சுற்று வட்டாரத்தில் எல்லா பெற்றோர்களும் தெரிந்தவர்கள் ,மற்றொன்று இங்கேயே பிறந்து வளர்ந்ததால் ,எல்லோரும் பழக்கமானவர்களாகவே படும்.எங்க கெட்ட நேர்ம், அன்னிக்குன்னு பார்த்து எல்லா கடைகளிலும் தமிழர்கள் அதிலும் நன்கு அறிமுகமானவர்களே, ஏதாவது ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தனர். தோழியும் நானும் மாத்தி மாத்தி ஒரு ஐந்து கடைகளில் போய் வேற பொருள் தேடுவதுபோல தேடினோம்.கேட்க வெட்கமாகவும் பயமாகவும் இருந்தது.

            ‘டீச்சர்  இனி எங்கே போவது?, எல்லா கடைகளிலும் ,கடைக்கு வெளியிலும் நமக்கு தெரிஞ்சவங்களாகவே இருக்காங்க,வேண்டாம் டீச்சர் ஒரு பத்து வருசமா நல்ல பெயரை கிரியேட் பண்ணிட்டோம்,இப்ப ஒரு பீர் போத்தல் வாங்க போய் பெயரு கெட்டுப்போக போவுது,உங்க வீட்டுக்காருகிட்ட சொல்லி வாங்கி கொடுக்க முடியாதா ? ‘என்றாள்.’ஐயோ பாட்டி எதிர்பார்ப்பாங்களே, இன்னிக்கு வேணுமாம்.’பாட்டியிடம் பொய் சொல்லவும் மனமில்லை.சரி கொஞ்சம் தூரமா போய் ஒரு சீனன் கடையை கண்டுபிடிச்சி கையில் வெறும் நான்கு வெள்ளி மட்டுமே கொண்டு போனேன்.அடிக்கடி வாங்கிய அனுபவம் இருந்தால் விலை தெரியும். சீனப்பெண்ணிடம் பீர் வேண்டும் என்றேன்.என்ன பீர்?வெள்ளையா கருப்பா?என்றாள்.யாருக்கு கலர் எல்லாம் தெரியும்?.இங்கே மலேசியாவில், சீனர்களும் நம் காவல் தெய்வங்களை வணங்குவதால் ,சாமி கும்பிடற பீர்’என்றேன். எடுத்துக்கொடுத்தாள்.காசை நீட்டினேன்.’ஹலோ இது 6.30 காசு’என்றாள்.’ஐயோ ஓடிப்போய் காரில் காசை எடுத்து வந்து கொடுத்தேன்.யாரும் வருவதற்குள் போய் ஆகனுமே?’சரி சரி கருப்பு பையில் போடு ‘என்றேன்.கருப்பு பையா?ஏற இறங்க பார்த்தாள்.குடிக்கறதுக பீர்,இதுல கெளரவமா?என்னும் ஜாடையில் போய் பையைத் தேடிக்கொண்டு வந்து போட்டுக்கொடுத்தாள்.

             ஓட்டமும் நடையுமாய் ஓடி காருக்குள் நுழைந்தேன்.தோழி என்னைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள். ‘டீச்சர் உங்களைப்பார்த்தால் ரொம்ப ஆவலா தேடித்தேடி கிடைத்தவுடன் ஏதோ காணாததைக் கண்டதுபோல வியர்த்து விறுவிறுத்து ஓடிவர்றிங்க’என்றாள்.ஏண்டி சொல்லமாட்டாய்?
பாட்டி வீட்டை அடைந்ததும் ,பாட்டி ஓடி வந்து ‘வாம்மா சாப்பிட்டு போவ ,ரொம்ப களைப்பா இருக்கப்போல?’என கேட்டாங்க?இல்லைம்மா ,வந்து இந்தாங்க பீர் ‘என்றேன்.ரொம்ப நன்றிம்மா. இன்னிக்கு ஐய்யா சாமிக்கு பூஜை செய்யனும். நான் எங்கம்மா கடைக்கு போறது?என்று முணுமுணுத்துக்கொண்டே ,கையில் போத்தலை வாங்கிக்கொண்டு வீட்டுக்குபோய் வீட்டில் கதவருகே மாட்டியிருந்த மதுரைவீரன் சாமிப்படத்துக்கு அருகில் வைத்தார்.ஏதோ எல்லா கோரிக்கையும் நிறைவேறியது போல பாட்டியின் முகத்தில் சிரிப்பு.நானும் விடைபெற்றேன்.
                                                                   
           ’ஸ்ஸப்பா! நான் நல்லவள்னு காட்டிக்க ஒரு பதிவே எழுத வேண்டிக்கிடக்கு போங்க!’

8 comments:

  1. Replies
    1. மதுரைவீரன் கண்ணைக்குத்துவான் சகோ

      Delete
  2. நான் கூட உங்களுக்கோன்னு நினைச்சு பயந்துட்டேன் அக்கா...

    ReplyDelete
  3. பீர் பாட்டில் வாங்க பட்ட பாட்டைப் பார்த்து அந்த ஆண்டவனே இறங்கி வந்து வேண்டாம்ன்னு சொல்லியிருந்தா சீனக்காரியோட பார்வைக்கு தப்பியிருக்கலாம்...

    ReplyDelete
  4. எனக்கும் ஒரு பீர் போட்டில் வாங்கி தர முடியுமா டீச்சர்? ( பதிவு அருமை... மேலும் எதிர் பார்க்கிறேன்)

    ReplyDelete
  5. அடுத்த முறை பாட்டி கொஞ்சம் கேஷுவலா இருக்கும் பொது எடுத்து சொல்லுங்க டீச்சர், இல்லைன்னா உங்க வீட்டயாகிட்டே வாங்கி தர சொல்லுங்க !

    ReplyDelete
  6. :))))

    நல்ல அனுபவம் தான்!

    ReplyDelete