Monday 9 February 2015

’ச்சீ மனிதா!’

ஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து
“சீ மிருகமே!”
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே
எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை
எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா ?
**
எந்த விலங்குக்கும்
சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?
**
இன்னொன்று :
பறவைக்கு வேர்ப்பதில்லை
**
எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை
**
எந்த விலங்கும்
தேவையற்ற நிலம்
திருடுவதில்லை
**
கவனி மனிதனே
கூட்டு வாழ்க்கை இன்னும்
குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்
**
அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை உடம்புக்குள் புதைக்கும்
தொழு நோய்
விலங்குகளுக்கில்லை
**
மனிதா
இதை
மனங்கொள்
கர்ப்பவாசனை
கண்டு கொண்டால்
காளை பசுவைச்
சேர்வதில்லை
**
ஒருவனுக்கொருத்தி
உனக்கு வார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை
எந்த புறாவும்
தன் ஜோடியன்றி
பிறஜோடி தொடுவதில்லை
**
பூகம்பம் வருகுது எனில்
அலைபாயும் விலங்குகள்
அடிவயிற்றில் சிறகடிக்கும்
பறவைகள்
இப்போது சொல்
அறிவில்
ஆறு பெரிதா ?
ஐந்து பெரிதா ?
**
மரணம் நிஜம்
மரணம் வாழ்வின் பரிசு
மாண்டால் -
மானின் தோல் ஆசனம்
மயிலின் தோஅகை விசிறி
யானையின் பல் அலங்காரம்
ஒட்டகத்தின் எலும்பு ஆபாரணம்
**
நீ மாண்டால் …
சிலரை
நெருப்பே நிராகரிக்கும்
என்பதால்தானே
புதைக்கவே பழகினோம்
**
“சீ மிருகமே !”
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே
**
கொஞ்சம் பொறு
காட்டுக்குள் என்ன சத்தம் …
ஏதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை
ஏசுகிறது
” சீ மனிதனே !”
*
-கவிஞர் வைரமுத்து

2 comments:

  1. அருமையான கவிதை....
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. அருமையான கவிதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete