Tuesday 1 October 2013

என் தோல்விக்குப் பின்னால்...

                  ஒவ்வொரு  ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாளாம்.ஆனால் என் ’தோல்விக்குப்’ பின்னால் சில ஆண்கள் இருந்தார்கள்.ஹ்ம்ம்ம் இப்போது நினைச்சாலும் கொலையே பண்ணலாம் போல தோணும்!
                  முதன்முதலில் பள்ளிப்பருவம் முடிந்தவுடன் எங்கள் ஊர் பத்திரிக்கை ஒன்றில்(பெயர் சொல்ல விரும்பவில்லை) நிருபர் வேலைக்கு  வாய்ப்பு கிடைத்தது!இங்கே தமிழ்மொழியில் சிறப்புத் தேர்ச்சியும் கூடவே சிபாரிசும் (அந்தகாலத்தில்)இருந்தால் போதும்.எனக்கு முதலாவது தகுதி இருந்தது,இரண்டாவது இருப்பதுபோல ஒரு அறிகுறி.

              ஆம் என் அண்ணியின் தம்பி,அவனுடைய அப்பாதான் அந்த வேலைக்கு நேர்க்காணலை நடத்துபவராக அன்று பொறுப்பேற்றிருந்தார். நான் நேர்க்காணல் போகவேண்டிய தினம் ,என் வீட்டில் என் அண்ணன்மார்கள்,அக்காவின் கணவர் என எல்லோரும் கோரசாக சேர்ந்து ’உனக்கு ஒத்து வராத வேலை அது, ரிப்போட்டர் என்றால் அவர்கள் அழைக்கும் நேரத்தில் நீ ஓடிப்போய் நிற்கனும், ஏதும் விபத்து கொலை என்றால் பயப்படாமல் அங்கே போய் செய்தி சேகரிக்கனும்,உனக்கு அந்த தைரியம் இல்லை ,நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாய் ‘என்று அப்படியே என்னை தடுத்து நிறுத்தினார்கள்!                                                                  
                                              

                 அதன் பிறகு ,விமானப்பணிப்பெண் வேலைக்கான நேர்க்காணல். அந்த வேலைக்கான பாரங்கள் கிடைக்கும் இடம் என் நண்பனின் வீட்டின் அருகே. 
       அவனுக்கு போன் செய்து ‘கொஞ்சம் அந்த பாரங்களை எடுத்து வா’என்றேன்.  அவனும் மற்றொரு நண்பனும் கொண்டு வந்து கொடுத்து விட்டு ‘செல்வி இந்த வேலைக்கு நல்ல உயரமாக இருக்கனும் , அதை விட முக்கியம் ,சிகப்பாக இருக்கனும்?எப்படி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்’என்று சிரியோத்தனமாய் சிரித்து என்னையும் சிரிக்க வைத்து விட்டு ,ஆர்வத்தையே சீர்குலைத்துச் சென்றானுங்க படுபாவிகள்!

               சிறுவயது முதல் எனக்கு தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் வானொலி அறிவிப்பாளர்  ஆக வேண்டும் என்று ரொம்ப விருப்பம். அதற்காக நான் பல பயிற்சிகள் செய்துவந்தேன். சொந்த முயற்சியில் வீட்டில் சிலவேளைகளில் பேசுவேன். அதை ரெக்கார்டிங் செய்து செய்து கேட்பேன்.

               என் கனவு நிறைவேறும் நாள் வந்தது. ஆம் ,பத்திரிக்கையில் அறிவிப்பு வெளியானது.மலேசிய அரசு தொலைக்காட்சியில் ’தமிழ் பிரிவுக்கு செய்தி வாசிக்க ஆள் தேவை’.ஆ!என் பல நாள் கனவு ,வேகவேகமாய் பாரங்களைப்பூர்த்தி செய்து , படங்களை எல்லாம் வைத்து எல்லாம் ரெடி பண்ணிக்கொண்டிருந்தேன். என் அண்ணா என் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு ,அதெல்லாம் அரசு வேலை எளிதில் நமக்கு கிடைக்காது’என்று கூறியது.

                         ‘ஏன் அப்படி சொல்ற?என்னிடம் அவர்கள் கேட்ட 10  தகுதியும்  இருக்கு’என்றேன்.அண்ணா சொன்னது ,நீ நல்லா படித்தாயா ,அவர்கள் கேட்டிருக்கும் தகுதி எல்லாம் உனக்கு இருக்கா? அந்த பத்தாவது தகுதியை சரியா படிச்சியா?அவுங்கதான் அங்கே நல்லா தெளிவா ‘ஆள் பார்க்க அழகா கவர்ச்சியா இருக்கணும்’என்று போட்டிருக்காங்களே?அப்புறமும் ஏன் உனக்கு இந்த ஆசை?’என்று அப்படியே என் ஆசைகளை நிராசையாக்கியது.நானும் பயந்துகொண்டு போகவே இல்லை!

         அதன் பிறகு ஜப்பானிய நிறுவனத்தில் வேலைக்கு போக நானே முடிவெடுத்து நானே அப்பாவிடம் கேட்டு என் முயற்சியில் போய் வேலையும் கிடைத்தது.அதேப்போலத்தான் தற்பொழுது செய்யும் ஆசிரியர் தொழிலும்!                                                                       
                                        

             ஆனாலும் இப்பொழுது நினைத்துப்பார்த்தால் அந்த வேலைக்கெல்லாம் போயிருந்தால் இதுவரையில் நான் கற்றுக்கொண்டது ,எனக்கு கிடைத்த நட்புக்கள் ,பல வாய்ப்புக்கள் அதெல்லாம் அங்கே கிடைக்கப்பெற்றிருக்குமா?அல்லது அங்கே இதைவிட பெட்டராக எதுவும் கிடைத்திருக்குமோ?
நடப்பவை யாவுமே நன்மைக்கே!


6 comments:

  1. பழைய நினைவுகளை அழகா சொல்லியிருக்கீங்க அக்கா...

    ReplyDelete
  2. சொல்ல முடியாது........இங்கெல்லாம் தொலைக்(தொல்லை?)காட்சியில் நிரூபர்களாக/அரசியல் ஆய்வாளர்களாக இருப்போர்/இருந்தோர் ஜனாதிபதி/பிரதமர் அலுவலகங்களில் முதன்மை செயலாளர்களாக இருக்கிறார்கள்/இருந்திருக்கிறார்கள்.என்ன..............எங்களையெல்லாம்/உங்களை நாங்கள் மிஸ் பண்ணியிருப்போம்!அருமையான அன்பான ஒரு டீச்சரை குழந்தைகள் இழந்திருப்பார்கள்!இபாடியே சொல்லிக் கொண்டே போகலாம்.(நல்ல வேளை நீங்கள் கலர் கொஞ்சம் கம்மி,ஹி!ஹி!!ஹீ!!!)

    ReplyDelete
  3. கிடைத்ததை கொண்டு ரசித்து வாழ்வோம்... அனைவருக்கும் இனிய நினைவுகள் (ஏக்கங்கள்) உண்டு...

    Visit : திவாகிதிவா : http://dindiguldhanabalan.blogspot.com/2013/02/If-I-get-back-to-life.html

    ReplyDelete
  4. எதையுமே முயற்சியோடு நின்றுவிட்டு, அது கிடைக்காமல் போனதற்கு ஆண்கள்தான் காரணம் என்று கூறியிருப்பதை ஏற்கமுடியவில்லை.

    ReplyDelete
  5. ஆசை நிராசையானதும் நன்மைக்கே டீச்சர்...!

    ReplyDelete
  6. அந்த ஆசைகள் நிராசை ஆனது நன்மைதானே.இல்லையேல் உங்களோடு பல மணி நேரங்களை செலவிட்டு பல விஷயங்களை பகிர்ந்துக்க முடியாதே!!!.......

    ReplyDelete